”நீ எப்போ கத்துண்டே?” என்று நான் கேட்டேன்.
“இந்த ஊருக்கு வந்தப்புறம்தான். இது தெரிஞ்சுக்கலேன்னா நம்பளுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடைக்குமான்னு சொல்லமுடியாது.”
“நான் கொஞ்சம் அடிக்கிறேன்.”
“ரொம்ப அழுத்தி அழுத்தி அடிக்காதே. இது பழசு. ஒரு குழந்தை மாதிரி இதை வச்சுக்கணும். இது போல உபயோகமான பொருள் உலகத்திலேயே கிடையாது.”
இப்படித்தான் எங்கள் வீட்டில் ஒரு டைப்ரைட்டர் வந்து சேர்ந்தது. அவ்வளவு பெரிய மேஜையே அப்பா வாங்கினது டைப்ரைட்டருக்குத்தானோ என்று தோன்றியது. அப்பா எவ்வளவு சொல்லியும் எனக்கு இரண்டு விரல் கொண்டுதான் அடிக்க வந்தது. “நீ அடிக்கறதைப் பாத்தா ஒனக்கு எவனும் வேலை தர மாட்டான்,” என்று அப்பா ஒரு முறை கோபித்துக்கொண்டார். நானும் எவ்வளவோ முயன்றேன். மோதிர விரல், சுண்டு விரல் விரைத்து நின்றன.