- மிளகு
- மிளகு – அத்தியாயம் இரண்டு (1596)
- மிளகு – மிர்ஜான் கோட்டை
- மிளகு -அத்தியாயம் நான்கு
- மிளகு: அத்தியாயம் ஐந்து
- மிளகு – அத்தியாயம் 6
- மிளகு
- மிளகு: அத்தியாயம் எட்டு – 1999: லண்டன்
- மிளகு – அத்தியாயம் ஒன்பது – 1999 லண்டன்
- மிளகு – அத்தியாயம் பத்து – 1596 மிர்ஜான் கோட்டை
- மிளகு – அத்தியாயம் பதினொன்று
- மிளகு – அத்தியாயம் பனிரெண்டு
- மிளகு அத்தியாயம் பதின்மூன்று
- மிளகு அத்தியாயம் பதினான்கு
- மிளகு: அத்தியாயம் பதினைந்து
- மிளகு -அத்தியாயம் பதினாறு
- மிளகு – அத்தியாயம் பதினேழு
- மிளகு அத்தியாயம் பதினெட்டு
- மிளகு அத்தியாயம் பத்தொன்பது
- மிளகு – அத்தியாயம் இருபது
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்று
- மிளகு அத்தியாயம் இருபத்திரண்டு
- மிளகு அத்தியாயம் இருபத்திமூன்று
- மிளகு – அத்தியாயம் இருபத்துநான்கு
- மிளகு அத்தியாயம் இருபத்தைந்து
- மிளகு அத்தியாயம் இருபத்தாறு
- மிளகு – அத்தியாயம் இருபத்தேழு
- மிளகு – அத்தியாயம் இருபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் இருபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் முப்பது
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் முப்பத்தி நான்கு
- மிளகு அத்தியாயம் முப்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் முப்பத்தாறு
- மிளகு அத்தியாயம் முப்பத்தேழு
- மிளகு அத்தியாயம் முப்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் முப்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் நாற்பது
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்று
- மிளகு-அத்தியாயம் நாற்பத்திரண்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்திமூன்று
- மிளகு அத்தியாயம் நாற்பத்திநான்கு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தைந்து
- மிளகு அத்தியாயம் நாற்பத்தாறு
- மிளகு – அத்தியாயம் நாற்பத்தேழு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தெட்டு
- மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பது
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தொன்று
- மிளகு – அத்தியாயம் ஐம்பத்திரெண்டு
- மிளகு-அத்தியாயம் ஐம்பத்திமூன்று
- மிளகு -அத்தியாயம் ஐம்பத்திநான்கு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தாறு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தேழு
- மிளகு அத்தியாயம் ஐம்பத்தெட்டு
- மிளகு :அத்தியாயம் ஐம்பத்தொன்பது
- மிளகு: அத்தியாயம் அறுபது
- மிளகு – அத்தியாயம் 61 & 62
- மிளகு அத்தியாயம் அறுபத்துமூன்று
- மிளகு அத்தியாயம் அறுபத்துநான்கு
- மிளகு அத்தியாயம் அறுபத்தைந்து
- மிளகு அத்தியாயம் அறுபத்தாறு
- மிளகு அத்தியாயம் அறுபத்தேழு
- மிளகு அத்தியாயம் அறுபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் அறுபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் எழுபது
- மிளகு அத்தியாயம் எழுபத்தொன்று
- மிளகு – அத்தியாயம் எழுபத்திரண்டு
- மிளகு அத்தியாயம் எழுபத்திமூன்று
- மிளகு அத்தியாயம் எழுபத்து நான்கு
- மிளகு அத்தியாயம் எழுபத்தைந்து
- மிளகு அத்தியாயம் எழுபத்தாறு
- மிளகு அத்தியாயம் எழுபத்தேழு
- மிளகு அத்தியாயம் எழுபத்தெட்டு
- மிளகு அத்தியாயம் எழுபத்தொன்பது
- மிளகு அத்தியாயம் எண்பது
- மிளகு அத்தியாயம் எண்பத்தொன்று
- மிளகு – அத்தியாயம் எண்பத்திரண்டு
- மிளகு – அத்தியாயம் – எண்பத்திமூன்று
- மிளகு – அத்தியாயம் 84 எண்பத்தி நான்கு
- மிளகு – அத்தியாயம் 85
- மிளகு – அத்தியாயம் 86
- மிளகு – அத்தியாயம் 87
- மிளகு – அத்தியாயம் 88
- மிளகு – அத்தியாயம் 89 – பின்கதை
மிர்ஜான் கோட்டை 1606

பைத்யநாத வைத்தியருக்கு சித்தம் கலங்கிப் பித்தம் தலைக்கேறி விட்டது. அவரோடு பழகாதவர்கள் பார்த்தால் அப்படித்தான் சொல்வார்கள்.
பின் என்ன? காலையில் ஐந்து மணிக்கு எழுந்து, சிப்பம் சிப்பமாகக் கட்டி வைத்திருந்த உலர்ந்த வேரும் இலையுமான மூலிகையை அலமாரிக்கு உள்ளும், மருத்துவப் பெட்டியில் இருந்தும் எடுத்துத் தரையில் போட்டுக் காலால் மிதிக்கிறார்.
அவருக்கு உள்ளே இருந்து ஒரு வெறி அவரைக் கொண்டு செலுத்துகிறது. அவருடைய மருந்துப் பெட்டியில் இருந்து, மருந்து சேகர அறையில் இருந்து, வீட்டிலிருந்து, ஊர், நாடு ஏன் உலகத்தில் எங்கே நெல்பரலி தாவரம் இருக்கிறதோ அங்கே எல்லாம் இருந்து அதைப் பிடுங்கிப் போட்டு அழிக்க வேண்டும் என்ற வெறி அது.
ஊரோடு பேய் மிளகுக் கொடியைப் பிடுங்கிப் போட்டு அழிப்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தால், வைத்தியருக்கு பேய் மிளகை விடப் பெரிய எதிரி நெல்பரலி. ஜலதோஷ நிவாரணி, மலச்சிக்கல் லேகியம், நுரையீரல் அடைப்பு நீக்கி, ரத்த சுத்தம் செய்யும் தோஷாந்தக சூரணம் என்று நெல்பரலியை போன வாரம் வரை கொண்டாடினார் அவர். இப்போது இல்லை.
நெல்பரலி இல்லாமல் கோடிக்கணக்கான பேருக்கு ரத்தம் கெட்டுப் போகட்டும், இன்னும் சில கோடிபேர் ஜலதோஷத்தில் தும்மிக் கண் எரிந்து ஜுரம் தோன்றி, ஜன்னி கண்டு எதுவோ ஆகட்டும். நுரையீரல் அடைத்துக் கொள்ளட்டும். இனி வைத்தியர் யாரையும் ஸ்வஸ்தப்படுத்தப் போவதில்லை. நெல்பரலி அவருடைய மிங்குவை அவரிடமிருந்து பறித்து விட்டது. என்றென்றைக்குமாக. நெல்பரலி ஒரேயடியாக அழிந்து போகட்டும்.
மிர்ஜான் கோட்டையே அதிர்கிற மாதிரி, ஜெர்ஸோப்பா, கன்னட பிரதேசம் என்று இந்துஸ்தானத்தில் பாதி பூமி ஒரு வாரமாக இதைத்தான் பேசிக்கொண்டிருக்கிறது. ஜெருஸோப்பா மகாராணி சென்னபைரதேவி, மிளகு ராணி என்று உலகமே போற்றும் பெருமாட்டி, அவளை அவள் இருப்பிடமான மிர்ஜான் கோட்டையில் நுழைந்து ஒரு பெண் குத்திக் கொலை செய்ய முயற்சி எடுத்தாளாம். மகாராணியின் தாதிப் பெண் குறுக்கே விழுந்து தடுக்காமல் இருந்தால் ராணி ரத்தம் வெளியாகியே இறந்து போயிருப்பாள். அவள் மயிரிழையில் தப்பிப் பிழைக்க தாதிப்பெண் உடல்நிலை சீரடையாமல் மரித்தாளாம்.
ஒரு தகவலாக இதைப் பகிர்ந்து விட்டு வேறு ஏதாவது பற்றி அவரவர் பேச்சைத் தொடர, வைத்தியர் அப்படிக் கடந்து போக முடியாமல் அந்தக் கொடும் துயரத்தில் அமிழ்ந்திருக்கிறார். தாதிப்பெண் என்று ஒரு வெற்றுச் சொற்றொடர் இல்லை அவள். வைத்தியரின் பிரியமான மனைவி மிங்கு என்ற செண்பகலட்சுமி.
கடந்து போன வாரம் திங்கள் நள்ளிரவில் மிங்கு ரத்தம் இழந்து இறந்து போனாள். வைத்தியர் இன்னும் அந்தப் பொழுதில் தான் இருக்கிறார். மிங்கு மறைந்த அந்த துக்கம் சொட்டச் சொட்ட நனைத்த இரவு இன்னும் அவருக்கு விடியவில்லை.
அந்த இரவு இப்படி இருந்தது –
ஆஆஆ. பகவானே. கோகர்ணேஷ்வரா. வைத்தியரே. வலிக்குதே.
மிங்கு வலி தாங்க முடியாமல் முனகுகிறாள்.
மிங்குவின் படுக்கையை ஒட்டிய அறையில் மருத்துவச்சி ராஜம்மா, மிங்கு வலியில் முனகுவது கேட்டு எழுகிறாள். அவளைக் கவனித்துக்கொள்ள வைத்தியர் மருத்துவச்சியைக் கேட்டுக்கொண்டபோது ஒரு வார்த்தை சொல்லாமல் உடனே வெற்றிலைப் பெட்டியோடு புறப்பட்டு வந்து விட்டாள் அவள்.
மிங்குவைப் பார்த்துக் கொள்வது மட்டுமில்லை அவள் பொறுப்பு. மிங்கு கர்ப்பம் தாங்கியபோது மருத்துவச்சி பெற்றுப்போட்ட, இப்போது ஒரு வயதான குழந்தை கோணேஷன் என்ற கோகர்ணேசனுக்கு வேளாவேளைக்கு ஆகாரம் கொடுத்துப் போஷிப்பதும் மருத்துவச்சிக்கு வந்து சேர்ந்த பொறுப்பு. வேண்டாம் என்று விரக்தியில் எதையும் சாப்பிட மறுத்தாலும், வைத்தியருக்கு ஜீவன் உடலில் ஒட்டிக் கொண்டிருக்கத் தேவையான குறைந்த பட்ச அளவு போஜனத்தை சமைத்து அளிப்பதும் மருத்துவச்சிதான். மிங்குவின் அம்மா உயிரோடு இருந்தால் இதைவிட ஒரு துளி குறைவாகத்தான் உழைத்திருப்பாள்.
மருத்துவச்சியின் சிறு உரலில் வெற்றிலை நசுக்கிக்கொண்டே ராராராரா என்று வார்த்தை இல்லாமல் பாடுகிறாள் மருத்துவச்சி. சுவர்க்கோழி கீச்சிடும் ராத்திரி நீண்டு போக, மிங்குவின் வலி முனகல் சற்றே மட்டுப்பட்டதை கவனித்தபடி மருத்துவப் பெட்டியை அணைத்து மிங்குவின் படுக்கை அருகே தளர்ந்து அமர்ந்து இருக்கிறார் வைத்தியர்.
அடர் சிவப்பில் நனைந்து இருக்கிற மிங்குவின் வயிற்றை கண்ணீர் கண்ணில் மறைக்க உற்றுப் பார்க்கிறார் அவர். வயிற்றில் இருந்து குருதிப் பெருக்கு குறைந்து வருவதை அவருடைய வைத்திய அனுபவம் சொல்கிறது.
கொலைபாதகம் நடத்த வந்த பெண்பிள்ளை ஓடி வந்து குறுவாளை அழுத்தப் பிடித்து ராணியின் தலையில் ஆழமாக வெட்ட உத்தேசித்திருந்தாள். அந்த வேகமும் அழுத்தமும் எல்லாம் குறுக்கிட்டுப் பாய்ந்து வந்த மிங்குவின் வயிறு வாங்கிக் கொண்டது.
வைத்தியர் வருவதற்குள் ஆழப் பதிந்த கத்தியை எடுக்க எல்லோருக்கும் சங்கடம். அது பெரும் ரத்தப் போக்கில் முடிந்து போகும் என்ற அச்சம். கத்தி வயிற்றில் பதிந்த முற்பகல் பத்து மணிக்கு என்றால் அது தானே கீழே விழுந்தது உச்சிப் பொழுதானபோது.
கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் வேண்டா விருந்தாளியாக மிங்குவின் வயிற்றில், தேகத்தில் என்னவெல்லாம் களேபரம் நிகழ்த்தியிருக்குது அந்த சீனக் கத்தி என்று மருத்துவச்சி நடுராத்திரிக்கு சுவர்களோடு பேசிக் கொண்டிருந்தாள்.
வைத்தியர் மிங்குவின் வயிற்றில் இருந்து ரத்தப்போக்கு கணிசமாக மட்டுப்பட்டதை உறுதி செய்துகொண்டார். அடுத்து அவள் வயிற்றில் தாமரை இழை வைத்து சத்ர சிகிச்சையாக நான்கு தையல் போட தண்ணீர், வெள்ளைக்கார மருத்துவர் கொடுத்த கிருமிநாசினி, கட்டுப்போட வெள்ளைத் துணி என்று எடுத்து வைத்தார்.
ஆங்கிலேய மருத்துவன் சொன்னபடி ஆனால் தாமரை நாரை வைத்து மிங்கு வயிற்றில் தையல் போட்டார். வலிக்கும் தான். மரண வலி. அவள் பொறுத்துக்கொள்ளப் பழகி விட்டாள்.
அப்போதுதான் வைத்தியருக்கு நெல்பரலி நினைவு வந்தது.
ஆழமான காயத்தை ஆறவைப்பது, ரத்தப்போக்கை மட்டுப்படுத்தி இனியும் ஏற்படாது செய்தல் இந்த விஷயங்களில் நெல்பரலி எப்படி பயன்படும் என்று அறிய அவசர அவசரமாக அலமாரியில் இருக்கும் நூற்றைம்பது வருடம் முந்திய தமிழ் ஓலைச் சுவடிகளைப் புரட்டினார் அவர்.
நெல்பரலி ஒரு சர்வரோக நிவாரணி, இறைவன் அமிர்தத்தை நெல்பரலி ஆக்கி அதை அதன் மதிப்புத் தெரியாதவர்களுக்கு நடுவே குப்பைச் செடி மாதிரி வளர்த்து வைத்திருக்கிறான் என்பது வைத்தியரின் திட நம்பிக்கை.
இதோ இருக்கிறதே. அந்நிய வஸ்துக்கள் மூலம் உடலில் காயம் ஏற்பட்டால் நெல்பரலி கஷாயத்தில் வசம்பு இடித்துப்போட்டு பெருங்காயப் பொடி ஒரு சிட்டிகை இட்டு மிதமான சூட்டில் காய்ச்சி வர, பழுப்புச் சர்க்கரை ஒரு சிறு கரண்டியளவு கரையவிட்டுப் பருகக் கொடுத்தால் உடம்பில் ஏற்பட்ட ஆழமான காயம் சீக்கிரம் ஆறும், ரத்தப் போக்கு மட்டுப்படும் என்று பூடகமாக எழுதப்பட்ட சித்தர் பாடல். ‘சிவசம்பு காயம் ஐந்தொன்றாகும் பெருங்காயம் நிலைக்கும்’ என்ற இறுதி வரிக்கு வசம்பும் பெருங்காயமும் கூட்டி நெல்பரலியோடு தர காயம் ஆறும், உடல் ஆரோக்கியப்படும் என்று உடுக்குறியிட்டுப் பொருள் சொன்னது சுவடி.
அதை அப்படியே கடைப்பிடித்தார் வைத்தியர். கஷ்டப்பட்டு மிங்குவை இரண்டு மடக்கு நெல்பரலி கஷாயத்தை பருக வைத்தார் அவர். என்ன சொல்ல, கத்தி வயிற்றில் தைத்த இடத்தில் மறுபடி கணிசமாக ரத்தப் பெருக்கு உண்டானது.
வைத்தியர் நெல்பரலி மருந்தை உடனே நிறுத்தினார். குருதிப் பெருக்கு மட்டுப்பட்டது. ஆனால் முழுக்க நிற்க வைக்க முடியவில்லை . மிங்குவின் நினைவு தப்பவில்லை என்றாலும் அவள் கண்கள் மூடியே இருந்தன.
என்னமோ சந்தேகம் தோன்ற ஓடிப்போய் ஓலைச் சுவடிகளை பெட்டியோடு இறக்கி இன்னொரு தடவை பார்த்தார் வைத்தியர். ’வசம்பு இடித்துப் போடச் சொன்னது சித்தர் வாக்கைத் தவறாகப் பொருள் கொள்வதாகும். சிவசம்பு ஒரு அலங்கார விளி, அதற்குள் வசம்பைத் தேடக்கூடாது’ என்று பாடபேதம், பெயர்ப்புப் பிழை பற்றிய சுவடியின் இறுதி ஏட்டில் எழுதியிருந்தது கண்ணில் பட்டது. சிவசம்பு-வுக்கு விசும்பு என்று இன்னொரு பாடமும் உண்டாம்.
வசம்பும் ரத்தமும் ஒன்றுக்கொன்று இழைந்து போகாமல் எதிர்த்து வந்து ஆரோக்கியத்தை மோசமாக்கி விடும் என்று மேலும் சொன்னது இந்த சுவடி.
ஆண்டவனே!
வைத்தியர் பெருங்குரல் எடுத்து அலறினார்.
மிங்குவின் நோய்ப் படுக்கைப் பக்கம் அவர் ஓடுவதற்குள் கண்ணில் ஒரு சின்னச் சிரிப்போடு மிங்கு விடைபெறாமல் புறப்பட்டுப் போயிருந்தாள்.
மிங்கூஊஊஊ
அவர் மௌனமாக அழுதார். சொல்லித் தீராத துயரத்தை மருந்துப் பெட்டிமேல் தலையை மோதி மோதி வெளியாக்க முயன்றார். எல்லா மருந்து, எல்லா வைத்தியம், எல்லா மூலிகை, எல்லா எண்ணெய், எல்லா மருத்துவர்கள், எல்லா நோயாளிகள், எல்லா கொலைகாரப் பெண்டுகள், எல்லா குறுவாள் அடித்துத்தரும் கருமான்கள் என்று வகைதொகை இல்லாமல் எல்லார் மேலும் எல்லாவற்றின் மேலும் கோபம் ஏற்பட்டது.
அவர் படித்தும், பார்த்துக் கற்றும், அனுபவத்தில் படிந்தும் பெற்ற மருத்துவ அறிவெல்லாம் ஒன்றுமில்லாமல் போனதாக உணர்ந்தார். எல்லாம் இழந்த அநாதையாக சுய பச்சாதாபம் மேலெழ தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.
அவருடைய மிங்கு இல்லாமல் போனாள்.
ஏனோ நெல்பரலி மேல் அதி உக்கிரமான கோபம் ஏற்பட்டது அவருக்கு.
நெல்பரலி மேல் கோபப்படலாமா? ஆறறிவில் ஓரறிவும் இல்லாத வெறும் தாவரம் அது.
வேறே யார் மேல் கோபப்பட? எப்படி வாய் திறந்து சொல்வார்?
சென்னபைரதேவி மிளகு ராணி தன்முனைப்போடு செயல்பட்டு மிங்குவை அவளுடைய அன்புக் கணவர் பைத்யநாத் வைத்தியரிடமிருந்து நிரந்தரமாகப் பிரித்து விட்டாள்.
சோறு போடும் கை அவளது. வைத்தியருக்கு மட்டுமில்லை, மெய்க்காப்பாளராக மிங்குவை நியமித்து அவளுக்கு கிட்டத்தட்ட சொல்லப்போனால் வைத்தியருக்கு மாதாமாதம் தருவதை விடவும் கூடுதலாக அளிக்கிறவள் மகாராணி. காசால் அடித்த விசுவாசமில்லை அது.
வைத்தியர் இன்னும் விடியாத, மிங்கு மரித்த ராத்திரியில் அமிழ்ந்திருக்க, குழந்தை அழுகுரல் அவரை இந்தக் காலை நேரத்துக்குக் கொண்டுவந்தது.
வைத்தியரின் ஒருவயதுக் குழந்தை கோணேஷன் அழ ஆரம்பித்திருக்கிறான். மிங்கு இல்லாத உலகத்தை பழகிக்கொள்ள வைத்தியருக்கே முடியாது என்றிருக்க, அந்த சிசுவுக்கு அம்மா இல்லாத தினங்கள் எத்தனை வருடம் துன்பத்தோடு கடந்து போக வேண்டி வருமோ.
கோணேஷன் மறுபடி சத்தம் அதிகமாக்கி அழ, வைத்தியர் அவன் படுத்திருந்த தொட்டிலின் அருகே போனார். கையில் எடுத்துக்கொள்ளச் சொல்லி கண்களால் கெஞ்சலான அழைப்பு விடுக்கிறான்.
கண்ணில் நீர் நிறைய வைத்தியர் முரட்டுப் பிடிவாதத்தோடு அவனிடமிருந்து விலகி வெளியே போக, மருத்துவச்சி அவசரமாக உள்ளே வந்து முறையிடுகிறாள் –
ஏன் மாப்ளே, பிள்ளை என்ன கத்து கத்துது என்ன அதுக்கு பசியா வவுத்து வலியான்னு பிள்ளைக்கு அப்பனாகத்தான் வேணாம், பிள்ளையைப் பார்க்க வந்த மருத்துவனாவது பார்க்க வேணாமா?
கண்டிக்கிற தொனியில் கேட்டாள் மருத்துவச்சி.
வைத்தியர் அவளுடைய வழியை மறைத்துக் கொண்டு நின்றார்.
விலகும். விட்டு விட்டு அழுது பசியாத்தான் இருக்கும். பசும்பால் கிண்டியிலே அடைச்சுத்தரச் சொன்னேனே, காய்ச்சி சர்க்கரை போட்டிருக்கீங்களா? அது பசும்பால் தானே, எருமைப்பால் இல்லையே? காய்ச்சினீங்களா? காய்ச்சும்போதே சர்க்கரையைப் போட்டுக் கலந்திருக்கலியே? காய்ச்சினபோது முழுக்கக் காஞ்சு நுரையோட பொங்கி வர்ற வரைக்கும் பொறுமையா இருந்தீங்க இல்லே?
அடுத்த தொகுதிக் கேள்விகள். ஆமாம் என்ற பதில் கட்டாயம் வேண்டுபவை அவை.
என் வெத்திலை செல்லமும் உரலும் சமையல்கட்டுலே வச்சுட்டேன். கொஞ்சம் எடுத்து வந்துடும். புண்ணியமாகப் போகும்.
மருத்துவச்சி வைத்தியரை பதிலாக ஒரு வார்த்தை கூடச் சொல்ல அனுமதிக்காமல் படபடவென்று கேள்விக்கு மேல் கேள்வியாகக் கேட்பதை சாதாரண தினமாக இருந்தால் மதித்திருக்க மாட்டார். சிரித்திருப்பார்.
வீட்டுக்கு மருத்துவச்சி அவ்வப்போது வரும்போது, வைத்தியர் சிரிக்காவிட்டாலும் மிங்கு அவரைத் தூண்டி சிரிக்கச் சொல்லி ஜாடை காட்டுவாள். மருத்துவச்சிக்கு அவளுடைய செல்லப் பெட்டியும் தாம்பூலம் இடிக்கும் சின்ன உரலும் பெரிய ஆஸ்தி.
மருத்துவச்சி குழந்தையை மடியில் கிடத்திக் கொண்டாள். அவளுக்கும் குழந்தைக்கும் பொதுவான ஏதோ மொழியில் அவனை பாலுண்ண கூப்பிட்டாள். பால் என்றதும் கிண்டி பக்கம் வந்த குழந்தை வேண்டாம் என்று மறுத்து விட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டது.
“மாப்பிள்ளே, பனகுடியிலே இருந்து ஷெட்டியாரும் வீட்டம்மாவும் வந்திருந்தாங்க.
அவள் சொல்லி முடிப்பதற்குள் வைத்தியர் தேம்பும் குரலில் சொன்னார்- அக்கா மீங்கு போய் ரெண்டு வாரம் தான் ஆகுது. அதுக்குள்ளே மகனையும் சேர்த்துத் தொலைக்கணும்ங்கறீங்களா?
யார் மாப்பிள்ளை தொலைக்கச் சொன்னது. உங்க மகன் தான் எங்கே இருந்தாலும். ஷெட்டியார் அவனை தன் மகன் போல் விரல்லே எல்லாம் வைர மோதிரம், கழுத்திலே தங்கச் சங்கிலி, இடையிலே தங்கத்திலே அரைஞாண் அப்படீன்னு வைரம் தங்கம் வைடூர்யம்னு வச்சு இழச்சுட மாட்டாரா?
அவனுக்கு பசி வந்தா வைரமும் வைடூர்யமும் நேரத்துக்குத் தந்து பசியாற வைக்க முடியுமா? அதுக்கு பால்சோறும், கம்பங்களியும், உளுந்து தோசையும் ஒரு நிமிடம் கூட தாமதமில்லாமல் செஞ்சு தரணும். அது இப்போதைக்கு நீங்களும் நானும் தான் செய்துதர முடியும்.
வெற்றிலை படிக்கத்தைத் தேடி எடுத்து முன்னால் வைத்து துப்பிக்கொண்டு மருத்துவச்சி சொன்னாள் –
ஷெட்டியார் வீட்டிலா ஆகாரத்துக்கு குறைவு? அவுங்க வீட்டு வாசல்லே சாப்பிட்டுப் போடற எச்சில் வாழை இலையே கமகமன்னு தெருக்கோடி வரைக்கும் நெய் வாசனை அடிக்கும். அப்பளத்தைக் கூட புத்துருக்கு வெண்ணெய் காய்ச்சி வந்த நெய்யிலே தான் பொரிச்செடுப்பாங்க. தினம் ஜாங்கிரி, பொங்கல்னு நெய் வடியற பலகாரம். பிள்ளையை கையிலே பிடிக்க முடியாது.
வைத்தியர் மௌனமாக மிங்கு நினைப்பில் மூழ்கி இருந்தார். பூசினாற்போல் உடம்பும், நாசி எந்த நேரமும் இன்னும் கால் அங்குலம் வளரப் போகிறேன் என்று அறிவித்துக் கொண்டிருக்கும் துடிப்பும், கண்ணால் சிரிக்கும் அழகும், வழுவழுத்து நீண்ட காது மடலும், சிறிய சீன உதடுகளுமாக அவள் இந்த வீட்டுக்குள் தான் கண்ணில் படாமல் சுற்றிக்கொண்டிருக்கிறாள்.
குழந்தைக்கு பால்சோறு ஊட்டச் சொல்லி அவள் வற்புறுத்துவது வைத்தியரின் உட்செவியில் கேட்கிறது.
அக்கா, கொஞ்சம் போல சோறு குழைய வடிக்கறீங்களா.
ஏன் மாப்ளே, வயிறு சரியில்லையா?
அது இல்லே அக்கா, இவனுக்கு பால்சோறு கொடுத்துப் பார்க்கலாம். ஆச்சு கிட்டத்தட்ட ஒரு வயசு.
தரலாம்தான். குருவாயூர்லே சோறூண் முடிச்சுட்டு எந்த தினமும் தொடங்கலாம் மாப்ளே.
சோறூண் முடிக்கக் காத்திட்டிருக்கறதுக்கு இங்கே இருந்தே குருவாயூரப்பனுக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு பிள்ளைக்கு இன்னிக்கே பசியாற்றிடலாமே.
சொன்னபடி அரிசி வைத்த செப்புக்குடத்தில் இருந்து அரை ஆழாக்கு அரிசி எடுத்து சோறு பொங்க அடுப்பில் ஏற்றினார் வைத்தியர்.
நான் சொன்னா நீங்க எங்கே கேக்கப் போறீங்க என்று அலுத்தபடி வெற்றிலை இடிக்கத் தொடங்கினாள் அந்த முதிய மருத்துவச்சி.
வைத்தியர் அவளுக்கு மிங்கு மேலும் குழந்தை மேலும் வைத்திருக்கும் அலாதி பிரியத்தைப் பற்றி எண்ணிப் பார்க்க நெகிழ்ந்து போனார் அவர். ஒரு வேளை மட்டும் நாலு கவளம் சோறும் புளிக்குழம்பும் உண்டபடி மற்ற நேரம் வெற்றிலை பாக்கு மட்டும் தாம்பூலமாக சுவைக்கிற கிழவி அவள்.
சோறு பொங்கி முடிக்கும் வரை அதிலேயே கவனமாக இருக்க வேணும் என்று முடிவு செய்து கொண்டது நல்லதாகப் போயிற்று. இரக்கம், சினம், சந்தோஷம், துக்கம், அருவறுப்பு என்று பாளம் பாளமாக மனதில் கவிந்துகொண்டிருந்த உணர்ச்சிகளை அகற்றி நிறுத்தி மனதை அடுப்பிலேற்றிய சிறு பானையில் வைக்க எளிதாக இருந்தது. பொங்கி முடித்து ஆற வைத்து காய்ச்சிய பாலையும், சர்க்கரையையும் இட்டுப் பிசைந்து குழந்தையிடம் எடுத்துப் போனார் அவர்.
கோணேஷன் முகத்தைத் திருப்பிக்கொண்டு மருத்துவச்சியைப் பார்த்து அடுத்த அழுகையை ஆரம்பித்தான்.
இந்த அப்பா என்னத்தையோ கொண்டு வந்து கரண்டியால் வாயில் அடைத்து தின்னு தின்னு என்று நச்சரிக்கிறார், வந்து காப்பாத்து அப்பத்தாளே என்று அந்த அழுகைக்குப் பொருள் கொண்டார் வைத்தியர்.
பால்சோறுடா ஒரு கவளம் சாப்பிட்டா ஆயுசுக்கும் விடமாட்டே என்று நைச்சியமாகச் சொல்லும்போதே அவருடைய வார்த்தையின் நிஜம் அவருக்கு சந்தேகத்தை கொடுத்தது.
ஆயூசுபூரா பால்சாதம் யார் சாப்பிடுவார்கள்? கோணேஷனிடம் மாற்றிச் சொல்ல நினைத்தபோது அவனே சின்னக் கரண்டியில் அள்ளி வைத்தியர் வைத்திருந்த பால்சோற்றை வாய்கொள்ளாமல் அடைத்துக்கொண்டான்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் அந்த வெள்ளிப் பாத்திரத்தில் கொண்டு வந்த பால்சோறு முழுவதையும் மிச்சம் மீதி வைக்காமல் அவன் ஆகாரம் பண்ணுவதை வைத்தியர் புளகாங்கிதமடைந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
வைத்தியர் அரிந்தம் பண்டொரு காலத்தில் தன் பிள்ளை வைத்தியர் பைத்யநாத் மேல் வைத்திருந்த நம்பிக்கையை விட வைத்தியர் பைத்யநாத் தன் மகன் ஒரு வயது கோணேஷன் மேல் அதிக நம்பிக்கை வைத்தார். தந்தை சொல் கேட்டுப் புரிந்து கொண்டு நடக்க மிகச் சிறுவயதிலேயே அவன் முற்பட்டதை பைத்யா மெச்சினார்.
அப்பாவுக்கு கஷ்டம் கொடுக்காமல் அடுத்த பிறந்தநாளிலிருந்து கோணேஷன் சோறு பொங்கி பால் ஊற்றிக் கலந்து சர்க்கரை தூவி உண்பான் என்ற நிம்மதியே அலாதியானது. மிங்கு இல்லாத உலகம் அப்படித்தான் பழக்கப்படும் போல.
அதற்காக மூணு வேளையும் பால்சாதம் சாப்பிட்டுக்கொண்டு ஒரு சிறுவன் இருக்கமுடியுமா?
வேறு என்ன பழக்கப்படுத்தலாம்? இட்டலிகள், தோசைகள் இத்யாதி. இவற்றை பாகம் பண்ண முன்கூட்டியே செய்ய வேண்டிய ஏற்பாடுகள், வேகவைத்து இட்டலிகளைச் சாப்பிடத் தருவதும், சூடான தோசைக்கல்லில் வார்த்து எடுத்து தோசைகளை உண்ணக் கொடுப்பதும் வைத்தியருக்குத் தெரிந்த விஷயம் தான். ஆனால் ஒருநாள் போல் வருடம் முழுக்க பலகாரம் செய்வது மடுத்துப் போகாதா? வீட்டில் மிங்கு இல்லாத துன்பம் இதெல்லாம் கூடவே வருவது.
அவளை எப்படி விட்டுவிட்டு மீதி ஜீவிதத்தை நடத்தப் போகிறேன் என்று வைத்தியருக்கு சுய இரக்கம் மறுபடி ஏற்பட இன்னொரு குழந்தையாக கண்ணீர் விட்டு அழுதார்.
வைத்தியருக்கு மறுபடி மிளகு மகாராணி பேரில் கோபம் அடக்க முடியாமல் ஏற்பட்டது. அம்மா. இனியொரு முறையும் மிளகுப் பைசாசத்தை அந்த பெண் சூனியக்காரியை அம்மா என்று அழைக்க மாட்டார் வைத்தியர்.
ஒரு வைத்தியனாக மகாராணியின் உடல்நலம் பற்றிய அதிக அக்கறை அவருக்குத்தான் இருந்தது. ஒரு ரோகியாக ராணியம்மா வைத்தியர் சொன்னதைக் கேட்டு நடக்காவிட்டாலும்.
பனிக்குழைவு, புளியன்னம், தித்திப்புப் பலகாரங்கள் என்று கண்டதையும் தின்று ருசி இன்பத்தில் திளைக்கும் சீக்கு பிடித்த மகாராணி. நாட்டின் முதல் பிரஜையான மகாராணிக்கே நாவை அடக்க முடியாமல் தின்று ரோகம் பிடிப்பது அவளுக்கு நல்லதா இல்லை நாட்டுக்கா?
இதிலே லிஸ்பன் போகணும், வாராணசி போகணும், தில்லி போகணும் என்று ஊர் சுற்றுகிற ஆசை வேறே. மருந்துப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு லொங்குலொங்கென்று ஓடி ராணி போகிற இடத்தில் அவளுக்கு முன்னால் அவள் நேரப்பிரகாரம் சாப்பிட வேண்டிய குளிகை, பானம் பண்ண வேண்டிய கஷாயம், நாக்கில் இட்டு சுவைத்து உண்ணவேண்டிய லேகியம், காலில் புரட்டிக்கொள்ள வேண்டிய தைலம் என்று பார்த்துப் பார்த்து எடுத்துப் போய் சிஷ்ருசை செய்ததற்கு மிளகுக்கிழவி கொடுத்த பரிசு, வைத்தியனின் ஆருயிர் மனைவி மிங்குவை உயிர் போக வைத்து ஏதுமே நடக்காத மாதிரி பஸதி திறக்க ஊர் ஊராகப் போய்க் கொண்டிருப்பது.
திடீரென்று ஒரு ராத்திரி தூங்கி எழுந்து முப்பது பெண்களை, யாரென்று தெரியாது, எல்லோரும் ஜெருஸோப்பா பிரஜைகள் அவர்களை கோட்டைக்கு காலை ஆகாரம் கூட இருந்து சாப்பிட அழைக்க ஏற்பாடு செய்யச் சொன்னாள் ராணி. மிங்கு தலையில் பெரும்பாலும் விழுந்த கடமை இது.
வைத்தியா நீ ஏன் ஒண்ணும் சொல்லாமல் நிற்கிறே என்று கேள்வி வேறே.
அப்போது வைத்தியர் சொன்னார் – அம்மா, இந்த விருந்துகள் பாதுகாப்பை பதம் பார்க்கக் கூடியவை. முப்பது பெண்களை ஒவ்வொருத்தரின் பின்னணி, குடும்பத்தினர், நண்பர்கள் இப்படி எல்லோருக்கும் விரிவாக குறிப்பு தயார் செய்து தேர்ந்தெடுத்தால் பாதி ஜாக்கிரதையாக இருந்தால் போதும்.
சொன்னது மருத்துவனாக இல்லை, உளவுத்துறை அதிகாரியாக.
மதிக்கவே இல்லை ராணியம்மா. மிர்ஜான் கோட்டையின் அமைப்பு ரகசியங்கள் அதிகம் பேருக்குத் தெரியாமல் இருக்க கோட்டைக்குள் வரும் போகும் நபர்களை ஆகக் குறைவாக அனுமதித்து இல்லாத கெடுபிடி எல்லாம் கொடுப்பாள் மிளகு ராணி. அதைவிட பத்து, நூறு தடவை அதிகமான ஜாக்கிரதை தேவைப்படும் இந்த மாதிரியான சமபந்தி போஜனம் விவகாரங்களை ஒன்றும் ஆகாது என்று வீம்பாக இழுத்து விட்டுக் கொண்டால் என்ன ஆகும்?
ராணிக்கு ஒன்றும் ஆகாது. அவள் தாதி தலையில் தான் ராணியின் அஜாக்கிரதை வந்து விடியும். விடியாமல் போனது.
நெல்பரலி மூலிகைக்கு நடுவே சென்னா ராணியின் முகத்தைக் கற்பனை செய்து காலால் ஓங்கி மிதிக்கக் காலை உயர்த்தினார் வைத்தியர். காலைப் பின்னால் இழுத்துக் கொண்டார். அவரால் முடியாது. மிங்கு கண்டிக்கிறாள்.
ராணியம்மா, வயதுக்கும், என் அம்மா வயசு என்று மதிப்புக்கும் அவதூறு செய்யும் விதமாக நடந்து கொள்ள மாட்டேன் என்று அவர் உடல் நடுங்கியது.
மிங்கு நான் தவறாக அப்படி நினைத்து விட்டேன். மன்னித்துக்கொள் என்று மிங்குவிடம் காலைப் பற்றிக்கொண்டு மன்னிப்பு கேட்க வேணும் என்று தோன்றியது வைத்தியருக்கு.
மிங்கு. நீ எங்கே இருக்கே? உன் மரணம் துர்மரணமா? அப்போது நீ ஆவியாக அலைகிறாயா? எப்படி உன்னை அமைதிப்படுத்துவது? வாயைத் திறந்து பேசு, மிங்கு மிங்கு என்று முணுமுணுத்தபடி வெறும் தரையில் அசதியோடு சாய்ந்து கிடந்தார்.
அவர் விழித்தபோது பின்மாலை பொழுதாகி இருந்தது.
அவர் ஒரு தீர்மானத்தோடு கிளம்பினார். சாரட்டை ரத சாரதி வேண்டாம் என்று அனுப்பிவிட்டு அவரே ஓட்டிப் போனது ஹொன்னாவரில் ரதவீதிக்கு.
இனிப்பு அங்காடி வாசலில் நின்றவரை மாடியில் இருந்து நேமிநாதன் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கீழே வந்தபோது நான்கு நாள் தாடியும் கலைந்த தலையுமாக பைத்யாநாத் வைத்தியர் புயலில் அடிபட்ட புறா போல் நடுங்கி நின்றார்.
வைத்தியரே. ஆழ்ந்த அனுதாபங்கள், மிங்கு போனபிறகு நீங்க ஒரேயடியா கலங்கிப் போனது தெரியும். ஒரு தாதி இறந்தா ராணியம்மாவுக்கு ஒண்ணுமில்லே. ஒரு மனைவி இறந்தால் சாமானியனுக்கு வரும் துன்பம் அவங்களுக்குப் புரியாதுதான். சொல்லுங்க, நான் என்ன செய்யணும் என்று விசாரித்தபடி வைத்தியரின் கையைப் பற்றிக் கொண்டான் நேமிநாதன்.
வைத்தியர் குலுங்கக் குலுங்க அழுதார். அப்புறம் சொன்னார் – மிங்குவோட பேசணும் என் மிங்குவோட ஒரு தடவையாவது ஒரு நிமிஷமாவது பேசணும் ராஜகுமாரரே என்று யாசித்தார் மெல்லிய குரலில்.
ஓ அதுக்கென்ன ஆவியை அழைக்கிறவங்க மேலே தான் இருக்காங்க. நீங்க அங்கே போங்க என்று நேமிநாதன் சொல்ல முடியாத திருப்தியோடு வைத்தியரை மேல்மாடிக்கு அனுப்பினான்.
பத்து நிமிடம் கழித்து அங்கே பலகையில் சதுரங்கள் ஊடாகக் காய் நகர்ந்தது. ஆவி வந்து சேரவில்லை.
(தொடரும்)
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
