காற்றில் துளிர்க்கும் யாழ்

கொள்ளிடம் போலவே தன்னியல்பில் பாயும் காட்டாறுதான்போலும் வாழ்வும். உயிர்ப்பு வற்றும் பொழுதுகளிலும் சன்னதம்கொண்டு எழக்கூடுமோ நினைவின் நதியிலிருந்து கடந்தகாலம்? பால்யத்தில் நம் நினைவில் தங்கும் நிலமே நம் அகத்தின் நித்தியவாசமாய் என்றென்றைக்கும் தங்கிவிடுமோ? சட்டென்று கவனம் இடறி கனக்கும் வலியோடு எழும் கடந்தகாலத்தின் வலியை, அழகையே நான் எப்போதும் அ. முத்துலிங்கம் அவர்களது எழுத்தில் அறிகிறேன். யாழை கதைக்களமாகக்கொண்டு அவர் எழுதிய கதைகள், பிடுங்கி வீசப்பட்ட வேரின் மணம் வீசுவதே என்றென்றும் நானடையும் மனச்சித்திரம்.

கவிதை எனும் வேதாளம்

மெல்ல மெல்ல உறக்கத்தில் நழுவும்
நள்ளிரவில் கவனித்தால்
யாரோ யாரையோ முத்தமிடும் காட்சி
மனதின் எல்லாப் பக்கங்களிலும்
வரைந்து வைக்கப்பட்டிருக்கிறது