மிளகு அத்தியாயம் எண்பது

1606 ஜெருஸூப்பா – கேலடி நடு இரவு

ஓவியம்: அருண்

வெங்கட லட்சுமணன்   கெலடியில் இருந்து புறப்படும்போது படையினர் முன்னூறு பேர் அவன் தலைமையில் அணிவகுந்து வருகிறார்கள். அவர்களிடம் லட்சு என்ற வெங்கட லட்சுமணன் எங்கே போகிறார்கள் என்று சொல்லவில்லை. யுத்தம் நடக்கிறது என்று அவர்களுக்குத் தெரியும். 

தாயாரின் ஜெருஸுப்பா அரசுக்கு நெருக்கடி உண்டாக்கி மகன் படையெடுத்துப் போய் போர் நடத்தும் யுத்தம். வீட்டுக்குள் அடித்துக் கொள்ளாமல் வெளிநபர்கள் தூண்டி விட்டு நடக்கும் போரில் பங்குபெற கேலடி ராஜதானியின் வீரர்களும் பங்கெடுக்க வைக்கப் பட்டிருக்கிறார்கள். 

சதுரங்கத்தில் ராஜா, ராணி, அமைச்சர், மதகுரு, தளபதி என்று பெயரிட்டு பின்னணியில் பாதுகாப்பாக அணிவகுத்து இருந்து நகர்த்தப்படும் காய்களைப் பாதுகாக்க முன்வரிசையில் நிற்கும் பெயரில்லாத சிப்பாய்கள் பலிகொடுக்கப் படுவது போல் யாரையோ வெற்றி பெற வைக்க இவர்கள் பயன்படுகிறார்கள். 

எங்கே போக வேண்டும் என்பது கூடத் தெரியப்படுத்தாமல் உயிரைப் பணயம் வைத்து எங்கோ அனுப்பப்பட்டு யாரோடோ போர் செய்ய கட்டளையிடப்படுகிற கூட்டம் இது. 

நடக்கலாம் என்று படைத்தலைவன் லச்சு என்ற வெங்கடலட்சுமணன் உத்தரவிட அந்த இருநூறு பேரும் வேகமாக அடியெடுத்து வைத்து நடந்தார்கள். 

எங்கே போகவேண்டும் என்று கேட்க வேண்டாமா? ஏன் அந்தக் கேள்வி யாருக்கும் தோன்றவில்லை? 

லச்சு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறவனாக படையணி கூட வேகமாக குதிரையேறி நகர்ந்தான். இருநூறு பேரும் இரண்டு இரண்டு பேராக நடக்க சொன்னால் பத்து வினாடியில் நகர்ந்து போய் விடுவார்கள் என்பது மனதில் பட ஒருவர் பின் ஒருவராக அணிவகுத்து நடக்கச் சொல்லிக் கட்டளை இட்டான் உடனே. 

அரண்மனைக்கு நல்ல நாள் பெரிய நாளின்போது யாசகம் வாங்க கோட்டைக் காவலர்கள் யாசகர்களை ஒருவர் பின் ஒருவராக நடக்க வைப்பது நினைவு வர, பழையபடி இரண்டிரண்டு பேராக போகச் சொல்லி லச்சு கட்டளை பிறப்பித்தான். 

அந்த நிமிடத்தில் இருநூறு பேர்ப் படையணியில் அவன் மேல் எழுந்திருக்கும் கோபம் அளவிடமுடியாமல் போயிருக்கும் என்று லச்சுவுக்கும் தெரியும். என்றாலும் குதிரையேறி முன்னும் பின்னுமாக படையணியோடு நடக்க, கட்டளையிட கம்பீரமாகத் தோன்றுவது அவனுக்குப் பிடித்துத்தான் இருக்கிறது. 

“ஜெருஸூப்பா செல்வோம்’ என்று மூன்று முறை உரக்கக் கட்டளையிட்டான் லச்சு. 

நடந்தா? 

நாற்பது கல் நடந்து எப்போது ஜெருஸோப்பா சென்றடைய முடியும்? விடிந்து விடுமே. அந்தக் களைப்போடு எப்படி போரிட முடியும்? 

அணியின் வேகம் உடனடியாகக் குறைந்து போனது. 

என்ன பயமா ஏன் இரையெடுத்த பாம்பு போல் மெல்ல மிக மெல்ல நடக்கிறீர்கள் அனைவரும்? எப்படி நாற்பது கல் நடப்பது என்ற மலைப்பா? கவலையை விடுங்கள். லெச்சு என்ற வெங்கட லட்சுமணன் என்ற கேலடி பேரரசர் வெங்கடப்ப நாயக்கரின் மூத்த மகன் நடத்திப்போகும் படை களைத்தும் பசித்தும் போர் செய்யப் போகுமா? 

போகாது என்று சொல்வது போல் நம்பிக்கை ஏற்படுத்த கிழக்கில் இருந்து எழுந்த மண் படலம் நகர்ந்து அலைந்தது. வரிசையாக ஓடி வரும் சாரட் வண்டிகள் அவை. 

உங்களை நாற்பது கல் கொத்தடிமைகளாக நடக்க வைக்க லச்சுவுக்கு எப்படி மனம் வரும் மக்களே. சாரட்டுக்கு ஐந்து பேராக ஏறிக் கொள்ளுங்கள். 

குரலில் அன்பும் வாத்சல்யமும் நிறைந்து வழிய உடனே இளவரசர் ஜயவிஜயிபவ என்று வாழ்த்தும் ஒலி மைதானத்தில் எதிரொலித்தது. 

செல்வோம் ஜெருஸூப்பா என்று லட்சுமணன் அடியெடுத்து வைக்க, செல்வோம் ஜெருஸூப்பா என்று இருநூறு குரல்கள் ஆதரித்து முழங்கின. 

ஜெருஸூப்பா போய் என்ன செய்வீர்கள்? அடுத்த கேள்வியைக் கேட்டபடி குதிரையேறி நகர்ந்தான் லச்சு. போரிடுவோம் என்றது படையணி. யாரோடு போரிடுவீர்? இந்தக் கேள்விக்கு பதில் இல்லை. 

இன்னொரு தடவை கேட்டான் லச்சு. அப்போதும் குழப்பமான மௌனம் ஓங்கியடித்தது. பதில் இல்லை ஏன் என்று கேட்டபடி அந்த சாரட் அணிவகுப்பை இடவலம் குதிரையேறிச் சுற்றி வந்தான் லச்சு. வெகு திருப்தியாக அவன் இருந்ததை முகக்குறிப்பு சொன்னது. 

யாரோடு யுத்தம் என்றால் பதிலுரைக்க மாட்டீரோ? என்றால் நானே உரைப்பேன். யாரோடும் போரிட நாம் போகவில்லை. அங்கே எந்தப் படையும் இல்லை. அங்கிருப்பவர்கள் எல்லோரும் சென்னபைரதேவியின் பேயாட்சிக்கு எதிரே திரண்டெழுந்த பொதுமக்கள். போராட்ட உணர்வு மிகுந்து ஒவ்வொருவரும் அடுத்தவரை அதிகச் செல்வம் வைத்திருப்பதற்காக அடித்து உதைத்து பறிப்பவர்கள். அரசு கட்டிடங்கள், மாளிகைகளை இடித்துத் தள்ள, சூறையாட முனைந்தவர்கள். நாமிருக்கும்போது அவர்களை சூறையாட விடலாமா? 

இந்த இடத்தில் கூட்டமாக ஒலித்தது சிரிப்பு சத்தம். லச்சுவும் சிரித்தான். 

நான் வேறே எந்த அர்த்தத்திலும் சொல்லவில்லை. நீங்களும் வேறெந்த அர்த்தத்திலும் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே நாம் அங்கே ஏன் போகிறோம்? அமைதியை நிலைநாட்டப் போகிறோம். சலோ ஜெருஸுப்பா. 

ஒற்றைக் குரலில் சலோ ஜெருஸூப்பா சொல்லியபடி படையணி உற்சாகமாக சாரட்களில் நகரந்தது. ஜெருஸூப்பாவுக்கு இந்தப் படையணி போய்ச் சேரும்போது பிற்பகலாக இருக்கும். 

ஜெர்ஸூப்பா காலைப் பொழுது

ரோகிணி பரபரப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தாள். ஜெருஸூப்பாவில் தான் இருக்கிறாள்.   மனம் ஹொன்னாவரில்  இருக்கிறது. 

நேமிநாதன் அனுப்பும் தினசரி தூதன் காலை விடியும்போது வந்து விடுவான். இன்றைக்கு விடிந்து ஒரு நாழிகையானது, இரண்டுமானது. அவன் வருகிற வழியாகவே தெரியவில்லை. 

தகவல் அறிவிக்க நேமிநாதனிடம் ஏகத்துக்கு இருக்கக் கூடும். ரோகிணியிடமும் இன்று நேமிநாதனுக்குச் சொல்லியனுப்பத் தகவல் உண்டு. 

சின்னக் குருவி வராது. 

அது அவர்களுக்குள் ஆன பரிபாஷை. அடுத்த கருத்தரித்தது உதிர்ந்து விட்டது. இதைச் சொல்லி அனுப்பினால் போதும். 

இதை வண்டிக்காரத் தகவல் பரிமாற்றத்தில் எடுத்துப் போகமுடியாது. 

வண்டிக்காரர்கள் ஜெருஸூப்பா, ஹொன்னாவர், கேலடி, கோகர்ணம், உள்ளால் இப்படி அங்கிருந்து இங்கே, இங்கிருந்து அங்கே என வண்டி ஓட்டி வரும்போது வழியில் சந்திக்கிற வேறு வண்டிக்காரர்களோடு முக்கிய செய்திகள் பரிமாறிக் கொள்வது வழக்கம். 

போர் ஆரம்பித்த பிறகு போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது. வரட்டும், வரும்போது வரட்டும் என்று ரோகிணி வீட்டுக்குள் சுற்றிச் சுழன்று அதிகாலையிலும் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள். 

வேறு வேலை இல்லை. வீட்டுக் கூடத்தில்  மழை, பனிக்காலத்தில் வெதுவெதுப்பாக தட்ப வெப்பம் நிலவ குளிர் காய சுவரில் பதித்த அமைப்பின் பின்னால் ஒரு கதவு வைத்து அதன் பின் வெற்றிடம் ஏற்படுத்தியிருக்கிறது. 

ரோகிணி சேர்த்து வைத்த பொன்னை எல்லாம் கட்டுகளாக உள்ளே இருந்து எடுத்து வந்து சுவரில் வைத்து கதவை இழுத்து மூடுகிறாள். என்னமோ நினைப்பு வர, ஒரு மரப்பெட்டியை எடுத்து வருகிறாள். 

நீலச் சாயம் அடித்த பெட்டி. உள்ளே குழந்தை கிண்கிணி, குழந்தை மோதிரம் என்று சில தங்க நகைகளையும் மஞ்சுவின் உடைகள் சிலதையும், அவனுடைய பழைய துணிப் பொம்மை ஒன்றையும் எடுத்து வைக்கிறாள். 

ஏன் அப்படிச் செய்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை. முதுகில் பதியும் விழிகள். ஆறாம் புலன் சுறுசுறுப்பாக வேலை செய்ய, பின்னால் திரும்பிப் பார்க்கிறாள். யாருமில்லை.

பெட்டியை மற்றப் புதையலோடு பத்திரமாக வைத்து திரும்புகிறாள்.  உள்ளே குழந்தை மஞ்சுநாத் அம்மா என்று அழைக்கும் குரல். 

பொன் புதையலின் கதவை பேய் மிளகு கொண்டு மறைக்கும் முன் அந்த இரும்புக் கதவை பூட்டி சாவியை கழுத்தில் தாலியில் பிணைத்துக் கொள்கிறாள். அப்போது பரமனை நினைக்கிறாள். 

அவன் கட்டிய தாலிக்கு இப்படி சாவி தொங்கவிடும் சங்கிலியாக அமைவதுதான் ஒரே பயன் போல. 

அம்மா அம்மா என்று மறுபடியும் மஞ்சுநாத் குரல். அவள் உள்ளே போகும்போது வாசலில் குரல். 

ரோகிணி, நல்லா இருக்கீங்களா? 

சொத்தைப் பல்  தளபதி தான். இவ்வளவு அதிகாலையில் இவன் எங்கே வந்து தொலைந்தான்? 

அம்மா அம்மா மஞ்சுநாத் குரல் மறுபடி. படுக்கையை நனைத்திருப்பான். வந்தாச்சு மஞ்சு. ரோகிணி சொல்லியபடி என்ன விஷயம் என்று தளபதியைப் பார்த்துத் தலையாட்டுகிறாள். 

உனக்கு ஒண்ணுமில்லே, வேலையப் பாரு என்று கையை அசைத்து விட்டு அவசரமாக உள்ளே போகிறான் ரோகிணியை முந்திக் கொண்டு. உள்ளிருந்து கதவை அவசரமாகத் தாழ் போட்டுக் கொள்கிறான். 

மஞ்சு மஞ்சு என்று அலறியபடி வெளியில் இருந்து கதவை முட்டுகிறாள். கதவு திறக்கிறது. உறங்கிக் கிடக்கும் மஞ்சுநாத்தை தோளில் சாய்த்துத் தூக்கிக்கொண்டு நடக்கிறான் தளபதி. 

மயக்க மருந்து கொடுத்திருக்கேன். ஜாக்கிரதையா வச்சிருப்பேன். ஐயாயிரம் வராகனுக்கு தங்கம் கட்டியா கொண்டு வந்து அப்பாண்டை தோப்புலே சாயந்திரத்துக்குள்ளே கைமாற்றிட்டு பிள்ளையை லட்டு மாதிரி உசிரோடு வாங்கிட்டு போ. இல்லேன்னா உன் இஷ்டம். 

சொல்லிவிட்டு அவன் வெளியே நடக்கிறான். 

ஐயோ நில்லு நில்லு என்று ரோகிணி வாசலுக்கு ஓடுவதற்குள்   மஞ்சுநாத்தோடு குதிரை வண்டியில் அதி விரைவாக போயே போய்விட்டான்.  

வாசலில் மற்ற நாளாக இருந்தால் இதற்குள் பெருங்கூட்டம் கூடியிருக்கும். தெரு கிட்டத்தட்ட முழு நிசப்தமாக இருந்தது. எல்லா வீடுகளிலும் வீட்டைப் பகுதி இடித்து பேய் மிளகு தாவரம்  வைத்து மூடிவிட்டுப் போயிருக்கிறார்கள். 

மஞ்சு என்று ரோகிணி அலறியது வெற்றிடத்தில் எதிரொலித்துத் திரும்ப வெறுமை பூசி வந்தது. பின்னால் என்னமோ சத்தம். திரும்பினாள் ரோகிணி. 

எதிர் வீட்டு சிதிலமான தாழ்வாரத்தில் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தது பரமன். பெட்டிபெட்டியாக புதையல் தயாரித்தபோது முதுகில் துளைத்த விழிகள் அவருடையவை தானா. 

ரோகிணியைப் பார்த்ததும், சரியாகச் சொன்னால், ரோகிணி அவரைப் பார்த்ததும் பரமன் ஓட ஆரம்பித்தார். உயிருக்குப் பயந்த ஓட்டம் அது. 

எதிர்காலத்தில் இருந்து வந்திருக்கும் தன்னைக் கொன்றால் காலக்கோடே கந்தர்கோளமாகி விடும் என்று அவருக்கு ரோகிணியிடம் விளக்க ஆசை தான். அவள் கேட்க மாட்டாள். 

ரோகிணி நினைப்பதோ வேறு விதத்தில். மஞ்சுநாத்தை திரும்ப கூட்டிவரப் பரமன் அச்சாணியாகச் செயல்படலாம். காசு சனியன் தொலைந்தால் போகிறது. மஞ்சுநாத் எந்த அபாயமும் இல்லாமல் திரும்பக் கொண்டு வந்து சேர்க்கப்பட வேண்டும். 

பரம-ரே ஓ பரமரே என்று குரல் எடுத்துக் கூப்பிட கைவண்டியில் தட்டு முட்டு பாத்திரங்களும் குழந்தைகளுமாக இருத்தி தள்ளிக்கொண்டு போகும் ரோகிணியைத் தெரிந்த யாரோ அவள் கணவன் பெயரைச் சொல்லி விளிப்பதை ஒரு வினாடி சுவாரசியமாகப் பார்த்து வேலையில் தொடர்ந்தார்கள். 

ஓ ஸ்வாமிவரே என்று கூப்பிட ஆரம்பித்தாள் அவள். பரமன் உயிருக்குப் பயந்து ஓடினது ஓடினதுதான். தெரு முனையில் பெரிய சத்தத்தோடு புழுதி பறக்க நான்கு குதிரை வீரர்கள் வந்து கொண்டிருந்தது தெரிந்தது. 

வந்துவிட்டார்கள். கேலடி படையின் ஜெருஸூப்பா  கொள்ளையர்கள் ஊருக்குள், தெருவுக்குள் வந்து விட்டார்கள். 

வீட்டுக்குள் சாடி அடைத்து தயாராக வைத்திருந்த பெரிய சாக்குப்பைகளை சாரட்டில் கொண்டு போய் வைத்தாள். அப்பாண்டை பூங்காவை நோக்கி சாரட் விரைந்தபோது பின்னால் நூற்றுக்கணக்கான கொள்ளைக்காரர்கள். ஜெர்ஸோப்பா கேலடி படை 

காலை ஏழு மணி. 

கேலடி படை ஒவ்வொரு கட்டிடமாக வெளியே கூட்டமாக நிற்கிறது. ஊரை விட்டு தப்பி ஓடுகிறவர்களில் சிலரைப் பிடித்து வைத்துக் கொண்டு ஒவ்வொரு வீட்டுக்கு முன்னும் அந்த பிணைகைதியை இழுத்துப் போய் நிறுத்துகிறது. 

சொல்லு இந்த வீட்டுக்காரன் என்ன தொழில் செய்கிறவன்? 

எஜமான்களே அவன் நகையாசாரி. 

அடுத்த வீடு? 

அரண்மனை உத்தியோகஸ்தன். சுங்கத்துறை அதிகாரி. 

அப்போது ஆசாரியை விட்டுவிட்டு அரண்மனைக்காரன் வீட்டைப் பிடியுங்கள். நிறைய சொத்து சேர்த்திருப்பான் மிளகுராணி பெயரைச் சொல்லி.  

ஆளுக்கு ஒரு கடப்பாரையோடு கேலடி படை அந்த வீட்டுக்குள் ஹோவென்று கத்திக்கொண்டு நுழைகிறது. வாசல் முழுக்க   காரைக்கட்டிகளுக்கு நடுவே சுவர்  பாதி கிடக்க, முன் கதவு பாதி அறுந்து கிடக்கிறது. 

ஜாக்கிரதையாகக் கால் வைத்து வீட்டுக்குள் நுழைகிறவர்கள் அடுத்த வினாடி காலில் யாரோ எதுவோ இறுகக் கட்டி மேலே ஊர்வது முதுகுத் தண்டில் சிலிர்ப்பை ஏற்படுத்த பாம்பு பாம்பு பாம்பு என்று அங்கங்கே குரல் எழுகிறது. 

அவசரமாக வெளியேறுகிறவர்களின் காலை இன்னும் இறுகிப் பிடித்து பேய் மிளகுக்கொடி அசுர வேகத்தில் இலையும் சிறுதண்டுமாக நீண்டு கவ்வுகிறது.

 சிக்கிமுக்கிக் கல்லை வைத்து நெருப்புப் பொறி உண்டாக்கி அந்தப் பேய்க் கொடியை சுட்டுப் பொசுக்க முயன்றால் தீக்குள் சாம்பலாகாமல் துளிர்க்கிறது அந்த அதிசயக் கொடி.  

சர்க்கார் உத்தியோகஸ்தன் வீட்டு வாசலை முழுக்க மறைத்த பேய் மிளகுக் கொடிக்குப் பின்னே இருந்து விடுவிக்கச் சொல்லி முதலில் உள்ளே புகுந்த படைவீரன் தீனமாக ஒலியெழுப்புவது கேட்கிறது. தீவட்டிகளின் மங்கிய ஒளி காற்றில் அணைகிறது. உஸ்ஸ்ஸ் என்று ஒளி இறந்த தீவட்டிகள் தீனமாக ஒலி எழுப்பி, இலுப்பை எண்ணெய் வாடையோடு அடுத்த ஒளியூட்டலுக்குக் காத்திருக்க, சூறையாடும் படை முன்னே நகர்கிறது. 

இந்த வீட்டில் தங்க நகையாசாரி உள்ளே நுழைய முயன்று பேய் மிளகுக்கொடி விரைந்து காலில் சுற்றுவதற்குப் பயந்து அந்த வீட்டை விட்டு அடுத்த வீடு, அதற்கும் அடுத்தது என்று போக முற்பட்டு எதுவும் சரிவராமல் தெருவில் கடைசியில் இருந்த நாகநாத பசதியில் ஊடுறுவுகிறார்கள். 

அப்பாண்டை பூங்கா காலை எட்டு மணி. மஞ்சுநாத். மயக்கம் தெளிந்து எழுந்த சிறுவனைத் தலையில் தாக்குகிறான் சொத்தைப்பல் தளபதி.  மஞ்சுநாத் அவனை உற்றுப் பார்க்கிறான். நெருப்புப் பாளம் மேலே விழுந்து உருள்வது போல் உணர்ந்து தளபதி அலறுகிறான். 

தாறுமாறாக ஓடிய குதிரை வண்டி தெருக்கோடியில் கவிழ குதிரை தன்னிச்சையாக லகானிலிருந்து பிய்த்துக் கொண்டு வெளிவந்து வெறும்வாயை அசைபோட்டபடி நிற்கிறது. 

அவிழ்ந்து தொங்கிய அதன் சேணத்தைக் கழற்றி எறிந்து விட்டு மஞ்சுநாத் ஓடுகிறான். வண்டிக்குள் இருந்து தளபதி காப்பாற்றச் சொல்லி இரைஞ்சுகிற பார்வையோடு ஒலியெழுப்பியபடி கிடக்கிறான். 

பின்னால் குதிரைகளின் காலடி ஓசை. கேலடி படை பூங்காவை ஒட்டிய தெருவுக்கு வந்து கொண்டிருக்கிறது. 

முற்பகல் பதினொன்று மணி. 

அப்பாண்டை பூங்கா. ரோகிணி. அவசரமாக பூங்கா வாசலில் தன் சாரட்டை நிறுத்தி ஓட்டமும் நடையுமாக பூங்காவுக்குள் சுற்றுகிறாள் ரோகிணி. 

மஞ்சுவையோ தளபதியையோ அங்கே எங்கும் காணோம். பூங்காவுக்கு பின்வாசலுக்கு அருகே குதிரை வண்டி கவிழ்ந்து கிடந்தது கண்ணில் பட அங்கே ஓடுகிறாள். 

மஞ்சு மஞ்சு என்று அரற்றிக்கொண்டு அவள் தாறுமாறாக ஓடி செடிகளுக்குமேல் மிதித்து மலர்களை கூழாக்கி நசிப்பித்து ஓடி விபத்து நடந்த இடத்துக்கு விரைகிறாள். 

வண்டிக்குள் யாரும் இல்லை. வண்டிக்குள் இருந்து ரத்தச் சுவடு வீதியில் வழிந்து ஓடிச் சால் கட்டி நிற்கிறது. சிறிது தொலைவில் குதிரை ஏறிய கேலடி சூறையாடும் படை போய்க் கொண்டிருக்கக் காண்கிறாள். 

அடக்க முடியாமல் அழுகிறாள் ரோகிணி. 

அவள் இனி இருக்கப் போவதில்லை. இருப்பில் எந்த அர்த்தமும் கிடையாது. இந்தத் தங்கமும் வைரமும் சாக்குப் பைகளில் அடைத்திருந்தது எதற்குப் பயன்படும் இனி? 

தன் சாரட்டை நோக்கி நடக்கிறாள் மெதுவாக. கண் இருண்டு வர சாரட்டை கேலடிப் படையைத் தொடர்ந்து ஓட்ட ஆரம்பிக்கிறாள்.  தரையில் ஏதோ, யாரோ கிடக்கிறதாகப்பட நிறுத்துகிறாள். தளபதிதான். 

அவனுடைய மோதிரம் அணிந்த கை விரல்கள் வெட்டிச் சிதைக்கப்பட்டிருக்கின்றன. கைகளில்

மஞ்சு மஞ்சு. 

தளபதி சிரமத்தோடு கண் திறந்து பார்க்கிறான். 

குழந்தை ஓடிட்டான். குழந்தையா அவன்? பரிசுத்த ஆத்மா. தீர்க்காயுசா இருப்பான். என்னை மன்னிச்சுடுங்க. 

இதற்காகவே காத்திருந்த மாதிரி அவன் கண்கள் இறுதி உறக்கத்தில் மூடுகின்றன. 

ரோகிணிக்கு ஒரு அபத்தமான நாட்டியத்தில் ஆயிரம் பேரோடு அவளும் ஆடுவதாகத் தோன்றியது. எதற்குச் சிரிக்க வேண்டும், எப்போது அழ வேண்டும் என்று தெரியாத நர்த்தகி. காலடிச் சுவடுகள்  தடுமாறி ஆடுகிறாள். ஆடச் சொல்லி தன்னைத்தானே சாட்டையால் அடித்துச் சுழன்றாடுகிறாள். 

இந்தப் பாதையில் மஞ்சு நடந்துபோனானோ? அவன் மோதிரம் ஏதும் அணியவில்லை தான். சூறையாடும் கேலடிப்படை அவனை குழந்தை என்பதற்காக விட்டு வைத்திருப்பார்கள் அவர்கள் கண்ணில் பட்டிருந்தால். 

பால்மணம் மாறாத அந்த ஐந்து வயதுச் சிறுவன் எங்கே இருக்கிறான் இப்போது? யாருமில்லாத வீதியின் இருபுறமும் பார்த்து சாரட் ஓட்டிப் போகிறாள் ரோகிணி. 

ஜெருஸூப்பா பிற்பகல் மஞ்சுநாத். 

மஞ்சுநாத் ஓடி விளையாடிய தெருதான் இது. சதா பாட்டுச் சத்தமும் பேச்சொலியும் கேட்டுக் கொண்டிருக்கும் பெரிய வீடுகளும், அங்கங்கே ஜவுளித் துணியும், சந்தனமும் அத்தரும், மாமிசமும், பழங்களும் விற்கும் கடைகளும் அம்மாவின் இனிப்பு மிட்டாய்க்கடையும் இருக்கும் ராஜவீதி இது. 

பழக்கமான இடத்துக்கு வந்து சேர்ந்ததில் மஞ்சுநாத்துக்கு ஒரு சின்ன உற்சாகம் ஏற்பட்டது. இதோ வெற்றிலைக்கடை. அதற்கு அடுத்து மிட்டாய்க்கடை. 

மிட்டாய்க்கடை படி ஏறும்போது கவனித்தான். அலமாரிகளில் அங்கும் இங்குமாகக் கொஞ்சம்  மிட்டாய் இருந்தது. அதை விற்றுக் காசு வாங்கிப் போட்டுக்கொள்கிற ஊழியர்களைக் காணோம். வாங்க வந்து காத்திருப்பவர்களையும் காணோம். 

அம்மா அம்மா அவன் கூப்பிட்டான். அவள் குரல் கேட்கவில்லை. 

அப்பா. அப்பா. பரமன் அப்பாவைக் கூப்பிட்டான். அவர் சமையல் கட்டத்தில் ஜயவிஜயிபவ இனிப்பு செய்துகொண்டிருப்பார். 

கடை மேடையைக் கடந்து உள்ளே ஓடினான். எண்ணெய் நெய் காய்ச்சும் வாடையும், முந்திரியும் ஏலமும் வாதுமையும் கலந்து வறுபடும் ஆகார வாடையும் இல்லை எங்கும். இனிப்பு மிட்டாய்க்கு சர்க்கரை பாகு வைக்கும் மடையர்கள் ஒருவரும் இல்லை. 

திலகன் அம்மாவா திலகன் அம்மாவா. உதவி தலைமை மடையரான திலகனை உரக்கக் கூப்பிட்டான் மஞ்சுநாத். இல்லை அவரும். 

நல்ல பசி எடுத்தது.  என்ன உண்ணலாம்? யார் கொடுப்பார்கள்? பசி அதிகமானது. பயம் அதிகமானது. கடை முகப்பில் அலமாரிகளுக்குள் கை விட்டுத் துளாவினான். சின்ன எறும்புகள் லட்டுருண்டை உதிர்த்த பூந்திலட்டு துகள்களின் மேலும், ஜாங்கிரி ஓரமாகவும், பாதாம் அல்வா நடுவிலும் பரவ ஆரம்பித்திருந்தன. அவற்றை உதறிவிட்டு இனிப்பு மிட்டாய்த் துணுக்குகளை பொறுக்கி எடுத்து உண்டான் மஞ்சுநாத். 

கிராம்பு அடைத்த ஒரு இனிப்பை கொஞ்சம் போல் எறும்பு அரித்திருந்தது. அதைத் திரட்டி எடுத்து வாயிலிட்டுக் கொண்டபோது கிராம்பு வாயில் கடிபட காரம் நாக்கில் சூடு போல் தட்டுப்பட்டது. 

தண்ணீர் தேடி கடை முழுக்க சுற்றி வந்தான் மஞ்சுநாத்.  எங்கும் கிடைக்கவில்லை. 

அடுத்த வெற்றிலை, பாக்கு விற்கும் கடையில் வெற்றிலைகளை ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீரில் மிதக்க விட்டிருப்பார்கள். படி இறங்கி அங்கே ஓடிப்போய்ப் பார்த்தான் மஞ்சுநாத். கடை கதவு திறந்திருக்க உள்ளே வெற்றிலை மிதக்கும் பாத்திரத்தில் ஒற்றை வெற்றிலை மிதந்து கொண்டிருக்க, முழுக்க நனைத்துத் தண்ணீர். 

பாத்திரத்தில் இருந்து உள்ளங்கையில் அந்த வெற்றிலை வாசமடிக்கும் நீரை எடுத்துப் பருகினான். பழைய வாடையும், வெற்றிலைக் காம்பு காரமுமாக இருந்த அந்தத் தண்ணீரை விட்டால் வேறேதும் இல்லை. 

இனிப்புக் கடைக்குள் திரும்ப வந்தபோது கண்ணைச் சுழற்றிக்கொண்டு உறக்கமும் வந்தது. அலமாரி வைத்த சுவர் ஓரமாக நீட்டிக் கொண்டிருக்கும் வட்டமான சுற்றுப் பலகையில் ஏறிப் படுத்தபோது அவனுக்கு உறைத்தது அவன் மட்டும்தான் அந்தப் பெரிய வீதியில் இருக்கப்பட்டவன். 

நகரமே அவன் தவிர வேறே யாரும் இல்லாமல் தனிமைப் பட்டிருப்பதை அவனுக்குச் சொல்ல யாருமில்லை. 

அப்பா அப்பா அம்மா அம்மா. 

அவன் நாலு தடவை குரலெடுத்து அழைத்து வெறுமையை பதிலாகப் பெற்றான். 

அப்பா அம்மா. 

அவன் உறங்கியிருந்தான். 

ஜெருஸோப்பா அந்திப்பொழுது பரமன். 

 இவ்வளவு தூரம் வந்து அந்தக் கொலைகாரி ரோகிணி கண்ணில் பட்டிருக்க வேண்டாம். அதற்காக இப்படி ஓடியும் வந்திருக்க வேண்டாம். 

தெருவில், ஏன் ஊரிலேயே யாரும் இல்லாமல் வீடு வாசலை இடித்துத் தகர்த்து எல்லோரும் சேர்ந்து கிளம்பி விட்டார்கள். ஊர் எல்லை வரை பரமன் நடையை எட்டிப்போட்டு நடந்தார். எங்குமே யாருமே கண்ணில் தட்டுப்படவில்லை. 

காலையில் சூறையிடும் கேலடி படை வீரர்கள் பெரிதாக எதுவும் கிடைக்காமல் பேய் மிளகு காலிலும் கையிலும் சுற்ற ஓடிப் போனதை இங்கே இருந்து பார்த்தார் பரமன். அதற்கு முன் வீட்டு முன்னறையில் நெருப்புக் கட்டை வைத்து வெப்பப்படுத்தும் சுவர்ப் பகுதிக்குள் புதையலை வைத்ததையும் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். 

பரமனுக்கு செல்வம் ஏதும் வேண்டாம். பம்பாய் திரும்ப ஏதாவது வண்டி கிட்டினால் போதும். பம்பாய் இல்லாத இறந்த காலத்தில் இருந்துகொண்டு அங்கே எப்படிப் போவது? 

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதில் இருந்து ஆயிரத்துஅறுநூறாம் ஆண்டுக்கு வர முடியும் என்றால் பின்னே இருந்து முன்னால் பயணப்படுவது முடியாதா? 

ஹொன்னாவரில் இருந்திருக்கலாம். அங்கே பக்கத்தில் மிர்ஜான் கோட்டையை முற்றுகை இட்டு நேமிநாதனும் அடுத்தடுத்த குறுநில மன்னர்களும் ஜெர்ஸோப்பாவின் மகாராணி சென்னபைரதேவியை எதிர்த்துப் போர் நடப்பதால் இங்கே ஜெருஸப்பாவில் பாதுகாப்பாக இருக்கும் என்று வந்ததற்குக் காரணம் இருந்தால் அதோடு மஞ்சுநாத்தைப் பார்க்க வேண்டும், எப்படியாவது அவனைக் கூட்டிக்கொண்டு போய்விட வேண்டும் என்றும் வழி தேடி வந்ததும் பரமனின் வலுவான காரணம் தான். 

நானூறு வயது மூத்த சின்னப் பையன் மஞ்சுநாத்தோடு நாளைக்கே  பம்பாய் போக வழி பிறந்தால் அவனைக் கூடவே கூட்டிப் போகலாமா? வண்டிக்காரன் சத்திரத்தில் கிழவர்கள் யாராவது இருப்பார்களே. போய்ப் பார்த்தால் என்ன?  

அப்படியே காலை எட்டிப்போட்டு நடந்து சமணக் கோவில்கள் நிறைந்த தெருவில் சாப்பிட ஏதாவது கிடைக்கிறதா என்று பார்த்து வரலாமே. பரமன் ஜெருஸோப்பா முழுக்க நடந்து திரிந்த அனுபவம் கைகொடுக்க, அடுத்த அரை மணி நேரத்தில் வண்டிக்காரன் சத்திரத்துக்கு வந்து சேர்ந்தார். 

வயதான சத்திரக் காரியகர்த்தா மட்டும் வாசல் படியில் உட்கார்ந்திருந்ததைக் கண்டு சந்தோஷம் ஏற்பட்டது பரமனுக்கு. 

மகாதேவரே, தனியாக என்ன செய்யறீங்க இங்கே? 

பரமன் கேட்டபடி கிழவரின் சிலீர் எனக் குளிர்ந்த விரைத்த கையைப் பற்ற அவர் பதற்றத்தோடு தன் கரத்தை உதறி யாரும் இல்லே போங்க போங்க என்று திருப்பித் திருப்பிச் சொல்கிறார். 

உள்ளே சோறு இருக்கா, நேத்து வடிச்சதுன்னாலும் சரிதான். பரமன் கேட்க, காரியகர்த்தா மறுபடியும் யாரும் இல்லே போங்க என்கிறார். 

அவர் சித்த சுவாதீனம் இல்லாமல் போயிருக்கிறார் என்று பட்டது பரமனுக்கு. அவரைக் கடந்து உள்ளே போக, அரிசியும், மிளகும், பூசணிக்காயும், புளியும், அலமாரியில் அததற்கான இடத்தில் வைத்திருக்க, அடுப்புகள் வெப்பம் இன்றித் தணுத்து இருந்தன. 

எப்படி இந்த சத்திரத்தை சூறாட கேலடிப்படை வரவில்லை என்று தெரியவில்லை. வாசலில் இருந்த காரியகர்த்தாவைச் சற்றே குரல் உயர்த்திக் கேட்டார் பரமன் – ஏன் இங்கே யாரும் வரல்லே? 

அவர் திரும்ப அவருடைய வார்த்தைகளைக் கொட்ட ஆரம்பித்து விட்டார் – யாரும் இல்லே. போங்க. 

தடதடவென்று அரிசியைக் களைந்து வேகவைத்து, பூஷணிக்காயை நறுக்கி புளிக்குழம்பும் வைத்துவிட்டார் பரமன். சாப்பிட உட்கார்ந்தபோது கண்ணில் கரகரவென்று கண்ணீர் வழிந்தது. 

மஞ்சு மஞ்சுநாத் எங்கேடா இருக்கே கண்மணி? 

பக்கத்தில் வந்து உட்கார்ந்தார் காரியகர்த்தா. யாரும் இல்லே எல்லோரும் போயாச்சு. அவர் திரும்பச் சொல்ல, வெங்கலப்பானையில் இருந்து எடுத்து அவருக்கும் ஒரு வாழை இலை மடக்கில் பரிமாறினார் பரமன்.  

யாரும் இல்லே எல்லோரும் போய்ட்டாங்க. சொல்லியபடி உண்டு முடித்தார் அவர். கை அலம்ப கொல்லைப் பக்கம் போனார் பரமன். 

கிணற்றில் தண்ணீர் சேந்த வாளியை இருட்டில் கிணற்றில் விட, சொத்தென்று எதன்மீதோ பட்டது அது. தீபம் பிடித்து பின்னால் நின்ற கிழவர் யாரும் இல்லே எல்லோரும் போய்ட்டாங்க என்று கிணற்றுக்குள் பார்த்துச் சொன்னார். 

பரமனும் தீபத்தைத் தாழப் பிடித்து கிணற்றில் பார்க்க, உள்ளே உயிரற்ற உடல்கள் கிட்டத்தட்ட பாதி ஆழத்துக்கு நிறைந்திருந்தன. சத்திரத்தில் கூடும் வண்டிக்காரர்கள் அவர்கள் என்று பரமனுக்குத் தெரிந்தது. 

எல்லோரும் போய்ட்டாங்க. யாரும் இல்லே. கிழவர் திரும்பச் சொன்னார். 

கேலடிக்காரங்க வண்டிக்காரங்களை கொன்னுட்டாங்களா? கிழவர் உடனே அதே பதிலைச் சொன்னார். 

இவரைக் கேட்டு பயனில்லை. மீதி சோற்றை ஒரு வட்டிலில் வைத்து இலையால் மூடி, புளிக்குழம்பை இன்னொரு பாத்திரத்தில் எடுத்து வைத்தார். 

உக்கிராண அறையில் மீதி பூசணிக்காயை வைத்துவிட்டு வர கதவு திறந்து உள்ளே நுழைந்தவர் அந்த இருட்டில் விளக்கு இருட்டைப் பெருக்கி வைத்த அதிசயத்தை உணரும் முன் தரையில் எதுவோஅவசரமாக அசைந்தது தெரிந்தது. 

பரமன் விளக்கைக் கீழே போட்டிருப்பார். கீழே கிடந்ததை அவர் அடையாளம் கண்டு கொண்டார். வீராயி. பரமனய்யா என்று திரும்பத் திரும்ப அழைத்தாள் அவள். பரமன் தன் இடுப்பு வேட்டியை அவிழ்த்து வீராயி மேல் போர்த்தினார். அவள் அழுகைக்கு ஊடே சொன்னதை ஊகித்திருந்தார், 

வயிற்றுப் பசிக்கு உணவு அளிக்கும் சத்திரத்தில் உடல் பசிக்கு உணவு கொண்டிருந்தன வந்த மிருகங்கள். வண்டிக்காரர்கள் காவல் இருந்து உயிரையும் கொடுத்தும் வீராயியை கூட்டமாக சீரழித்திருக்கிறார்கள் அவர்கள். 

வீராயி உங்க அப்பா எங்கே? அவர் இறந்து போய் ரெண்டு வருஷம் ஆச்சு பரமனய்யா. ஏதோ ஒரு ஆசுவாசம் பரமனுக்கு. 

வீராயி ஓரமாகக் கிடந்த பிடவையை உடுத்திக் கொண்டு பரமனிடம் போகலாம் என்றாள்.  யாரும் இல்லே எல்லாரும் போய்ட்டாங்க என்று இன்னொரு தடவை சொன்னார் காரியகர்த்தா. 

பரமன் வெளியே கிளம்பியபோது வீராயியும் அவரோடு நடந்தாள். மனதே இல்லாமல் அவள் கூட வரச் சம்மதித்தார் பரமன். 

எல்லோரும் வந்தாங்க யாரும் இல்லே இப்போ என்றார் காரியகர்த்தா கடைசியாக. 

வேட்டி வேணாமா என்று பரமனிடம் கேட்டாள் வீராயி. ஒன்றும் பதில் சொல்லவில்லை பரமன். இருட்ட ஆரம்பித்திருந்தது. பரமன் அருகே நடந்த வீராயியால் இரண்டடி சேர்த்து எடுத்து வைக்க முடியவில்லை. பரமனின் கையைப் பற்றிக்கொண்டு அவர் மார்பில் முகம் புதைத்து நின்றாள் அவள். 

அஞ்சு பேர் ஐயா, ஒருத்தன் அடுத்து மத்தவன் இல்லே. ரெண்டு ரெண்டு பேராக சேர்ந்து வந்து சீரழிச்சாங்க தேவிடியா பசங்க. 

சொல்லியபடி அழுதாள் வீராயி. அவள் பரமனைக் கட்டியிருந்த கரங்கள் வலுவாக அவர் மேல் படர, தெருவோரத்தில் ஆள் அரவம் இல்லாமல் யார் வீடோ வெறுமையோடு நின்றது. பேய் மிளகு விதைக்காத அது வீடு தானா? 

நாட்டியசாலை என்றாள் வீராயி. வாசலில் எடுப்பாக இரண்டு பக்கமும் இரு திண்ணைகள் உள்கதவு வரை நீண்டிருந்தன. பரமனை அதில் சாய்த்து மேலே படர்ந்தாள் வீராயி. அசதியும்  களைப்பும் பறந்து போக அவளோடு இயற்கை தர்மப்படி இயங்கினார் பரமன். 

எல்லாம் முடிந்து மேடையை விட்டு இறங்கும்போது ரொம்ப நன்றி என்று சொல்லி நினைவு வச்சுக்குங்க நானா என் உடம்பை கொடுத்தது உங்களுக்கு மட்டும்தான் நான் போகறேன் என்று அவர் உதட்டில் இழுத்து முத்தமிட்டாள் வீராயி. சட்டென்று கையை விட்டுவிட்டு இருளில் ஓடி மறைந்தாள் அவள். சில்வண்டுகளின் நீண்ட சீழ்க்கையொலி அவளோடு ஓடி திரும்பி வந்தது. 

இடுப்பில் வேட்டி இல்லாமல் இருந்தது நினைவு வர சத்திரத்துக்குள் ஓடினார். விளக்கு இல்லாத வண்டிக்காரன் சத்திரத்தில் வாசலில் உட்கார்ந்திருந்தார் காரியகர்த்தா. என்ன வேணும் என்று கேட்டார். என் வேட்டி என்றார் பரமன். இங்கே எப்படி வந்தது வேட்டி? நான் கொஞ்ச நேரம் முந்தி வீராயியை உங்களோடு வந்து அந்த உக்கிராண அறைக்குள்ளே பார்த்தோமே அப்போ நக்னம் மறைக்க வேட்டி கொடுத்தேனே அவளுக்கு. 

வீராயியா அந்தப் பொண்னு இறந்து போய் ஒரு மாசம் ஆச்சே. 

இப்போ பேசினோமே அவளோடு, நீங்க இங்கேதானே இருந்தீங்க? 

நான் இப்போதான் வர்றேன். வண்டிக்காரன் சத்திரம் மூடி ஒரு வருஷம் ஆகப் போறது. வேட்டி ஏது அங்கே? 

அவர் கேட்பதற்கு முன் பரமன் சாடி உக்கிராண அறைக்குள் கதவு திறந்து பார்த்தார். ஒரு வேட்டி ஒரு ஓரமாகக் கிடந்தது. வீராயி குரல் இருட்டில் கேட்டது. 

பரமனய்யா சீரழிச்சிட்டாங்க. அவள் சொன்னாள். அந்தக் காட்சி இன்னொரு முறை அனுபவிக்க வேண்டி வரும் என்று தோன்ற வெளியே ஓடினார் பரமன். 

சமையலறையில் வைத்திருந்த சாதமும் புளிக்குழம்பும் நினைவு வர சமையலறைக்குள் புகுந்தார். ஒரு கடுகு கூட இல்லாத சமையலறை. வெளியே ஓடி வரும்போது அவர் இடுப்பில் வேட்டி ஏறி இருந்தது. உக்கிராண அறைக்குள் சத்தம் ஏதுமில்லை.

(தொடரும்)

மிளகு: இரா முருகன் - நாவல்

மிளகு  அத்தியாயம் எழுபத்தொன்பது மிளகு அத்தியாயம் எண்பத்தொன்று 

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.