கனவு நோயாளி

ஒரு வட்டத்தின் மீது ஓடிக் கொண்டிருந்தான். தொடக்கப்புள்ளி இறுதிப்புள்ளிகளை கண்டறிய முடியாத வட்டம். எந்தப் புள்ளியிலும் நிற்கவில்லை. ஓடி ஓடிக் களைத்துப் போனான். தான் மூச்சு விடும் ஓசை அவனுக்கு தெளிவாகக் கேட்டது. ஒரு வினாடி அல்லது சில வினாடிகள் இருக்கலாம். அவன் நின்றான். ஓடிக்கொண்டிருந்த வட்டம் சதுர வடிவாக மாறியிருப்பதைக் கண்டான். அவன் நின்ற இடம் சதுரத்தின் ஒரு மூலை. சதுரப் பாதையில் மீண்டும் ஓட்டம். சதுரம் விரைவிலேயே செவ்வகமாக மாறியது.

மீட்பு

ஒருவன் ‘பயப்படாதே .உன் பெயர் சகினாவா ?’என்றான்.அதைக் கேட்டு அவள் முகம் வெளுத்தது. தாங்கள் யார் என்று அவர்கள் சொன்ன பிறகே தான் சிராஜுதீன் மகள் சகினா என்று ஒப்புக்கொண்டாள் .

இளைஞர்கள் அவளுக்கு அன்பு காட்டினார்கள்.உணவும் பாலும் கொடுத்து ட்ரக்கில் ஏற்றிக்கொண்டார்கள். அவர்களில் ஒருவன் தன்னுடைய ஜாக்கெட்டை கொடுத்து போர்த்திகொள்ளச் சொன்னான்.கைகளால் மார்பை மறைத்து கலவரமடைந்த நிலையில் அவள் நின்றதைக் கண்டு மனமிரங்கி -துப்பட்டா இல்லாதது கண்ணியக்குறைவென்ற உணர்வோடு அவதியுற்றாள் என்பது தெளிவாகத் தெரிந்தது.

கிட்டு மாமாவின் எலிப்பொறி

“எலிப்பொறிய நல்ல பிராண்டா வாங்கணும் சார். எனக்கு தெரிஞ்ச ஒரு கடை அடையார்ல இருக்கு”. வாட்ச்மேன் சொன்ன விலாசத்தில் கிட்டு மாமா சென்று சேர்ந்தார். கடையில் பட்டையாக திருநீர் அணிந்த ஒரு மெலிய உருவம். டாக்டர் நோயாளியை பார்க்கும் நேசத்துடன் கிட்டு மாமாவிற்கு விசிடிங் கார்டை நீட்டினார். கார்டில் நடு நாயகமாக அந்த பெயர் “எலிப்பொறி நாராயணன்”. நாராயணனின் தொழில் பக்தி கிட்டு மாமாவை கலங்கடித்தது.

இணையத்தில் கதை படிக்கும் கலை

நான் எதையும் ஒன்பது கேள்வியாக வைத்து பார்ப்பவன். இந்தத் தகவல் தொகுப்புக் கட்டுரையிலும் எனக்கு விடை தெரியாத சந்தேகங்களையும் உங்களிடம் கேட்க விரும்பும் கேள்விகளையும் கேட்டு வைக்கிறேன்:

1. அமெரிக்காவில்/இங்கிலாந்தில் இருந்து எழுதும் ஆங்கிலத்தில் நிலைமை எவ்வாறு மாறுபட்டு இருக்கிறது? சன்மானத்தை விட்டுவிடுங்கள்; தரத்திலும், பதிப்பாசிரியரின் வெட்டுதல்களிலும், புனைவின் பல்சுவைகளிலும் ஆங்கிலச் சிறுகதைகளுக்கும் தமிழ்க்கதைகளுக்கும் வலையுலகில் என்ன வித்தியாசம்?

ஸ்நேகிதி

நியாயமாய் அவள் பார்வையில் கோபத் தீ பற்றி எரிய வேண்டும். அல்லது வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டு போயிருக்கவும் செய்யலாம். ஆனால் முன்வரிசைப் பற்கள் பளிச்சிட அழகாய்ச் சிரிக்கிறாள். பெரிய கண்களை இன்னும் விரித்து ஆச்சரியமாய்க் கூவுகிறாள்.

கிராமத்து வீடு

” இதோ இந்த முத்தத்துலேதான் பாண்டிக் கட்டம், தாயக்கட்டை கட்டமெல்லாம் போட்டு விளையாடுவோம். இந்த தூண்களுக்கு நடுவிலே நாலுமூலை தாச்சி என ஒரு விளையாட்டு. அதெல்லாம் ஒரு காலம் .எல்லாரும் போய் சேர்ந்தாச்சு. இப்போ என் காலமும் முடியப் போறது. நம்ம குடும்பத்தோட ஒரோரு சிரிப்பும் அழுகையும் இந்த வீட்டுக்குத் தெரியும். நமக்குத் தெரியாத ரகசியங்கள் கூட இதுக்குத் தெரியும்“.

விக்டோரியன்…

கிட்டதட்ட அச்சு வெல்லம் மாதிரியான ஒரு நினைவுச் சின்னம் அமைந்திருந்தது. அதன் ஒரு பக்கத்தில் இரண்டாம் உலகப்போரில் உயிர் நீத்த இந்த டவுணைச்சேர்ந்தவர்களுக்கு அஞ்சலி குறிப்பு இருந்தது. இன்னொரு பக்கம் முதல் உலகப்போரில் இறந்தவர்களுக்கு. மூன்றாவது பக்கம் என்னவாக இருக்கும் என்ற யோசனை வந்தது. இப்போது வழக்கமான எண்ணம் தலைகாட்ட ஆரம்பித்தது. நான் இன்னொரு பக்கத்தைப் பார்க்கபோகும்போது மற்ற பக்கங்களில் எழுதியிருந்தவை மறைந்துவிடும்…இந்த எண்ணம் வந்தவுடன் என்னுள் பதற்றம் மெல்ல புகையாய் எழுந்தது.

ஆரோகணம்

அந்த உயரத்திலிருந்து கீழ் நோக்கினால் எவருக்காயினும் மனம் சில கணங்கள் அதன் உச்ச விசையில் ஓடியடங்கும். எந்த நொடியும் விழுந்து விடுவோம் என்ற பயமும் அந்த உயரத்தின் பிரமிப்பில் கடந்து வந்த தொலைவை நோக்க வேண்டும் என்றொரு குறுகுறுப்பும்.  பாற்கடலை கடைந்த போது பொங்கிய நுரைத் துளிகள் எல்லாம் உறைந்த மலையாகிவிட்டன போலும், பனி மலையல்ல முடிவற்று நீளும் பனிக் கடல் என்று எண்ணிக்கொண்டார் அந்தக் கிழவர். வாழ்க்கையும் நினைவுகளும் எல்லாம் எங்கோ தொலைவின் அடிவானக் கிடங்கில் சென்று ஒளிந்துக் கொண்டன. காலமும், தேசமும், தொலைவும் எதுவும் அவருக்கு புலப்படவில்லை. ‘பட்’ ‘பட்’ இரண்டுமுறை அந்த ஒலியை செவிக்கு வெகு அருகில் கேட்டவுடன், அத்தனை ஆண்டுகளாக அந்தக் கனத்தை எதிர்கொள்ளும் போது உதிர்ப்பதற்காக சுமந்து இருந்த சொல்லை முணுமுணுக்க முயன்றது மட்டும் மங்கிய நினைவாக எஞ்சியிருந்தது.

வேளை வந்துவிட்டது

இன்னும் பத்தாண்டுகள் இங்கே இருக்கச் சொன்னாலும் கபீர் தயார்தான். அதிலும் குடும்பத்தோடு வருவதென்றால் இன்னும் மகிழ்ச்சி. ஆனால் இந்த நாடு அதற்கு இடம் கொடுக்கவில்லை. அதற்கு மேல் ஹம்பாடியின் தொடர்பு ஏற்பட்ட பின்னர் கபீரின் உலகம் மிகவும் மாறிவிட்டது. இந்த வேலையை விட, குடும்பத்தை விட, உயிரை விட, மிக உன்னதமான விஷயங்கள் இருக்கின்றன என்பதை ஹம்பாடிதான் கற்றுக் கொடுத்து அவரைப் புது ஆளாக்கினார்.

ஜானவி

ரொட்டி முழுவதும் தீர்ந்து போனது. காக்கைகளும் அதை உணர்ந்தன. ’சாப்பிடுங்கள் காக்கைகளே” என்று சந்தோசமாகச் சொல்லி கைகளை வானத்தை நோக்கி வீசினாள்.சில நடுவானில் பறந்து கொத்துவது போல தோற்றம் காட்டின.

’என் சதை முழுவதும் உங்களுக்குதான்
ஆனால் கண்களை மட்டும் விட்டு விடுங்கள்.
என் காதலனின் புன்னகையை பார்க்க விரும்புகிறேன்

என்று பாடினாள்.

இடுக்கி கோல்ட்

தாத்ரிக்குட்டி வாழ்ந்து முடிந்து துரத்தியடிக்கப்பட்டிருந்த அந்தத் தோப்பு, காலத்தின் புயல் வீசிச் சாய்ந்த தென்னை மரங்களும் நெருக்கடியான கனவுகளின் தாங்கொணாப் புழுக்கம் சுமந்த பெண்ணின் கண்ணீர் பெய்து பழுத்துப்போயிருந்த மாமரங்களும் சோபையுடன் நிற்க காட்சியளித்தது. இன்னும் சிறிது நேரத்தில் இருட்டிப்போய்விடும் என்னும் நிலையில், நாங்கள் அந்தத் தோப்பினூடே அவள் மிச்சம் வைத்துச் சென்ற தடயங்கள் இருக்கிறதா என்று தேடினோம். அவள் எப்பொழுதோ அவ்விடத்தை விட்டுப்போயிருந்தாள். அவளுக்குச் சாட்சியாக, அங்கே பாழடைந்து கிடந்த கிணறும் அவள் வழிபட்ட முழங்கால் அளவே உயரம் உடைய அம்பாளும் மட்டுமே இருந்தன. அம்பாளுக்கும் வேதனை தாங்கமுடியாததாக இருந்திருக்கவேண்டும்.

கணக்குப் பரீட்சை

“இந்த கோட்டிக்கார வெள்ளக்கார பய டயருக்கு வெறி எப்புடி இந்த நாயுவ நம்மள எதுத்து போராட்டம் பண்ணுதுன்னு.ஒருனாளு இந்த அமிர்தசரசுல ஆயிரக்கணக்கான மக்கள் கூடுனாங்க.இத தெரிஞ்சிக்கிட்டு இந்தபய என்னெஞ்சான்? இவன் ஆளுவ ஒரு நூறு வேர கூட்டிட்டு போயி,துப்பாக்கிய எடுத்து ணங்கு ணங்கு ணங்குனு சுட ஆரம்பிச்சிட்டான்” என்று கையை இடப்புறமும் வலப்புறமும் அசைத்து சொல்லிக் காண்பித்தார்.எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர் அவரின் நடிப்பைக் கண்டு. முருகம்மாளுக்கு சிரிப்பே வரவில்லை.அழுகை வந்துவிடக்கூடாதென்று வேண்டிக் கொண்டாள்.

தி.க.சி.யின் நினைவில்

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது சென்னை செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. குடும்பத்தோடு. நான் நண்பரும் ஓவியரும், அண்ணா பல்கலைக் கழக பேராசிரியருமான (நான் என்னவாக இருந்தாலும் பெரியவர்களின் சிநேகம் எப்படியோ எனக்கு வாய்த்து விடும் பாக்கியம் எனக்கு) சீனிவாசனுடன் தங்கினேன். திடீரென நான் போய்ச் சேர்ந்த இரண்டாம் நாளே சீனுவாசன், ”வாங்க திருநெல்வேலி வரை என்னுடைய காரிலேயே போய் வருவோம்” என்று சொல்ல, கிளம்பி விட்டோம். கூட கோபியின் புது நட்பு. வழியில் ராஜபாளையத்தில் இறங்கி மணி, கடையத்தில் இறங்கி கலாப்ரியா சந்திப்புகள். காலை எழுந்ததும் காலை உணவுக்குப் பிறகு சுடலை மாடன் தெருவுக்கு திகசியைப் பார்க்க கிளம்பினோம்.

வாக்கு

“நம்பிக்கையில்லேன்னா இதுங்கெல்லாம் ஏன் இங்க வருதுங்க?”

மூர்த்தி அந்த கட்டிடத்தின் உள்ளே நுழையும்போது, யாரோ யாரையோ சொல்லிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. மூன்று நான்கு குடும்பங்கள் ஏற்கெனவே காத்திருந்தார்கள். வரிசையில் அடுத்திருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார். என்ன ஏதென்று விசாரித்தார். கொஞ்சம் முன்னால் வந்து போன ஒருவன் இடக்கு மடக்காக குறுக்கு கேள்விகள் கேட்டதால் பிரச்சினை என்று தெரிய வந்தது. அப்படி என்ன பிரச்சினைக்குரிய கேள்விகளை அவன் கேட்டிருப்பான் என்று தெரியவில்லை. எது எப்படியோ எல்ல்லாவற்றுக்கும் அடிப்படை ஒரு நம்பிக்கைதானே.

வல் விருந்து

கும்பமுனிக்கு அன்று குளிமுறை. என்றால் அன்று மட்டும்தான் குளிப்பார் என்று பொருளில்லை. அன்றுதான் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார் என்று அர்த்தம். மற்ற நாட்களில் எண்ணெய் தேய்க்க மாட்டார் என்றும் உரை எழுத முடியாது. மற்ற நாட்களில் உருக்குத் தேங்காய் நெய். உண்மையில் எள்+நெய் தானே எண்ணெய்? எனவே வாரந்தோறும், சனிக்கிழமையில், எள் நெய் தேய்த்துக் குளியல். தவசிப் பிள்ளை, வாராது வந்த கனகமாமணி என்று கும்பமுனியைப் போற்றுவது காரணமாக இருக்கலாம். தாங்க ஆளுண்டு என்றால் தளர்ச்சியும் உண்டுதானே!

அசோகமித்திரனின் கதையுலகில் பெற்றோரும் பிள்ளைகளும்

அசோகமித்திரன் அதிகாரமுடைய ஆளுமைகளை மையப்படுத்தி அதிகம் எழுதியதில்லை. இதுவும் அவருடைய புனைவுலகில் குறிப்பிடத்தக்க அம்சம். விதிவிலக்காக, ’கரைந்த நிழல்கள்’ நாவலில் ஒரு பாத்திரமான ஸ்டூடியோ அதிபர் ராம ஐயங்கார். நாவலின் ஒரு அத்தியாயத்தில் ராம ஐயங்கார் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கும் தன் பங்களாவில் தன்னிடமிருந்து அன்னியப்பட்டுப் போயிருக்கும் தன் மகனைச் சந்திக்கச் செல்கிறார். தன் உடல்நிலை சீர்கெட்டுக்கொண்டிருக்கிறது என்பது அவருக்குத் தெரிந்துவிடுகிறது.

மகரந்தம்

ஆங்கிலத்தில் introvert என்றால் என்ன அர்த்தம்? விக்கிப்பிடியாவைக் கேட்டால், ‘தன்னுடைய நலத்தைப் பற்றி சிந்திப்பவர்’. பொதுவில் பேசத் தயங்குபவரையும் அறிமுகமில்லாதவர்களிடம் ஒடுங்கி இருப்பவர்களையும் அகமுக சிந்தனையாளர் என நினைக்கிறார்கள். தடாலடியாகக் கூட்டங்களில் முழங்குபவர்களையும் படோடாபமாக களத்தில் இறங்கி களேபரம் செய்பவர்களை எக்ஸ்ட்ரொவெர்ட் என எதிர்ப்பதத்தில் வைக்கிறார்கள். இந்தப் பிரிவுகள் சரியா? நீங்கள் இதில் எந்த ரகம்? எப்படி இந்த வகையறாக்கள் தொக்கி நிற்கின்றன என ஸ்காட் பாரி கௌஃப்மான் அலசுகிறார்

உலகளந்த நாயகி

வைணவப் பெண் பெயர்களில் எனக்கு மிகவும் பிடித்தது ரெங்கநாயகி. இதற்கெல்லாம் நேரடியாகக் காரணம் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், இந்தப் பெயரில் நான் சந்தித்த பெண்கள் அனைவருமே அழகிகள் என்று சொல்லலாம். அதிலும், முதன்முதலாக நான் பார்த்த ரெங்கநாயகி பேரழகி.

கவிதைகள்

முழு வேகமாய் வெளி கிழித்துச் செல்லும் கருமேகக் காகத்தைக்
கடல் துரத்தி
கரை மோதிச் சிதறும்.
சிதறியதில்
ஒரு சிறு நண்டு தப்பிக் கரையொதுங்கி

பழைய மூளைக்குள் சில புதிய மூலைகள் – 2

மூளையை உங்கள் மேஜை கணிணிக்கும், நமது புலன்களை கீ போர்டு, மவுஸ், காமிரா போன்ற கணிணியுடன் இணைந்து இயங்கும் கருவிகளுக்கு இணையாகவும் உருவகித்து பார்க்கலாம். கணிணிகளில் நிறைய யு‌எஸ்‌பி (USB) துறைமுகங்கள் அமைக்கப்பட்டு புலன் கருவிகளை இணைத்துக்கொள்ள வழி செய்யப்பட்டு இருப்பதைப்போல் மூளையிலும் வரும் செய்திகளைப் பெற்றுக் கொள்ள குறைந்தது ஐம்புலன்கள் என்ற ஐந்து துறைமுகங்கள் காத்திருக்கின்றன. ஒரு மவுஸ் கணிணியுடன் இணைக்கப்படும் யு‌எஸ்‌பி போர்ட்டில் (USB Port) அதற்கு பதில் ஒரு ஜாய் ஸ்டிக் (Joy Stick) அல்லது தொடுபலகை (Touch Pad) ஒன்றை இணைத்தும்கூட நிலைக்காட்டியை (Cursor) நாம் நகர்த்த இடும் கட்டளைகளை கணிணிகள் புரிந்துகொண்டு செயல்படுவதைப்போல் மூளையாலும் செயல்பட முடிகிறது.

மோட்ஸார்ட்டும் ஒரு இலையுதிர்கால மாலைப் பொழுதும்

நான் அவளுடன் வேலை பார்த்த ஆரம்ப நாட்களில் குழந்தையைக் காப்பகத்தில் விட ஆரம்பித்திருந்தேன். அவன் அங்கு ‘அட்ஜஸ்ட்’ செய்து கொண்டு விட்டானா என விசாரிப்பாள். ஐந்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய தாய் ஆனதால், குழந்தை வளர்ப்பின் நுணுக்கங்களை மனோதத்துவ முறைப்படி எனக்கு விளக்குவாள். இரண்டு வயதுக் குழந்தை நான் சொன்னதையே கேட்க மாட்டேன் என்கிறான் என்று ஒருமுறை அவளிடம் பாதி அலுப்புடனும், பாதி ஒரு தாய்க்குரிய பெருமையுடனும் விவரித்தபோது, சொன்னாள்: “அவன் நீ சொல்லும் எல்லாவற்றிற்கும், ‘சரி அம்மா,’ ‘அப்படியே செய்கிறேன் அம்மா,’ என்று சொல்லிய வண்ணம் இருந்தால் அவனுடைய தனித்தன்மை எவ்வாறு வளர்ச்சி பெறும்? அவன் எவ்வாறு ஒரு முழு மனிதனாவான்?” என்று கரிசனத்துடன் கூறினாள்.

சிங்கப்பூர் சென்ற மகன்

“கிழவிக்கு மனக்கஷ்டம் தாங்கவே முடியவில்லை. இரவு எல்லோரும் சாப்பிட்டுப் படுத்துத் தூங்கிய பிறகும் காவேரிப்பாட்டிக்குத் தூக்கம் வரவில்லை. பத்து வருஷங்களுக்குப் பிறகு ஏராளமான சம்பாத்தியத்துடன் மகன் திரும்பி வருகிறான் என்றும், செட்டியாருடைய பேரனுக்கு இரண்டு பவுன் அரைஞாண் கொடியைக் கொண்டுவந்து கொடுக்கப்போகிறான் என்றும் சொல்லியும்கூட, அவர்கள் அதை வேண்டுமென்றே காதில் வாங்கிக்கொள்ளாமல் அப்பால் நழுவுவதை நினைக்கும்போது அவளுக்கு அவமானமாகவும் இருந்தது; பயமாகவும் இருந்தது.”

வருகை

அந்த இரவில் அபரிமிதமாய் ஓர் உச்சகட்ட விறுவிறுப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்த இயற்கையின் கூத்தோடு தொடர்புகொள்ளும், மனம் இணையும் வாய்ப்பை இழந்து அவ்வூர் மக்கள் துக்கம்கொண்டிருப்பதாக அவன் எண்ணமிட்டான். திறந்திருந்த பாதி ஜன்னல் கதவு ஒருதரம் மடார் என்று அடித்து மூடி உடந்தானே மீண்டும் திறந்துகொண்டது. ஒரு காலைத் தூக்கி வைத்து அக்கதவு அசையாதபடி அவன் அமுக்கிக்கொண்டான். தலைமாட்டிலிருந்து புகைப்பெட்டியை எடுத்து ஒன்றைக் கொளுத்தி இழுக்கத் தொடங்கினான்.

குழந்தைகள் கொலு

மீனா திரும்பித் தன் தாயைப் பார்த்தபோது கிழவியே கொஞ்சம் திடுக்கிட்டுப் போனாள்.

‘உள்ளே வராதே, வெளியே நில்லு!’ என்று கரைகடந்த கோபக் குரலில் கத்தினாள் மீனா.

‘ஏன்?’

‘என் குழந்தைகள் கொலு வச்சிருக்கு. அதை நீ பார்க்கக் கூடாது!’‘கொலுவா!’

‘ஆமாம், கொலு! கொலு வச்சிருக்கோம் நானும் என் குழந்தைகளும். நீ பார்க்கக் கூடாது- நீ ஊரார்!’

தீட்டு

அன்று இரவு யார் யாரோ வந்தார்கள். சிலர் அழுது கொண்டே, சிலர் அலறியபடி. பெரிய குரலில் பக்கத்து வீட்டு மாமி “அண்ணா, போயிட்டேளே. சின்னக் குழந்தைகளை விட்டுட்டுப் போக எப்பிடிண்ணா முடிஞ்சுது” என்று கூவி அழுதது அவனை பாதிக்கவில்லை. ஆனால் அப்பாவின் கீழே வேலை பார்க்கும் ஜகன்னாத மாமா வீட்டு வாசலில் வருகையிலேயே குழறி அழுதபடி தட்டுத் தடுமாறி உள்ளே வருவதற்குள் அது அவர்தான் என்று பார்த்துத் தெரிவதற்குள் அவனும் தரையில் கீழே விழுந்து அழுது கொண்டிருந்தான்.

இரண்டு விரல் தட்டச்சு

”நீ எப்போ கத்துண்டே?” என்று நான் கேட்டேன்.

“இந்த ஊருக்கு வந்தப்புறம்தான். இது தெரிஞ்சுக்கலேன்னா நம்பளுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடைக்குமான்னு சொல்லமுடியாது.”

“நான் கொஞ்சம் அடிக்கிறேன்.”

“ரொம்ப அழுத்தி அழுத்தி அடிக்காதே. இது பழசு. ஒரு குழந்தை மாதிரி இதை வச்சுக்கணும். இது போல உபயோகமான பொருள் உலகத்திலேயே கிடையாது.”

இப்படித்தான் எங்கள் வீட்டில் ஒரு டைப்ரைட்டர் வந்து சேர்ந்தது. அவ்வளவு பெரிய மேஜையே அப்பா வாங்கினது டைப்ரைட்டருக்குத்தானோ என்று தோன்றியது. அப்பா எவ்வளவு சொல்லியும் எனக்கு இரண்டு விரல் கொண்டுதான் அடிக்க வந்தது. “நீ அடிக்கறதைப் பாத்தா ஒனக்கு எவனும் வேலை தர மாட்டான்,” என்று அப்பா ஒரு முறை கோபித்துக்கொண்டார். நானும் எவ்வளவோ முயன்றேன். மோதிர விரல், சுண்டு விரல் விரைத்து நின்றன.

தி.க.சி இல்லாத திருநவேலி . . .

மீனாட்சியின் உரத்த குரலில் குறுக்குத்துறை முருகனே ஒருகணம் திடுக்கிட்டு விழித்தார்.

‘சந்தனத்த பூசிக்கிடுங்க, சித்தப்பா. வெயிலுக்குக் குளிச்சையா இருக்கும்’.

சந்தனத்தை அள்ளி என் கைகளில் பூசினான். மோதிர விரலால் தடவி, சிறு தீற்றலாக நெற்றியில் இட்டுக் கொண்டேன். யாரோ ஒருவர் தாமிரவருணியில் குளித்துவிட்டு ஈரத்துண்டுடன், மண்டபத்தின் வழியாக நெற்றி நிறைய திருநீறுடன் கோயிலுக்குள் நுழைந்தார். வேகவேகமான நடை. பிள்ளையாருக்கு முன் மூச்சிரைக்க ரொம்ப நேரமாகத் தோப்புக்கரணம் போட்டார். ‘ஆயிரத்தெட்டு போடுவாரோ! எண்ணுவோமா’ என்று மனதில் தோன்றி மறைந்தது.

‘பாத்தேளா! அண்ணாச்சில்லாம் ஒருநாளும் சுகர்மாத்திர சாப்பிட மாட்டா. ஆரோக்கிய வாள்கைல்லா வாளுதா’ என்றான் மீனாட்சி.

தந்திப் புரட்சி  – ஒரு ரகசியப் போராட்டத்தின் சரித்திரம்

“ஆஷ் துரையை வாஞ்சி ஐயர் கொன்னதுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?” என்றான் ஆறுமுகம். நம்பியார் மேல்துண்டை வைத்து விசிறிக் கொண்டார். “சரியான கேள்வி அது இல்லை,” என்றார் வாசு. “துரை கொலைக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் என்ன சம்பந்தம் என்பது தான் கேள்வி.” “ஆஹா,” என்றான் ஆறுமுகம்.எனக்குப் புரியவில்லை. ஆனால் கேட்கவும் பயமாக இருந்தது.நம்பியார் கையைத் தூக்கி ஆட்டினார். “காங்கிரசாரை இந்தக் கொலையோடு இணைக்கும் ஒரே ஒரு தந்தி இருக்கிறது என்கிறான் பிரிட்டிஷ் இன்ஸ்பெக்டர் ஆடம். நமசிவாயம் என்று இங்கே மதராஸ் காரியாலயத்தின் ஆள் அனுப்பியது என்கிறான்.” “நமசிவாயம் எங்கே?” என்று கேட்டான் ஆறுமுகம்.