- ஏ நோதீர் துய் கினாரே துய் தாரோனி
- வி. ராமஸ்வாமி: நேர்காணல்
- மேதையுடன் ஒரு நேர்காணல்
- வங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்
- சத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு
- 20ஆம் நூற்றாண்டின் வங்காளப் பத்திரிகை உலகம்
- தமிழில் வங்க எழுத்துகள்
- நாட்டிற்கு உழைத்த நமது நல்லவர்கள்: பங்கிம் சந்திர சாட்டர்ஜி
- வங்க இலக்கியங்கள்
- அனைத்திந்திய நூல் வரிசை: வங்கச் சிறுகதைகள் – முன்னுரை
- வங்காள வரலாறு
- நீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை
- தன் வெளிப்பாடு – முன்னுரை
தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட படைப்புகளும் படைப்பாளர்களும்
- வெள்ளை உறை (வங்க நாவல்): மோதி நந்தி – லக்ஷ்மி நாராயணன் (சாகித்திய அகாடெமி)
- மணி மகேஷ் (வங்காள பிரயாண நூல்) : உமா பிரசாத் முகோபாத்தியாய் – எஸ். கிருஷ்ணமூர்த்தி (சாகித்திய அகாடெமி)
- சாம்பன் (வங்க நாவல்) : சமரேஷ் பாசு – சு. கிருஷ்ண மூர்த்தி (சாகித்திய அகாடெமி)
- அந்தக் காலம் (வங்காள நாவல்): சுநீல் கங்கோபாத்யாய – புவனா நடராஜன் (சாகித்திய அகாடெமி)
- கடைசி நமஸ்காரம்: சந்தோஷ் குமார் கோஷ் – புவனா நடராஜன் (சாகித்திய அகாடெமி)
- விடியுமா – பாதுரி
- கொல்லப்படுவதில்லை . [நா ஹன்யதே] வங்காளம். மைத்ரேயி தேவி தமிழாக்கம் சு கிருஷ்ணமூர்த்தி
- தேடல் – வங்க மொழி சிறுகதைகள்.
- வினோதினி [சொக்கர் பாலி ] வங்காளி. ரபீந்திரநாத் தாகூர் தமிழாக்கம் த நா குமாரசாமி
- கலியின் கதை – வயா பைபாஸ்
- சிப்பியின் வயிற்றில் முத்து – போதிசத்வ மைத்ரேய – சு. கிருஷ்ண மூர்த்தி (நேஷனல் புக் டிரஸ்ட்)
- சிதைந்த கூடு முதலிய கதைகள்: ரவீந்திரநாத் தாகூர் – சு. கிருஷ்ணமூர்த்தி (சாகித்திய அகாடெமி)
- புரட்சிக்காலம் – பிரஃபல்ல ராய்
- வனவாசி (வங்காளி நாவல்): விபூதி பூஷண் வந்த்யோபாத்யாய – த. நா. சேனாபதி (சாகித்திய அகாடெமி)
- நெஞ்சங் கவரும் வங்காளிக் கதைகள்: விபூதிபூசன் வந்த்யோபாத்யாய – ஆனைவாரி ஆனந்தன் ( சாகித்திய அகாடெமி)
- வங்க சிறுகதைகள் – க.கிருஷ்ணமூர்த்தி
- வங்காளிக் கதைகள் (தொகுதி 2): கவிதா சின்ஹா – சு. கிருஷ்ணமூர்த்தி (சாகித்திய அகாடெமி)
- வங்கமொழிச் சிறுகதைகள் (தொகுதி 3): அஸ்ருகுமார் சிக்தார் – பெ. பானுமதி (சாகித்திய அகாடெமி)
- தன் வெளிப்பாடு – சுநீல் கங்கோபாத்யாய். – சு. கிருஷ்ண மூர்த்தி (நேஷனல் புக் டிரஸ்ட்)
- ஆரோக்கிய நிகேதனம் (சாகித்திய அகாடெமி) – தாராசங்கர் பந்த்யோபாத்யாய – த. நா. குமாரசாமி
- பொம்மலாடம் [புதுல் நாச்சார் கி இதிகதா] வங்காளி . மாணிக் பந்தோபாத்யாய தமிழாக்கம் த.நா குமாரசாமி
- பருவம் தப்பிய வசந்தம் [ ] வங்காளி பிமல் கர் தமிழாக்கம் டி பானுமதி
- பதேர் பாஞ்சாலி – விபூதிபூசன் வந்த்யோபாத்யாய
- நீலகண்ட பறவையைத் தேடி. அதீன் பந்த்யோபாத்யாய – சு. கிருஷ்ண மூர்த்தி (நேஷனல் புக் டிரஸ்ட்)
- ஷோடசி (நாடகம்) – சரத் சந்திரர். தமிழில் கிருஷ்ணமூர்த்தி
- தேவதாஸ் – சரத் சந்திரர் – சு. கிருஷ்ண மூர்த்தி (நல்ல நிலம் பதிப்பகம்)
- சரத் சந்திரர் சிறுகதைத் தொகுப்பு: பெ. பானுமதி (சாகித்திய அகாடெமி)
- பூர்ண கும்பம் – ராணி சத்தா
- விநோதினி – ரவீந்திரநாத் தாகூர்: த. நா. குமாரசாமி (சாகித்திய அகாடெமி)
- கபாலக்குண்டலா – பக்கிம் சந்திரா சட்டோபாத்யார் – த. நா. குமாரசாமி (சந்தியா பதிப்பகம்)
- துருவன் மகன் – அமர் மித்ரா
- தெபாகா எழுச்சி: வங்காள ஏழை விவசாயிகளின் போராட்டம்: அபானி லகரி – வெ. கோவிந்தசாமி (சிந்தன் புக்ஸ்)
- கருணைக்கடலில் புரட்சிக்கனல் – ஈஷ்வர சந்திர வித்யாசாகர்: சு. கிருஷ்ண மூர்த்தி (நல்ல நிலம் பதிப்பகம்) – 1994ஆம் ஆண்டுக்கான இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற நூல்

- மகாசுவேதா தேவி சிறுகதைகள் – தமிழில் என்.எஸ். ஜெகன்நாதன்.
- காட்டின் உரிமை [ஆரண்யார் அதிகார் ] வங்காளி மகாஸ்வேதா தேவி தமிழாக்கம் சு கிருஷ்ணமூர்த்தி
- 1084ன் அம்மா
- கவி வந்தயகட்டி காயியின் வாழ்வும் சாவும்: தமிழில் – கிருஷ்ணமூர்த்தி (காலச்சுவடு)
- ஜக் மோகனின் மரணம்.

சொல்வனம் இதழ்களின் முந்தைய பதிவுகள்
- கசாப்புக்காரர் : ஆஷாபூர்ணா தேவி
- சுல்தானாவின் கனவும் மாணிக்கக் கல்லும் : அம்பை
- குக்கூவின் மாய யதார்த்த வாழ்க்கை : அம்பை
- வாசிப்பனுபவம் – ஆரோக்ய நிகேதனம் : வெங்கடேஷ்
- பரிச்சயமற்ற மண் – ஜும்பா லஹிரி : ஆர்.பிரபு
- அர்ஜுன் : மஹாஸ்வேதா தேவி
- மஹா நதி – நீலகண்டப் பறவையைத் தேடி – வாசிப்பனுபவம் : சிவா கிருஷ்ணமூர்த்தி
- எதிர்பாராததை எதிர்பார்க்க வைக்கும் தாகூரின் சிறுகதைகள் : மீனாக்ஷி பாலகணேஷ்
- தாகூரின் பேரன் : சுகா
- அழிவிலிருந்து மீண்ட மிருணாள் சென்னின் திரைப்படம் : எஸ்.சுரேஷ்
- மேகத் தொப்பி அணிந்த நட்சத்திரம் : எஸ்.சுரேஷ்
- பாதல் சர்க்கார் – மண்ணில் உறைந்தும், மனிதனில் கிளைத்தும்: கோபால் ராஜாராம்
- ‘சத்யஜித் ராய்’ என்றொரு இசை ஆளுமை : ஹரி வெங்கட்
- சத்யஜித் ராய் என்றொரு பெரும் கலைஞன் : சத்தியப்ரியன்
- சினிமாவும் வரலாறும்- சத்யஜித் ராயின் ‘சதுரங்க ஆட்டக்காரர்கள்’
- ஷ்ர்மிளா தாகூர் எடுத்த சத்யஜித்ரே பேட்டி
- அஷானி சங்கேத் – தொலைதூரத்து இடியோசை: சி.சு.

கதாசிரியர் அறிமுகங்கள்
தாராசங்கர் பந்த்யோபாத்தியாய் (1889 – 1971)

சரத்சந்திரருக்குப் பிறகு வங்காளிக் கதையிலக்கியத்தின் தலைவர். சிறுகதை, நாவல், நாடகம், பாடல்கள் எழுதுவதில் தேர்ந்தவர். அவரைப்பற்றி ரவீந்திரரின் கூற்று நினைவு கூரத்தக்கது- “மண்ணையும் மனிதனையும் அறிந்தவர், அவற்றுடன் இணைந்தவர்.” இந்த இணைப்பு வெளிப்புறத்தைச் சார்ந்ததல்ல, உள்ளார்ந்ததாகும். சரத் நினைவுப் பரிசு(1947), ரவீந்திரர் நினைவுப் பரிசு(1955), சாகித்திய அகாதமிப் பரிசு(1956), ஞானபீடப் பரிசு(1966) பெற்றவர். கல்கத்தா, வடக்கு வங்காளம், ஜாதவ்பூர், ரவீந்திர பாரதி பல்கலைக் கழங்களின் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவர். மாநிலங்களவையின் நியமன உறுப்பினராகவும் சாகித்திய அகாதமியின் ஃபெலோவாகவும் இருந்திருக்கிறார். இவருடைய கதைகளும் நாவல்களும் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, திரைப்படங்களாகவும் ஆக்கப் பட்டுள்ளன. பீர்பூம் மாவட்டத்தில் லாப்பூர் கிராமத்தில் பிறந்து கல்கத்தாவில் மரணமடைந்தார். பீர்பூமின் சிதைந்த ஜமீன்தார் குடும்பம் ஒன்றைச் சார்ந்தவர். தொழில் – எழுத்து. இந்திய அரசின் ‘பத்ம பூஷண்’ விருது பெற்றவர்.
பனஃபூல் (1899 – 1979)

உண்மைப் பெயர் பலாயி சாந்த் முகோபாத்தியாய். தொழில் – மருத்துவம். கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் பயின்று, பிறகு நீண்ட காலம் பாகல்பூரில் மருத்துவப் பணி புரிந்து விட்டுப் பின்னர் கல்கத்தாவில் வசிக்கத் தொட்ங்கினார். கவிதை, கதை, நாவல், நாடகம், கட்டுரை எழுதுவதில் நிபுணர். உள்ளடக்கத்தின் பிரகாசத்திலும், கட்டமைப்புத் திறனிலும் சிறந்த எண்ணற்ற சிறுகதைகள் எழுதியுள்ளார். கல்கத்தா பல்கலைக்கழகத்தின் சரத் நினைவுப் பரிசு(1952), ஆனந்தா பரிசு(1961), ரவீந்திரர் நினைவுப் பரிசு(1962) பெற்றவர். இவருடைய கதைகள்- நாவல்களின் பாத்திரங்களின் பல்வகைத் தன்மை வாசகரை ஈர்த்து வியப்பிலாழ்த்துகிறது. இவர் 1975 ஆம் ஆண்டில் ‘பத்ம பூஷண்’ விருது பெற்றார்.
அசிந்த்ய குமார்சென் குப்தா (1903 – 1976)

‘கல்லோல்’ குழுவின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். கதை, நாவல், கவிதை, நாடகம், வாழ்க்கை வரலாறு, குழந்தை இலக்கியம் படைப்பதில் சிறந்தவர். கூரிய பார்வை, ஆழ்ந்த மனிதாபிமானம், அளவற்ற பரிவு இவை இவருடைய படைப்புகளில் நிறைந்துள்ளன. நீதித்துறையில் பணிபுரிந்து மாவட்ட நீதிபதியாக ஓய்வு பெற்றார். இவரது கூர்மையான ஆய்வுப் பார்வை கிழக்கு வங்காளத்து ஏழை முஸ்லிம் மக்கள், அரசாங்க அதிகாரிகள், தலைநகரத்தின் உயர் மட்டத்து மனிதர்கள் ஆகிய சமூகத்தின் பல்வேறு பிரிவுகளையும் ஊடுருவிப் பார்த்து இலக்கியம் படைத்தது. இவரது படைப்புகள் மொழியின் நளினத்தில் சிறந்தவை. இவர் ரவீந்திரர் நினைவுப் பரிசு(1975) பெற்றவர்.
பிரேமேந்திர மித்ரா (1904 – 1988)

‘கல்லோல்’ குழு எழுத்தாளர்களில் ஒருவர். கவிதை, கதை, பாடல், கட்டுரை, குழந்தை இலக்கியம், திரைக்கதை, இவற்றைப் படைப்பதில் தேர்ந்தவர். இவர் படைத்த ‘கனாதா’, ‘பராசர் வர்மா’ போன்ற பாத்திரங்கள் சிறுவர், வயது முதிர்ந்தவர் இரு பிரிவினரையும் ஒருங்கே கவர்ந்தன. இவருடைய வாழ்க்கையின் ஒரு பகுதி காசியில் கழிந்தது. இவர் பலவகையான பணிகளில் ஈடுபட்டிருந்தார். சிறிது காலம் கல்கத்தா வானொலியின் இலக்கிய ஆலோசகராக இருந்தார். ஆனால் இறுதிவரை இவர் புகல்* பெற்றது இலக்கியத்தில்தான். இவரது எழுத்தில் மனித வாழ்க்கை யின்பால் பரிவு வெளிப்படுகிறது. வெளிப்புற வாழ்க்கையைவிட அகவயமான தேடலிலேயே இவருக்கு ஆர்வம் அதிகம். மனத்தின் ஆழத்தில் நுழைய விரும்புகிறார் இவர். சரத் நினைவுப் பரிசு (1955), ரவீந்திரர் நினைவுப் பரிசு(1958), சாகித்ய அகாதமிப் பரிசு (1967) பெற்றவர். ‘பத்மஸ்ரீ’ விருதும் பெற்றார்.
அன்னதா சங்கர் ராய் (1904 – 2002)

பிறந்தது ஒரிஸ்ஸாவிலுள்ள டெங்கானலில். 1927ஆம் ஆண்டில் ஐ.சி.எஸ்.ஸில் சேர்ந்து 1951ஆம் ஆண்டில் அதிலிருந்து விலகினார். 1927 முதல் 1929 வரை இங்கிலாந்தில் வசித்தார். 1957-ல் ஜப்பான் பயணம், 1963-ல் மேற்கு ஜெர்மனி, இங்கிலாந்து பயணம். 1962-ல் சாகித்திய அகாதமிப் பரிசு பெற்றார். பயண நூல் ‘பத்தேபிரவாஸே’ (1931) இவருக்குப் புகழ் சேர்த்தது. இலக்கியத்தின் பலதுறைகளிலும் சிறந்த படைப்பாளி. முக்கிய நாவல்கள் ‘சத்ய சத்ய’ (1932 – 42) ஆறு பாகங்கள்; ‘ரத்னா ஓ ஸ்ரீமதி’ (1956 – 73) 3 பாகங்கள். 50 வருடங்களாகச் சிறுவர்களுக்காகக் கதை எழுதி வருகிறார். இவருடைய ‘சடா’ எனப்படும் எதுகைப் பாடல்கள் புகழ் பெற்றவை. இவருடைய சிறுகதைத் தொகுப்புகள் இரண்டு கல்ப (1960), கதா (1970) கதையின் உருவத்தின் பல்வேறு சாத்தியக் கூறுகள், உள்ளடக்கம் இரண்டிலும் அக்கறை கொண்டவர். நிகழ்ச்சிகளுக்கே முக்கியத்துவமளித்துக் கதை எழுதுவதில் விருப்பமில்லை. கதைகளில் அவர் காட்ட விரும்புவது உண்மையின் தேடல். இவருடைய படைப்புகளை இரண்டு கால கட்டங்களாகப் பிரிக்கலாம். முதல் கட்டம் 1930-1956. இரண்டாவது கட்டம் 1959லிருந்து தொடங்கியது. இந்த இரண்டாவது கட்டத்தின் முதல் கதை மீன் பியாசி. முதல் கட்டத்தில் வெளிப்புற வாழ்க்கையின் உண்மை நிலையை ஆராய்ந்தார். இரண்டாவது கட்டத்தில் உட்புற வாழ்க்கையை ஆராய்கிறார். தொடக்க காலத்தில் ஒரியா, வங்காளீ, ஆங்கிலம் இம்மூன்று மொழிகளிலும் எழுதினார். இப்போது ஆங்கிலத்தில் மட்டும் எழுதிகிறார். இவர் பல பரிசுகளும் விருதுகளும் பெற்றவர். சாகித்திய அகாதமியின் ஃபெலோ. வங்காளி அகாதமியின் தலைவர். கல்கத்தாவில் வசித்தபடியே முழு நேர இலக்கியப் பணி செய்பவர்.
சதிநாத் பாதுரி (1906-1965)

பீகாரின் பூர்ணியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். வெகுகாலம் அரசியலில் ஈடுபட்டிருந்தார். பீகார் காங்கிரஸ் வட்டாரத்தில் அறிமுகமானவர். ஆகஸ்ட் இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். இந்தச் சிறை வாழ்க்கையை கருவாகக் கொண்டு முதல் நாவல் ஜாகரி 1943 எழுதினார். இந்த நாவல் இவருக்குப் புகழ் கொணர்ந்தது. மேற்கு வங்க அரசின் ரவீந்திரர் நினைவுப் பரிசு தொடங்கப்பட்டபோது முதல் பரிசு இந்த நாவலுக்கே கிடைத்தது. சிறுகதை, நாவல், கட்டுரை எழுதுவதில் தேர்ந்தவர். இவருடைய சக்தி பிரமண் காஹானி ஓர் அசாதாரணப் படைப்பு. உள்ளத்தில் ஆழத்தில் அனாயசமாகப் பயணிக்கிறார். மனித உள்ளத்தின் மிகநுண்ணிய பிரச்சினைகளை ஈவிரக்கமின்றி ஆய்வதில் திறன்மிக்க சதிநாத் எழுத்தாளர்களின் எழுத்தாளர். இவருடைய டோடாயி சரித் மானஸ் (இரண்டு பாகங்கள்) இந்திய நாவல் வரலாற்றில் இணையற்றது. இவர் புகழ் பெற்ற இந்தி எழுத்தாளர் ஃபணிசுவர் நாத் ரேணுவின் இலக்கிய ஆசான்.
ஆஷா பூர்ணா தேவி (1904 – 1995)

மனித உள்ளத்தின் இரகசியங்களை வெளிக் கொணர்வதில் அரிய திறனுள்ளவர். மனித வாழ்க்கையிடம் எல்லையற்ற பரிவு கொண்டவர். எளிய, சாதாரண வாழ்க்கையில் திரைமறைவில் உறைந்துள்ள நுண்ணிய விசித்திரங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் அசாதாரணத் திறமை இவருக்கு உண்டு. வங்க சமூகத்தையும் குடும்ப வாழ்க்கையையும் திறம்படச் சித்தரித்துள்ளார். லீலா பரிசு, ரவீந்திரர் நினைவுப் பரிசு (1966) சரத் நினைவுப் பரிசு (1985) பெற்றவர். இவருடைய பல நூல்கள் திரைப்படமாக்கப் பட்டுள்ளன.
சுபோத் கோஷ் (1910 – 1980)

அசாதாரணத் திறன் வாய்ந்த எழுத்தாளர். கதை, நாவல், கட்டுரை படைப்பதில் தேர்ந்தவர். பலதுறைகளிலும் ஈடுபாடு கொண்டவர். இவர்து வாழ்க்கையின் முதற்பகுதி சோட்டா நாக்பூர்ப் பகுதியில் கழிந்தது. இந்தப் பிரதேசமே இவருடைய பலபடைப்புகளின் பின்புலமாகும். இதற்குச் சிறந்த உதாரணம் இவருடைய நாவல் சகதியா. இவருடைய படைப்புகளில் பல்வகை அனுபவச் செறிவோடு கலைத் தேர்ச்சியும் அறிவுத் தேர்ச்சியும் இணைந்துள்ளன். பிறந்தது ஹஜாரபாகில். பழங்குடிகளின் வாழ்க்கையிலிருந்து ராணுவ வாழ்க்கை, மானிட இயலிலிருந்து மென்கலைகள் – எல்லாவற்றிலும் அனாய்சமாக உலவுகிறார். மனிதமனதின் புதைமணலின் இரகசியத்தைக் கண்டுபிடிப்பதில் தேர்ந்தவர்.
ஜோதிரிந்திர நந்தி (1912 – 1982)

இரண்டாவது உலகப்போருக்குப் பிற்பட்ட நடுத்தர, கீழ் மட்டத்து மக்களின் வாழ்க்கையைச் சித்திரிப்பதில் தேர்ந்தவர். சிந்தனைச் செல்வரான இந்த எழுத்தாளர் உள்ளத்தின் உணர்ச்சிகளை ஆராய்வதில் தனித்தன்மையைக் கையாள்கின்றார். இவருடைய மொழி நடையும் தனித்தன்மை வாய்ந்தது. உணர்ச்சிப் போராட்டங்களைச் சித்திரிப்பதில் திறன் வாய்ந்தவர். இவருடைய கதைகள், நாவல்களில் சமகால சமூகத்தின் தவறுகள் மட்டுமின்றி, மனித வாழ்க்கையில் இயற்கையின் அழுத்தமான தாக்கமும் இடம் பெறுகிறது. இந்த விஷயத்திலும் தனித்தன்மை வாய்ந்தவர் இவர்.
நரேந்திரநாத் மித்ரா (1916 – 1975)

குறைவாகப் பேசுபவர், இனிமையாகப் பேசுபவர். இவருடைய கதைகள், நாவல்களும் ஒரு வகையில் உரையாடல்களே. நடுத்தர வாழ்க்கையின் தேர்ந்த ஓவியர். அறியவொண்ணாத மனித மனதின் இரகசியங்களையும் இதயத்தின் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதில் இவரது கூர்மையான நோக்கு தெரிகிறது. நம்மிடையே மிகச்சிறந்த சிறுகதைகளை அதிக எண்ணிக்கையில் நரேந்திரநாத் எழுதியிருக்கிறார் என்று பல எழுத்தாளர்கள் சொல்லுவார்கள். கதையைவிட வடிவமைப்பிலும் பாத்திரப் படைப்பிலும் இவரது அனாயாசத் திறமி கண்கூடு. கல்கத்தாவில் செய்திப் பத்திரிகையொன்றில் பணியாற்றினார். ஃப்ரீத்பூரில் பிறந்தவர்.
நாராயண் கங்கோபாத்தியாய் (1918 – 1970)

நரேந்திர நாத்தின் சக மாணவர். இருவரும் ஒரே சமயத்தில் இலக்கியப் பணியைத் தொடங்கினர். நாராயண் கங்கோபாத்தியாயின் உண்மைப் பெயர் தாரக்நாத் கங்கோபாத்தியாய், பிறந்தது தினாஜ்பூரில். கல்கத்தா பல்கலைக் கழகத்தில் வங்காளிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், திரைக்கதை, கட்டுரை, சிறுவர் இலக்கியம், பாடல், செய்திப் பத்திரிகைக்கான கட்டுரை ஆகிய பலதுறைப் படைப்பிலும் தேர்ந்தவர். முதல் நாவல் உபநிவேஷ் (1944) மூலம் புகழ் பெற்றார். வெளியுலகம், மன உலகம் இரண்டுமே இவருடைய படைப்புகளில் இணைந்துள்ளன. இவர் ரொமாண்டிக் எழுத்தாளர். கூடவே நடப்பியல் எழுத்தாளருங்கூட கவிதைத்தன்மையும் வெளிப்பாட்டுச் செறிவும் நிறைந்த மொழியில் இவர் தம் கற்பனையுலகைப் படைக்கிறார். மனிதனோடு இயற்கையும் இவருடைய படைப்புகளில் இடம் பெறுகிறது. ஈவிரக்கமின்றி சமூகத்தைப் பகுத்து ஆராய்வதோடு ரொமாண்டிக் மனப்போக்கும் இயற்கையில் காதலும் கொண்டவர்.
சந்தோஷ் குமார் கோஷ் (1920 – 1985)

இவர் நரேந்திரனாத் மித் ரா, நாராயண் கங்கோபாத்தியாய் ஆகியோருடன் இலக்கிய உலகில் நுழைந்தார். பிறந்தது ஃப்ரீத்பூரில். வாலிபத்தின் பின்பகுதி முதல் கல்கத்தாவாசி. எப்போதும் நகர வாழ்க்கையையே சித்திரிக்கிறார். கிராம வாழ்க்கை பற்றி எழுதுவதில்லை. கதை, நாவல், நாடகம், கவிதை, கட்டுரை படைப்பதில் சிறந்தவர். தேர்ந்த மொழிச் சிற்பி. இவருடைய கதையில் வடிவத்துக்கு முக்கிய இடமுண்டு. கதை சொல்லும் முறை முக்கியமென்று கருதுகிறார். கூர்மையான, பண்பட்ட, சற்றுக் கேலி கலந்த மொழியில் இதயத்தின் மிக நுண்ணிய உணர்வுகளையும் வெளிப்படுத்தும் அசாதரணத் திறமை படைத்தவர். இவர் வாழ்க்கையை நேசிப்பவர். இந்த நேசத்தில் ஓரளவு வேதனையும் நம்பிக்கையின்மையும் கலந்துள்ளன. தாம் வாழும் காலம், கையாளும் கலை இவையிரண்டிலும் அக்கறை கொண்டவர். சிறிது காலம் டில்லியில் வசித்தார். கல்கத்தாவின் புகழ்பெற்ற பத்திரிகையொன்றில் பணிபுரிந்தார்.
சமரேஷ் பாசு ( 1921 – 1983)

நரேந்திரநாத், நாராயண், சந்தோஷ் குமார் – ஆகியோருடன் இணைத்துக் குறிப்பிடத்தக்க பெயர் சமரேஷ் பாசு. இவர் நகரத்தின் எழுத்தாளர் அல்லர். வங்க மண்ணுடன் நெருங்கிய கலைஞர். வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டவர். பிறந்தது டாக்காவில். தம் வாழ்க்கையில் பல்வேறு வேலைகள் பார்த்தவர். இறுதியில் இலக்கியத்தையே முழுநேரப் பணியாகக் கொண்டார். மனித வாழ்க்கை பற்றி அறிய இவரது ஆவலும், அவ்வாழ்க்கையிடம் பரிவும் எல்லையற்றவை. இது அவரது படைப்புகளில் தெரிகிறது. மனிதனைப்பற்றி மட்டுமின்றி இயற்கையைப் பற்றியும் எழுதுகிறார். கால்கூட் என்ற பெயரில் பயண அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட நாவல்கள் எழுதுகிறார். பாடல் இயற்றுகிறார், தாமும் பாடுவார். இவரிடம் மாணிக் பந்தோபாத்தியாய், தாராசங்கர் பந்தோபாத்தியாய் ஆகியோரின் தாக்கமுண்டு. எனினும் இவர் தமக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டுள்ளார். இவர்தம் சொந்த அனுபவங்கள் மூலம் வாழ்க்கையை உணர்ந்திருக்கிறார். இந்த அனுபவத்தோடு இணைந்திருக்கிறது அழுத்தமான ஈடுபாடு.
பிமல் கர் (1921- 2003)

சிந்தனைச் செறிவுள்ள எழுத்தாளர். தமக்குரிய தனிப்பார்வையில் வாழ்க்கையைப் பார்க்கிறார். இளம்வயதில் மருத்துவம் படித்தார். ஆனால் இக்கல்வி முற்றுப் பெறவில்லை. பிற்காலத்தில் கதை, நாவல்களில் மருத்துவரின் பற்றற்ற பார்வையைக் கையாண்டார். வங்காளிக் கதையிலக்கியத்தில் புதிய நடையை அறிமுகப்படுத்தினார். அறிவும் சிந்தனையும் இவருடைய ஆயுதங்கள். உணர்ச்சியை இவர் ஒதிக்கிடவில்லை. ஆனால் ஒரு போதும் உணர்ச்சி வசப்படவில்லை. சிறு வயது ஹஜாரி பாகில் கழிந்தது. பிறந்தது கல்கத்தாவுக்கருகில் 24 பர்கானா மாவட்டத்தில் வாழ்க்கைக்கு அடுத்தாற்போலவே சாவையும் பார்த்தார். இவருடைய படைப்புகளின் வாழ்க்கையுணர்வும் சாவின் உணர்வும் இணைந்து இடம் பெற்றுள்ளன. இவருடைய பல கதைகள் திரைப்படமாக்கப் பட்டுள்ளன.
ரமாப்த சௌதுரி (1922 – 2018)

தற்கால வங்காளி இலக்கியத்தின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் எழுதத் தொடங்கினார். பிறந்தது கரக்பூரில். சிறுதுகாலம் சோட்டா நாக்பூர் பகுதியில் பணிபுரிந்தார். பல்வேறு பயணங்கள் செய்தபின் இப்போது கல்கத்தாவின் தினசரிப் பத்திரிகை ஒன்றின் ஒரு துறைக்கு ஆசிரியர். ஒரு சமயம் காட்டைப் பின்புலமாகக் கொண்டு பல சிறு கதைகள் எழுதியுள்ளார். இப்போது நகர வாழ்க்கையே இவரது படைப்புகளில் இடம் பெறுகிறது. இவரது கதைகள் பல திரைப்படமாக்கப் பட்டுள்ளன. இவரது மொழி பண்பட்டது. நளினம் நிறைந்தது. இவர்து கதைகளின் உள்ளடக்கத்தில் பல்வேறு தன்மைகள் உண்டு. எழுதும் முறையிலும் இவர் தனித்தன்மையை வெளிப்படுத்துகிறார். வாழ்க்கையின் பல துறைகளில் ஆழ்ந்தவர். ரவீந்திரா நினைவுப் பரிசும் (1971) சாகித்திய அகாதமிப் பரிசும் (1988) பெற்றவர்.
சையது முஸ்தபா சிராஜ் (1930 – 2012)

நாட்டு விடுதலைக்குப் பிற்காலத்து இளம் எழுத்தாளர்களில் ஒருவர். மூர்ஸிதாபாத் மாவட்டக் கிராமமொன்றில் பிறந்தவர். வாழ்க்கையில் பல்வேறு அனுபவங்களைப் பெற்றவர். மூர்ஷிதாபாதில் நாடோடி நாடகக் குழுவில் பாடல்கள் எழுதினார் (1950-1958), அதற்குமுன் பத்திரிகைகளில் பணிபுரிந்தார் (1949-1950). இப்போது கல்கத்தா தினசரியொன்றில் பணியாற்றுகிறார். தாராசங்கரைப் பின்பற்றி எழுதத் தொடங்கிப் பிறகு தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டார். முதல் கதை தேஷ் பத்திரிகையில் வெளிவந்த காதலும் திரும்பிவரும் ரயிலும். முக்கியமாக எழுத்தின் மூலமே வாழ்க்கை நடத்துகிறார். இவருடைய படைப்புகளில் கிராம மக்களும் நகர மக்களும் இடம் பெறுகின்றனர். சமூகப் பிரச்சினைகளில் தீவிர அக்கறையுள்ளவர். நிறைய எழுதிகிறார்.
மதி நந்தி (1931 – 2010)

வடக்குக் கல்கத்தாவில் ஒரு மேற்குடியில் பிறந்தார். தானியங்கிப் பொறியிலில் டிப்ளமோ பெற்றவர். அரசுப் போக்குவரத்துத் துறையில் இரண்டாண்டுப் பயிற்சிக்குப்பின் பி.ஏ பாஸ் செய்து பத்திரிகைத் துறையில் பணி செய்யத் தொடங்கினார். இப்போது கல்கத்தாவின் தினசரியொன்றில் விளையாட்டுப் பகுதியின் ஆசிரியர். கிரிக்கெட் பிரியர். கிர்க்கெட் விளையாட்டைக் கருவாகக் கொண்டு மூன்று நூல்கள் எழுதியுள்ளார். தேஷ் பத்திரிகையில் வெளியான சாத் (1956) கதை மூலம் வாசகர் கவனத்தை ஈர்த்தார். அனாவசிய விவரங்களற்ற, நேரடியான முறையில் கதை சொல்கிறார். யதார்த்த மண்ணில் உறுதியாக நின்றுகொண்டு மனிதன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார். நடுத்தர, கீழ் மட்டத்து மக்களின் வாழ்க்கையைத் திறம்படச் சித்திரிப்பவர்.
சுநீல் கங்கோபாத்தியாய் (1934 – 2012)

பிறப்பு ஃப்ரீத்பூரில். கவி கதாசிரியர், தேஷ் பத்திரிகையில் வெளியான ஏக்டி கவிதா என்ற கவிதை மூலம் அறிமுகமானவர். ஜனங்களால் அதிகம் நேசிக்கப்படுபவர். கவி சுநீலா, கதாசிரியர் சுநீலா என்று சொல்வது கடினம். பலவகைப் பணிகளுக்குப்பின் தற்போது கல்கத்தாப் பத்திரிகையொன்றில் பணி புரிகிறார். 1960-ம் ஆண்டு அமெரிக்கப் பயணம் செய்தார். நிறைய எழுதிகிறார். சிலகதைகள் திரைப்படமாக்கப் பட்டுள்ளன். பரிச்சயமான நடுத்தர மக்களின் வாழ்க்கையின் பலதிறப்பட்ட உணர்ச்சிகளையும் அனுபவங்களையும் திறமையாகவும் மனதைக் கவரும் முறையில் சித்திரிக்கிறார். மொழியில் நளினம், சொல்லும் முறையில் அழகு, கதையின் ஈர்ப்புத்திறன் – இவையெல்லாம் இவரை மக்களின் அபிமான எழுத்தாளராச் செய்துள்ளன.
பிரபுல்ல ராய் (1934)

பிறந்தது டாக்காவில். வட்டார வாழ்க்கையைச் சித்திரிக்கும் நாவல் எழுதி இலக்கியப் பணியைத் தொடங்கினார். தேஷ்-இல் வெளியான நாவல் பூர்வ பார்வத்ய மூலம் அறிமுகம் பெற்றார். இவரது பெரும் படைப்பான கேயா பாத்கிரார் நௌகா (இரண்டு பாகங்கள்) தற்கால வங்காளி வாழ்க்கையில்ன் வரலாறாகும். தற்போது ஒரு கல்கத்தாப் பத்திரிகையின் ஒரு பகுதிக்கு ஆசிரியர். இவர்து சில கதைகள் திரைப்படமாக்கப் பட்டுள்ளன. மனப்பூர்வமான ஈடுபாட்டோடு கவர்ச்சியான முறையில் கதைகள் எழுதுகிறார். கதையின் அமைப்பு, பாத்திரப் படைப்பு இரண்டிலும் திறமை பெற்றவர்.
சீர்ஷேந்து முகோபாத்தியாய் (1935)

கிழக்கு வங்காளத்தில் மைமன்சிங்கில் பிறந்தவர். ஆசிரியராகப் பணிபுரிந்தார். 1959-ஆம் ஆண்டு தேஷ் பத்திரிகையில் ஜலதரங்க என்ற சிறுகதை மூலம் புகழ் பெற்றார். இவருடைய கதைகளிலும் நாவல்களிலும் உண்மை வாழ்வுக்கும் ஆழ் மனத்து உணர்ச்சிகளூக்குமிடையே இழுபரிப் போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இவருடைய கதைகளில் நிலையற்ற தன்மையில்லை. நிலையான நம்பிக்கை இருக்கிறது. சுயசரிதைப் பாணியில் எழுதும் கதைகளில் இவர் உள் மன உலகின் ஆழத்தில் சத்தியத்தைத் தேடுகிறார்.
தேபேஷ் ராய் (1936 – 2020)

வங்காளி மொழியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அறுபதுகளில் வங்காளிச் சிறுகதை இயக்கத்தின் தலைமை வகித்த எழுத்தாளர்களில் ஒருவர். கதை சொல்லும் முறையிலும் பயன்படுத்தும் மொழியிலும் மிகவும் அக்கறை காட்டுபவர். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு தேபேஷ் ராயில் சிறுகதைகள் 1969-ஆம் ஆண்டில் வெளியாயிற்று. 1972-ஆம் ஆண்டில் இவரது முதல் நாவல் யயாதி வெளிவந்தது. தேஷ் பத்திரிகையில் வெளியான ஹாட்காட்டா கதைமூலம் வாசகரின் கவனத்தை ஈர்த்தார். நூறுக்கு மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார்.
வங்க நாவல்கள்: முனைவர். இரா. காஞ்சனா
தமிழ் நாவல்களின் போக்கை மாற்றி அமைத்த பெருமை வங்க நாவல்களுக்கு உண்டு. வங்கக் கதைகளை மொழி பெயர்த்து தொடர்கதைகளாகவும், மொழி பெயர்ப்பு நாவல்களாகவும் அன்றைய இதழ்கள், வாரப் பத்திரிகைகள் வெளியிட்டன. 1930-க்குப் பின்னரே வங்க நாவல்கள் தமிழாக்கம் செய்யப்பட்டன எனினும் பக்கிம் சந்திர சட்டோபாத்யாவின் “ஆனந்தமடம்” எனும் நாவலை ம. குப்புசாமி ஐயர் (மகேச குமார சர்மா என்ற புனைபெயரில்) முதலில் மொழி பெயர்த்தார். இதே நாவலின் ஆங்கிலமொழி பெயர்ப்பிலிருந்து தமிழாக்கித் தந்தார் திருச்சிற்றம்பலம் பிள்ளை (சிட்டி – சிவபாதசுந்தரம் – ப. 153) பின்னர் த.நா. குமாரசாமியும், கு.ப. ராஜகோபாலும் இந்த நாவலை மொழிபெயர்த்துள்ளனர்.
வங்க நாவல்கள் மொழி பெயர்ப்பாக வந்த பொழுது வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டமையான் தொடர்ந்து சரத்சந்திரர், தாகூர், விபூதிபூஷன் பானர்ஜி முதலியோர் நாவல்களும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டன. த.நா. குமாரசாமி, தா. சேனாதிபதி, டி.எஸ். பார்த்தசாரதி, வி.எஸ். வெங்கடேசன், சரஸ்வதி ராம்நாத், குமுதினி போன்றோர் இம்மொழி பெயர்ப்பில் ஈடுபட்டவர்கள்.

தமிழில் பெயர்க்கப்பட்ட வங்க நூல்கள்
பக்கிம் சந்திரரின் ‘பரிமளா’ நாவலை டி.வி. கிருஷ்ணசாமி சாஸ்த்திரி (1907) யும் ‘சந்திரசேகரன்’ நாவலை ம. குப்புசாமி ஐயரும் (1908) ‘துர்கேச நந்தினி’ யை டி.வி. வெங்கடரதாசாரியும், (பின்னர் கு.ப.ரா.வும்) ‘ஜோடி மோதிரங்களை’ வ.ரா.வும் ஆனந்தமடம், விஷ விருஷம் ஆகிய தேசிய உணர்வு கொண்ட நாவல்களை த.நா. குமாரசாமியும் மொழி பெயர்த்தனர். பக்கிம் சந்திரரின் தேசிய உணர்வு கொண்ட நாவல்களின் மொழி பெயர்ப்புகள், அத்தகைய தேசிய உணர்வுடன் கூடிய தமிழ் நாவல்கள் தோன்றக் காரணம் ஆயின.
தாகூரின் படைப்புகள்: தாகூரின் படைப்புகள் அனைத்தையும் த.நா. குமாரசாமி தமிழில் அளித்துள்ளார். இத்துடன் த.நா.கு. பாலாயி சந்த், முகோபாத்யாயா, தாராசங்கர் பானர்ஜி சந்தோஷ்குமார் போஷ், ராகுல்தாஸ் பானர்ஜி போன்ற வங்கப் படைப்பாளிகளின் படைப்புகளின் படைப்புகளையும் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
சரத்சந்திரரின் படைப்புகள்: சரத்சந்திர சட்டோபாத்யாயாவின் 42 படைப்புகளையும் தமிழில் பெயர்த்து அளித்த பெருமை அ.கி. ஜெயராமனுக்கு உண்டு. சண்முகசுந்தரம் சரத்சந்திரரின் படைப்புகளைத் தமிழில் பெயர்த்ததுடன் பக்கிம் சந்திரர், ரமேஷ் சந்திரதத், தாராசங்கர் பேனர்ஜி போன்றோரின் நாவல்களையும் தமிழில் பெயர்த்துள்ளார்.

வங்க நாவல் மொழி பெயர்ப்பின் விளைவுகள்
தமிழில் வந்த வங்க நாவல்கள் தமிழில் ஆழமான தடங்களைப் பதித்துள்ளன. ஏற்பு என்ற நிலையில் காணும் போது, இவ்வாறு மொழி பெயர்ப்புகள் தமிழில் வரவேற்றுப் படித்தமையைக் கி.வா.ஜ. குறிப்பிடுகிறார்:
“ஒரு பத்திரிகையில் ரவீந்திரர் நாவலும், வேறொரு பத்திரிகையில் பக்கிம் சந்திரரின் நாவலும், மற்றொன்றில் சரத் சந்திரர் நாவலும் போட்டி போட்டுக் கொண்டு தொடர்கதையாக வந்தன. அவற்றை வாசகர்கள் ஆர்வத்துடன் வாசித்து இன்புற்றார்கள்.” இது ஏற்பு என்ற நிலையில் மொழி பெயர்ப்பின் விளைவைச் சுட்டுகிறது. இத்தகைய வாசகர் ஏற்புக்கு என்ன காரணம் என விளக்குகிறார் செ. யோகநாதன் (வங்காள நாவல்கள் தமிழ் நாவல்களில் ஏற்படுத்திய தாக்கம் சிந்தனை, மலர் 3.ப-1)
வங்கப் பண்பாடு, நாகரிகம், உணவுப் பழக்க வழக்கங்கள் போன்ற தமிழ்ப்பண்பாட்டுடன் பெருமளவு ஒத்துப்போவதையே முதற்காரணமாகச் சுட்டும் இவர், கூட்டுக் குடும்பம், தகப்பனே குடும்பத்தின் தலைவனாக இருத்தல், திருமணம், சாவு போன்ற நிகழ்வுகளில் பின்பற்றப்படும் வைதிகச் சடங்குகள், உணவு முறை ஆகியன ஒன்றுபட்டு இருப்பதும், பொதுவான உணர்வு பூர்வமான மனப்பான்மைகள் ஒன்று போல இருப்பதும் காரணங்கள் ஆகும் என்கிறார்.
வங்க நாவல்களில் மிகை உணர்ச்சி, புனவியல்தன்மை, மத்தியதர வர்க்கத்தினரின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகளைப் பேசுவது, வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு முடிவுகளைச் சுட்டுவது, கதைக்கு முக்கியத்துவம் அளிப்பது, போன்ற கூறுகள் தமிழ்வாசகர்களுக்கு ஏற்றதாக இருந்ததாகவும் விளக்குகிறார் செ. யோகராஜா.
ஆரம்பகாலத் தமிழ் நாவல்களான பத்மாவதி சரித்திரம், கமலம்பாள் சரித்திரம், தீனதயாளு போன்றன ஓரளவு யதார்த்தமும் ஓரளவு புனைவியல் போக்கும் கொண்டிருப்பன. ஒரே மாதிரியான மர்ம நாவல்களின் வரவும் வாசர்களிடம் சோர்வும், மனப்பான்மையை ஏற்படுத்திய கால கட்டத்தில் வங்க நாவல்களின் பெயர்ப்புகள் வர அவை பெரிதும் ஏற்கப்பட்டன. காரணம் அவற்றின் உள்ளடக்கம், தமிழ் வாசகனுக்கும் ஏற்றதாக, அவன் தன்னையும் தன் பிரச்சினைகளையும் நாவலில் வரும் பாத்திரத்துடனும் நிகழ்வுடனும் ஏற்றிக் காண்பதற்கு ஏற்ப அமைந்திருந்தது எனலாம்.
நாவல் படைப்பாக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு கல்கியவர்கள் ஆனந்தவிகடனில் ஆசிரியராக இருந்தபோது முதல் நாவல் போட்டியை அறிவித்தார். அதற்கு வந்த கதைகளைக் கண்டு மனம் நொந்த கல்கி, ஏன் இவ்வாறு ஒரு போட்டியை அறிவித்தோம் என்று மனம் புழுங்கினாராம்.
“காதலர்கள் – கள்ளக் காதலன் – ஸத்ரீ சோரங்கள், கொலைகள், கனவுகள், துப்புத்துலக்கங்கள், தூக்கு மேடைகள், சித்திரவதைகள் – சிருங்காரப் பயங்கரங்கள் சிங்கத்தின் உருவத்தில் மனிதன் பிறத்தல் பிரேதங்கள் பிழைத்து எழுதல் பிழைத்திருப்பவர் பிரேதமாதல் – ஆகிய அத்துஷ்டிகரமான விஷயங்கள் குறித்து”. கதைகள் வந்தமை கண்டு வருந்திய நிலை அக்காலகட்டத்து நாவலாசிரியர் தரம், வாசக ரசனை ஆகியவையும் கூட வளராத நிலையையே சுட்டுகிறது. நாவல் இலக்கிய வகை வேறூண்றாத நிலையில் பத்திரிகைகள் போட்டி வைத்து வளர்க்க எண்ணியதையும் இது சுட்டுகிறது.
இப்போக்கிலிருந்து மாற்றி, வாசகர்ளின் ரசிகத்தன்மையும், நாவலாசிரியர்களின் படைப்பாக்கத் தன்மையையும் மாற்றியமைத்தவை வங்க மொழி பெயர்ப்புகள்.
வங்க மொழி பெயர்ப்புகள் பரவலாகக் கிடைக்க ஆரம்பித்த பிறகு அவற்றின் தாக்கத்தைப் தமிழ் படைப்பாளர்களிடம் காணமுடிந்தது.
1. இராமானுஜூலு நாயுடு எழுதிய பரிமளா (1923) என்ற தமிழ் நாவல் முழுக்க முழுக்க வங்காள நாவலை முன் மாதிரியாகக் கொண்டது. (செ. யோகராஜா, ப.3) பெயர் கூட பக்கிம் சந்திரர் எழுதிய ‘பரிமளா’ நாவலை நினைவு படுத்துவது.
2. வங்காள நாவல்களில் வரும் பாத்திரப் படைப்புகளை முன்மாதிரியாகக் கொண்டு பல தமிழ்க் கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டன.
பெரிய இடத்துப் பிள்ளைகள், கல்வியறிவு மிக்கோர், தம் விருப்பப்படி நடப்பவர்கள் போன்ற அன்றாட வாழ்வில் காணும் பாத்திரங்களைக் கதாநாயகர்களாகப் படைத்தார்கள். கதாநாயகனைச் சுற்றியுள்ள பிற பாத்திரங்கள், உண்மையான, ஆழமான காதல், காதலுக்காக தியாகம் செய்தல், குடும்ப உறவுகளிடையே நெருக்கமான பாசம் போன்ற உணர்வுகளைக் கொண்டவர்களாகப் படைக்கப்பட்டனர். யதார்த்த வாதமும், புனைவியலில் காணப்படும் மிகையுணர்வும் கொண்ட கதைகளாக இவை விளங்கின. சரத்சந்திரரின் இத்தகைய கதைகள் ஏற்கப்பட்டதன் விளைவே இது எனலாம். அகிலன் – பாவை விளக்கு ஜெகச்சிற்பியன் – சொர்க்கத்தின் நிழல் போன்ற படைப்புகளை தாக்கத்தின் விளைவுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகத் தரலாம்.
3. சரத் சந்திரரின் குடும்பப்பாங்கான கதைகளும் அதிகம் ஏற்கப்பட்டன. வங்கத்தில் பகல்பூர் பாணிக் கதைக்கு குழு என்ற ஒன்று உண்டு. இவர்களுடைய பெரும்பாலான படைப்புகளில் அன்றாடவாழ்வில் சாதாரண மக்களின் நடைமுறை வாழ்வில் காணலாகும் நிகழ்வுகளும், உணர்வுகளும், சூழல்களும் அப்படியே நுணுக்கமாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கும். காதல், திருமணம், குடும்பம் – உறவுகள் – சிக்கல்கள் இன்பதுன்பங்கள் எனக்கு குடும்பச் சூழலை அடிப்படையாகக் கொண்டு அவை அமைந்திருந்தன. சரச்சந்திரரின் ‘கிராமசமாஜம்’ (கோஷால் வம்சக் குடும்பம் பற்றியது) ‘தூய உள்ளம்’ (பவானிப்பர் சட்டர்ஜி குடும்பத்தைப் பற்றியது) போன்ற நாவல்கள் இத்தகையன.
லஷ்மி, பி.வி.ஆர் போன்றோர் தமிழில் குடும்ப உறவுகளை, ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் குடும்ப நாவல்களை எழுதினார். இது பற்றிக் குறிப்பிடும். செ. யோகராசா, “(வங்க) குடும்ப நாவல்களும் மொழி பெயர்ப்பு மூலம் வந்தடைந்து காலப் போக்கில் தமிழில் குடும்ப நாவல் வகை தோன்றுவதற்குக் காலாய் அமைந்தன.” (ப.4) என்றார்.
4. வங்க நாவலின் கதையமைப்பு, கதைப்பின்னலில் உள்ள கட்டுக்கோப்பு, பாத்திரப்படைப்பு, நிகழ்ச்சிப் பின்னல்கள், உத்திகள் ஆகியவையும் தாக்கத்தை ஏற்படுத்தின.
இவ்வாறான தாக்கத்திற்கு முதன்மையான காரணம் மொழி பெயர்ப்பு ஆசிரியர்களில் பலர் படைப்பாசிரியர்களாகவும் இருந்தமையே. ஆர். சண்முக சுந்தரம் 120-க்கும் மேற்பட்ட வங்க நாவல்களை மொழி பெயர்த்துள்ளார். இவரிடம் வங்கத்தின் தாக்கம் இருப்பது இயல்பானது. தவிர்க்க இயலாதது. அவரே ஒரு பேட்டியில் “சரத் சந்திரரின் படைப்புகளை மொழி பெயர்த்த போது, அவரது பாத்திர சிருஷ்டி என்னுள் பாதித்தது. அவரிடமிருந்து கற்றுக்கொண்ட கலை நுட்பங்கள் நான் புதிது புதிதாகச் சோதனை செய்ய உதவின” என்று கூறியுள்ளார்.
5. நிகழ்ச்சிப் பின்னல் சிறப்பு: வங்க நாவல்கள் பெரும்பாலும் பிரபலம் அடைந்த பத்திரிகைகளில் இதழ்களில் தொடர்கதைகளாக வெளிவந்தன. எனவே வாசகரிடம் ஆர்வமூட்ட விறுவிறுப்பாக அமைய, சம்பவங்களை அடுக்கடுக்காக அமைத்துப் பரபரப்பை ஊட்டினார்.
இந்த நிகழ்ச்சிப் பின்னல் உத்தியை கல்கி தன் தியாகபூமி, கள்வனின் காதலி, மகுடபதி போன்ற பல நாவல்களில் பின்பற்றியுள்ளார். நிகழ்ச்சிகள் பலவற்றை அடுத்தடுத்து கோர்வையாக – சாரம் குன்றாமல் விறுவிறுப்பாக அடுக்கிச் செல்வார் கல்கி.
6. பக்கிம்சந்திரர், சரத்சந்திரர் ஆகியோர் இருவரும் மிகச் சாதாரண கருப்பொருளை எடுத்துக்கொண்டு, படிக்கப்படிக்க ஆர்வமூட்டும் வகையில் எழுதுவதில் திறமை வாய்ந்தவர்கள். இதே பாணியைப் பின்பற்றிய கல்கி போன்றோர் நாவலைக் கையில் எடுத்தால் ஒரே மூச்சில் படித்து முடிக்கத் தூண்டுவதாக எழுதுவதில் வல்லமை பெற்றனர்.
7. வங்க நாவல்களில் பெண்மைக்கு உணர்வும் பெண்ணை மேம்படுத்தும் போக்கும் காணப்பட்டது. ஆர்.வி. தன் நாவல் முன்னுரையில், சரத்சந்திரர் நாவல் பற்றிக் குறிப்பிடுகையில், சரத்சந்திரர் குப்பையிலிருந்து தோன்றுவதானாலும் அதனிடமுள்ள உயர்ந்த பண்பை எடுத்து, வாசகர்கள் நினைவை விட்டு நீங்காமல் நிலைக்கச் செய்யும் கலை நுட்பம் பெற்றவர். விலை மகளிடத்தும் உயர்ந்த பண்புகளைக் கண்டறிந்து பெண் குலத்தையே உயர்த்திக் காட்டும் உன்னதமான சிற்பி. அவர் நாவல்களில் ஈடுபட்டிருந்த மனநிலையில் – அந்த எழுச்சியில் உந்தப்பட்டு உருவானது இந்தக் கதை” என்கிறார். (பெண் என்னும் பூ, முன்னுரை, வானதி பதிப்பகம் 1968)
8. தமிழ் நாவல்களில் பெண் பாத்திரங்கள் பெற்ற முதன்மைக்கும் வங்க மொழி பெயர்ப்புகளே காரணம் எனலாம். சரத்சந்திரரின் மாலதி, அனுபமா, மதனி முதலியோர் தமிழ் வாசகர்களின் மனதை விட்டு நீங்காத பாத்திரங்கள் பெண்களிடம் உயர்வான கண்ணோட்டத்தை உருவாக்கிய பாத்திரங்கள் இவை.
லட்சுமி, லட்சுமி சுப்பிரமணியம், கோமகள், அநுத்தமா போன்ற படைப்பாளிகளின் பெண் பாத்திரங்கள் அன்றைய குடும்பப் பெண் வாசகர்களின் மனதைக் கவர்ந்தவர்கள். இவ்வாறான தாக்கத்திற்குக் கலைமகளும் ஒரு விதத்தில் காரணமாயிற்று. ஏனெனில் அந்த கால கட்டத்தில் கலைமகளில் வங்க நாவல்களில் மொழி பெயர்ப்புகள் தொடர்கதையாக வெளிவந்தன.
இணையத்தில் வங்க எழுத்துகள் பற்றிய பதிவுகள்
- ‘வந்தே மாதரம்’ எழுதிய பங்கிம் சந்திர சட்டர்ஜி – ராஜி ரகுநாதன்
- நீலகண்டப்பறவையைத்தேடி – நோயல் நடேசன்
- சுநீல் கங்கோபாத்தியாய் எழுதிய “தன் வெளிப்பாடு”– கிருஷ்ண மூர்த்தி
- த. நா. குமாரஸ்வாமி – தெ. மதுசூதனன்
- என்றும் இருப்பவர்கள் – தினமணி – சா. கந்தசாமி
- சத்யஜித் ரே சொல்லித்தான் குழந்தைகள் புத்தகங்களை மொழிபெயர்க்கலானேன்! – வீ.பா.கணேசன் பேட்டி
- வங்காளப் படம் : மலைகளின் பாடல் – சுப்ரபாரதிமணியன்
- 2005ம் ஆண்டு வங்காளிகளின் படங்களை முன் வைத்து…– சுப்ரபாரதிமணியன்
- வங்காளிகளின் தேடல்கள் – by –சுப்ரபாரதிமணியன் (திரை மாத இதழ் ஏப்ரல் 2006)
- தாகூர் 150 – சுப்ரபாரதிமணியன்
- “துன்பத்தில் ஒரு பெண் இல்லை” – ரவீந்திரநாத் தாகூரின் கதைகள் சக்திவாய்ந்த பெண்களை சித்தரிக்கின்றன – ராஜ் தீபால பாண்டே
- கண்ணீரைப் பின்தொடர்தல் – ஜெயமோகன்
- வங்கத்தின் பெண்குரல்: அனிதா அக்னிஹோத்ரி – ஜெயமோகன்
- நேற்றைய புதுவெள்ளம் – ஜெயமோகன்
- சு.கிருஷ்ணமூர்த்தி– நரசய்யா
- அஞ்சலி : சு கிருஷ்ணமூர்த்தி – ஜெயமோகன்
- நீலகண்டப்பறவையைத் தேடி – ஜெயமோகன் (அதீன் பந்த்யோபாத்யாய . தமிழாக்கம் சு.கிருஷ்ணமூர்த்தி. நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு 1972)
- விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய’ வின் ‘பதேர் பாஞ்சாலி’ – ஜெயமோகன்
- மைத்ரேயிதேவியின் கொல்லப்படுவதில்லை – ஜெயமோகன்
- அஞ்சலி-மகாஸ்வேதா தேவி – ஜெயமோகன்
- நாடகங்கள் – ஜெயமோகன்
- தாகூர், நவீன இந்தியச் சிற்பியா? – ஜெயமோகன்
- தாகூரின் கோரா – ஜெயமோகன்
- தாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’ – ஜெயமோகன்
- ஆரோக்கியநிகேதனம் : ஜீவன் மஷாய் – ஈரோடு ரா. சந்திரசேகரன்
- ஆஷாபூர்ணாதேவி முதல்சபதம் – எம். ஏ. சுசீலா
- திருமணமாகாதவள் -சரத்சந்திரர் – தேவராஜ் விட்டலன்
- தேவதாஸ் – சரத் சந்திர சட்டோபாத்யாயா: பாஸ்கர் லக்ஷ்மன்
- Noi Chhoi- At Sixes And Sevens – Ashapurna Devi: ச. அனுக்ரஹா
- உபமன்யு சட்டர்ஜியின் English, August: அஜய்
- A Suitable Boy – Vikram Seth: பாலாஜி
- வங்காள நாவல்: நபநீதா தேவ் சென்னின் ஷீத் சஹாசிக் ஹேமந்தோலோக் (கூதிர்ப்பருவத்தை எதிர்நிற்றல்) – எஸ் சுரேஷ் (ராகா சுரேஷ்)
- THE JAPANESE WIFE -KUNAL BASU – பாலாஜி
- சரத்சந்திரர் கடிதம் – ஆபிதீன்
2 Replies to “தமிழில் வங்க எழுத்துகள்”