- மிளகு
- மிளகு – அத்தியாயம் இரண்டு (1596)
- மிளகு – மிர்ஜான் கோட்டை
- மிளகு -அத்தியாயம் நான்கு
- மிளகு: அத்தியாயம் ஐந்து
- மிளகு – அத்தியாயம் 6
- மிளகு
- மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்
- மிளகு – அத்தியாயம் ஒன்பது – 1999 லண்டன்
- மிளகு – அத்தியாயம் பத்து – 1596 மிர்ஜான் கோட்டை
- மிளகு – அத்தியாயம் பதினொன்று
- மிளகு – அத்தியாயம் பனிரெண்டு
- மிளகு அத்தியாயம் பதின்மூன்று
- மிளகு அத்தியாயம் பதினான்கு
- மிளகு: அத்தியாயம் பதினைந்து
- மிளகு -அத்தியாயம் பதினாறு
- மிளகு – அத்தியாயம் பதினேழு
- மிளகு அத்தியாயம் பதினெட்டு
- மிளகு அத்தியாயம் பத்தொன்பது
- மிளகு – அத்தியாயம் இருபது
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்று
- மிளகு அத்தியாயம் இருபத்திரண்டு
- மிளகு அத்தியாயம் இருபத்திமூன்று
- மிளகு – அத்தியாயம் இருபத்துநான்கு
- மிளகு அத்தியாயம் இருபத்தைந்து
- மிளகு அத்தியாயம் இருபத்தாறு
- மிளகு – அத்தியாயம் இருபத்தேழு
- மிளகு – அத்தியாயம் இருபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் முப்பது
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்தி நான்கு
- மிளகு அத்தியாயம் முப்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் முப்பத்தாறு
- மிளகு அத்தியாயம் முப்பத்தேழு
- மிளகு அத்தியாயம் முப்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் நாற்பது
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்று
- மிளகு-அத்தியாயம் நாற்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் நாற்பத்திநான்கு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் நாற்பத்தாறு
- மிளகு – அத்தியாயம் நாற்பத்தேழு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தொன்று
- மிளகு – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு
- மிளகு-அத்தியாயம் ஐம்பத்திமூன்று
- மிளகு -அத்தியாயம் ஐம்பத்திநான்கு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தாறு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தேழு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தெட்டு
- மிளகு :அத்தியாயம் ஐம்பத்தொன்பது
- மிளகு: அத்தியாயம் அறுபது
- மிளகு – அத்தியாயம் 61 & 62
- மிளகு அத்தியாயம் அறுபத்துமூன்று
- மிளகு அத்தியாயம் அறுபத்துநான்கு
- மிளகு அத்தியாயம் அறுபத்தைந்து
- மிளகு அத்தியாயம் அறுபத்தாறு
- மிளகு அத்தியாயம் அறுபத்தேழு
- மிளகு அத்தியாயம் அறுபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் அறுபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் எழுபது
- மிளகு அத்தியாயம் எழுபத்தொன்று
- மிளகு – அத்தியாயம் எழுபத்திரண்டு
- மிளகு அத்தியாயம் எழுபத்திமூன்று
- மிளகு அத்தியாயம் எழுபத்து நான்கு
- மிளகு அத்தியாயம் எழுபத்தைந்து
- மிளகு அத்தியாயம் எழுபத்தாறு
- மிளகு அத்தியாயம் எழுபத்தேழு
- மிளகு அத்தியாயம் எழுபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் எழுபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் எண்பது
- மிளகு அத்தியாயம் எண்பத்தொன்று
- மிளகு – அத்தியாயம் எண்பத்திரண்டு
- மிளகு – அத்தியாயம் – எண்பத்திமூன்று
- மிளகு – அத்தியாயம் 84 எண்பத்தி நான்கு
- மிளகு – அத்தியாயம் 85
- மிளகு – அத்தியாயம் 86
- மிளகு – அத்தியாயம் 87
- மிளகு – அத்தியாயம் 88
- மிளகு – அத்தியாயம் 89 – பின்கதை

அம்பலப்புழை 2000
பரமன் என்ற பரமேஸ்வர ஐயர் அறையின் மூலையில் வசதியான சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அறை நல்ல வெளிச்சத்தில் இருந்தது.
பரமனுக்கு எதிரே இன்னொரு நாற்காலியிட்டு பிஷாரடி வைத்தியர் உட்கார்ந்திருந்தார். அவர் மடியில் ஒரு சிறிய கேஸட் டேப் ரிக்கார்டரை வைத்திருந்தார்.
பரமன் சட்டை காலரில் இருந்து மிகச் சிறிய ஒலிவாங்கி டேப் ரிகார்டரோடு இணைத்திருந்தது.பரமனின் கண்கள் மூடியிருந்தன.
பிஷாரடியும் மைக் கொண்டு தன்னையும் டேப் ரிகார்டரோடு பிணைத்திருந்தார். பத்து நிமிடமாக அறையில் அமைதி நிலவியது. பிஷாரடி பேச ஆரம்பித்தார்.
பரமேஸ்வரன், அம்பலப்புழை அம்பலத்துக்குப் போயிருக்கிறீர்களா?
இல்லை என்ன விசேஷம் என்று சிரமத்தோடு குரல் வருகிறது பரமனிடம் இருந்து.
கோவிலில் என்ன விசேஷம் இருக்குமோ அந்த விசேஷம் உள்ள புராதன கோவில் அது.
பிஷாரடி கூடுதல் தகவல் தருகிறவராகத் தன்னை உணர்ந்தார்.
வேறு எந்த கோவிலுக்கெல்லாம் போயிருக்கிறீர்கள் பரமேஸ்வரன் ஐயர்?
பரமன் என்றே அழையுங்கள்.
அப்படி அழைத்தால் மனதில் என்ன மாதிரியான நிம்மதி ஏற்படுகிறது?
அப்படித்தான் என்னை காலம் காலமாகக் கூப்பிட்டு வருகிறார்கள்.
காலம் காலம் என்றால்?
வருஷக் கணக்கில்.
எத்தனை வருஷம்?
நிறைய வருடம்.
நூறு?
நானூறு வருடம் முன்பு.
நானூறு வருடம் முன்பு நீங்கள் உயிரோடு இருந்தீர்களா?
பரமன் அமைதியானார். பிஷாரடி திரும்பக் கேட்டார் – நானூறு வருடம் முன் நீங்கள் ஜீவித்திருந்தீர்களா?
ஆமாம் என்றார் தீர்மானமானப் பதில் சொல்ல முடிவு எடுத்த மாதிரி, பரமன்.
உங்களோடு யாரெல்லாம் இருந்தார்கள்?
நிறையப் பேர் இருந்தார்கள்.
அதெல்லாம் யார்?
யாரெல்லாமோ இருந்தார்கள்.
யாராவது இருந்தால் பெயர் தெரிந்திருக்குமே என்று நைச்சியமாகக் கேட்டார் பிஷாரடி.
பெயர் தெரியாது. ஆனால் நிறையப்பேர் இருந்தார்கள்.
எங்கே?
பரமனிடமிருந்து பதில் இல்லை.
எங்கே நிறையப்பேர் இருந்தார்கள் பரமன்?
இதற்கும் பரமனிடமிருந்து பதில் இல்லை.
நானூறு வருடம் முன்பு யாரெல்லாம் இருந்தார்கள்? திலீப் ராவ்ஜி இருந்தாரா?
Don’t talk rubbish, doctor. அவன் பிறக்கவே இல்லை.
பின்னே நானூறு வருஷம் முன்னால் யார் உங்களோடு இருந்தார்கள்?
மாட்டேன். அந்த ராட்சசன் ஏதாவது பண்ணுவான்.
எந்த ராட்சசன்?
நேமிநாதன்.
பரபரப்பானார் பிஷாரடி வைத்தியர். ஜகஜ்ஜோதியாக எரிந்து கொண்டிருந்த டியூப் லைட்டுகளை அணைத்து இரண்டே இரண்டு அறுபது வாட்ஸ் விளக்குகளை மட்டும் ஒளிரச் செய்தார். பரமனை அருகில் சென்று பார்த்தார். புலன்கள் விழித்திருக்க, ஆழமான உறக்கத்தில் இருந்தார் அவர்.
பரமன், நேமிநாதன் இல்லை, வரமாட்டான்.
பரமன் உறக்கத்தில் சிசு போல் சிரித்தார்.
அவன் பேய் மிளகு மாதிரி. இல்லாமல் போனான் என்று விட்டால் திரும்ப தழைத்து வந்துவிடுவான்.
பேய் மிளகு? பிஷாரடிக்குத் தெரியும். Devil’s-pepper. Rauvolfia vomitoria
தெரிசா வீட்டிலும் தன் வீட்டிலும் சடசடவென்று படர்ந்து வாசல் மறைத்து வளர்ந்த அந்த அசுரத் தாவரத்தை முற்றும் பிடுங்கிப் போட்டது நினைவு வந்தது பிஷாரடி வைத்தியருக்கு. முன்னோர் ஓலைச் சுவடியில் அந்தப் பெயரும், அதை ஒழிப்பது எப்படி என்றும் எழுதியிருந்ததும் நினைவு வந்தது.
பேய் மிளகு தான் என் வீட்டில் அடைந்து மண்டியது.
பிஷாரடி பரமனிடம் தகவல் தெரிவிக்கும் பாணியில் சொன்னார்.
பேய் மிளகு நானூறு வருஷம் முன்பு ஹொன்னாவரில் படர்ந்து வந்தது என்றார் பரமன். ஜெரஸூப்பாவிலேயும்.
ஹொன்னாவர். ஜெரஸோப்பா. ஹொன்னாவரில் நீங்கள் மட்டும் தான் இருந்தீர்களா?
இல்லை என்றார் பரமன்
உங்களோடு யாரெல்லாம் இருந்தது?
மஞ்சுநாத் இருந்தான். ரோகிணி கூட இருந்தாளே. என்ன இருந்தாலும் அம்மா ஆச்சே. அவனோடு ஜெருஸூப்பாவுக்கும் ஹொன்னாவருக்கும் போய்ட்டு போய்ட்டு வந்துண்டிருந்தா.
அவனுக்கு ரோகிணி என்ன வேணும் என்று ஆவலோடு கேட்டார் பிஷாரடி வைத்தியர்.
அம்மா, சொன்னேனே. பொறுமையில்லாமல் முணுமுணுத்தார் பரமன்.
மஞ்சுநாதன் இல்லை, இன்னொரு நாதன். நேமிநாதன். ஆமா, நேமிநாதனுக்கு மஞ்சுநாதன் என்ன உறவு?
அதெல்லாம் சொல்ல முடியாது போடா.
பரமன் குரல் கரகரப்பாக மாற வந்த பதிலை உடனே சரியாகப் புரிந்து கொண்டார் பிஷாரடி. கொங்கணி மொழி இது. அதுவும் நானூறு வருஷம் முன்னால் பேசப்பட்டது. உத்தரகன்னடத்தில் பேசப்பட்டது. குறிப்புகளை டேப் ரிகார்டரில் பிரதி எடுத்துப் பூர்த்தி செய்வதற்குள் பரமன் நன்றாக விழித்துக் கொண்டு விட்டார்.
சாரி டாக்டர் பிஷாரடி, பேசிண்டே இருந்தபடி உறங்கிட்டேன். ஏசி போட்ட ரூம்லே இப்படி சௌகரியமான லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி போட்டு உக்கார்ந்தேன்னும் இல்லாம படுத்தேன்னும் இல்லாம அரைத் தூக்கத்திலே கிடக்கறது பாக்யம்.
தலையசைத்தபடி மனதில் பெயர்களை பட்டியல் போட்டார் – மஞ்சுநாதன் இல்லே மஞ்சுநாத், நேமிநாதன், ரோகிணி, ஜெருஸூப்பா, ஹொன்னாவர்.
அவருக்குப் புரிகிறது நானூறு வருடம் முந்தி ஹொன்னாவரில் ஜீவித்திருந்தவர்கள் இவர்கள். பரமன் அந்தக் காலத்தில் போய் வாழ்ந்திருக்கிறார் இவர்களோடு எல்லாம் உறவும் பகையும் ஏற்படுத்திக் கொண்டு. ஹொன்னாவர். இன்னும் இருக்கிறது இந்தச் சிறு நகரம். ஷராவதி நதி அரபிக் கடலில் கலக்கும் முகத்துவாரப் பிரதேச நகரம் 600 வருடங்கள் பழையது,. ஜெர்ஸூப்பா அல்லது கெர்ஸூப்பா அல்லது ஜெரஸோப்பா அல்லது ஜெருஸப்பா என்று பலவிதமான பாட பேதங்களோடு அழைக்கப்பட்டு ஒரு காலத்தில் பெரும் துறைமுக நகராக இருந்து இப்போது குக்கிராமமாக இருக்கிறது ஜெர்ஸூப்பா. இடிந்த கோவிலும் சதுர்முக பஸதி என்ற நான்கு வாசல்கள் உள்ள சமணக் கோவிலும், சில பழைய கட்டிடங்களின் சிதைவுண்ட பகுதிகளுமாக ஜெருஸூப்பா இருக்கிறது.
அங்கே எல்லாம் எப்படிப் போனார் இவர்? அதைவிட முக்கியம் அந்தக் காலத்தில் இருந்து எப்படி இந்தக் காலத்துக்குத் திரும்பி வந்தார்?
பிஷாரடி தன் முன்னோரை நினைத்துக் கொண்டார். இன்றைக்கு பரமன் பற்றிக் கிடைத்த தகவல் ஐந்து அல்லது பத்து சதவிகிதம் இருக்கும். மீதி தொண்ணூறு பெர்செண்ட் எப்படி, எப்போது கிடைக்கப் போகிறது?
எதற்குக் கிடைக்கணும்? அவருக்குப் புரியவில்லை. ஏதோ அவரை முன்நோக்கிச் செலுத்துகிறது. அது பேய் மிளகை நானூறு வருடத்துக்கு அப்புறம் கர்னாடகத்தில் இருந்து கேரளத்துக்குக் கொண்டு வருகின்றது. மிளகு சம்பந்தமாக எல்லோர் வாழ்க்கையிலும் ஏதோ நடத்திப் போகிறது. ஒரு குழந்தைக் குரலில் அப்பா அப்பா என்று அழைக்கிறது. அந்தக் குழந்தை வீட்டில் இருந்து கடைவீதிக்குத் தனியாக போகிறான். சின்னப் பையன், மஞ்சுநாத், ரோகிணியின் மகனா? அப்பா அப்பா என்று பரமனைக் கூப்பிடுகிறானா?. பரமன் அவனுடைய தகப்பனா? ரோகிணியின் கணவனா? அப்போ, நேமிநாதன் யார்?
டாக்டர் வாங்க, வெளியே போய்ட்டு வரலாம். கார் டிரைவர் வந்திருக்கார். ஏற மட்டும் கொஞ்சம் உதவி பண்ணுங்க போதும். பரமன் சொல்கிறார்.
காந்தம் வைத்து இழுத்தது போல் அம்பலப்புழை ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி அம்பலம் கிருஷ்ணன் கோவிலுக்குக் கார் வந்து நின்றது. சந்நிதிக்கு வெளியே கடைகள் இரண்டு பக்கமும் விளக்குப் போட்டு வாடிக்கையாளர்களுக்காகக் காத்திருக்கும் வரிசை.
வாங்கோ பரமன், நான் இருக்கேன், பிடிச்சு ஜாக்கிரதையா கூட்டிட்டுப் போறேன். சட்டையை அழிச்சு காரிலேயே வச்சுடுங்க. போகலாமா?
கோவிலுக்கு உள்ளேயா? பரமன் சிரித்தார்.
ஏன் என்ன விஷயம்?
நான் எப்படி நடக்கறது?
பரமன் சொல்லும்போத உறக்கச் சுவடுகள் பூசிய அவர் முகத்தில் உற்சாகம் தட்டுப்பட்டது.
டாக்டர், பெரிய கோவில், ஜெயின் டெம்பிள், ரெண்டு காலும் முழுசா இருக்க காற்று வாங்கியபடி பிரதிட்சணம் பண்றதை அனுபவிச்சேன், தத்ரூபமா இருந்தது கோவிலும் பிரகாரமும் ஜில்லுனு அடிக்கற காற்றும், ரெண்டு காலும் செயலாக இருந்ததும். வேறே எதோ காலம், எதோ ஊர்.
கோவில் அலுவலகத்தில் இருந்து சக்கர நாற்காலி ஒன்றை உருட்டிக்கொண்டு கோவில் அலுவலர் வந்தார். பிஷாரடி இதை ஏற்கனவே திட்டமிட்டிருக்கிறார் என்று பரமனுக்குத் தோன்றியது.
சமணக் கோவில் அனுபவம் அவர் திட்டமிட்டதில்லைதான். இவ்வளவு தத்ரூபமாக, வேறே ஒரு காலத்தில்? கனவில் வருவதா எல்லாமும்? இதுவும்?
அது என்ன ஊர்லே பரமன்?
எது டாக்டர் பிஷாரடி?
அதான், நீங்க ரெண்டு காலும் முழுசா இருக்க, ஜெயின் கோவில் பிரகாரம் சுற்றி வந்தீங்களே? அது ஹொன்னாவர் தானே?
தெரியலே. சட்டையை ஏன் அழிக்கணும்? பத்திரமா கார்லே வச்சுட்டு போய் அப்புறம் வந்து போட்டுக்கலாமே என்றார் பரமன். கோவில் ஊழியரும் பிஷாரடியும் சக்கர நாற்காலியில் தூக்கி வைக்க சிரித்தபடி அமர்ந்தார்.
அழிக்கறதுன்னா மலையாளத்தில் கழற்றறது. தமிழ்லே எரிச்சு கிழிச்சு ஒண்ணுமில்லாம ஆக்கறது. பிஷாரடி சொல்லியபடி சக்கரநாற்காலியை நகர்த்திப் போகும் முன், கோவில் அலுவலகர் முன்வந்து உருட்டிப் போகத் தொடங்கினார். அங்கங்கே சிறு படிகள் கடக்க நாற்காலியை உயர்த்தி மீண்டும் இறக்கி வைக்க பிஷாரடியும் உதவினார்.
வாழ்க்கையிலே முதல் தடவையாக இந்தக் கோவிலுக்கு உள்ளே வரேன். சின்னக் குழந்தைலே எங்கம்மா கற்பகத்தோடு மைலாப்பூர் கபாலீஸ்வரன் கோவில் போன ஞாபகம் எல்லாம் வருது.
அவர் மெல்லத்தான் சொன்னார். என்றாலும் பின்னால் வந்த மூதாட்டி அபிப்ராயப்பட்டாள், அம்பலத்தினுள்ளில் சம்சாரம் பாடில்யா ஷமிக்கணும்.
கோவில் சந்நிதியில் நிற்கும்போது பரமன் கண்மூடி மஞ்சுநாத் என்றார். குழந்தே என்றார் அவர் அடுத்து. பிஷாரடி அவர் அருகே நகர்ந்து என்ன சொல்கிறார் என்று கவனிக்கத் தொடங்கினார்.
ஆனாலும் பரமன் அப்புறம் ஏதும் சொல்லவில்லை. எடக்கா வாசித்து அம்பலத்து மாரார் சோபான சங்கீதம் பாட ஆரம்பிக்க அந்த இசை அம்பலத்து வெளியில் சுற்றிச் சுழன்று வந்து கொண்டிருந்தது.
சந்தனமும், துளசியுமாக இவர்கள் சந்நிதியில் தொழுது திரும்ப வரும்போது வெடிவழிபாட்டு சத்தம். என்ன அது என்று பக்கத்தில் போய்ப் பார்க்க ஆர்வம் காட்டினார் பரமன். வெடி வழிபாடு என்றார் பிஷாரடியும் ஆர்வத்தோடு.
வெடி வெடிச்சு வழிபடறதா?
பரமன் விசாரித்தார். அதேதான் என்றார் பிஷாரடி. அடுத்த நிமிடம் வெடித்தரைக்கு சக்கர நாற்காலி நகர்ந்தது.
ஐந்து நிமிடம் பார்த்துக் கொண்டிருந்தார் பிஷாரடி. யாராவது வந்தால் வெடி சத்தத்தையும் வழிபாட்டையும் அவர்கள் செலவில் முடித்துக்கொள்ளலாம் என்று நினைத்ததற்கு மாறாக வந்த மூன்று பேரும் வெடிச் சத்தம் இலவசமாகக் கிடைக்கக் காத்திருந்தார்கள். அவர்கள் அலுத்துப்போய் கிளம்பினார்கள்.
மகா கஞ்சர்கள் என்றார் பிஷாரடி பரமனிடம். சின்னக் குழந்தை மாதிரி அவருக்கு வெடிச்சத்தம் வேண்டியிருந்தது. யாரும் தரவில்லை என்றால் வெடிக்காரனிடம் வெடிக்காசு தரப் போகிறேன் என்றபோது பரமனுக்குத் தலை சுற்றலாக இருந்தது. வேணாம் போகலாம் என்று அவர் சொல்வதற்குள் பிஷாரடி வெடி வழிபாட்டுக்காரன் பக்கம் நடந்து விட்டார்.
ராத்திரி குல்ஃபி ஐஸ் விற்கிறவன் கூம்புகளில் அடைத்துத் தரும் பனிக்கூழ் மாதிரி வெடிமருந்து நிரம்பிய கூம்புகள் தரையில் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன.
வேணாம் என்று பரமன் இன்னொரு தடவை சொல்வதற்குள் பலமான வெடிச்சத்தம். வானத்திலிருந்து பெரிய பறவை கீழே இறங்குது போல் ஏதோ இறங்கி வந்து வெடிக்காரன் மேல் விழுந்தது. அது நக்னமான ஒரு வயசனின் உடம்பாக ஆக இருந்தது. கைகால் உயர்த்திக் கண் திறந்து உசிரோடிருந்தான் அவன்.
வெடிவழிபாட்டுக்காரன் முகம் மாறி வேறொருத்தனாக இருக்க, இடதுகால் சுண்டுவிரல் நைந்து போனதாக அவன் கதறியழுதான். பரமன் போதும் என்றார். வயசனும், கால் விரல் போனதாக வெடித்தரையில் தேடி எதையோ கையில் எடுத்து கதறிய மற்றையவன் வெடிக்காரனும் இல்லாமல் போய் தற்கால வெடிக்காரன் வெடி வெடிக்கத் தயாராக நின்று கொண்டிருந்தான்.
பிஷாரடி ஓடி வந்து பரமன் கையைக் குலுக்கினார். சொல்லுங்க சார், எப்படி அதை செஞ்சீங்க? You are a brilliant time traveller.
பரமன் குழம்பிப்போய் இருக்க, பிஷாரடி மேலும் சொன்னது – இப்போ பார்த்த பத்து வினாடி நேரம் 1850-ம் வருஷம் இதே இடத்திலே இதே மாதிரி வெடி வழிபாடு நடந்தபோது ஏற்பட்ட அசம்பாவிதம். சின்னச் சங்கரன் சாரோட பாட்டி பகவதியம்மாள் பெரிய சங்கரன் ஐயாவை கல்யாணம் செஞ்சுக்கிட்ட நாள்னு நான் சங்கரன் குடும்பம் இங்கே அம்பலத்துலே வழிபட ஒரு மாதம் முந்தி வந்தபோது சொன்னேனே அன்னிக்குத்தான் கல்யாண தினம். இது கல்யாணத்துக்கு தொட்டு முன்பு அந்த குடும்பத்திலே ஆலப்பாடு வயசன் பறந்து கொடிமரம் நனைச்சுட்டு வெடியோடு சேர்ந்து மூத்திரம் வடிய வெடிக்காரன் மேலே விழுந்த கணம்.
பிஷாரடி மூச்சு விடாமல் பேசினார். பின்னும் தொடர்ந்தார்.
பரமரே, எப்படி அந்த வினாடிக்கு துல்லியமா கூட்டிப் போனீர்?
பிஷாரடி கேட்க அது காதில் விழவில்லை பரமனுக்கு. அவருடைய உள்செவியில் மட்டும் கேட்டது, அப்பா அப்பா என்று ஒரு குழந்தைக் குரல். வெடிமருந்து சேமித்து வைக்கும் கிடங்கு வாசலில் நின்று கூப்பிடும் சிறுவனுடையதாக இருந்தது அது. பரமன் கவனம் சிதறாமல் உடல் பதறி சக்கர நாற்காலியில் குமைந்து கொண்டிருந்தார்.
பரமன், என்ன ஆச்சு? ரோகிணி, நேமிநாதன், மஞ்சுநாத், ஹொன்னாவர், ஜெருஸூப்பா. எதாவது தோணுதா? மஞ்சுநாத், நேமிநாதன், ஹொன்னாவர்.
இல்லை என்றார் பரமன். தலை சுற்றி சக்கர நாற்காலியில் அவர் குழைந்து கிடக்க கோவில் அலுவலரும் பிஷாரடியும் வெடித் தரையில் இருந்து அவரை நகர்த்திப் போனார்கள்.
அப்பா வந்த மூணு மாசத்திலே இப்போதான் வெளியே வந்திருக்கார். அவரால அந்த excitement தாங்கிக்க முடியலே. அதுதான் குழைஞ்சு இப்படி சக்கரநாற்காலியிலே புளி மூட்டை மாதிரி கிடக்கார். திலீப் ராவ்ஜி குரல்.
பிஷாரடி அவரிடம் விளக்கம் சொல்ல ஏற்பாடு செய்தபடி நடந்து வந்தபோது பரமன் மயக்கமடைந்தது சாதாரண நிகழ்வு என்று எடுத்துக்கொண்டு மேலே நடக்கச் சொல்லும் திலீப் ராவ்ஜி கொஞ்சம் வித்தியாசமானவராகத் தெரிந்தார்.
என்ன சொல்றார் அப்பா? கேட்டபடி கோவில் ஊழியரிடம் ’போய்க்கோளு, ஞான் வீல்செயர் ஓஃபீஸில் திரிச்சு நல்கும்’ என்று சொல்லி அவரை விலக்கி விட்டு சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு நடந்தார் திலீப் ராவ்ஜி.
பிஷாரடி பார்த்துக்கொண்டிருக்க, பரமன் சந்நதம் வந்தவராக, ஆலப்பாட்டு வயஸ்ஸன் வெடிக்காரன் மேலே விழுந்தான் தெரியுமா என்றார்.
பிஷாரடி தெரியும் என்றார்.
”ஆலக்காட்டு வயசன் அம்பலப்புழை தேகணட குடும்பத்திலே தன் மூத்த புத்திரியை பொண்ணு கொடுத்தவன். ஜான் கிட்டாவய்யரோட பெண்டாட்டி நாகலட்சுமிதான் அந்தப் பொண்ணு. ஜான் கிட்டாவய்யரோட இளைய சகோதரி பகவதிக்கும் அரசூர் பெரிய சங்கரனுக்கும் கல்யாணமானபோது ஆலப்பாட்டு வயசன் கோழி மாதிரி கொஞ்ச தூரம் பறந்திண்டிருந்தார். எங்க கொள்ளுத்தாத்தா பிஷாரடி வைத்தியர் அதை சொஸ்தமாக்கறதுக்கு கொடுத்த மருந்தை அவருக்கு ஜாஸ்தியா புகட்டியிருக்கா. அவர் ஒரேயடியா உசரம் பறந்து போய் கோவில் கொடிமரத்துக்கு சுத்தி பறந்து அப்படியே ஒண்ணுக்கு போய் அசுத்தம் பண்ணியபடிக்கு வெடிவழிபாட்டுக்காரன் மேலே தொப்புனு விழுந்தார்னு தகவல். வெடிக்காரன் வலதுகால் சுண்டுவிரல் தனியாப் போக அதை திரும்ப ஒட்ட முடியுமான்னு கொள்ளுத்தாத்தா பிஷாரடி கிட்டே கேட்க, அவரும் செய்யலாம், கொஞ்சம் கூடுதல் செலவாகும்னு சொல்லியிருக்கார். அது வயசனும் அவனோட மாப்பிள்ளை கிட்டாவய்யனும் கவனிக்கவேண்டிய செலவினம், எனக்கென்ன போச்சுன்னு துண்டித்த விரலை வேஷ்டியிலே முடிஞ்சு போனானாம். இப்படி போற இந்த வரலாறு நூற்றைம்பது வருஷம் முந்தி அம்பலப்புழையிலே நடந்ததுன்னு சொல்றாங்க. பரமன் அங்கே எப்படி போனார், அந்த காட்சியை திரும்ப ஒரு பத்து வினாடி தத்ரூபமாக சிருஷ்டிச்சு அனுபவிக்கத் தர”?
பிஷாரடி இன்னும் நினைத்துக் கொண்டிருப்பது, காலத்தில் பின்னால் நானூறு வருஷம், நூற்றைம்பது வருஷம்னு போனது பரமன் கைவேலை தான் என்று. எல்லோரையும், எல்லா இடத்தையும் ஒண்ணு சேர்க்கற நடப்பு ஒண்ணு இருந்திருக்கணும். அதைச் சொல்லும் பரமனவரே.
பரமன் குஷியான மனநிலையில் இருந்தார் என்பது அவர் இருட்டிக் கொண்டிருக்கும் வெடித்தரையினூடாக சக்கர நாற்காலியில் போகும்போது ரம்மய்யா ஒஸ்தாவய்யா என்று பழைய இந்தி சினிமா பாட்டை மெல்லிய குரலில் பாடியபடி இருந்தது தெரியப்படுத்தியது.
பரமரே, சொல்லும், எப்படி நானூறு வருஷம் முந்தி, நூற்றைம்பது வருஷம் முந்தி எல்லாம் போய்ட்டு வரீர்? அப்படியே ரோகிணி யார்னு சொல்லும். அழகான பொண்ணா? யார் அது ரோகிணி, எங்கே பிடிச்சீர் இந்த வயசிலே? பிஷாரடி கேட்டார்.
திலீப் ராவ்ஜி அவரிடம் சொன்னார்-
அப்பா, ரோகிணியோ, ரேணுகாவோ, ரேவதியோ, நாளைக்கு ”உங்க வீட்டுப் பெரிசு என்னை பிள்ளையாண்டிருக்க வச்சுட்டார். பிள்ளையை எடுத்துக்கும்”னு வந்து வரிசையிலே நிக்கலேன்னா சரிதான்.
பிஷாரடி சிரித்தது கோவில் பிரகாரம் சுற்றி காருக்குப் போகும்வரை கேட்டது.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
