மெய் பதுங்கும் மெய்யற்ற வெளியின் உள்ளும் வெளியும்

This entry is part 51 of 72 in the series நூறு நூல்கள்

தந்திரயுத்தி என ஒரு இலக்கிய வகைப்பாட்டை நன்னூல் இப்படி வகுக்கிறது

நூற் பொருள் வழக்கொடு வாய்ப்பக் காட்டி

ஏற்புழி அறிந்திதற்கு இவ்வகை யாமெனத்

தரும்வகை செலுத்துதல் தந்திர உத்தி

இன்றைய அர்த்ததில் இச்சொல்லைப் பாராது நன்னூல் வழக்கில் கவனிக்கலாம். ஒரு நூலில் சொல்லப்படுகின்ற பொருளை மற்றொரு இலக்கிய வழக்கோடு பொருந்தக் காண்பிப்பது தந்திர உத்தி நூல். இது ஒரு மேலோட்டாமான விளக்கம். ஒரு கலை வகையை மற்றொன்றோடு பொருந்திப் பார்த்து வாசிப்பவருக்கு நெருக்கமான உணர்வு நிலையைக் கொடுக்கும் உத்தி எனலாம். ஒரு ஓவியத்தையோ இசைத் துணுக்கையோ நேரடியாக விளக்க முடியாதபோது வேறொரு ரசனை அளவீட்டைக் கொண்டு சொல்ல முற்படுவது. 

இந்த அறிமுகத்தில் நம்பி கிருஷ்ணனின் திரைப்படங்கள் சார்ந்த கட்டுரைகளை மட்டும் அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கிறேன். தாராசங்க்கர பந்த்தோபாத்யா, டால்ஸ்டாய், ஆல்பர்ட் கம்யூ, விட்கன்ஸ்டைன், சுனில் கிருஷ்ணன், ரா.கிரிதரன் போன்றொரின் புத்தகங்கள் பற்றிய விமர்சனங்கள் மிக விரிவாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இலக்கிய விமர்சனத்தில் நம்பி அவர்கள் ஏற்கனவே பாண்டியாட்டம் ஆடியவர். அவரது ஆர்வங்கள் செவ்வியல் ஆர்க்கிடைப்களில் ஆழ வேரூன்றி இருக்கிறது. ஆங்கில செவ்விலக்கியங்களிலிருந்தும் விமர்சன மரபிலிருந்தும் தனக்கென ஒரு கோட்டை வரைந்துகொண்டு அவர் நவீனத்துவம் வரை கட்டிவைத்துள்ளார். மேலை இசை, ஓவியம், கலை விமர்சனம் என அவர் சுட்டிக்காட்டும் இடங்கள் மிக பரந்துபட்டதாக இருந்தாலும் அவற்றை இணைக்கும் நுண்மையான சரடை அவரது கட்டுரைகள் காட்டிவிடுகின்றன. அவர் வைக்கும் தலைப்புகளே அதற்கு ஒரு சோற்றுப்பதம் – எக்காலத்துக்குமான மீள நிகழும் இன்பங்கள் – இந்த நூலுக்கே கூட அவர் இந்த தலைப்பை வைக்கலாம். 

‘அன்னியனின் அடிச்சுவடில்’ எனும் கட்டுரையில் அவர் கம்யு படைப்புகளின் அடினாதமாக முன்வைக்கும் அபத்தம் மற்றும் மறுப்பு எப்படி சிசிஃபஸின் தொன்மத்தின் சாராம்சத்தை முன்வைக்கிறது என்பதைத் தொட்டுப் பேசுகிறார். அங்கிருந்து கமெல் தாவுத் எழுதிய The Meursault Investigation எனும் நாவலில் கம்யு கதையில் வரும் கொலை செய்யப்பட்ட அரேபியனின் பார்வையில் சொல்லப்பட்ட கதைக்குள் சென்று அபத்தத்தையும் காலனியத்தால் பாதிக்கப்பட்ட குழுவின் வீழ்ச்சியைப் பேசுகிறார்.  இப்படி இக்கட்டுரைகள் ஒரு மையச்சரடைக் கொண்டு பல நூல்களுக்களை இணைத்தபடி செல்கின்றன. 

பூட்லேரின் கவிதைகளில் வரும் எள்ளலை ( தங்கத்துக்காக விண்மீங்களை அறுவடை செய்வாயா?) என வறியவள் ஒருத்தியைக் கேட்கும் வரிகள் புதுமைப்பித்தனின் ‘பாலுக்கோ விதியில்லை / மேலுக்கேன் ஆசாரப் பேச்சு’ எனும் வரியுடன் இணைத்து எழுதுகிறார்.  புதுமைப்பித்தனை கவிதைக்காக நினைவுகோரும் ஒருசிலரில் நம்பி கிருஷ்ணனும் ஒருவர். புதுமைப்பித்தனில் ஒலித்த ஒருவித கசப்பும் இருண்மையும் மேலெழுந்து வரும் பூட்லேரின் கவிதைகள் உன்னதத்தின் சாயலை எப்படி அளிக்கின்றன என அறிந்துகொள்ள மிகக் கவனமாக ‘பூட்லேரின் சொர்கமயமான தீமையின் மலர்கள்’ கட்டுரையை வாசிக்க வேண்டும்.

 இப்படி மேற்கிலக்கிய அழகியலில் ஒரு கால், தமிழ்/இந்திய இலக்கிய அழகியலில் மறு கால் எனக் கட்டுரைகளில் நம்பியுடன் நாம் பயணிக்க ஏதுவாக அவரது கட்டுரையின் அடி நாதம் அமைந்திருக்கிறது. Cape Cod Noir புத்தகத்தைப் பற்றிய கட்டுரை (பயணக்கட்டுரை போலவும், தன்மையக்கட்டுரை போலவும் இருப்பதால் இந்த நூலிலேயே செபால்டியத் தனமான கட்டுரை இதுதான்) முடிக்கும் போது feeling good was good enough என்பது சித்தரைப் போல இழப்பதற்கு எதுவுமில்லாத மோன நிலை என்பதிலும் இந்த மேலை கீழை தொட்டு மீட்டல் நடக்கிறது. பல காலமாக ஆங்கில செவ்விலக்கியமும் இந்திய செவ்விலக்கியமும் ஆழக் கற்று வரும் ஒருவர் இப்படி ஒரு ஒப்புவைப்பை முன்வைக்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.

மீண்டும் மீண்டும் நம்பியின் கட்டுரைகளில் வரும் கருத்துருவங்கள் மற்றும் அவை சுட்டி நிற்கும் படிமங்கள் இலக்கியத்தை ஒரு மெய் தேடும் அனுபவமாக வெளிக்காட்டுகிறது. அது உண்மைக்கு மிகத் தொலைவில்லை என்றாலும் உண்மை அனுபவத்துக்கும் நடைமுறை தளத்துக்கும் இருக்கும் முரணை சுட்டிக்காட்டியபடி இருக்கிறது. ‘ஈதே மூதுரையாகட்டும்: சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம்’  கட்டுரைக்கு இது கச்சிதமாகப் பொருந்தும். இகட்டுரையின் விமர்சன அளவீட்டில் எனக்கு கருத்து மாறுபாடு இருந்தாலும், நாவல் முன்வைக்கும் மரபு தொடர்ச்சிக்கான விழைவு நவீன காலம் வரை வரும் சிக்கலாக எளிமைப்படுத்தப்பட்ட விதத்தில் இது ஒரு நடைமுறை சிக்கல் மட்டுமே எனலாம். நாவலுக்கு வெளியே கதைக்கான தீர்வு இருப்பதை யதார்த்தமாகக் குறிப்பிட்டு குள்ள சித்தன் கதை, மாதொருபாகன் நாவல்களின் யதார்த்தம் சமூகத்தின் மெய் நிலையை சுட்டிக்காட்டுகிறது எனும் சிக்கலான இடத்துக்கு கட்டுரை ஆசிரியரை நகர்த்தியிருக்கிறது. போலி மெய் சூழ் நாவல் உலகிலிருந்து ஒரு மெய்யான நகர்வைப் பெருவதற்காக இந்த ஒப்பீடு ஒரு எளிமைப்படுத்தப்பட்ட வாதமாக ஒலிக்கிறது. ஆனால் முடிவில் லார்க்கினின் ‘they fucked me up / my mum and dad’ எனக்குறுக்கிட்டு ஒருவித தலைகீழாக்கத்தை நிறுவுகிறார் நம்பி. தாய் தந்தை பார்வையிலிருந்து சொல்லப்படும் நாவல் (கட்டுரையும்) சட்டென கைவிடப்பட்ட குழந்தையின் பார்வைக்கு மாறுவதற்கு லார்க்கினின் வரி மிகக் கச்கிதமாக இணைந்திருக்கிறது. ஒரு விதத்தில், நாவலின் அனைத்து பலவீனங்களையும் மீறி, ஒரு புது கோணத்தைக் காட்டிவிடுகிறது. கட்டுரை ஆசிரியர் ஒரு விமர்சகராக மிகப் பெரிய பாய்ச்சலை நிகழ்த்தி இருக்கிறார்.

ஃபிலிப் லார்கின்; சாதாரண உன்னதம், டால்ஸ்டாயின் கட்டுரைகள் என கிழக்கும் மேற்கும் சந்திக்கும் இடங்களில் twilight zone போல பொதுவானதொரு அடிப்படைகளை நிலை நாட்டிவிடுகிறது. ஜே ஜேயும் சுந்தர ராமசாமிக்கும் இருக்கும் உறவு போலவோ, ஹேராம் படத்தில் வரும் வசனம் போல சரீரத்துக்கும் ஆத்மாவுக்கும் உள்ள உறவு போலவோ இதை நேர்கோட்டில் வைத்துவிட முடியாது. எப்படி கிளாஸிசம் என்பது பலவிதமான வேர்களைக் கொண்டிருக்குமோ அதே போல ஒவ்வொரு மண்ணுக்கும் அழகியல் தனி ஆழத்தைக் கொண்டிருக்கும். மேலும் இதை ஆராய,  இந்த புத்தகத்தின் இலக்கிய கட்டுரைகளைப் பற்றி நீங்களே படித்துத் தெரிந்துகொள்ளுங்கள் – நாம் திரைப்படங்கள் தொடர்பாக எழுதப்பட்ட கட்டுரைகளின் அமைப்பைப் பார்ப்போம். 

இந்த நூலில் கட்டுரையாசிரியர் நம்பி கிருஷ்ணன் எழுதியிருக்கும் எந்த திரைப்படத்தைப் பற்றியும், இயக்குநர்களைப் பற்றியும் எனக்கு ஆழமான அறிமுகம் இல்லை எனும் முன்னொட்டுடன் இந்த அறிமுகத்தைத் தொடங்குகிறேன். நான் நம்பியின் கட்டுரைகளுக்கு அபிமான வாசகன் மட்டுமே. அவர் சொல்லும் புது அலை சினிமாவைப் பற்றியும், திரை மொழியையும் கற்றுக்கொள்பவன். இதற்கு ஈடாக ஐரோப்பிய இசை, ஓவியங்களில் வெளியான புது வடிவங்களை அறிய ஆர்வம் கொண்டவன் எனும் வகையில் இப்புத்தகத்தின் கோப்பிலிருந்து பல புதிய கோட்பாடுகளையும், கலைஞர்களையும், திரைப்படங்களையும் அறிந்துகொண்டேன். அவற்றில் சிலவற்றையேனும் பார்க்கும் ஆவலை அதிகப்படுத்தியுள்ளது.

நம்பி கிருஷ்ணனின் கட்டுரைகள் அவரது ரசனை சார்ந்த மதிப்பீட்டை மட்டுமே அளவு கோளாகக் கொள்ளாமல், உலகத் தரப்பில் முக்கியமான கலை விமர்சகர்களின் பார்வைக் கோணங்களை சுட்டுப் பொருள்களாகக் கொண்டிருக்கின்றன.  கிட்டத்தட்ட கட்டுரைகள் எல்லாமே அவரது சிறு வயது நியாபகங்களிலிருந்து தொடங்குகின்றன. சென்னையில் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் பரவலாகக் கவனம் பெற்றிருந்த பிலிம் கிளப், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு தூதரகங்களில் திரையிடப்படும் அயல் மொழிப் படங்கள் அவரது ரசனையை செதுக்கியுள்ளது. பல இந்திய எழுத்தாளர்களுக்கு ஐரோப்பிய, தென் அமெரிக்க கலை திரைப்படங்கள் அறிமுகம் கிடைக்க இது போன்ற கிளப்புகளும், அரசியல் அமைப்புகளும் உதவி உள்ளன. நான் வளர்ந்த 90களின் இறுதி, ரெண்டாயிரமாண்டுகளில் தென் கொரிய படங்களுக்கு அமைந்த கூடங்களை இக்கட்டுரைத் தொகுப்பு நினைவுப்படுத்துகிறது. இன்றைய ஒடிடி யுகத்தில் நம் மடியில் தவழும் திரைப்படங்கள் அக்காலகட்டத்தின் கூட்டு ரசனை மனோபாவத்தை கொண்டிருப்பதில்லை. ஒரு திறந்த வெளி அரங்கில் ஒத்த ரசனையுடைய பலருடன் சேர்ந்து ரசிக்கும் திரைப்படம் தரும் அனுபவம் அச் சிறு சமூகத்தின் மன நிலையைப் பிரதிபலிக்கும். சமீபத்தில் லண்டனில் வெளியான செவன் சாமுராய் படத்தை நண்பர்களுடன் பார்க்கச் செல்லும்போது அதே போன்ற அனுபவத்தை நான் அடைந்தேன். அகிராவின் ரசிகர்கள் அப்படத்தின் பின்னணி இசையைப் பாடியபடி திரைப்படம் துவங்கக் காத்திருந்தது முதல், மிகமுக்கியமான காட்சிகளில் ஆஹா போட்டு ரசித்ததை நான் முதல் முறையாக அனுபவித்தேன். இதை இங்கு சொல்லக்காரணம், நம்பியின் முதல் அறிமுகம் இப்படிப்பட்ட ஒத்த ரசனையுள்ள நண்பர்களுடன் தொடங்கி இருந்ததை நாம் இக்கட்டுரைகள் வழியாக அறிய முடிகிறது. திரை ரசனையை ஒரு உணர்ச்சிகரமான விவாதமாக மாற்ற இது உதவியிருக்கிறது. திரைப்படங்கள் பற்றி முதல் வகையான புரிதலை இவை நமக்கு உண்டாக்குகிறது. 

திரைப்படங்களை பார்ப்பதோடு நம் ரசிப்பு நின்றுவிடுவதில்லை. அப்படத்தைப் பற்றி நாம் மேலதிகமாக அறியும்போது நம் ரசனை ஆழமாகிறது.  திரைப்படங்களுக்கு இணையாக  திரைப்படம் பற்றிய புத்தகங்களும், தேர்ந்த கலை விமர்சகர்களின் குறிப்புகளும் இவ்வாசிப்பை ஆழமாக்குகின்றன. இவை எதுவும் திரைப்படம் குறித்து மட்டும் அமைவதில்லை. ஒரு காலகட்டத்தின் சமூக எண்ண ஓட்டம், தொழில்நுட்பங்கள், பின் யுத்த காலத்தின் பொருளாதார விளைவுகள், சமூகத்தின் அற வீழ்ச்சிகள், விழுமியங்களின் மாற்றங்கள் போன்ற பல இயக்கங்களின் கூட்டு பாதிப்பு திரை ரசனையில் கலந்திருந்தது.  இவை அனைத்தும் பார்வையாளனோடு முயங்குகிறது. நம்பி இதற்கான பின் புலத்தை ஒவ்வொரு கட்டுரையிலும் அளிக்கிறார்.  உணர்ச்சிகரமான அறிதலுடன் தொடங்கிய பின்னர் அவர் திரைப்படம் சார்ந்த விமர்சனங்கள், இயக்குநர்களின் திரை மொழி குறித்த மேலதிகமானத் தேடலைத் தொடங்குகிறார். அவர் ஒரு புத்தகத்தோடு நிறுத்துவதில்லை. திரைப்படம் குறித்து வெளியாகிய இதழ்கள், நேர்காணல்கள் என அவர் தேடல் விரிவடைய நாமும் ஆழமான புரிதலை நோக்கி நகர்கிறோம்.  திரைப்படத்தின் பின்புலமும், திரைமொழியின் சாத்தியங்களும் இணையும்போது நாம் ஒரு படத்தை மட்டும் அறிவதில்லை , ஒரு காலகட்டத்தின் திரை மொழியை நாம் அறிகிறோம். அந்த அலை உருவாக்கிய பிற தாக்கங்கள் நம் முன் விரிகின்றன.  தனிப்பட்ட முறையில்  திரைப்பட மொழி பற்றி பல  விஷயங்களை நம்பியின் கட்டுரைகள் கற்றுக் கொடுத்துள்ளன. அவர் அறிமுகப்படுத்தும் இயக்குனர்கள் திரைப்பட ரசிகர்களுக்கு இடையே பிரபலமாக இருந்தாலும் தமிழில் முதல் முறையாக அவர்களது திரை மொழியும், வளர் சிதை ரசனை மாற்றங்களும் இக்கட்டுரைகள் படம் பிடித்து காட்டுகின்றன.

*

“புது அலையின் ஒரு முக்கியமான தொடக்கப் புள்ளி நீர் அருகே அமைந்தது பொருத்தமாகவே இருக்கிறது. மத்தியத் தரையில் கடலுக்கும் Etang de Thau என்ற காயலுக்கும் இடையே உள்ள ஒரு சதுப்பு நிலத்தில் அமைந்திருக்கும் La Pointe Courte என்ற கிராமமே படத்தின் களம். ஒரு மரப்பட்டையின் கிளோஸ் அப் ஷாட்டின் பின்னணியுடன் பெயர்கள் காட்டப்படுகின்றன. பின்னர் காமிரா மெதுவாக நகர்கையில் மரப்பட்டையின் வட்டங்கள் பாலைவன மணற்குன்றுகளின் வரிகளாக விரிந்தபின், காமிரா ஒரு மர நாற்காலியின் மேல் பகுதியை விட்டு விலகிச் செல்கிறது”

திரை வரலாற்றின் பின் புலத்தில் இருந்து மெல்ல திரை மொழியின் இலக்கணதிற்குள் கட்டுரை நுழைகிறது. கட்டுரையில் வரும் இவ்வரிசை மிக முக்கியமானது. திரைமொழியைப் பற்றி  வாசிக்கும்போது நமக்கு எவ்விதமான அலுப்பும் ஏற்படுவதில்லை.  இக்கட்டம் வருவதற்குள் இயக்குனரும், அவரது பங்களிப்பும் நமக்கு மிக நெருக்கமாக அறிமுகம் ஆகி விடுகிறது. ஒரு தனிப்பட்ட இயக்குனரின் மொழி எப்படி ஒரு புதுவித சினிமா அலையை உருவாக்குகியது எனும் திகைப்பை மொழியால் கடக்க முடிகிறது. ஒரு காட்சியில் நடிகர்கள் மட்டுமல்லாது, அவர்களைச் சுற்றி இருக்கும் பொருட்கள், அவற்றின் மீது குவியும் வெளிச்சமும் நிழலும், சம்பவங்கங்களும் எப்படி அக்காட்சியை உயிர்போடு நமக்குக் காட்டுகிறது என்பதை நம்பி பல பக்கங்களுக்கு விவரிக்கிறார். திரைப்படத்தைப் பார்த்திராத எனக்கு இவ்விவரணைகள் பிரமிப்பை உண்டாக்கின.  வசனங்களுக்கு மட்டுமே முக்கியம் கொடுத்து வளர்ந்த என் திரை ரசனை பல படிகளாக விரிந்தது. படிப்படியாக அவருக்குப் பிடித்த காட்சிகளை அவர் விளக்குகிறார். அவை ஏன் உலக சினிமா ரசிகர்கள் இன்றும் வியந்து பார்க்கும் கலைப்படைப்புகளாகின்றன என்பதை உணர்த்துகிறார். திரை ரசனைக்கு மூன்றாம் வகையான அறிதலை வாசகர்களுக்கு இது அளிக்கிறது.

நம்பியின் கட்டுரைகளில் இது மிக முக்கியமான அம்சம் மட்டுமல்லாது, தமிழில் முதல் முறையாக நிகழ்ந்திருக்கும் அம்சம் என்றும் எனக்குத் தோன்றுகிறது. பல திரை விமர்சகர்கள் தமிழில் இருந்தாலும், ஒரு  திரை மொழியின் சிக்கல்களை பிரித்துக்க்காட்டியதோடு மட்டுமல்லாது அவை எப்படி ஒரு ஆளுமையின் புற சித்தரிப்பாக அமைந்திருக்கிறது என்றும், ஒரு காலகட்டத்தின் ரசனைக்கான அளவீடாக எவ்வாறு மாறியது எனவும் தொகுத்துக் காட்டிய கட்டுரைகளாக இவை அமைந்துள்ளன. நவீன தமிழ் அபுனைவு எழுத்துகளில் இவ்வகைக்கு மாதிரி இல்லை என்றே சொல்லலாம். 

ஒவ்வொரு கட்டுரையையும் மீள வாசிக்கும்போது (ஆம், ஒருசில தவிர அனைத்தையும் முன்னரே வாசித்திருக்கிறேன்) நம்பி கிருஷ்ணனின் ஆழ்ந்த அறிவுத்தேடல் நம்மை ஆச்சர்யப்படுத்தும். திரைப்படங்களை இலக்கிய மேதைகளின் குறிப்புகளைக் கொண்டு அணுகுவதும், இலக்கிய அளவுகோளுக்கு இசையின் நுணுக்கங்களைக் கொண்டு ஆய்வதும் (டால்ஸ்டாய் கட்டுரை), கலை என்பது ஆழ் நதியில் ஒன்று தான், அதன் அலைகள் தான் வெவ்வேறு என்பதை நிரூபிக்கின்றது. அதன் பரிணாமங்களைத் தொகுத்திருக்கும் ஒரு மகா தந்திர உத்தி இந்த நூல்.

நம்பி கிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்.

  • நரி முள்ளெலி டூயட்
  • இலக்கிய திரைப்படக் கட்டுரைகள்
  • ₹450
  • Author: நம்பி கிருஷ்ணன்
  • Publisher: யாவரும் பதிப்பகம்
  • No. of pages: 386
  • Language: தமிழ்
  • ISBN: 9788119568628
  • Published on: 2024
  • Book Format: Paperback
  • Category: கட்டுரை
  • Subject: இலக்கியம், சினிமா

நூறு நூல்கள்

கதைகளை ரசிப்பது எப்படி? கவிப்பித்தனின் சாவடி தொகுப்பின் சில கதைகளின் முடிவுகள்

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.