றெக்கை –  அத்தியாயம் 21

This entry is part 21 of 21 in the series றெக்கை

வழக்கம் போல் குழப்பத்தில் இருந்தான் ஜா ஜா.

 பாண் மனுஷி

இந்த  வார்த்தை ஜா ஜா வாயில் புரண்டு கொண்டு இருந்தது இன்று காலை முதல்.

 தொடர்ந்து காலைச் சுற்றுகிற நாய்க்குட்டி போல் மனதைத் தொடர்ந்து கொண்டே இருக்கிற ஏதோ ஜன்மத்தின் பெயரோ குழுப்   பெயரோ  தொழில் பெயரோ விளங்கலை. .

காலை ஏழரை மணிக்கு கிரமமாக ஒற்றைச் சக்கர  சைக்கிள் சவட்டிப் போகும் பிள்ளை வாத்திச்சியிடம்  வழியிலே எதிர்பட்டு ரெண்டு சக்கர சைக்கிளில் சவாரி  செய்து வந்த யாரோ கதைத்துக் கொண்டிருந்தது காதில் விழுந்தது –

யாரோ என்ன, முனிசிபல் கவுன்சிலர்  ஜெசிகா,

 கார்த்திகை பிறக்க இன்னுமிருபது சேம நாளே பாக்கி உண்டு அத்தய்,என்க மாமா  மாமா மாமா வரலய் ஏன்  

பிள்ளை வாத்திச்சி   ஜெசிகாவை உடனடியாக  கிறித்துவர்களுக்கு மட்டுமாக ஒதுக்கப்பட்ட நரகத்துக்கு போகச் சொன்னாள்..முடிந்தால் கூடவே மிஸ்டர்  தாணு பிள்ளையையும் இழுத்துப் போக கோரினாள்.

இழுக்காமல் என்ன? வலனாடு குடியிருப்பு ஊராக உள்ள எத்தனையோ  பேர் சொந்த பூமிக்கு பத்து வருஷத்துக்கு ஒரு தடவையாவது பயணம் போய்த் திரும்பி வருவதுண்டு. அவர்கள் அந்தப் பயணத்தை பிறர்  அறியாதபடி காதும் காதும் வைதத மாதிரி ஓசைப்படாமல் போய்  வருவதுண்டு, காரணம் இந்தியாவுக்குப் போகிறவர்கள் திரும்பி வரும்போது வாங்கி வரச் சொல்லி கோரிக்கை விடுத்து வைப்பது வாடிக்கை. இவ்வகையில் உள்ளவை –

சுக்கு, திப்பிலி,யானை வால் மயிர், பொரிவிளங்காயுருண்டை, லங்கோட்டு, கச்சு, திரிபலா சூரணம், கைப்பிரம்பு, வெள்ளி அரசிலை,    பஞ்சாமிருதம், பீமபுஷ்டி அல்வா, ஸ்லோக புஸ்தகம், இத்யாதி.

இதையெல்லாம் பொறுமையாகக் கேட்டு நீள்ப் பேரேட்டில் விவரம் எழுதி     எடுத்துப் போய் அலைந் து திரிந்து வாங்கிக் கொண்டிடுந்தால் பயணம் போன சொந்தக் காரியம் மறந் து போகும்.

எ டி ஜெசிக்கா  மாமா கிட்டே என்ன சொல்லி விட்டிருந்தே. பிள்ளை மிஸ் ஒற்றைச் சக்கர சைக்கிளில் இருந்து ஜாக்கிரதையாக இறங்கியபடி கேட்டாள்.

எனக்கா அத்தய், கால் ஆணிக்கு களிம்பு, பசங்களுக்கு  முட்டாய்

ஜெசிக்கா  கண்ணைச் சிமிட்டிக் கொண்டு சொன்னாள். ‘

ஏண்டி ஓமனக் குட்டி, பாண்மனுஷி கிட்டே கேட்டா  புத்தம் புதுசா எடுத்து வந்து கொடுப்பாளே.இத கேக்க சைக்கிளை ஏன் வழி மறைக்கறே

ஜாஜா உற்சாகமாக நின்ற இடத்தில் இரண்டடி மேலே போய் தட்டென த் தரையில் வந்தான், பாண்r  என்றால் பன்ரொட்டி. பாண்மனுஷி என்றால் ஊருக்கு வெளியே பேக்கரி வைத்து  ரொட்டி சுட்டு விற்கும் பெண்மணி,

ஜெசிக்கா, மதராஸ் பட்டணத்திலே பிஸ்கோத்தும் மிட்டாயும் வாங்கி வரலாம் தான். பயணம் ஒரு வாரம் இருந்தா, பூஞ்சக்  காளான் பிடிச்சு தூக்கிப்போட வேண்டி வந்துடுமே

ஜாஜா ஜெசிக்காவிடம்  சொல்லியபடி பிள்ளை மிஸ்ஸை பார்த்தான்.

மேட்ச் என்னிக்குடே? அவள் லாகவமாக ஒற்றை சக்கர வண்டியில் ஆரோகணித்து ஓட்டியபடி ஜாஜா அருகில் வந்தாள்.

அத்தய், மாமாவை உங்களுக்கு புதுசா ரெண்டு சக்கர சைக்கிள் வண்டி வாங்கி வரச் சொல்லியிருக்கீங்க தானே? ஜெசிக்கா இதையும் ஜாஜாவை நோக்கி சொல்லியபடி வர, ஜெசிக்காவையும் ஜாஜாவையும் தவிர்க்க இடுப்பை வளைத்து ஒற்றை சக்கர சைக்கிளை ஓட்டி தொப்பென்று வண்டியைப் போட்டுக்கொண்டு விழுந்தாள்.

இது தினசரி நடப்பு என்று தோன்றும் முகபாவத்தோடு பிருஷ்டத்தில் படிந்த மண்ணை தட்டி விட்டபடி மறுபடி வண்டி ஏறினாள் பிள்ளை மிஸ்.  வெகு வேகமாக சைக்கிள் செலுத்தி அவள் போக, ஜெசிக்கா தன் சைக்கிளை உருட்டிக் கொண்டு வந்தாள். ஜாஜா அத்தய் வண்டி ஓட்டறது கண்கொள்ளா காட்சிதானே? எங்கே கத்துக்கிட்டா தெரியுமா? தலைச்சேரின்னு சர்க்கசுக்கு பேர்போன ஊர் ஒண்ணு இருக்கு, அங்கே ஒரு சர்க்கஸ் கம்பெனியிலே தான் தலைக்கு மேலே ஒரு கரடிக் குட்டியை வச்சுக்கிட்டு ஒரு சக்கர வண்டியிலே சவாரி செஞ்சு சர்க்கஸ் பார்க்க வரக் கூப்பிட்டு பிட் நோட்டீஸ் விநியோகிப்பாங்களாம்.

ஜாஜாவுக்கு அந்த விஷயம் தேவையானதில்லை. புத்தியில் அதை ஏற்றினால் காலையில் எழுந்து ஒற்றை சக்கர சைக்கிள், தலைச்சேரி என்று ஏதாவது.சம்பந்தா சம்பந்தமில்லாமல் நினைவில் தட்டும். கோல்போஸ்டில் பந்து வழுக்கி உள்ளே வந்து எதிரணிக்கு கோல் ஆக எகிறும்; தேவையா என்ன?

ஜெசிக்கா, எனக்கு எதுக்கு அதெல்லாம். நடையை கட்டறேன் என்று நடையை தொடர்ந்தான் ஜாஜா,

போன வருஷம் மாமா அந்த சைக்கிள்ளே ஏறி சவாரி செய்யறேன் பேர்வழின்னு  கல்லுமேலே முட்டி,, அவருக்கு படக்கூடாத இடத்திலே அடி பட்டு வீங்கிப் போச்சு,

விருத்தர்களின் அந்தரங்க விஷயங்களை அவன் கேட்கப் போவதில்லை. கரும்பு ஆலை அழைப்பு மணி கணகணவென்று முழங்கி வேலக்கு வரச் சொல்லி கூப்பிட்டது. 

ஹோ ஹோ என்று பின்னால் இருந்து சத்தம்.  கையில் நீளமான கழியில் மணிகள் கோர்த்துக் கட்டி யெரூபா சொருபம் சுமந்துj பூசாரி. நடை

ஜாஜா நடையை எட்டிப்போட யத்தனித்தான், வேலைக்கு போகிற நேரத்தில் பறக்கும் பாம்பு, மனுஷன் உயரத்தில்  எட்டுக்கால் பூச்சி என்று ஏதாவது தேவ விஷயத்தையோ அல்லது யொரூபா தெய்வத்தின் மகிமை பற்றிய விதந்தோதலாக பாடிப் பரவிக்கொண்டோ காது சவ்வு கிழிந்துபட எட்டு ஊருக்கு கேட்கிற குரலில் தெய்வ கீதம் பாடியோ அட்டை போல ஒட்டிக் கொள்வான், மற்றபடி பூசாரி  மேல் எந்த வன்மமும் ஜாஜாவுக்கு இல்லை.

ஜாஜா உனக்கு விஷயம் தெரியுமா? வெகு காலை எழுந்து புலால் உண்டு ஜீரணம் தடைப்பட்டவனாக பூசாரி கேட்டிருக்க,  ஜாஜா  மௌனமாக தெரியாது என்று தலையசைத்தான். 

யொரூபா நிகழ்த்தும் மாயாஜாலத்தில்  குறைவே இல்லை ஜாஜா. நேற்று ராத்திரி புதிதாக ஒரு மேஜிக் செய்திருக்கிறது தெய்வம். என்ன தெரியுமா?

சித்திரம் : ஷங்கரா

சுவாதீனமாக ஜாஜா சட்டைப் பையில் கைவிட்டு ஒரு ஐந்து ரிண்ட் நாணயத்தை எடுத்தான் பூசாரி. வரிசை குலைந்து நிற்கிற குடியிருப்புக் குடில்களை ஒட்டி இருவரும் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அதில் நான்காவது குடில் வாசலில் ஒரு தகர வாளியில் அரையளவு கலங்கிய தண்ணீர் இருந்தது. மாயமோ மந்திரமோ நிகழும் சூழ்நிலை இல்லை அது. என் பத்து ரிண்ட் காலியாப் போச்சா பூசாரி? ஆதூரத்தோடு கேட்டான் ஜாஜா. அதான் இல்லே இங்கே பார். இடுப்பில் சுற்றிய பல வண்ணப் பாவாடையை வழித்துக் கொண்டு தரையில் உட்கார்ந்த பூசாரி ஜாஜாவையும் உட்காரச் சொன்னான். வீட்டுக்குள் இருந்து பெரும் குரல் ழுப்பி யாரோ அலற ஆரம்பிக்க பூசாரியை பார்த்ததும் ஓடி ஒளிந்தார்கள்.

 மில்லுக்கு போகணும் நேரமாச்சு காசைக் கொடு பூசாரி

அவன் காசை திருப்பிக் கொடுத்து விடுவான் என்று ஜாஜாவுக்கு நப்பாசை. மாதத்தில் முதல் பதினைந்து நாள் யெரூபா வழியும் மீதி பதினைந்து நாள் யூத மதத்தில் இருந்தும்  ஜாஜா வாழ்த்தி வணங்கும் ரெண்டு செட் கடவுளரில் யாராவது ஒருத்தர் தலையிட்டு மந்திரம்  போட்டால் பூசாரி கையில் இருந்து காசு ஜாஜா சட்டைப் பைக்குள் திரும்ப புகுந்து விடும். அதற்கும் பூசாரியோ ரெப்பாயோ வேணும்.

பூசாரி உள்ளங்கையில் வைத்திருந்த நாணயம் காலை வெளிச்சத்தில் மின்னிக் கொண்டிருந்தது. பூசாரி அதை மெல்ல தகர வாளிக்குள் இட்டான். அவன் முகத்தில் பெரிய சிரிப்பு ஒன்று பொங்கி வழிந்தது.

இங்கே பார், யெரூபா தெய்வத்தின் லேடஸ்ட் மாயாஜாலம். ஜாஜாவிடம் பதமாகச் சொன்னான், 

கடவுள் கூட தன் இருப்பை லேடஸ்ட் அருஞ்செயல்கள் மூலம் ஊர்ஜிதப்படுத்த வேண்டி இருக்கிறது, ஜாஜா லௌகீக நினைப்போடு தகர வாளிக்குள் பார்க்க அங்கே பத்து ரிண்ட் காசு தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது,

வைதீகப் பெருமிதத்தோடு கையை அசைத்தபடி நின்றான் பூசாரி. இது அதிசயம் தான் என்றான் ஜாஜா திட்டவட்டமாக, அற்புதம் தான் என்றான் பூசாரி முள்ளம்பன்றி போல மயிர் எல்லாம் குத்திட்டு நிற்க, இந்த யுகத்தின் தெய்வ வெளிப்பாடு என்று தலையசைத்தபடி பூசாரி வாளித் தண்ணீரில் மிதந்த காசைப் பதமாக எடுத்து பாவாடையில் தைத்திருந்த ஆழ அகலங்கள் கொண்ட பைக்குள் வைத்துக் கொண்டான். வாசலுக்கு வந்து பூசாரியை வணங்கிக் கொண்டு அந்த வீட்டு சம்சாரி நின்றான். 

மாயம் தான் பூசாரி, இந்த வாளித் தண்ணியை என்ன செய்ய? தகர வாளியை என்ன செய்ய? 

நியாயமான கேள்வி தான், எனினும் பூசாரி சாமான்யப்பட்டவனா என்ன? கருங்கல்லை தின்று சுக்குக் கஷாயம் முழுங்கும் வகை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்

வாளித் தண்ணியை ஒரு சீசாவிலே எடுத்து வை. எந்த ஆரோக்கியக்   குறைச்சல், காய்ச்சல், குத்திருமல், மூட்டு வலி இப்படி எந்த நோக்காடு வந்தாலும் இதை உபயோகம் பண்ணிக்கோ.

 குடிக்கணுமா புரட்டணுமா? விடாமல் வினவினான் கிருஹஸ்தன்.  

வைத்யரத்னா தங்கவேலு அய்யங்காரை கேட்க வேண்டியதுதானே இல்லேன்னா இங்கிலீஷ் டாக்டர்  சொல்வார்.

ராணுவ வீரர்கள் அணிவகுத்து போகும்போது கோஷ்டியாக முன்வரிசையில் கிளாரிநெட்டும், ட்ரம்பெட்டும் சேர்ந்து ஒலிக்க நடை போடுவதற்கான இசையை போலி செய்தபடி உற்சாகமாக நடந்தார்  பூசாரி.

ஜாஜாவுக்கு இன்னும் அதிசயம் அனுபவித்துத் தீரவில்லை..மேட்ரிடில் இருந்து எஸ்பானிய கால் பந்தாட்ட குழு வலனாடு குழுவோடு பந்து களிக்க வந்து இறங்கின மாதிரி அதிசயம். அந்தப் பந்தயத்தில் வலனாடு டீம் இடைவேளைக்கு முன் நாலு கோல் போட்ட ஆச்சரியம்.

கரும்பு ஆலை மணி இன்னொருதடவை நச்சரிப்பாக ஒலித்து ஓய்ந்தது 

.வேலைக்கு வந்தோமா வந்தோம். பிழியும் கரும்பின் எண்ணிக்கை பார்த்து கச்சா பொருள் பேரேட்டில்  பதிந்தோமா பதிந்தோம், அப்படி இல்லாமல் மிதக்கும் காசு, நடக்கிற கரன்சி நோட்டு,  பறக்கிற அண்டர்வேர் என்று  நேரத்தை வீணாக்காமல் வேலை செய்தோமா செய்தோம்.    அஎன்று இல்லாமல் ஒழுங்க் மாலை மயங்கும் நேரத்தில் கால் பந்து ஆடுவோமா ஆடுவேனே,

ஓட்டமும் நடையுமாக ஜாஜா கரும்பு ஆலைக்குள் நுழைந்தபோது அங்கே கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருந்ததைக் கண்டான் ஜாஜா.

அதுக்குள்ளே  இங்கேயும் மிதக்கும் காசு விவரம் வந் து சேர்ந்தாச்சா. ஜாஜா சட்டைப் பையைத் தடவிப் பார்த்தான். இருந்த காசை பூசாரி பிடுங்கிப் போய் விட்டாரே.

ஆலை மணி தொடர்ந்து ஒலித்து ஒழுங்காக வேலையை பாருங்கடா என்று மிரட்டியது, மனசே இல்லாமல் அவனவன் கரும்பு பிழியப் போக, ஆலைக்கு வெளியே  வலநாடு முழுக்க ஒத்தை ரிண்ட் காசையும் வாளியில்  தண்ணீரையும் தேடிப் போய்க் கொண்டிருந்தது. மருந்துக் ளுக்கு. கடை, ஜவுளிக்கடை, காப்பிக்கடை, பழக்கடை, இன்னொரு காப்பிக்கடை என்று எல்லாக் கடையும் காசு மிதக்க விட்டு வியாபாரம் கூடுமா என்று எதிர்பார்த்தன. பள்ளிக்கூடம் விடுமுறை விடப்பட்டது, வீடு திரும்பும் முன் கடைத்தெரு வழியாக வந்த பசங்கள் கடை கடையா நின்று வேடிக்கை பார்த்து நடந்தன.

யெருபாவின் லேட்டஸ்ட் மாய மந்திரம் என்று உள்ளூர் செய்தித்தாள் அவசரமாக அச்சடித்து காசு பார்த்தது. மிதக்காத காசு அது..

எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும்நிர்மலாவின் வீட்டு முகப்பு மருத்துவ மனையில் சீக்காளிகள் யாரையும் காணோம். நதிப் பெண்கள் மூன்று பேரும் நிர்மலாவை நச்சரித்து இந்த யுகத்தின் ஆச்சரியத்துக்கு ஒரு காசு வாங்கி பானைத் தண்ணீரில் மிதக்க விட்ட காசு எல்லாம் அமிழ்ந்து போனது.  காசு மிதக்கக் காரணம் என்ன என்று  விக்ஞான விளக்கம் கொடுத்தாள் நிர்மலா அவர்களிடம்.

அய்யோ அதெல்லாம் வேணாமே. இது இந்த யுகத்து மாயம். அப்படியே இருக்கட்டும். விளக்கம் சொன்னால் மேஜிக் எல்லாம் காணாமல் போயிடும். காவேரி சொல்ல மற்ற இரண்டு நதிப் பெண்களும் ஆமா என்றார்கள்.

காசு ஏன் மிதக்கறதுன்னு தெரியுமா  என்று அடுத்த வீட்டு கொல்லன் சாமு பெண்டாட்டி பெஞ்சிக்கு போதமாக்க நிர்மலா முயன்றாள். காத்திருப்பேனா இதோ பார் கன்னத்தில் முத்தம் ஒன்று என்றபடி அவள் நிர்மலாவின் கன்னத்தில் முத்தி விட்டு இதழ் கலந்தாள்.  வேணாமே என்று ஈன சுவரத்தில் நிர்மலா  முனக, பெஞ்சி வீட்டுக்கு ஓடிவிட்டாள்.

காசு மிதக்கும் அதிசயத்தைத் தீர விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற நகரசபை யத்தனம் செய்தது.நகரசபைத் தலைவர் விக்ஞானத்துக்குப் பொருத்தமான சீரியஸான முகபாவத்தோடு நகரசபையை, கூட்டினார்.. 

காசு மிதப்பது இந்த யுகத்தின் மாயம் தான். யெரூபா நிகழ்த்திக் காட்டிய அதிசயம். இது.எனினும் இந்த ஒரு வாரத்தில் நாம் எல்லோரும் மத வேறுபாடு இல்லாமல்  அந்த அதிசயத்தில் முழுகி விட்டோம், போதும். இனி தாங்காது. மிதக்கும் காசுகளை போற்றி வணங்குவோம். மற்ற காசுகளைக் கொண்டு சகஜமாக புழங்குவோம்.

ஓட்டெடுப்பு நடைபெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தனை கவுன்சிலர்களும் ஒரு மனதாக ஆதரித்த தீர்மானம் அது. தேசத்துரோகி வாயை கட்ட முனிசிபாலிடி பியூன் கையில் புது துண்டோடு ஓடி வந்தான்

அடுத்த நாள் புலர்காலை ஒரு பெரிய சுரைக்குடுக்கை முழுக்க ஒத்தை ரிண்ட் டோடு ஓ நெல்லி பாட்டி  புதுப் பணக்காரன் டேவ் வீட்டுக்கு வந்தாள். பேன்கேக்கும், சாஜேஜும் பிஷ் அண்ட் சிப்ஸும் விற்றுச் சேர்த்த காசு. எதை எடுத்தாலும் ஒத்தை ரிண்ட் விலை என்று நடத்திய விவகாரம்.

இத்தனை அதிசய அற்புதங்கள் எனக்கு வேணாம் டேவ். இஐதிலே எவ்வளவு ஒத்தை ரிண்ட் இருக்கோ அதுக்கு பதிலாக வேறே அஞ்சு ரிண்ட் காசுகளாக  கொடு. அது பறக்காம இருக்கட்டும்.

ஓ நெல்லி கிழவி போனதற்கு அப்புறம் டேவ் பெண்டாட்டி  ரூத் கதவடைத்து உள்ளே வந்தாள்.

இன்னொரு மாயம் பார்க்கறியா? தரையில் சம்மணம் கட்டி உட்கார்ந்தாள்.

கிழவி கை மாற்றிய ஒத்த காசு குடுக்கையை தலைக்கு மேல் கவிழ்த்துக் கொண்டாள்.

ஒரு காசும் கீழே விழவில்லை.

றெக்கை

றெக்கை – அத்தியாயம் 20  

Discover more from சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.