பேராசைக்காரியின் புலம்பல்கள்

sleepless-night

பேராசைக்காரியின் புலம்பல்கள்

முதலில் காலை நேரக் கோப்பைகளின் சர்க்கரையைச் சுவாரசியமற்றதாக்குகிறது
நாளடைவில் உப்பு சப்பற்ற உணவுமானது
கடிகார முட்களும் நாட்காட்டிகளும் திசைகாட்டிகளும்
நாள்தோறும்
அவனை நிரப்பினாலும்
அவளின் புலம்பல்கள் நின்றபாடில்லை
அதிருப்திகளை விழுங்கி விழுங்கி
சின்னச் சின்ன ஆசைகளான பீங்கான் கோப்பைகளை
நிரப்ப ஆளின்றி உடைத்துக் கொண்டே
ஓடிக் கொண்டிருந்திருக்கிறான்
சபை நாகரீகமற்ற குடும்ப விழா ஒவ்வொன்றிலும்
காகிதங்களின் காதலி மானத்தை
துகிலாக உரித்திருக்கிறாள்
தளராத பொழுதையெல்லாம் உடுத்தி கொள்கிறாள்
எதிரொலிக்கத் தெரியாதவனல்ல
எதிர் சூறாவளி காற்றிலும் நிற்க சூழலால் நிர்பந்திக்கப்பட்டவன்
உறங்காத இரவுகளில் இவன் தேடுவது
தன்னை மட்டும் காணும்
மோனோலிசா ஏந்தி வரும்
கோப்பை தேநீர் ஒன்றை மட்டுமே…
******

தட்டான்களுக்கும் பட்டாம்பூச்சிகளுக்கும்
வேறுபாடு உணர்ந்தவள்
குருவிக்கும் பருந்துக்கும் வேறுபாடு கேட்கிறாள்
சிறகுள்ளவை அனைத்தும் பறவைகளாடா என்றேன்
போப்பா உனக்கு ஒன்னுமே தெரியலை
தட்டானுக்கு மெல்லிய கண்ணாடி சிறகு
பட்டாம்பூச்சிக்கு வண்ணங்களை உதிர்க்கும்
வெல்வெட் சிறகென்று சொல்லி கொண்டே போனாள்
ஆம் எனக்கு ஒன்று கூடத் தெரியவில்லை
எனக்குத் தெரிந்தது அவளுக்கு வளர்ந்திருக்கும் சிறகு மட்டுமே…

 


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.