இது சொல்வனத்தின் ஐம்பதாவது இதழ். இந்த இதழை தமிழின் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவரான தி.ஜானகிராமன் குறித்த சிறப்பிதழாகக் கொண்டு வர விரும்பினோம். ஜானகிராமன் வாழ்ந்த காலத்தில் பெரிய கவனத்தையும், மதிப்பையும் பெற்றவராயினும், அவர் மறைந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்களாகிவிட்ட நிலையில் அவரைக் குறித்து சில நினைவுகளையும், மதிப்பீடுகளையும் மீட்டெடுக்கவேண்டும் என்று தோன்றியது. இந்த இதழ் தயாரிப்பில் வெங்கட் சாமிநாதன் அவர்கள் காட்டிய அக்கறை மிகவும் நெகிழ வைத்த ஒன்று. இந்த இதழை அவருக்குச் சமர்ப்பிக்கிறோம். சொல்வனத்தைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி, விமர்சனம் செய்து, அக்கறை காட்டிவரும் அத்தனை நண்பர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் ஐம்பதாவது இதழைத் தொட்டிருக்கும் இத்தருணத்தில் எங்கள் நன்றிகள்.
“இலக்கியப் பணி என்று எதைச் சொல்வது?
என் ஆத்ம எதிரொலிப்பாக, நான் வாழும் வாழ்க்கையின் ரஸனையை எனக்கு எளிதாகக் கைவரும் எழுத்தின் மூலம் வெளிக்காட்டுகிறேன். இதில் சேவை என்பதோ, பணி என்பதோ இடமே பெறவில்லை. என்னுடைய இன்பங்களை, நான் துய்க்கும் சோக உணர்வுகளை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளவே நான் விரும்புகிறேன்.
சுற்றிலும் உலகம் சிறியதும் பெரியதுமாக சாதாரண அசைவுகளில் கூட வியப்புகள் நிறைந்து இயங்குகிறது. அதைப் பார்த்துக் கொண்டிருப்பதே ஆனந்தம்தான். அதைத்தான் நான் பகிர்ந்து கொள்கிறேன் – எழுத்து மூலம்.
– தி.ஜானகிராமன்”