வேளை வந்துவிட்டது

இன்னும் பத்தாண்டுகள் இங்கே இருக்கச் சொன்னாலும் கபீர் தயார்தான். அதிலும் குடும்பத்தோடு வருவதென்றால் இன்னும் மகிழ்ச்சி. ஆனால் இந்த நாடு அதற்கு இடம் கொடுக்கவில்லை. அதற்கு மேல் ஹம்பாடியின் தொடர்பு ஏற்பட்ட பின்னர் கபீரின் உலகம் மிகவும் மாறிவிட்டது. இந்த வேலையை விட, குடும்பத்தை விட, உயிரை விட, மிக உன்னதமான விஷயங்கள் இருக்கின்றன என்பதை ஹம்பாடிதான் கற்றுக் கொடுத்து அவரைப் புது ஆளாக்கினார்.

இடுக்கி கோல்ட்

தாத்ரிக்குட்டி வாழ்ந்து முடிந்து துரத்தியடிக்கப்பட்டிருந்த அந்தத் தோப்பு, காலத்தின் புயல் வீசிச் சாய்ந்த தென்னை மரங்களும் நெருக்கடியான கனவுகளின் தாங்கொணாப் புழுக்கம் சுமந்த பெண்ணின் கண்ணீர் பெய்து பழுத்துப்போயிருந்த மாமரங்களும் சோபையுடன் நிற்க காட்சியளித்தது. இன்னும் சிறிது நேரத்தில் இருட்டிப்போய்விடும் என்னும் நிலையில், நாங்கள் அந்தத் தோப்பினூடே அவள் மிச்சம் வைத்துச் சென்ற தடயங்கள் இருக்கிறதா என்று தேடினோம். அவள் எப்பொழுதோ அவ்விடத்தை விட்டுப்போயிருந்தாள். அவளுக்குச் சாட்சியாக, அங்கே பாழடைந்து கிடந்த கிணறும் அவள் வழிபட்ட முழங்கால் அளவே உயரம் உடைய அம்பாளும் மட்டுமே இருந்தன. அம்பாளுக்கும் வேதனை தாங்கமுடியாததாக இருந்திருக்கவேண்டும்.

வாக்கு

“நம்பிக்கையில்லேன்னா இதுங்கெல்லாம் ஏன் இங்க வருதுங்க?”

மூர்த்தி அந்த கட்டிடத்தின் உள்ளே நுழையும்போது, யாரோ யாரையோ சொல்லிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. மூன்று நான்கு குடும்பங்கள் ஏற்கெனவே காத்திருந்தார்கள். வரிசையில் அடுத்திருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார். என்ன ஏதென்று விசாரித்தார். கொஞ்சம் முன்னால் வந்து போன ஒருவன் இடக்கு மடக்காக குறுக்கு கேள்விகள் கேட்டதால் பிரச்சினை என்று தெரிய வந்தது. அப்படி என்ன பிரச்சினைக்குரிய கேள்விகளை அவன் கேட்டிருப்பான் என்று தெரியவில்லை. எது எப்படியோ எல்ல்லாவற்றுக்கும் அடிப்படை ஒரு நம்பிக்கைதானே.

கணக்குப் பரீட்சை

“இந்த கோட்டிக்கார வெள்ளக்கார பய டயருக்கு வெறி எப்புடி இந்த நாயுவ நம்மள எதுத்து போராட்டம் பண்ணுதுன்னு.ஒருனாளு இந்த அமிர்தசரசுல ஆயிரக்கணக்கான மக்கள் கூடுனாங்க.இத தெரிஞ்சிக்கிட்டு இந்தபய என்னெஞ்சான்? இவன் ஆளுவ ஒரு நூறு வேர கூட்டிட்டு போயி,துப்பாக்கிய எடுத்து ணங்கு ணங்கு ணங்குனு சுட ஆரம்பிச்சிட்டான்” என்று கையை இடப்புறமும் வலப்புறமும் அசைத்து சொல்லிக் காண்பித்தார்.எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர் அவரின் நடிப்பைக் கண்டு. முருகம்மாளுக்கு சிரிப்பே வரவில்லை.அழுகை வந்துவிடக்கூடாதென்று வேண்டிக் கொண்டாள்.

வல் விருந்து

கும்பமுனிக்கு அன்று குளிமுறை. என்றால் அன்று மட்டும்தான் குளிப்பார் என்று பொருளில்லை. அன்றுதான் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார் என்று அர்த்தம். மற்ற நாட்களில் எண்ணெய் தேய்க்க மாட்டார் என்றும் உரை எழுத முடியாது. மற்ற நாட்களில் உருக்குத் தேங்காய் நெய். உண்மையில் எள்+நெய் தானே எண்ணெய்? எனவே வாரந்தோறும், சனிக்கிழமையில், எள் நெய் தேய்த்துக் குளியல். தவசிப் பிள்ளை, வாராது வந்த கனகமாமணி என்று கும்பமுனியைப் போற்றுவது காரணமாக இருக்கலாம். தாங்க ஆளுண்டு என்றால் தளர்ச்சியும் உண்டுதானே!

கருங்காலி

எல்லோரும் மகிழ்ச்சியாக ஒன்று கூடி வாழ்ந்தனர். ஓருவர் அடுத்தவரிமிருந்து அடுத்தவர் அவருக்கு அடுத்தவரிடமிருந்து அவருக்கு அடுத்தவர் அவருக்கு அடுத்தவரிடமிருந்து, கடைசியிலிருந்தவர் முதலிலிருந்தவரிடமிருந்துமாக திருடியதால் யாரும் தோற்கவில்லை. விற்பவரும் வாங்குபவரும் ஏமாற்றுவதென்பது வியாபாரத்தில் தவிர்க்க முடியாததாயிற்று. அரசாங்கம் குடிகளிலிருந்து திருடும் ஒரு குற்ற அமைப்பாய் செயல் பட்டது. குடி மக்களும் அரசாங்கத்தை ஏமாற்றுவதையே குறியாய் கொண்டிருந்தனர். ஏழைகள் என்றும் பணக்காரென்றும் எவரும் இல்லாததால் வாழ்க்கை அமைதியாக சென்றுகொண்டிருந்தது.

உலகளந்த நாயகி

வைணவப் பெண் பெயர்களில் எனக்கு மிகவும் பிடித்தது ரெங்கநாயகி. இதற்கெல்லாம் நேரடியாகக் காரணம் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், இந்தப் பெயரில் நான் சந்தித்த பெண்கள் அனைவருமே அழகிகள் என்று சொல்லலாம். அதிலும், முதன்முதலாக நான் பார்த்த ரெங்கநாயகி பேரழகி.

மோட்ஸார்ட்டும் ஒரு இலையுதிர்கால மாலைப் பொழுதும்

நான் அவளுடன் வேலை பார்த்த ஆரம்ப நாட்களில் குழந்தையைக் காப்பகத்தில் விட ஆரம்பித்திருந்தேன். அவன் அங்கு ‘அட்ஜஸ்ட்’ செய்து கொண்டு விட்டானா என விசாரிப்பாள். ஐந்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய தாய் ஆனதால், குழந்தை வளர்ப்பின் நுணுக்கங்களை மனோதத்துவ முறைப்படி எனக்கு விளக்குவாள். இரண்டு வயதுக் குழந்தை நான் சொன்னதையே கேட்க மாட்டேன் என்கிறான் என்று ஒருமுறை அவளிடம் பாதி அலுப்புடனும், பாதி ஒரு தாய்க்குரிய பெருமையுடனும் விவரித்தபோது, சொன்னாள்: “அவன் நீ சொல்லும் எல்லாவற்றிற்கும், ‘சரி அம்மா,’ ‘அப்படியே செய்கிறேன் அம்மா,’ என்று சொல்லிய வண்ணம் இருந்தால் அவனுடைய தனித்தன்மை எவ்வாறு வளர்ச்சி பெறும்? அவன் எவ்வாறு ஒரு முழு மனிதனாவான்?” என்று கரிசனத்துடன் கூறினாள்.

தீட்டு

அன்று இரவு யார் யாரோ வந்தார்கள். சிலர் அழுது கொண்டே, சிலர் அலறியபடி. பெரிய குரலில் பக்கத்து வீட்டு மாமி “அண்ணா, போயிட்டேளே. சின்னக் குழந்தைகளை விட்டுட்டுப் போக எப்பிடிண்ணா முடிஞ்சுது” என்று கூவி அழுதது அவனை பாதிக்கவில்லை. ஆனால் அப்பாவின் கீழே வேலை பார்க்கும் ஜகன்னாத மாமா வீட்டு வாசலில் வருகையிலேயே குழறி அழுதபடி தட்டுத் தடுமாறி உள்ளே வருவதற்குள் அது அவர்தான் என்று பார்த்துத் தெரிவதற்குள் அவனும் தரையில் கீழே விழுந்து அழுது கொண்டிருந்தான்.

வருகை

அந்த இரவில் அபரிமிதமாய் ஓர் உச்சகட்ட விறுவிறுப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்த இயற்கையின் கூத்தோடு தொடர்புகொள்ளும், மனம் இணையும் வாய்ப்பை இழந்து அவ்வூர் மக்கள் துக்கம்கொண்டிருப்பதாக அவன் எண்ணமிட்டான். திறந்திருந்த பாதி ஜன்னல் கதவு ஒருதரம் மடார் என்று அடித்து மூடி உடந்தானே மீண்டும் திறந்துகொண்டது. ஒரு காலைத் தூக்கி வைத்து அக்கதவு அசையாதபடி அவன் அமுக்கிக்கொண்டான். தலைமாட்டிலிருந்து புகைப்பெட்டியை எடுத்து ஒன்றைக் கொளுத்தி இழுக்கத் தொடங்கினான்.

குழந்தைகள் கொலு

மீனா திரும்பித் தன் தாயைப் பார்த்தபோது கிழவியே கொஞ்சம் திடுக்கிட்டுப் போனாள்.

‘உள்ளே வராதே, வெளியே நில்லு!’ என்று கரைகடந்த கோபக் குரலில் கத்தினாள் மீனா.

‘ஏன்?’

‘என் குழந்தைகள் கொலு வச்சிருக்கு. அதை நீ பார்க்கக் கூடாது!’‘கொலுவா!’

‘ஆமாம், கொலு! கொலு வச்சிருக்கோம் நானும் என் குழந்தைகளும். நீ பார்க்கக் கூடாது- நீ ஊரார்!’

சிங்கப்பூர் சென்ற மகன்

“கிழவிக்கு மனக்கஷ்டம் தாங்கவே முடியவில்லை. இரவு எல்லோரும் சாப்பிட்டுப் படுத்துத் தூங்கிய பிறகும் காவேரிப்பாட்டிக்குத் தூக்கம் வரவில்லை. பத்து வருஷங்களுக்குப் பிறகு ஏராளமான சம்பாத்தியத்துடன் மகன் திரும்பி வருகிறான் என்றும், செட்டியாருடைய பேரனுக்கு இரண்டு பவுன் அரைஞாண் கொடியைக் கொண்டுவந்து கொடுக்கப்போகிறான் என்றும் சொல்லியும்கூட, அவர்கள் அதை வேண்டுமென்றே காதில் வாங்கிக்கொள்ளாமல் அப்பால் நழுவுவதை நினைக்கும்போது அவளுக்கு அவமானமாகவும் இருந்தது; பயமாகவும் இருந்தது.”

இரண்டு விரல் தட்டச்சு

”நீ எப்போ கத்துண்டே?” என்று நான் கேட்டேன்.

“இந்த ஊருக்கு வந்தப்புறம்தான். இது தெரிஞ்சுக்கலேன்னா நம்பளுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடைக்குமான்னு சொல்லமுடியாது.”

“நான் கொஞ்சம் அடிக்கிறேன்.”

“ரொம்ப அழுத்தி அழுத்தி அடிக்காதே. இது பழசு. ஒரு குழந்தை மாதிரி இதை வச்சுக்கணும். இது போல உபயோகமான பொருள் உலகத்திலேயே கிடையாது.”

இப்படித்தான் எங்கள் வீட்டில் ஒரு டைப்ரைட்டர் வந்து சேர்ந்தது. அவ்வளவு பெரிய மேஜையே அப்பா வாங்கினது டைப்ரைட்டருக்குத்தானோ என்று தோன்றியது. அப்பா எவ்வளவு சொல்லியும் எனக்கு இரண்டு விரல் கொண்டுதான் அடிக்க வந்தது. “நீ அடிக்கறதைப் பாத்தா ஒனக்கு எவனும் வேலை தர மாட்டான்,” என்று அப்பா ஒரு முறை கோபித்துக்கொண்டார். நானும் எவ்வளவோ முயன்றேன். மோதிர விரல், சுண்டு விரல் விரைத்து நின்றன.

தந்திப் புரட்சி  – ஒரு ரகசியப் போராட்டத்தின் சரித்திரம்

“ஆஷ் துரையை வாஞ்சி ஐயர் கொன்னதுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?” என்றான் ஆறுமுகம். நம்பியார் மேல்துண்டை வைத்து விசிறிக் கொண்டார். “சரியான கேள்வி அது இல்லை,” என்றார் வாசு. “துரை கொலைக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் என்ன சம்பந்தம் என்பது தான் கேள்வி.” “ஆஹா,” என்றான் ஆறுமுகம்.எனக்குப் புரியவில்லை. ஆனால் கேட்கவும் பயமாக இருந்தது.நம்பியார் கையைத் தூக்கி ஆட்டினார். “காங்கிரசாரை இந்தக் கொலையோடு இணைக்கும் ஒரே ஒரு தந்தி இருக்கிறது என்கிறான் பிரிட்டிஷ் இன்ஸ்பெக்டர் ஆடம். நமசிவாயம் என்று இங்கே மதராஸ் காரியாலயத்தின் ஆள் அனுப்பியது என்கிறான்.” “நமசிவாயம் எங்கே?” என்று கேட்டான் ஆறுமுகம்.

ஒரு யானையும் நான்கு ஒற்றர்களும்

“சங்கிலியால் கட்டப்பட்ட ஒரு யானை காணாமல் போனதாகச் சொல்வதே தவறு. யானை களவுபோயிருக்கிறது. சதி நடந்திருக்கிறது’”

“யானை சங்கிலியை அறுத்துக்கொண்டும் போயிருக்கலாம்” – கள்ளச்சாவி

“தாளிட்ட கோட்டைக் கதவைத் தாண்டி யானை எப்படிப் போகும்?” – முகமூடி

“ஒருவேளை யானை கோட்டை மதிலை எகிறிக் குதித்துப் போயிருக்குமோ?” அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கேள்வியெழுப்பினான் ஒட்டுண்ணி.

ராணியின் பீடிக்கணக்கு

நூறு புகையிலைத்தூளுக்கு,கால் கிலோ புகையிலை கொடுப்பார்கள்.இலையை பணிய வைத்து,பீடிக்கு தகுந்த வடிவில் உருவாக்கப்பட்ட அளவுகோல் கொண்டு இலை வெட்டி,மீண்டும் பணிய வைத்து,நூல் கண்டில் நூல் உருட்டி,தேவையான தூளை வைத்து சரியாக உருட்டி,நூல்கொண்டு கட்டி,பொட்டுக் குச்சி கொண்டு தலைப்பாகத்தை மடக்கினால் பீடி தயார்.நூறு தூளுக்கு 22கட்டுகள்(சல்லிகள்) சுற்ற வேண்டும்.ஒரு சல்லிக்கு 24பீடிகள்.22 சல்லி சுற்றுவதற்கு நூற்றி இருபது ரூபாய் கூலி.ஆறு நாட்கள் சுற்றினால் 720 ரூபாய் லம்பாக கிடைக்கும்.

வன்மம்

“பழசெல்லாம் மறக்க முடியுமா பாய்? பழசெல்லாம் மறைக்க முடியுமா பாய்? கடந்த காலத்தை அழிக்க முடியுமா?” என்று கேட்டான். அவன் குரலில் ஆதங்கம் இருந்தது.

“முடியாது” என்று வெங்கடேஷ் உரக்க சொன்னான். “நாம்ப என்ன பண்றமோ அதுக்கு அனுபவிச்சே ஆகணும்”

கடைசிக் கனவு

என்னை இன்று கொலை செய்யப் போகிறார்கள். சரியாகச் சொல்லப் போனால் தூக்கிலிடப் போகிறார்கள். தூக்கில் தொங்கும்போது எனது மனநிலை எப்படியிருக்கும் என்பது தெரியாது. ஆனால் என்னைத் தூக்கிலிடுகிறவனின் மனநிலை எப்படியிருக்குமென்பது தெரியும். நானும் இதற்கு முன்னால் அந்த பொறுப்புமிக்க பணியைச் செய்தவன் தான்.

பருவ மழை

மெடிராலஜி டிபார்ட்மென்டில் சேர்ந்து இரண்டு வருடம் ஆயிற்று. இது வரை ஒரு குட்டி உப மந்திரி கூட அழைத்ததில்லை. எப்பொழுதாவது யாராவது அன்டர் செக்ரடரியிடமிருந்து, பார்லிமென்டில் கேள்வி வந்தால் பைல் வரும். பிரதமருக்கு வானிலை பற்றி என்ன தெரிய வேண்டும் ? இன்னும் ரிடையர் ஆக ஒன்றேகால் வருடம் இருக்கிறதே, அதற்குள் எக்ஸ்டென்ஷன் எல்லாம் பற்றி யோசிக்க ஆரம்பித்திருப்பார்களோ என்று குறுகுறுத்தது. கூடவே தான் ஒன்றும் எக்ஸ்டென்ஷன் வாங்கும் அளவு யாருடனும் நெருக்கம் இல்லை என்று உரைத்தது.

புடலங்காய்

புடலங்காய் விலை இரண்டு ரூபாய் அதிகரித்த செய்தியைக் கேட்ட நொடியிலிருந்து கணேசனுக்கு சந்தோசத்தைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. உற்சாக மிகுதியால் தனக்குத்தானே சிரித்தும் கொண்டான். முதலாம் ஆண்டு கல்லூரிக்கு தேர்வுக் கட்டணம் கட்ட கடைசித் தேதி தீர்மானமாகி இருந்தது. மனதுக்குள்ளே கணக்கு போட்டுக்கொண்டான். கிணத்துப் பக்கத்துல இருக்கிற சின்ன குண்டுல ஒரு மூட்டை, காக்கேயன் வரப்புக்கு அடுத்தாப்புல இருக்கிற குண்டுல எப்படியும் ஒரு மூட்டை தேத்திடலாம். இரண்டு மூட்டை 80கிலோ வரும். கிலோவுக்கு 10ரூவாயிலருந்து 12ரூவா ஆயிருக்குனு சொன்னானுவ. எப்படியும் பீஸ் கட்ட ஆயிரம் ரூவா சேந்திரும். .

கடன்

ஒரு அலுவலக நண்பனோடு, ஆழ்வார்பேட்டையில் மாதந்தோறும் கடைசி சனிக்கிழமைகளில் நடைபெறும் இலக்கிய கூட்டமொன்றுக்கு போய் விட்டு, பிரிந்து செல்லும் முன், ஒரு காபி சாப்பிடலாமென்று நுழைந்த ஓட்டலில்தான் இப்படி தியாகுவைப் பார்க்க நேர்ந்தது. கோடை வெயிலின் உக்கிரம் அந்த இரவு நேரத்திலும் இருந்தது. நல்ல பேன் காற்று வரும் இடமாய்ப் பார்த்து அமர்ந்தோம்.

வைரமணி நீரலைகள்…

முதலில் பருப்பு வேகும் வாசனை, குக்கர் விசில், பின் வெங்காயம் வறுபடும் வாசனை, முருங்க இலை நெய்யில் வறுபடும் வாசனை, சற்று நேரம் கழித்து சாம்பார் கொதிக்கும் சத்தமுடன் சாதம் வேகும் வாசனை என்று சமையல் மெல்ல, மெல்ல விடிந்து உச்சி வேளையாக வசந்தாக்கா பாத்திரங்களை ஷெல்பின் அடியில் அடுக்க ஆரம்பித்தார்.

அஞ்ஞாத வாசம்

“ஹா! ஹியர் கம் த த்ரீ மஸ்கிடியர்ஸ்” என்று ஜூல்ஸ் அருகிலிருந்த மோகனாவிடம் சொல்ல, பதிலுக்கு “டிட் யூ மீன் டு சே த த்ரீ ஸ்டூஜஸ்?” என்றபடி புன்னகைத்துக் கொண்டே வந்து உட்கார்ந்து கொண்டான் ராஜன். கூடவே வந்த வின்சென்ட்டும், சின்டியும் ஆளுக்கொரு நாற்காலியை இழுத்துப்போட்டுக் கொண்டு அமர்ந்தனர். அந்த காஃபெடேரியாவில் அத்தனை கூட்டம் இல்லை. அங்குமிங்குமாக சிலர் சிதறிக் கிடந்தனர். அவர்கள் மேசைகளில் எல்லாம் பண்டங்கள் இருந்ததோ இல்லையோ, மடிக்கணினிகள் இருந்தன…

நந்தினி

திடீரென மரத்தின் இலை மறைவிலிருந்து சரசரவென இறங்கியது பெரிய குண்டு அணில். தரைக்கு வந்ததும் கும்பிடுவது போல முன்னங்கால்களை எம்பி உயர்த்திக்கொண்டு நின்றது. மூக்கை சிலிர்த்துக்கொண்டு மூச்சை வேகமாக இழுத்து விட்டபடி அவளையே பார்த்துக்கொண்டிருந்தது. சீரியல் வளையங்களை அள்ளிக்கொண்டு உட்கார்ந்து தரைமீது கையை விரித்தபடி முகம் மலர்ந்து ”வா வா” என்றாள். சில நொடிகள் தயங்கி நின்று எதையோ உறுதிப்படுத்திக்கொண்டு விட்டது போல உடலை தாழ்த்தி அவளை நோக்கி தாவி ஓடி வந்தது அணில். வளையங்களை முன்னங்கால்களால் பொறுக்கி வாயில் வைத்து கவ்விக் கொண்டுபோய் மரம் தரையைத் தொடும் இடத்தில் வைத்தது. திரும்பி வந்து அவளுக்கு அருகில் சிதறிக்கிடந்த எல்லா வளையங்களையும் பொறுக்கிக்கொண்டு போய் மரத்துக்குக் கீழே வைத்தது. வளையங்களை வாய் நிறைய கவ்வி எடுத்துக்கொண்டு மரத்திலேறி இலைகளுக்குப்பின் காணமலாகியது.

கோட்டை

மாட்டை வைத்துக்கொண்டு நாங்கள் பட்ட பாடு யாருக்கும் தெரியவில்லை. உலகிலேயே நாங்கள் மட்டும்தான் கறந்த பாலைக் குடிப்பது போல எல்லாரும் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். நாங்கள் பல நாட்கள் எங்கள் அண்டை அயல் வீட்டாருக்கு இலவசமாக மோர் கொடுத்திருக்கிறோம். மோருக்கு முதலில் பாலைக் காய்ச்சவேண்டும். பால் ஆறிய பிறகு துளி தயிர் விட்டு அதைத் தயிராக்க வேண்டும். அப்புறம் தயிர் கடைய வேண்டும். மிகுந்த நேரமும் பொறுமையும் தேவைப்படும் பணி அது.

அத்திமரம்

மரம் அவனைவிட நான்கு மட‌ங்கு பெரியதாக இருந்தது. மரத்தின் உச்சிவரை அண்ணாந்து பார்த்துக்கொண்டான் உச்சியில் சில சில்வண்டுகள் பறந்துகொண்டிருந்தன. நீர்போன்ற தெளிந்த‌ நீலவானத்து பின்னணியில் அது தெளிவாகத் தெரிந்தது. மரத்தைச் சுற்றி, ஒரு அவசரத்தில் அமைக்கப்பட்டிருந்தது போலிருந்த‌ கல்தளத்தில் மண்ணை நன்கு ஊதிவிட்டு அமர்ந்துகொண்டான். அமர்ந்ததும் அதன் தொடர்ச்சியாக ஆசுவாசப்படுத்தும் தோரணையில் மூச்சை வேகமாக வெளியேற்றி சுற்றுமுற்றும் பார்த்தபடி கால்களை இருமுறை தேய்த்துக்கொண்டான். சின்ன மாமாவிடமிருந்து கற்றுக்கொண்டவைகளில் இதுவும் ஒன்று. அணிந்திருந்த புதிய தோல் செருப்பின் தன்மை அழகாக, தடித்த தரையில் தேய்க்கும்தோறும் ஏற்படும் ஒலி கிளர்ச்சியாக இருந்தது. நடந்துவந்தபோது அது ஏற்படுத்திய கிளுகிளுப்பு அவன் மனதிலிருந்து இன்னும் அடங்கவில்லை.

டைகர்

அலுவலகத்தில், மற்றவர்களிடம் விசாரிக்க ஆரம்பித்தோம். கிட்டதட்ட எல்லோருமே எங்களைப் போன்ற விடுதிகளில்தான் இருந்தார்கள். இத்தனைக் கச்சிதமான அலங்காரங்களுடன் எல்லோரும் ஒவ்வொரு பொந்துகளிலிருந்து வந்துகொண்டிருந்தார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது.

குழந்தைகள்

அப்பெட்டியில் நிறையப் பேர் நின்றுகொண்டுகூடப் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். வந்தனாவின் கண்ணுக்கு நிறைய பெண்களே தென்பட்டார்கள். சிவப்பு, கறுப்பு, மாநிரம், உயரம், குட்டை, தலைவாரிப் பின்னிக் கொண்டவர்கள், முடி வெட்டிக் கொண்டு நடிகைகள் போலத் தலைமயிர் வைத்துக்கொண்டவர்கள், புடவை கட்டியவர்கள், ஜீன்ஸ் அணிந்தவர்கள், நெற்றிக்குப் பொட்டு இட்டுக் கொண்டவர்கள், இட்டுக் கொள்ளாதவர்கள்..எவ்வளவுதான் தைரியசாலிகள் போல இருந்தாலும் கல்யாணம் செய்து வைக்க அப்பா அம்மா உதவி வேண்டியிருந்தது.

வெளிச்சமும் வெயிலும்

சில சமயங்களில் அந்தப் பக்கமாக வரும் மேகங்களிலும் அந்த நிறம் கொஞ்சம் கொஞ்சமாக ஏறிக்கொள்ளும். மேக ஓரங்களில் சிவந்து, சிவந்து ஏதோ கடுமையான வர்ணத்தில் ஜொலிக்கும். எரியும் டார்ச் விளக்கை மூடிப் பிடித்துக் கொள்ளும் கை விரல்களின் வர்ணத்தில். கொஞ்சம் எட்டி எப்படியாவது பறந்து அதன் அருகில் போய்விட்டால் நானும் அந்த வர்ணத்திற்கு மாறிவிடுவேன்.

துளை வழியினூடே

அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் அவர்கள் கரைக்குத் திரும்பி நீந்தினர் அவன் அவர்கள் குதிக்க உபயோகித்த பாறையின் மீது ஏறி உட்கார்ந்தான், அவன் தொடைகளுக்குக் கீழ் அதன் உஷ்ணமான முரட்டுத்தனத்தை உணர்ந்தபடி. அந்தப் பையன்கள் தங்கள் ஆடைகளை சேகரித்துக் கொண்டு கடலினுள் நீட்டிக்கொண்டிருந்த இன்னொரு நிலமுனைப்பகுதிக்கு ஓடினர். அவர்கள் அவனிடமிருந்து விலகிப் போவதற்காகச் சென்று கொண்டிருந்தனர்..

.

பன்னீர்

பொழுது போகாத சமயம் அவள் இரும்புப் பெட்டியைத் திறந்து அந்தப் பட்டுப்புடவையை கையில் எடுத்துப் பார்ப்பாள். ஒருமாதிரி பாச்சா உருண்டை மணத்துக் கிடக்கும் அது. அல்சேஷன் நாய் வழிதப்பி சேரிக்குள் வந்தா மாதிரி… அற்புதங்கள் எப்பவாவது நிகழ்கின்றன. பிரத்யேகமாய் அதைக் கட்டிக்கொண்டு அவள் எடுத்துக்கொண்ட புகைப்படம் பெட்டியில் வைத்திருந்தாள். கொஞ்சம் அவ்ட் ஆஃப் ஃபோகஸ் படம் தான். கலரில் எடுக்கச் சொன்னால் கறுப்பு வெள்ளை மாதிரி யிருந்தது, அவளே கறுப்பு என்பதால்.

ஏற்கெனவே எப்போதும்

ஆதி உணர்வு அச்சம். எங்க நாம தாக்கப்பட்டுறுவமோன்னு ஒரு பயம். இதுதான் உலகத்தில் எந்த உயிருக்கும். மனிதன் சமூக விலங்கு. அவனும் முதலில் வெளிச் சமூகத்தை அச்சத்துடனே பார்க்கிறான். பின்னர் எப்படியாவது அதில் சேர்ந்து தனது தனித்தளத்தைக் கைவிட்டுக் கரைந்து விடப்பார்க்கிறான். கரைவதில் அவனுக்கு அபாயம் குறைவு.

வெளவால்கள் உலவும் வீடு

திண்ணையும், திண்ணையின் முனையில் நிறுத்தப்பட்டிருந்த‌ முன்பைவிட அதிகம் ஆங்காங்கே உடைந்திருந்த சாயம் போன‌ தடுப்பு தட்டியை அன்னிச்சையாக‌ கவனிக்க‌ இந்த வீட்டைப் பற்றிய நினைவுகள் மன‌தில் அலைமோதின‌‌. அம்மா வெத்தலை மென்றப‌டி காலை நீட்டி இந்த‌ திண்ணையின் முனையில் அமர்ந்திருப்பாள். பள்ளிகூடம் விட்டதும் ஓடிவந்து அம்மாவின் கால்களில் சாய்ந்துகொண்டு இடுப்பை பிடித்துக் கொள்வான். வந்துட்டான், இவன் ஒருத்தன் ஹஹ என்றுவிட்டு சற்று தூக்கிய வெத்தலை மென்ற வாயுடன் சிரித்தபடி அவனுக்கே கேட்டு அலுத்துப்போன‌ அவனின் சிறுவயது பராகிரமங்களில் ஒன்றை பேசிக்கொண்டிருக்கும் பக்கத்துவீட்டு பெண்ணிடம் சொல்லாமல் அவளால் இருக்க முடியாது.

அதில் ஒரு பெருமையும் அலாதி அன்பும் இருப்பது தெரியும் பக்கத்துவீட்டு பெண்மணி ஒவ்வொருமுறையும் புதிதாக கேட்பதுபோல ஆர்வத்துடன் கேட்டுகொள்வாள். மூன்று மகன்கள் மேல் அதீத கற்பனைகள் அவளுக்கு. ஆனால் எப்போதும் கம்னாட்டி, கழிச்சாலபோறவனே என்று திட்டிக்கொண்டே தான் இருப்பாள்

வாசனை

உழுத நிலத்தை பார்த்தவனின் கண்களில் நிறைய புழுக்கள், பூச்சிகள் தெரிந்தன. பாதி அறுபட்ட புழுக்கள் தத்தளித்துக் கொண்டிருந்தன. பிப்பாலியின் கூரிய பார்வையில் பூச்சிகளுடைய வெளிர் மஞ்சள் ரத்தக் கறைகள் அங்கங்கு தென்பட்டன. வயலின் மேல் சில பறவைகள் வட்டமிட்டன. பிப்பாலி வானை நோக்கினான். சூரிய வெளிச்சத்தில் அவனின் கண்கள் கூசி, லேசாக இருட்டிக் கொண்டு வந்தது.

பூனை

காலையில் எஞ்சியிருந்த நேரத்தில் செய்தித்தாள்களைப் படித்துக் கொண்டும், இசைத்தட்டுகளைக் கேட்டுக் கொண்டும், எப்போதும் போல சாதாரணமாகப் பேசிக் கொண்டுமிருந்தார்கள். அனால் எல்லா ஞாயிறுகளைப் போல் அல்லாது, சில சமயம் மட்டுமே உணரக்கூடியதாய், சொல்லாமலே அறியப்பட்ட ஒப்பந்தம் மூலமாக அழிய விடப்பட்ட ஒரு ரகசிய மின்னோட்டம் அவர்கள் இருவருக்குமிடையே ஓடியது. பூனை கட்டில் மீது இருந்து கொண்டிருந்தது. டியின் நண்பி ஞாயிறுதோறும் செய்வது போல், சூரிய ஒளி, சன்னல் வழியாக வந்து கொண்டிருக்கும் காற்றுடன் சேர்ந்து அவளைத் தொடும்படியாக தன்னை ஆடைகளால் மறைத்துக் கொள்ளாமல் படுக்கை மீது சோம்பலாக நீட்டிக் கொண்டிருந்தாள்.

அந்தப்புரம் இந்தப்புறம்

“ஏன், இந்தியால இதெல்லாம் இல்லன்னு நெனக்கிறியா. நம்ம ஊர்லையே இப்பெல்லாம் இது ஒரு பெரிய விஷயமே இல்ல. கொஞ்ச கொஞ்சமா இந்த மாதிரி மக்கள் எல்லாம் வெளில வர்றாங்களே. மூணு வருஷம் முன்னாடி டெல்லி ஹை கோர்ட்டே இது ஒன்னும் குத்தம் இல்லன்னு டீ-க்ரிமினலைஸ் பண்ணியாச்சே. உங்க நாகமல புதுக்கோட்டையிலேயே தெருவுக்கு நாலு பேரு இந்த மாதிரி தேடினா கெடப்பாதாண்டா. அங்க பெரும்பாலும் யாரும் வெளில சொல்றதில்ல. அவ்வளவுதான் வித்தியாசம்.”

கதிர்மதியம் போல் முகத்தான்

மூலவர் ‘கதிர்மதியப் பெருமாள்’. “ஆண்டாள் ‘கதிர்மதியம் போல் முகத்தான்’ என்று பாடிய பெருமாள்” என்பார் அர்ச்சகர் ரங்கசாமி. கிருஷ்ணதேவராயர் ஒரு முறை இந்தக் கோயிலுக்கு வந்த போது நிறைய காணிக்கை தந்தார் என்பதால் பெருமாள் பெயருக்குக் கடைசியில் ‘ராயன்’ தொற்றிக்கொண்டு உற்சவர் ‘ஸ்ரீரங்கராயன்’ ஆகிவிட்டான்.

மழைக் காளான்

“யாரும் வர வேண்டாம்… நானே வெளாண்டுட்டு வாரேன்” என்று தலைக்குப் போட்டிருந்த பிளாஸ்டிக் கொங்காணியை கனகுவிடம் கொடுத்துவிட்டு மழையில் நனைந்தபடி தண்ணிக்குள் இறங்கினார். அவர் ஆவாரங்குச்சியை ஒடித்து அணையை உடைத்து அருகில் இருந்த செங்களை வைத்து அதன் மேல் செம்மண்ணை அள்ளி வைத்து பாலம் கட்டி விளையாட ஆரம்பிக்க… ஒவ்வொருவராய் தண்ணீருக்குள் இறங்கி வழி நெடுகிலும் பாலம் கட்டிய படி தெப்பலாக நனைந்தனர்.

மேல்வீடு

இந்த வீட்டுக்கு அவர்கள் குடிவந்து பத்து நாள்தான் ஆகிறது. சங்கரிக்கு சென்னையே பிடிபடவில்லை. சென்னை மக்களின் முக அமைப்பே அவளுக்கு விநோதமாகத் தெரிந்தது. மதுரைக்குத் தெற்கே உள்ளவர்கள் என்று தெரிந்த பின்புதான், அவர்கள் முகம் மனித முகமாகப் பட்டது. ‘போகப் போக பளகிரும்ட்டி’ என்றான் மாசாணம். ‘மொதல்ல அப்படித்தான் இருந்துச்சு, அப்புறம் பளகிட்டுன்னு நம்ம முருகன் சொன்னாம் கேட்டேல்லா.’

மீனாட்சி கொலு

சொல்லப் போனால் தர்மு மாமியே அந்தத் தெருவுக்கு அந்நியம்தான். ஹரிஹரசுதன் வீட்டு மாடியில் நடக்கும் தையல் பள்ளியில் ஆசிரியை. பொத்தி வைத்தாற்ப் போல், அவர் தெருவில் போவதும் வருவதும் தெரியவே தெரியாது. நவராத்திரி சமயத்தில் மட்டும் விதிவிலக்காக வைத்தி தாத்தா வீட்டுக் கொலுவில் அதிகம் தெரிவார். கௌரிக்கு பூ தைக்கிறேன், விச்சுவிற்கு கிருஷ்ணர் வேஷம் போடுகிறேன் என்று ஏதோ ஒரு சாக்கு. அந்த பத்து நாட்களும் வைத்தி தாத்தா வீட்டில் ‘மாமி, மாமியென’ எல்லாருக்கும், எல்லாவற்றுக்கும் தர்முதான்.

பாரதீப்

1947ல் போர் கப்பல்களின் இஞ்சின் மெயின்டனன்ஸில் இருந்தேன். இந்தியா சுதந்திரம் அடைந்து ஹிந்துஸ்தான், பாகிஸ்தானாக பிரிவினையானபோது, பாதுகாப்பு படை இலாகாவைச் சரியாக எப்படி கையாள்வது என்று யாருக்குமே தெரியவில்லை. அதனால் லார்ட் மௌன்ட்பேட்டன் பிரிவினைக்கு முன்னர் பாதுகாப்பு இலாகாவுக்கு இரண்டு வாரம் கெடு கொடுத்தார். அந்த இரண்டு வாரங்களில் சுதந்திர இந்திய படையில் யாருக்கு சேர விருப்பம், சுதந்திர பாகிஸ்தான் படையில் சேர யாருக்கு விருப்பம் என்று ஒவ்வொருவரையும் கேட்டுப் பிரிக்கச் சொன்னார். என்னிடமும் கேட்டார்கள்

யாதும் ஊரே

சொந்த ஊர் கோட்டயம் பக்கத்தில் கிராமம், இங்கே காலேஜ் படிக்க வந்திருக்கிறார்களாம். வீட்டில் சமையல் செய்யும் உத்தேசம் எதுவும் இல்லையாம். மெயின் ரோட்டில் கைராளி மெஸ்ஸில் சாப்பிடுவார்களாம். இரவில் டீவீ அலற விடக்கூடாது, குடி எல்லாம் இருக்ககூடாது என்று ஆரம்பிக்கும்போதே, “சேச்சி நாங்கள் படிக்க வந்திருக்கிறோம், மரியாதையான குடும்பம், ஊரில் அப்பா அம்மாவை விட்டு வந்திருக்கிறோம், எங்களுக்கும் பொறுப்பு உண்டு..” என்று நீளமாக, உணர்ச்சியுடன் பேசினான்.

பேச்சொலிகள்

சரளமான பேச்சு! அந்தப் பெண் இறந்ததற்குக் காரணமே அவளால் பேச முடிந்தது, அவள் அக்குழந்தைகளுக்கும் பேசக் கற்றுக் கொடுத்தாள் என்பதா?அவள் கொல்லப்பட்டதற்குக் காரணம் ஒரு கணவனின் புண்ணான புத்தியில் எழுந்த கோபமா அல்லது ஒரு அன்னியனின் பொறாமையால் எழுந்த வெறியா?Butlerவியாதியின் பேரலைக்குப் பின் பிறந்திருக்க வேண்டும். அப்படியானால் அந்த வியாதியின் வெள்ளம் ஓய்ந்து விட்டதா? அல்லது இந்தக் குழந்தைகள் வியாதிக்கு எதிர்ப்பு சக்தியோடு பிறந்தவர்களா?

முயல் காதுகள்

போஸ்ட் ஆபீஸ்க்யூவில் நிற்கும்போது, குடிதண்ணீர் வெண்டிங் இயந்திரத்தில் சில்லறை போட்டு போராடிக் கொண்டிருக்கும்போது,கைக்கொரு பையாக க்ரோசரி சமாச்சாரங்களை அள்ளிக் கொண்டு வீட்டை நோக்கி மாடிப்படிகள் ஏறும்போது, என்று எல்லாஇடங்களிலும் ‘டபக்’கென உட்கார்ந்து அவிழ்ந்திருக்கும் ஷூ லேஸ்களை முடிபோட ஆரம்பித்துவிடுவார். ‘பன்னி இயர்,பன்னி இயர்….’.கூடவே நானும் செஸ் விளையாட்டில் ‘செக்’ வைக்கப்பட்ட ராஜாவைப் போல அத்தனை வேலைகளையும் அந்தரத்தில் விட்டுவிட்டு..

உப்புக் காங்கிரஸ் – தோற்றமும் முடிவும்

தண்டியில் உப்பு எடுக்க மகாத்மா யாத்திரை செய்த சமயம், 1930-ம் வருடம், கல்லிடைக்குறிச்சி ஜூனியர் கிரிக்கெட் கிளப்பைச் சேர்ந்த நாங்கள், கல்லிடைக்குறிச்சி உப்புக் காங்கிரஸை உருவாக்கினோம். நாடெங்கும் சுதந்திரக் காற்று வீசுகையில், எங்கள் பங்குக்கு வெள்ளைக்காரனை உயிரை வாங்க முடிவு செய்தோம்.

த்ரிவம்பவே த்ரிபாவே

” ஈசான்” என்று தாய்லாந்தில் ஒரு மாவட்டம் இருக்கிறது.. அது “ஈஸ்வரன் ” என்கிற இந்துக்கடவுள் பெயரைத் தழுவி வந்திருக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று ஆரம்பித்தான். ” தாய்லாந்தின் வடமேற்கு பகுதியில் இருக்கும் அந்தப் பிரதேசத்துக்கு “ஈசான மூலை” என்கிற உங்கள் வாஸ்த்தி சாஸ்த்திரத்திலிருந்து கூட வந்திருக்கலாம்” என்று சொல்லி என்னை ஆச்சரியப்படுத்தினான்.

பைத்தியக்காரன்

காலங்காலமாக மனிதர்கள் தங்களின் சுதந்திரத்தினை நிலைநாட்ட யார் யாரையோ எதிர்த்தவண்ணமே இருக்கின்றனர். இன்னமும் இதன் எதிரொலிகள் உலகின் பல்வேறு இடத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவர்கள் யாருக்கும் தெரியாது இந்த நான் என்னும் விஷயத்தில் இருக்கும் நுண்ணதிகார மையம். அதனை எப்படி உடைப்பது என்பதையும் இப்பிரதியிலேயே சொல்லியிருக்கிறேன்.

அவன்

அடிக்கடி காதலிகளை மாற்றுவதும், பின் புதிய காதலிகளைத் தேடி அலைவதும், பழைய லட்சியங்களை மாற்றிப் புதிய லட்சியங்களை கைக்கொள்வதும், தன்னைப் புதுமைவிரும்பியாக, புரட்சிக்காரனாக‌க் காட்டிக்கொள்வதுமாக அலைவான். கூடவே இலக்கியம், சமூகம், வரலாறு, அறிவியல் என்று பல விஷயங்கள் மற்றவர்களுக்குப் புரிவதைப் பற்றி கவலைப்படாமல் அது குறித்து நீளமாக‌ பேசிக்கொண்டிருப்பான். கொஞ்சநாள் முன்புதான் காதலியை மாற்றியிருந்தான். இருவரும் ஒரே மாதிரியாகத் தோன்றுவதாகவும், முன்னையவளைவிட பின்னையவள் சற்றேதான் மாறியவளாகத் தெரிகிறாள் என்றும் கூறியதை அவன் ரசிக்கவில்லை.

தேடல்

கணிணிகள் பொய் சொல்வது இல்லை. மறைமுகமாகப் பேசுவது இல்லை. அதனால் அவைகளுடன் தர்க்கம் செய்வது சுலபம். அதே நேரம் அவைகளுக்கு மனிதரின் எந்த உணர்ச்சியும் இல்லை. வஞ்சகமும் இல்லை. நேர்மையும் இல்லை. கருணையும் இல்லை, முதுகில் குத்துவதும் இல்லை. நீங்கள் மனிதர்களையும் கணிணியைப் போன்று இருக்க எதிர்பார்த்து விட்டீர்கள். அதுவும் ஒரு பாரபட்சமான கோணத்தில். மனிதன் கருணை காட்டினால் அதை நீங்கள் பெரிதாக எடுத்துகொள்வதில்லை என நினைக்கிறேன். ஆனால், நேர்மை, சரி என்று நீங்கள் நினைப்பவற்றில் இருந்து அவன் இம்மி விலகினாலும் உங்களுக்கு அது உறுத்திக் கொண்டு தெரிகிறது. கோபம் வருகிறது.

உங்களுக்குக் கேட்டதா?

எம்.ஜி.ஆருக்குப் பின்னர் லியான்னல் மெஸ்ஸி வந்தார். கடந்த வருடம் சென்று வந்த ஸ்பானிஷ் கிளாசிலிருந்தே மெஸ்ஸியை எனக்குத் தெரியும். அவருக்குப் பின் தூக்கு போட்டுக் கொண்ட என் தாத்தாவின் மூத்த மனைவி, ஸ்டீவ் ஜாப்ஸ் என்று ஆளாளுக்கு வந்து போய்க் கொண்டிருந்தனர். இதற்கு நடுவில் பசித்தது. ப்ரெட்டை தண்ணீரில் நனைத்துச் சாப்பிட்டேன். அடுத்த விளையாட்டாக எனக்குப் பிடித்த படங்களை காட்சி பை காட்சியாக என் மனத்திரையில் ஓட்டிப் பார்த்தேன். மெளன ராகம், இயற்கை, எங்கள் வீட்டுப் பிள்ளை என்று ஒவ்வொன்றாய்.