- தெய்வநல்லூர் கதைகள் – 1
- தெய்வநல்லூர் கதைகள் – 2
- தெய்வநல்லூர் கதைகள்- 3
- தெய்வநல்லூர் கதைகள் -4
- தெய்வநல்லூர் கதைகள் – 5
- தெய்வநல்லூர் கதைகள் – 6
- தெய்வநல்லூர் கதைகள் – 7
- தெய்வநல்லூர் கதைகள் -8
- தெய்வநல்லூர் கதைகள் – 9
- தெய்வநல்லூர் கதைகள் 10
- தெய்வநல்லூர் கதைகள் 11
- தெய்வநல்லூர் கதைகள் -12
- தெய்வநல்லூர் கதைகள் 13
- தெய்வநல்லூர் கதைகள் 14
- தெய்வநல்லூர் கதைகள்
- தெய்வநல்லூர் கதைகள் – 16
- தெய்வநல்லூர் கதைகள்
- சர்க்கரை கசக்குமா கசமாடா? தமிழ் வையுமா அடி மூடா?
- தெய்வநல்லூர் கதைகள் – 19
- தெய்வநல்லூர் கதைகள் – 20
- தெய்வநல்லூர் கதைகள் – 21
- தெய்வநல்லூர் கதைகள்
- தெய்வநல்லூர் கதைகள் 23
- எம்புட்டு நேரம்தான் குச்சிய வாய்க்குள்ளயே வச்சிருப்பீரு
- மொகரைல சவக்களை
- தெய்வநல்லூர் கதைகள் – 26
- தெய்வநல்லூர் கதைகள் -27
- தெய்வநல்லூர் கதைகள்- 28
- தெய்வநல்லூர் கதைகள்- 29
- தெய்வநல்லூர் கதைகள்- 30
- தெய்வநல்லூர் கதைகள்- 31
- தெய்வநல்லூர் கதைகள்- 32
- தெய்வநல்லூர் கதைகள்- 33
- தெய்வநல்லூர் கதைகள்-34
ஒன்பதாம் வகுப்பின் முழு ஆண்டுத் தேர்வு ஒரு சடங்கு போலவே நடந்து முடிந்தது. அந்த ஆண்டின் கோடை விடுமுறை பலப்பல மாற்றங்களை உள்ளடக்கியதாக அமைந்தது. நேரு பள்ளியில் எங்களுக்கு அமைந்த விடுமுறை போல மகிழத்தக்க நினைவுகளோடு கூடிய விடுமுறையாக ஒன்பதாம் வகுப்பின் கோடை விடுமுறை அமையவில்லை. பல காரணங்கள் உண்டென்றாலும் சிலவற்றை இங்கே பகிரலாம்.
முதலாவதாக, எங்கள் நண்பர்களில் சிலர் ஒன்பதாம் வகுப்போடு படிப்பை நிறுத்தும் முடிவிற்கு வந்தனர். மு மாரியப்பன், நியூஸ் சந்திரன், கு மாரியப்பன், ஈத்தக்குச்சி முருகன், கிடா கருப்பசாமி ஆகியோர் அப்பட்டியலில் முக்கியமானவர்கள். மதிய உணவு பள்ளியில் இல்லை என்பதால் மாலையில் வீடு சென்று உண்ணும்போது போதுமான உணவில்லை என்றும், வீட்டில் சமைக்கும் அளவே அவ்வளவுதான் என்பதை உணரும்போது பசியால் வயிறும், வேதனையால் நெஞ்சமும் வலிப்பதாக மு மாரியப்பன் சொன்னார் ( ஒரு சருவச்சட்டிக்குதாம்ல எங்கம்மா சோறு வடிக்கும். அதத்தான் நானு, அம்மா, அப்பா, தங்கச்சி எல்லாரும் சாப்புடணும். முன்னயாவது பள்ளிக்கூடத்துல மதியம் சாப்புடுவோம்னு இருக்கும். இப்ப அம்ம செல நாள்ள வெறும் சோத்துச்சட்டில தண்ணி ஊத்தி உப்பு போட்டு கலக்கி குடிச்சிட்டு படுக்கா. இதுக்கு முன்ன எத்தன நா இப்டி செஞ்சான்னு தெரியல. இப்பதான் என் கண்ணுல படுது. அவளுக்கும் கொஞ்சமாச்சும் சோறு விட்டுவச்சிட்டுத்தான் திங்கணும்னு பாப்பேன். ஆனா சாப்புட ஆரம்பிச்சா வாயி நிறுத்த மாட்டேங்குல. பசி அடங்கிச்சுன்னா எங்கம்மை அரகொற பட்டினியா கெடக்கதப் பாத்துட்டு நான் தின்ன சோறு மேலயே கொதியா வருதுல. எங்கம்மையும், தங்கச்சியும் வயிறு நெறய சோறு தின்னா போதும்ல. படிப்பாவது, மயிராவது? எங்கம்மய பொதச்ச குழில கொண்டால என் படிப்பு சர்டிபிகேட்ட வைக்க? ஆனா ஒண்ணு மட்டும் ஒங்க எல்லார் மேலயும் சத்தியமா சொல்லுதேன் , எந்த வேலைக்கு போயி எவ்வளவு சம்பாதிச்சாலும் எங்கப்பா மாதிரி குடிக்க மட்டும் மாட்டேம்ல – படிப்பு எவ்வளவு முக்கியம் என நீள் உரையாற்றிய பிரேமிடம் மு மா கண்ணீர் பீறிட சொல்லிச் சென்ற தன்னிலை விளக்க சூளுரை).
பள்ளிப் படிப்பை ஒன்பதாம் வகுப்போடு முடித்துக் கொள்ள இன்னுமொரு காரணம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு என்பதாகவும் இருந்தது. ஆனால் வறுமை என்பதுதான் முதன்மைக் காரணம். பள்ளிப் படிப்பைத் தொடர முடியாதவர்களிடம் பிரேமும், சிவாஜியும், நானும் பேசிப் பார்த்தோம். அவர்களெல்லாம் நாங்கள் அதுவரை அறிந்த நண்பர்களாக இல்லாமல் வேறொருவராக இருப்பதாக எங்கள் மூவருக்குமே தோன்றியது. அமுக்கு டப்பா தான் மிகுந்த தயக்கத்துடன் எங்கள் மூவரையும் தடுத்து நிறுத்தினார் – “டே, நான் சொல்லுதேம்னு கோபப்படாதீக. பிரேம், நானு இப்பவும் உங்க வீட்டு சாப்பாட்டுலதான் பள்ளிக்கூடமே வாரேன். ஆனா பள்ளிக்கூடம் இல்லாத நாள்ல நானும் கையாள் வேலைக்கு போனாதாம்டே வீட்ல அன்னைக்கு எல்லோருக்கும் சோறு கெடைக்கும். கையாள் வேல இல்லன்னா சர்ச்ல போயி கூட்டி பெருக்கி, ஃபாதர் வீட்டத் தொடச்சி வச்சா அஞ்சு ரூபா தருவாரு. அவர் வீட்டுல பொங்குனதுல மீதமுள்ளதையும் தருவாரு. கையாள் வேலைக்கு போனா தெனோம் வாரதானா 20 ரூபா தாரோம்ங்காங்க. நானு வாரத்துல ரெண்டு நாள்தான் வாரேம்னுட்டு 15 ரூபாதான் தாராங்க. அதுவும் ஆள் பத்தாமப் போனாதான். அவனுகள சும்மா போட்டு பேசாதீங்கடே. ஆசப்பட்டா வேலைக்கு போறானுவ? எந்நேரமானாலும் வீட்டுக்கு வந்தா சோறு கெடைக்கும்னு இருந்தா அவனுவளும் பள்ளிக்கூடத்துக்குதானடே வருவானுவ– அமுக்குடப்பா பேசியதும் பிரேம் நெடுநேரம் பேசாமலிருந்தார். அமுக்கு டப்பா தன்னை மன்னிக்க வேண்டியபோது பிரேம் அமுக்குடப்பாவின் தோளைப் பற்றி எங்களுடனான அத்தனை நாள் வாழ்வில் முதன்முறையாக மன்னிப்பு கேட்டார் – (நீ ஏண்டா மன்னிப்பு கேக்கற? நான்தாண்டா மன்னிப்பு கேக்கணும், இத்தனை நா கூடவே இருந்துருக்கேனே. இதுல எதுவுமே எனக்கு தெரியலையே. என்னை மாதிரியே எல்லாரும் இருப்பாங்கன்னு நெனச்சிட்டேன்டா. முட்டாளா இருந்துருக்கேண்டா, இத்தன நா இவங்கல்லாம் இவ்வளவு தூரம் படிச்சதே பெரிய விஷயம்னு எனக்கு தெரியவே இல்லை பாரேன். ஆனா ஒண்ணுமே செய்ய முடியலையேன்னு நெனைச்சா ரொம்ப கஷ்டமா இருக்குடா – கண்கள் சிவந்த குரல் கம்மிய பிரேம்).
இரண்டாவதாக பெண்களில் பலரும் படிப்பை நிறுத்தக் காரணமாக அமைந்தது பூப்பெய்துதல் – தெய்வநல்லூர் வழக்கில் “சமஞ்சிட்டா” அல்லது “சடங்காயிட்டா”. பூப்பெய்திய ஓரிரு ஆண்டுகளுக்குள் திருமணம் செய்து வைத்தல் எனும் வழக்கம் அணையப்போகும் விளக்கின் சுடர் போல அன்று தெய்வநல்லூர் வட்டாரங்களில் விளங்கி வந்தது. அதே நேரம் பிரேம் தெருவில் இருக்கும் பெண்களோ குற்றாலம், திருனவேலி என பிற ஊர்களுக்குச் சென்று கல்லூரிகளில் படிக்க ஆரம்பித்தார்கள். அரசுப் பணிகளில் இருந்த சிலரும், சிவாஜி அப்பா போல சிலரும் கூட தங்கள் வீட்டுப் பெண்களை பிரேம் தெரு பெண்களோடு சேர்த்து கல்லூரிப் படிப்புக்கு அனுப்பி வந்தனர் என்றாலும் அந்த எண்ணிக்கை தெய்வநல்லூரின் பிற சமூகத்தினர் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டால் மிகச் சொற்பமே. சிவாஜி அக்காவும், பிரேம் தெருவில் இருக்கும் சந்துருவின் அக்காவும் ஒரே கல்லூரியில் படித்தார்கள். ஆனால் பிரேம் தெருவில் பட்டர் மாமியின் ஒரே பெண் மட்டுமே பள்ளிப் படிப்போடு நிறுத்திக் கொண்ட அக்கா. சிவாஜி தெருவில் கல்லூரிக்குச் செல்லும் ஒரே (சடங்கான) பெண் சிவாஜியின் அக்கா பார்வதி என்ற பிச்சம்மா மட்டுமே. சுகுமாரி, பாண்டியம்மாள், கனகஈஸ்வரி, பொன்னம்மா, சுபைதா, மெகருன்னிசா என எங்களுடன் எட்டாம் வகுப்பு வரை பயின்று மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு தொடர்ந்த பலரும் பத்தாம் வகுப்பில் பள்ளிக்கு வராமலானார்கள். சங்கீதா, மெஜூரா, வள்ளிமயில் ஆகியோர் மட்டுமே எங்கள் பழைய அணியாக மேல்நிலைப் பள்ளியில் எஞ்சியவர்கள். ( நானும் சிவாஜியும் கல்லூரிக்கு போன விடுமுறை நாட்களில் தேனியிலிருந்து வந்த உடன் படிக்கும் நண்பன், கையில் குழந்தையுடன் வந்து நின்ற பாண்டியம்மாளை “அக்கா! கொஞ்சம் தண்ணி குடுங்களேன்” எனக் கேட்க வேதனையும், வெட்கமுமாக பாண்டியம்மாள் திரும்பிக் கொண்ட காட்சி இன்னும் மறக்க முடியாததாயிருக்கிறது).
மூன்றாவதாக இருந்த காரணம் சற்றே விசித்திரமானது. சுயதொழிலில் ஈடுபட்டிருந்த பல பெற்றோர்கள் தத்தம் பிள்ளைகளை படிப்பதிலிருந்து நிறுத்தினர். முதலிரண்டு காரணங்களை விட குறைவான பேரே இக்காரணத்தால் பள்ளிக்கல்வியைக் கைவிட்டார்கள் என்றாலும் இதுவும் ஒரு காரணமாக அமைந்தது (இவனுவ படிச்சு கலெக்டராவப் போறதில்ல, ஆனா பத்தாப்பு படிச்சி முடிச்சா சர்ட்டிபிகேட்ன்னு ஒண்ண வாங்கிக்கிடுவாங்க. அதக் காமிச்சே மாடு பத்த மாட்டேன், சாணி அள்ள மாட்டேன், பால் கறக்க மாட்டேன்னு ஆகாவளித்தனம் அம்புட்டும் செய்வானுவ. கெடைக்கு காளங்கன்னு வளக்குதது மாதிரி இவனுவளையும் சேத்துல்லா வளக்கணும். வந்து மாடு பத்துல, படிச்சி கிழிச்சதுலாம் போதுமினுட்டேன் – ஊளப்பால் இசக்கியின் அப்பா ஜெமினி டீக்கடை “அறிஞர் அவை”யில் தற்பெருமை விளக்கம்). ஊளப்பால் இசக்கி, ஓட்டக்கை மந்திரமூர்த்தி, மாமா என்ற மா மாரியப்பன், உப்புக்கண்டம் ஹக்கீம் ஆகியோர் இவ்வகையில் பள்ளியை விட்ட நண்பர்களில் சிலர்.
பள்ளியில் தொடரும் எங்களுக்கும் சில சிக்கல்கள் நிகழ்ந்தன. மேலே சொல்லப்பட்ட காரணங்களில் இரண்டாவதாக சொல்லப்பட்ட காரணம் பெண்களுக்கு மட்டும் நிகழவில்லை. பையன்களாகிய எங்களுக்கும் நிகழ்ந்தது என்றாலும் வாழ்க்கையை மாற்றிய சம்பவமாக பெண்களுக்கு நிகழ்ந்தது போல எங்களுக்கு நிகழவில்லை. இரவு வரும் கனவுகள் பேய்க்கனவுகளாக இல்லாமல் பின்னாட்களில் பார்த்த பிரெஞ்சு படங்களின் சாயல்களில் வர ஆரம்பித்தன. காலையில் கண்விழிக்கையில் அரையாடையில் கறைகள் தென்பட ஆரம்பித்தன. வீட்டிலிருப்பவர்களை காலையில் பார்ப்பதே அவமானமூட்டும் எண்ணமாக மாறியது. ஒரு மாலை நேர சந்திப்பு முகம் தெரியாத இருட்டாக ஆகும்வரை நீடித்தபோது மிகுந்த தயக்கத்துடன் முதன்முதலாக யக்கா பாட்ஷாதான் இந்த குழப்பமான சிக்கலைச் சொன்னார். அதன் பின்புதான் எங்கள் அனைவருக்குமே இந்த சிக்கல் ஆரம்பித்திருப்பது மெல்ல வெளிவந்தது. இருள் அடர்ந்த அந்த சந்திப்பில்தான் ஆணுலகின் முதல் ரகசியம் எங்களுக்குள் வெளிப்பட்டு பகிர்ந்து கொள்ளப்பட்டது. முதல் சந்திப்பில் தனக்கும் அவ்வாறே ஆவதாக மட்டும் சொன்ன பிரேம் அடுத்த சந்திப்பில் எங்களுக்கு உடற்கூறு குறித்து வகுப்பெடுத்தார். பிரேம் சொன்னவை அனைத்துமே ஊர் மந்தையில் அவ்வப்போது வேனில் வந்து திரை கட்டி எங்களைப் போன்ற பயலுகளை விரட்டிவிட்டு ஒளிபரப்பப்படும் குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கர்ப்பத்தடை விளக்கப் படங்களில் காட்டும் அளவுக்கு கூட இல்லை (விரட்டப்பட்டாலும் மறைந்திருந்தே பார்த்து நாங்கள் புரிந்து கொண்ட மர்மங்கள் அவை என்றறிக).
ஆனால் இதே விஷயத்தை நடைமுறை சார்ந்து எங்களுக்கு விளக்கிய தீத்தி அவர்களின் ஆலோசனையே எங்களில் பெரும்பாலானவர்களால் பிறர் அறியா வண்ணம் ரகசியமாக பின்பற்றப்பட்டது. தீத்தி என்ற தீத்தாரப்பனின் ஆலோசனை முறையே பின்னாட்களில் சேலம் பகுதி ஆண்மைக்குறைவு மருத்துவர்களால் பின்பற்றப்படுவதாக டொம்ப்ளீ அவர்கள் சமீபத்திய வாட்ஸப் உரையாடலின் போது கருத்து தெரிவித்தார். தீத்தியின் ஆலோசனையை அவர் சொல்லும்போது முழுமையாகக் கேட்டு முடித்ததும் நாங்கள் ச்சீ, நாங்கல்லாம் அப்டி செய்யமாட்டோம் என்ற பொறுப்புத் துறப்போடு முடித்துக்கொண்டாலும் பிறரிடம் முகச்சுளிப்புடன் இதெல்லாம் தப்பு என்று சொல்லிக்கொண்டாலும் எங்களில் அனைவராலும் அந்த ஆலோசனையே பிறர் அறியா வண்ணம் ரகசியமாக பின்பற்றப்பட்டது. (2010 களில் ஒரு முறை நாங்கள் நேரில் சந்தித்தபோது நடுத்தரவயதை நெருங்கி விட்ட விடுதலை உணர்வில் பழைய ரகசியங்களைப் பகிர்ந்துகொண்டபோது இந்த மறைக்கப்பட்ட வரலாறு வெளிவந்ததென அறிக). ஆலோசனை என்னவெனில் இரவு கனவில் வெளிப்பட்டு நமக்கு உறக்கத்திலிருந்து விழிப்பையும், ஆடையில் கறையையும் விட்டுச் செல்லும் திரவத்தை நாமே சிறுமுயற்சி செய்து ஆடைகளில் படாத வண்ணம் வெளிக்கொண்டு வருவதுதான். அவ்வாறாக சுயமுயற்சியாக கறைத் திரவத்தை வெளிக்கொணர தீத்தியால் சொல்லித்தரப்பட்ட சில பயிற்சி முறைகளையும், அப்பயிற்சியின்போது நம் சிந்தனை செயல்படவேண்டிய போக்கை அவர் விளக்கும் விதத்தையும் முன்னிட்டே ச்சீ, நாங்கல்லாம்…. என்று நாங்கள் சொன்னோம் என அவைக்குத் தெரிவிக்கப்படுகிறது.
பள்ளியில் பத்தாம்வகுப்பு வரை டவுசர் என்பது விதிமுறை என்பதால் பள்ளி வாயில் வரை சாரம் கட்டிக் கொண்டு வரும் துரை, தீத்தி, டச்சிங் குழுவினர் பள்ளிவாயில் அருகே உள்ள வேப்ப மர மறைவில் சட்டென சாரத்தைக் கழட்டி மடித்து பள்ளிப் பைக்குள் செருகிக்கொண்டு விறுவிறுவென டவுசரோடு பள்ளிக்குள் வருவார்கள். மாலையில் பள்ளி விட்டதும் மரத்தின் மறைவிலிருந்து சாரம் மிகுந்தவர்களாக வெளிப்படுவார்கள். சுருள்முடித் தொடையர்கள், வாழைத்தண்டு தொடையர்கள் எனும் வேறுபாட்டிற்கான காரணம் இப்போது உங்களுக்கு விளங்கியிருக்கும். இன்னுமொரு ஐயம் உங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம்- துரை கோஷ்டியின் தீத்தி எப்படி எங்களுக்கு ஆலோசனை கூறினார் என. மெய்யான அறிவுத்தேடல் கொண்ட எவரையும் இயற்கை கைவிடுவதில்லை எனும் பிரபஞ்ச உண்மை மெய்ப்படும் இடங்களில் இதுவும் ஒன்றாகும் என அறிக. இம்மாதிரியான ஆலோசனைகளை வழங்குவதில் நண்பர், எதிரி என எவ்வித பாகுபாடும் காட்டாத குணக்குன்றுகளென விளங்கிய மெய் ஞான போதகர்கள் தீத்தியும், துரையும். இது தொடர்பாக அச்சிடப்பட்ட சில மறை புத்தகங்களைக் கூட அவர்களின் எதிர்க்கோஷ்டியினரான டச்சிங் கோஷ்டியாரிடம் பண்டமாற்று செய்து கொள்ளத் தயங்கியதில்லை. துரை கோஷ்டியார் ஆலோசனை தனித்துவமிக்கது. இந்த உணர்வுகளைத் தவிர்க்கும் யோசனையை அக்கோஷ்டியார் சொல்வதில்லை. இதை விதவிதமாக அறிந்து கடப்பது எனும் ஆலோசனையே அவர்களால் அள்ளி வீசப்பட்டது. மிகுந்த ஆர்வம் காட்டிய சிங்கிக்கு ஒரு நாள் நேரடி செயல்முறை மாடநதியின் மேற்குக் கரையில் இருக்கும் மாந்தோப்பில் குழுசெயல்பாடாக நிகழ்த்திக் காட்டப்பட்டது. கூடவே மறை நூல்களும் அன்னாருக்கு வழங்கப்பட (ஒரு நாள் வாங்கி வாசித்து மறுநாள் திரும்பத் தரும்போது கறை படியாது கூடவே 25 பைசாவும் சேர்த்துத் தரவேண்டும்) அதுவரை தமிழ் வாசிப்பில் திணறிய சிங்கி அதன் பின் தொடர் மறை நூல் பயிற்சியால் தமிழை நன்றாக வாசிக்க ஆரம்பித்தார். என்றாலும் திரவ சுயவெளியேற்றப் பயிற்சியின்போது மகிழ்ச்சியும், துரை கோஷ்டியாரின் ஒரு சொட்டு திரவம் 20 சொட்டு ரத்தத்துக்கு சமம் எனும் அறிவியல் எச்சரிக்கையால் துயரமும் ஒருங்கே அடைந்து ஒரு கால் சொர்க்கமும், மறு கால் நரகிலுமாக அவதியுற்றார் சிங்கி. ஆலோசனைக்கு அவ்விடமும் புலம்புவதற்கு எங்களிடமும் அடைக்கலமானார் சிங்கி.
இரவு உறக்கத்தின்போது ஏற்படும் உறுப்புப் பெருக்கத்தை எங்கள் டவுசர்களால் மறைப்பது வெறுங்கைகளால் பாம்பினைப் பிடிப்பது போல பதட்டம் மிக்க அவஸ்தையாக இருந்தது. சிக்கலின் இந்த இடத்தை தீத்தி, துரை ஆகிய துறை சார் வல்லுநர்களால் தீர்க்க முடியவில்லை. பிரேம் முன்வைத்த ஆலோசனையான பிள்ளையார் மற்றும் ஆஞ்சநேயரை அந்த நேரத்தில் மனதால் நினைத்து கவனத்தை அவர்களிடம் குவித்து திரவத்தை மீண்டும் ரத்தமாக மாற்றி உடலில் கலக்க வைக்க முயற்சித்தோம் (ரத்தம்தாம்ல பவர் கூடவும் வெள்ளையாயிருது.. அத வெளிய விடாம இருந்தா மூணே நாள்ல அதுவே பழையபடி ரத்தமாயிரும். அந்த ரத்தம்தான் நமக்கு பவர் ஏத்தும்- டச்சிங் அவர் ஊரில் ஒரு சிலம்பாட்ட அண்ணனிடம் கேட்டு வந்து சொல்லிய மெய்ஞ்ஞான ரகசியங்களில் ஒன்று). ஆனால் அந்த ஆலோசனையை பிரேமாலேயே சரியாகக் கடைப்பிடிக்க முடியவில்லை என அவரே ஒப்புக்கொண்டார். தானும் ஆலோசனை சொல்ல வேண்டும் என்ற ஆவலில் நயினார் சொன்ன யோசனை சற்று அதிர்ச்சிகரமாக இருந்தாலும் “ம்ஹூம், அதெல்லாம் பெரிய பாவம், ஸ்வாமி பிரசாதத்தை அப்டியெல்லாம் செய்யக்கூடாது” என பிரேமால் கடுமையாகக் கண்டித்து விலக்கப்பட்டது (ஏல, பேய் பிடிச்சி ஆடுதவங்களுக்கெல்லாம் திருநீறு பூசுனா அடங்கிருதுல்லா. நமக்கும் வெடைக்கையில அதுலயே திருநீறு பூசுனா அதும் அடங்கிரும்லா – ஐயம் பாதி, பெருமிதம் பாதி கலந்த நயினாரின் ஆலோசனை முன்வைப்பு). கடைசியில் சேமியா மணியின் ஆலோசனைப்படி எங்கள் குழு சாரம் எனப்படும் கைலி உடுத்தலாம் என்ற நடைமுறைக்கு மாறினோம். மாறினோம் என்று எளிதாகச் சொன்னாலும் அந்த மாற்றம் எளிதில் அடையத்தக்கதாக இல்லை.

சாரம் கட்டிக்கொள்ளப் போகிறோம் என்ற எங்கள் அறிவிப்பை எங்கள் அனைவரது வீடுகளும் விசித்திரமாகப் பார்த்தன. அதை எவ்வித கேள்வியுமின்றி வரவேற்ற ஒரே இல்லம் பாட்ஷாவின் இல்லமே. இப்போது என்ன அவசியம், எதற்கு, ஏன், யார் சொன்னது, பள்ளிக்கே டவுசரோடுதானே போகிறீர்கள் – எனப் பலவாறாக வந்த கேள்விகள் அனைத்தையும் ஒரே பதிலால் எதிர்கொண்டோம். பள்ளி தவிர பிற இடங்களில் எங்களை கேலி செய்கிறார்கள், எங்களுடன் முன்பு படித்து வேலைக்கு இப்போது போய்க்கொண்டிருக்கும் நண்பர்கள் எல்லோரும் சாரம் காட்டிக் கொள்கிறார்கள். ஆகவே நாங்களும் கட்டிக் கொள்வோம் என உறுதியோடு போராடி வென்றோம். அதன்படி பள்ளிக்குச் செல்லும்போது டவுசர் என்றும் பிற நேரங்களில் சாரம் என்றும் அனைவரது வீட்டிலும் முடிவானது. பிரேம் மட்டும் வெள்ளை வேட்டி கட்டிக்கொண்டார். சாரம் எப்படிக் கட்ட வேண்டுமென யக்கா பாட்ஷாதான் எங்களுக்கு வகுப்பெடுத்தார்.(எல்லாரும் அருணாக்கயித்தோட சேத்து உள்மடிப்பு வச்சி சுருட்டி கட்டுங்கல. அப்பதான் தூக்கத்துலயும் அவுராது. சாரத்த மடிச்சு கட்டும்போது முட்டு வரைக்கும்தான் மடிச்சு கட்டணும்டே. தொடைக்கு தூக்கிக் கட்டிட்டு குனிஞ்சோம்னா நமக்கு பொறத்தால இருக்கவனுக்கு நமக்கு முன்னால இருக்கப்பட்டத நாமளே காமிச்ச மாதிரி ஆயிரும். அதேமாதிரி சாரம் கட்டிருந்தாலும் உள்டவுசர் போடாம படுக்கப் போகாதீங்கல – சாரம் கட்டுவதின் பயன்பாட்டு நுட்ப விளக்கம் – யக்கா பாட்ஷா) பிரேம் வேட்டி கட்ட அவரது எதிர்வீட்டு அண்ணன் கற்றுக் கொடுத்தார். முதன்முதலாக எங்கள் குழு சாரம் கட்டிக்கொண்டதை தெய்வநல்லூர் கேலியும், சிரிப்புமாக வரவேற்றது. (எலே, சாத்தையா மகன் கணேசந்தானல நீயி, இவனுவல்லாம் ஒன் கூட்டாளிகளா? அடேயப்பா, சாரம் உடுத்துத அளவுக்கு பெரிய மனுசனாயிட்டீகளேடே. ஒங்கப்பன்ட்ட சொல்லி பொண்ணு பாக்கச் சொல்லிருவோமா? ரொம்ப மடிச்சிக் கட்டாதடே, காத்து பட்டு சுருங்கிருச்சுண்ணா வரப்போற எம் பேத்தியாளுக்கு பதில் சொல்ல எனக்கும் வயசில்ல பாத்துக்க – இணைக் கிழவர்களின் சிரிப்பொலிக்கு நடுவே புனமாலைக் கொத்தனார் ஜெமினி டீக்கடை பெஞ்ச்சிலிருந்து). இவ்வாறாக எங்கள் குழுவும் வயதடைந்த காதை இது என்க.
இந்த நிகழ்வுகளுக்கு மத்தியில் பத்தாம் வகுப்பு துவங்கியது. தெய்வநல்லூர் மேல்நிலைப் பள்ளியைப் பொறுத்தவரை ஒன்பதாம் வகுப்புப் பிரிவே மாற்றங்களின்றி பத்தாம் வகுப்புப் பிரிவாகவும் தொடரும். மிக அரிதாக சில மாற்றங்கள் இருக்கலாம். எங்கள் வகுப்பு பத்தாம் வகுப்பு ஆ (ஆங்கில பி பிரிவு) பிரிவாக மாறியது. அரிதான மாற்றமாக தெண்டில் மண்டை மற்றும் இருவர் எங்கள் வகுப்பில் வந்து சேர்ந்தனர். வகுப்பாசிரியராக சி எஸ் எஸ் எனப்படும் அறிவியல் ஆசிரியரான சி சண்முகசுந்தரம் பொறுப்பேற்றார். தமிழுக்கு எம் ஜி எனப்படும் எம் கங்காதரன் சார். பிற அனைத்து பாடங்களுக்கும் ஒன்பதாம் வகுப்பில் பாடமெடுத்த ஆசிரியர்களே நியமிக்கப்பட்டிருந்தனர். இதில் எம் ஜி சார் மிகுந்த ஆவலுடன் எங்கள் வகுப்பிற்கான தமிழ் ஆசிரியப்பணியை ஜெயராஜ் சாரிடம் மாற்றிக் கேட்டு வாங்கி வந்தார். இதற்கான முழுமுதற் காரணம் பிரேம் மற்றும் சிவாஜி. நேரு பள்ளியில் படிக்கும் காலத்திலேயே பல பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் ஆகியவற்றில் பங்கு பெற்று மாவட்ட அளவில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தவர்கள் பிரேமும், சிவாஜியும். குறிப்பாக பிரேம். பிரேம் பங்குபெற்ற எந்தப் போட்டியிலும் பரிசு பெறாமல் வந்ததேயில்லை என்பதே அவர் திறமைக்கு சான்று. ஒன்பதாம் வகுப்பிற்கு வந்த பின் ஜெயராஜ் சார் வழிகாட்டுதலில் தன் பேச்சுத்திறமையை மெருகேற்றிக் கொண்ட பிரேம் மாநில அளவிலான இரு பேச்சுப் போட்டிகளில் பரிசு வென்று பள்ளியை பெருமைப்படுத்தினார். போட்டிகளுக்கு பொறுப்பாக இருந்தவர் எம் ஜி சார் என்பதால் இரு போட்டிகளில் பிரேம் வென்று வந்த பிறகு ஒவ்வொரு வகுப்புக்கும் சுற்றறிக்கை அனுப்பாமல் போட்டி குறித்த தகவல் வந்ததும் நேரே பிரேமையும், சிவாஜியையும் அழைத்து தகவல்களைச் சொல்லிவிட்டு மறந்து விடுவார். போட்டி நடக்கும் ஊர்களுக்கு பிரேம், சிவாஜி சொந்தச் செலவில் சென்று வருவதும் ஒரு காரணம். போட்டி முடிந்த மறுநாள் வாங்கிய பரிசுகளுடன் அவரை சந்தித்து அவர் கையில் பிரேம், சிவாஜி பரிசு, சான்றிதழ்களைக் கொடுத்து விடுவார்கள். அதற்கடுத்த நாள் நடக்கும் காலை பிரார்த்தனையில் அனைவர் முன்பும் போட்டி, பிரேம் பெற்ற பரிசுகளை எம் ஜி சார் விளக்கி தலைமை ஆசிரியர் கையால் மறுமுறை அப்பரிசை பிரேமுக்கு வழங்குவார்.
திருனவேலி மீட்டிங்குக்கு தலைமை ஆசிரியரான ஜெயசீலன் சார் ஒருமுறை போயிருந்தபோது நெல்லையின் புகழ்பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் அனைவர் முன்பும் தெய்வநல்லூர் பள்ளி தொடர்ந்து பேச்சுப் போட்டிகளில் பரிசினை வெல்வது குறித்து சிலாகித்தார் (என்ன சார் செய்யறீங்க? நாங்க ரெண்டு தமிழாசிரியர்களைப் போட்டு ஒரு மாசம் டிரெயினிங்க் கொடுக்கோம். உங்க பயக வந்தா அசால்ட்டா அடிச்சி தூக்கிட்டு போயிருதானுவளே. அதுலயும் பிரேம்னு ஒரு பையன். அடேயப்பா, நானே கேட்டு அசந்துட்டேன் ஒரு நிமிசம். எங்க பயலுவள்ட்ட சொன்னேன், டே இவன் இருக்க வரை நாம ரெண்டாம் பரிசுக்குத்தாம்டே முயற்சி பண்ணணும்னு. கூடவே இவன் இருக்க போட்டில எவனாவது முதல் பரிசு வாங்கிட்டு வந்தா ஹீரோ பேனா பரிசு நானே தாரேன்ன்னும் சொல்லிருக்கேன். நல்லா பழக்கிருக்கீங்க சார்வாள் பையங்களை. மகிழ்ச்சி வாழ்த்துகள் – நெல்லையில் 125 ஆண்டுகளைக் கடந்த புகழ்பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர்). ஜெயசீலன் சார் வந்து பள்ளி மீட்டிங்கில் எம் ஜி சாரையும் சேர்த்து புகழ பரிசாக வந்த லாட்டரிக்கு பரிசு விழுந்தது போல ஒன்பதாம் மேகத்தில் மிதந்தார் எம் ஜி சார். ஆகவே பத்தாம் வகுப்பில் பிரேம் வகுப்பை அவர் விரும்பி வாங்கியதில் உங்களுக்கு குழப்பமிருக்காது.
சரியாக ஒரு மாதம் போல ஆகியிருந்தது. பத்தாம் வகுப்பின் முக்கியத்துவத்துவத்தை ஒவ்வொரு ஆசிரியரும் மீள மீளச் சொல்லி பதிய வைத்துக் கொண்டிருந்தனர். அன்றைய புதன்கிழமை அனைத்துக்கும் தொடக்கமாக அமைந்தது. மதிய வகுப்புக்கு வர வேண்டிய பல ஆசிரியர்களும் வகுப்புகளுக்கு வரவில்லை. மெல்ல நழுவிச் சென்ற நயினார் கொண்டுவந்து சேர்த்த சேதி- ஆசிரியர்கள் பலரும் தலைமை ஆசிரியர் அறையில் இருக்கிறார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் தகவல் பள்ளி முழுக்க பரவியது. தலைமை ஆசிரியர் ஜெயசீலன் இடமாற்றல் பெற்று வில்லுக்குறி பள்ளிக்கு செல்கிறார். அவர் விரும்பியபடியே அவர் ஊருக்குப் பக்கமாக மாற்றல் கிடைத்து விட்டது. ஆனால் டிரிப்பிள் எஸ் (செந்தூர்சாமி) சார் குரல் வெகு வேகமாக, ஜெயசீலன் சார் மாற்றலுக்கு சம்பந்தமில்லாததாக உரத்து ஒலித்துக் கொண்டிருந்தது. அன்று மாலைதான் காரணம் புரிந்தது. ஜெயசீலன் சாருக்கு மட்டும் இடமாற்றமில்லை. சாந்தினி டீச்சர், தங்கச்சாமி சார், செந்தூர்சாமி சார் ஆகியோருக்கும் மாற்றல் உத்தரவு வந்திருந்தது. சாந்தினி டீச்சருக்கு ஆலங்குளம் பள்ளிக்கே மாற்றல் என்பதால் அவருக்கு 20 நிமிட பயணத்தொலைவில் வீடருகே பணி புரியலாம் என்பதால் அவரால் மறுக்க முடியவில்லை. அதேபோல தங்கச்சாமி சாருக்கு உதவி தலைமை ஆசிரியர் எனும் பதவி உயர்வுடன் வெள்ளானைக்கோட்டை பள்ளிக்கு மாற்றம் என்பதால் அவராலும் மறுக்க முடியவில்லை. இருப்பதிலேயே குழப்பம் செந்தூர்சாமி சாருக்குதான். எந்த ஊர் பள்ளிக்கு மாற்றம் என்று குறிப்பிடாமல் அவரை இடமாற்றம் (!) செய்திருந்தார்கள். அதாவது அவர் அடுத்த பணியிடம் குறிப்பிடப்படும்வரை மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவின்பேரில் வட்டார கல்வி அதிகாரி அலுவலகத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டுமெனவும், சம்பளம் கிடைப்பதில் குழப்பமிருக்காது எனவும் சொல்லப்பட்டது. டிரிப்பிள் எஸ் சாரின் குரல் உயர்வுக்கான காரணம் இப்போது புரிந்திருக்கும்.
அன்று மாலையே வசந்தம் சந்திப்பில் டிரிப்பிள் எஸ் சார் இதில் ஏதோ விஷமமான வேலை நடந்திருப்பதாக தோழர் குருசாமியிடம் ஐயப்பட்டார். ஆகவே மறுநாளே இருவருமாக கிளம்பி திருனவேலிக்கு சென்றார்கள். கட்சி மற்றும் சங்க ஆட்கள் மூலமாக பல தகவல்கள் கிடைத்தன. அன்று இரவு நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை கட்சி அலுவலகத்தில் தங்கிய இருவரும் மறுநாள் தெய்வநல்லூர் திரும்பினார்கள். கைவசம் உள்ள தகவல்களை உறுதிப்படுத்த வேண்டி உடனே குருசாமியண்ணனால் அழைக்கப்பட்ட உள்ளூரின் ஒரே வக்கீல் குமாஸ்தாவான நயினா(ர்)ப்பிள்ளை வரவும் பேசியதில் ஒரு விஷயம் தெளிவானது. பணியிடம் குறிப்பிடப்படாமல் மாற்றம் செய்ய பணி விதிமுறைகளில் அனுமதி இருக்கிறது. அதே நேரம் குறிப்பிட்ட காலியிடத்தை சுட்டிக் காட்டி தனக்கு பணி ஒதுக்கக் கோரி விண்ணப்பிக்கும் உரிமையும் பணி புரிபவருக்கு உண்டு. பணி மூப்பு அடிப்படையிலும், பதிப்பின் அடிப்படையிலும் உதவித் தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்து வந்த டிரிப்பிள் எஸ் சாருக்கு அடுத்த பதவி உயர்வு மேல்நிலை தலைமை ஆசிரியராகவோ, வட்டார கல்வி அலுவலராகவோ வரலாம். அடிக்கடி சங்கப்பணிகள் காரணமாக உயர் அதிகாரிகளுடன் முட்டிக் கொள்வதால் அவருக்கு பணிநிலைஉயர்வு தாமதமாகிக் கொண்டே வந்தது.
டிரிப்பிள் எஸ் சார் இந்த மாறுதல் உத்தரவுக்கு இவ்வளவு தூரம் எதிர்வினையாற்ற மற்றுமொரு முக்கிய காரணம் உண்டு. முன்பே சொன்னபடி தெய்வநல்லூர் பணியிடத்திற்கு இவர் ஒதுக்கப்பட்டாலும் அதை தனக்கு உரிமை கொண்டாடிய புளியங்குடி இளைஞ ஆசிரியரை நினைவிலிருக்கலாம். இப்போது டிரிப்பிள் எஸ் சாருக்கு இடமாற்றம் அளிக்கப்பட்ட அதே நாளில் அவருக்கு புளியங்குடியிலிருந்து தெய்வநல்லூருக்கு இடமாறுதல் அளிக்கப்பட்டிருந்தது. தலைமை ஆசிரியர் பணியிடம், தங்கச்சாமி சார் பணியிடம் ஆகியவற்றுக்கு எந்த ஆசிரியர்களும் நியமிக்கப்படாமல் இவ்வளவு விரைவாக புளியங்குடி ஆசிரியருக்கு மட்டும் இடமாறுதல் அளிக்கப்பட்டிருந்தது டிரிப்பிள் எஸ் சாருக்கு ஐயத்தைக் கிளப்பியது. ஆகவேதான் முதல்நாளே திரும்பாமல் நெல்லையில் இரவு தங்கி மாலை அலுவலகம் முடிந்து அனைவரும் கிளம்பியதும் பணிமாற்ற கோப்புகளை சங்க ஆட்கள் உதவியுடன் பார்த்து முழு விவரங்களும் தெரிந்து கொண்டார்கள்.
மாவட்ட கல்வி அதிகாரியாக இருந்தவர் கழக சிபாரிசு, சங்க செயல்பாடு, பணி மூப்பு ஆகிய மூன்று புள்ளிகளில் இரண்டு புள்ளிகள் டிரிப்பிள் எஸ் சார் வசம் இருந்ததால் அவரையே தெய்வநல்லூருக்கு நியமித்து விட்டார். கழகத்தை சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரின் உதவியாளர் என்று சொல்லிக்கொண்ட ஒருவர் அலுவலகத்தில் நுழைந்து பேசிய விதத்தால் அதிகாரி அடைந்த எரிச்சலும் டிரிப்பிள் எஸ் சாருக்கு கூடுதல் புள்ளியாகக் கிடைத்தது. ஆகவே டிரிப்பிள் எஸ் சார் தெய்வநல்லூர் வந்து சேர்ந்தார். ஆனால் இதை தனது தோல்வியாகக் கருதிய இளைஞ ஆசிரியர் பல்வேறு வகைகளிலும் விடாமல் முயன்று வந்தார். அவரது சித்தப்பா கழக மாவட்ட துணைத் தலைவராக இருந்த தகுதியைத் துணைக் கொண்டு முழுமூச்சாக முயற்சிகளைத் தொடர்ந்தார். பணி ஓய்வு பெற்று மாவட்ட கல்வி அதிகாரி சென்ற அடுத்த வாரத்திலேயே பொறுப்பு கல்வி அதிகாரிக்கு மெட்ராஸ் அமைச்சர் அலுவலகத்திலிருந்து ஒருவரை தொலைபேசி அழைப்பு வழியாக வாய்மொழி ஆணை பிறப்பிக்க வைத்து தன்னை தெய்வநல்லூருக்கு மாற்றிக் கொண்டார். அதாவது வழக்கமான இடமாறுதல் பட்டியல் கல்வியாண்டின் துவக்கத்தில் தயாரிக்கப்பட்டு இறுதி செய்து வைக்கப்பட பின்பே முந்தைய அதிகாரி பணி ஓய்வு பெற்றிருந்தார். அதில் பொறுப்பு அதிகாரி மூலம் ஒரு மாற்றத்தை முன்தேதியிட்டு செய்திருந்தனர். அந்த திருத்தமே டிரிப்பிள் எஸ் சார் மாற்றமும், இளைஞ ஆசிரியர் அந்த இடத்திற்கு வந்ததும். இந்த செயல் டிரிப்பிள் எஸ் சாருக்கு கொதிப்பூட்டியது. ஆனால் நயினாப்பிள்ளை கருத்தின்படி அனைத்துமே எழுத்தில் சரியாக இருக்கிறது. அதாவது நிர்வாக ரீதியில் எந்தத் தவறும் இல்லாத விதத்தில் இந்த அநீதி செய்யப்பட்டிருக்கிறது. “நிரூபிக்க முடியாத தவறுக்கு சட்டத்துக்கு முன்னால நீதி ன்னாக்கும் பேரு தோழரே! சீனியாரிட்டி பிரகாரம் இவாளுக்கு போன எஜுகேஷன் இயர்ல ட்ரான்ஸ்ஃபர் ஆன் வில்லிங் போட்டுக் கொடுத்தாச்சு. இந்த வருஷம் ட்ரான்ஸ்ஃபர் ஆன் கிரவுண்ட்ஸ் ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன்னு போட்டு எழுதிருக்காங்க. வெவரமாத்தான் வேல பாத்துருக்காங்க தோழரே! பனிஷ்மெண்ட் ட்ரான்ஸ்ஃபர்னு சொன்னா சார்வாள் நீங்களே போயி பேசி சங்கம் மூலமா ஏதாச்சும் செய்யலாம். இவன்தான் வெவரமா ட்ரான்ஸ்ஃபர் ஆன் கிரவுண்ட்ஸ் ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன்னு பேப்பர தட்டிட்டானே, சங்கமும் கேக்க முடியாது. கூட இருக்க ரெண்டு பேரும் ட்ரான்ஸ்ஃபரை ஏத்துக்கிட்டாங்கங்கும்போது இவாள் மட்டும் ரீ கன்ஸிடரேஷன் கேக்க முடியாதுல்லா. சரி, வேற ஊருக்கு மாத்தினா அந்த ஊர் சரியில்ல, என் குடும்பம், உடல்நிலைன்னு ஏதாச்சும் சொல்லலாம். அதுக்கும் வழியில்லாம வெயிட்டிங் லிஸ்ட்லல்ல போட்ருக்கானுவ. என்னா வெவரமா செஞ்சிருக்கானுவ, தாயோளி… கோர்ட்டுக்கும் கொலையாளிக்கும் பொறந்தவம் கூட இப்டி யோசிக்க முடியுமான்னு இருக்கே – ஒரு டீயில் பாதி கையில் இருக்க மீதியாக நயினாப்பிள்ளை பேசியது.
இவ்வளவு பின்னணியுடன் தெய்வநல்லூர் பள்ளிக்குள் நுழைந்தவர்தான் எம் எஸ் சி என அழைக்கப்பட்ட எம் . சூர்யசந்திரன். இவருடன் தான் நாங்கள் உரச நேர்ந்தது.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
