மலர்களில் மிக உயர்ந்தவை என மனிதர்கள் கொண்டாடும் சிலவகை மலர்களைக் குழந்தைக்குச் சூட்டி அழகுபார்க்க எண்ணுகிறாள் அன்னை. அவன் தன்னுடைய அழைப்புக்கும் ஆசைகாட்டுவதற்கும் மயங்கிவருவான் என எதிர்பார்ப்பது எதனால்? குழந்தை வளரும்பொழுதில், “இப்பொருள் உயர்ந்தது; இது அழகுமிக்கது; இது உனக்கு நல்லது,” என்பதெல்லாம் தாய் கூறித்தான் குழந்தை அறிந்துகொள்கின்றது. இல்லாவிடில், தெருவோரச் செடியில் பூத்துக்குலுங்கும் வண்ணமயமான அந்திமந்தாரையும், அரிதாகக் கிட்டும் செண்பகமலரும் அவனுக்கு ஒன்றுதான். தாய் கூறித்தான் இம்மலர்கள் உயர்ந்தவை, மணமிக்கவை, மிக அரியவை, விலைமதிப்பற்றவை என அறிந்துகொள்கிறான். அவளும் இவற்றையெல்லாம் கூறி அவனை ஆசையாக அழைத்துத் தன் உள்ளப்படி அவன் நடந்துகொள்ளுமாறு செய்கிறாள்!
‘மேகங்கள் போலக் கருத்தநிறம் கொண்டு, அவற்றின் குளிர்ந்த தன்மையையும் உடையவன் நீயல்லவோ குழந்தாய்! ஏழுலகும் உய்ய எங்கள் ஆய்ப்பாடியில் வந்து பிறந்தாய். உனக்கு மணம்மிக்க மல்லிகைப்பூவைச் சூட்டுவேன், வருவாயாக,” என அன்போடு விளிக்கிறாள்.