அயல் சுவை

This entry is part 55 of 72 in the series நூறு நூல்கள்

விஜய இராவணனின் ‘பச்சை ஆமை’ அயல் சுவை பற்றி யோசிக்க வைத்தது. அயல் சுவையைப் பேசுவதால் அல்ல, இந்த நாவலுக்கு பிடி கிடைக்கவில்லை. அயல் சுவையின் வழியே இது இப்படிப்பட்ட கதை என்று வைத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

கதையின் துவக்கம் ஹாங் காங்கில் ஒரு தீவில், சீன தம்பதியினர் டாங்கா இனக்குழுவினரின் படகுகளை ஒரு அசூயை கலந்த ஆர்வத்துடன் விநோதமான விஷயமாக பார்க்கிறார்கள். டாங்கா இனத்தவர்கள் கடலில் வாழ்பவர்கள், மீன்களை விற்க மட்டுமே நிலத்துக்கு வருபவர்கள் (அவர்களது கோவில் ஊரில் இருக்கிறது, திருவிழாவை ஊரில்தான் கொண்டாடுகிறார்கள்). ஆனால் அவர்களது படகு வீடுகள் கரையோரம் ஒதுங்கி நிற்கின்றன. அவர்களையும் அவர்களது வாழ்வு முறையையும் பார்க்க சுற்றுலா பயணிகள் வருவது, அவர்களுக்கு சுற்றிக் காட்டி காசு வாங்கிக் கொள்வது என்பதும் ஒரு நடைமுறையாக உருவாகி வருகிறது.

நாவலின் நாயகன் ஆ கி கதையின் துவக்கத்தில் ஒரு சிறுவன். அவன் ஆர்வமாக சீனத் தம்பதியினருடன் பழகுகிறான். அவர்களுக்கு இவர்களது படகுகள், படகு வீடுகள் அயல் சுவை அளித்தால் அவனுக்கு அவர்களது காமிரா, ஹோட்டல் அறை போன்றவை அயல் சுவை அளிக்கின்றன.

ஒரு ப்ளோவில் இங்கு நாம் நுகர்வுக் கலாச்சாரத்தையும் முதலியத்தையும் போகிற போக்கில் சொல்லிச் செல்லலாம் – சுற்றுலா பயணிகள் அயல் சுவையை நுகர வருபவர்கள். வந்தோம், பார்த்தோம், காசு கொடுத்தோம் என்பதோடு கணக்கு தீர்ந்து விடுகிறது. ஆனால் காசு வாங்கும் இடத்தில் இருப்பவர்களது அயல் சுவை நுகர்வு தொடர்புடையது அல்ல – அது அடிப்படை வாழ்வு சார்ந்தது, விழைவு.

ஆ கி இப்படிப்பட்ட விழைவால் தன் நீருக்கும் பண்பாட்டுக்கும் அன்னியமாகிறான். கடல் உயிர்களைக் கொள்வதாய் இருக்கிறது. டாங்கா இனக்குழுவினர் கடலில்தான் வாழ்கிறார்கள் என்றாலும் அவர்களது வீடு-படகுகள் கரையோரம் ஒதுங்கி நிற்கின்றன. நிலத்தில் அரசாங்கம் கட்டிக் கொடுக்கும் கிடைக்கும் வீடு அவர்களுக்கு வசீகரமாக இருக்கிறது. அவனது அம்மாவின் கடல் நினைவுகள் எல்லாம் துக்கமானவை. மசூ என்று சொல்லப்படும் கடல் தெய்வம் கூட தனது சகோதரனை கடலுக்கு பலி கொடுத்தவள்.

சுற்றுலா பயணிகளாலும் மண்ணின் வளங்களாலும் வசீகரிக்கப்படும் அவன் கடலையும் தன் டாங்கா மக்களையும் நிராகரித்து மலேஷியா செல்கிறான். கடல் அளிப்பவை எதுவும் கதையில் கொண்டாடப்படுவதாய் நினைவில்லை. தனது அறுபது வயதில் டூரிஸ்ட் கைடு-படகோட்டியாகதான் வாழ்கிறான், அயல் வாழ்விலும் ஒன்ற முடியாமல் தன் வாழ்வுக்கும் திரும்ப முடியாமல் தத்தளிக்கிறான்.

சுற்றுலா பயணிகள் இல்லாத உலகில் அவன் தன் படகு வீடுகளை வெறுத்திருப்பானா? மண்ணில் வாழ்பவர்களுக்கும் நீரில் வாழ்பவர்களுக்கும் உள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வு, வளர்ச்சி வேறுபாடுகள் அவனுக்கு தன் வாழ்வின் மீது விலக்கம் அளிக்கிறது. சுற்றுலா இடத்தை மாற்றி அதன் பண்பாட்டை சிதைக்கிறது என்பதை ஆ கி என்ற ஒருவனின் வாழ்வைக் கொண்டு அறிகிறோம்.

இதெல்லாம் நன்றாக இருக்கிறது என்றாலும் கொஞ்சம் மெடாவாக யோசித்தால் இந்த நாவலும் அயல் சுவையை உருவாக்கி அதை நுகர்வுப் பொருளாக்குகிறது என்பதை அங்கீகரிக்க வேண்டும்.

அயல் சுவையைக் கட்டமைப்பதில் மூன்று தன்மைகள் உண்டு:

  • வாழ்க்கை முறை விவரணைகள்
  • தொன்மங்கள், நம்பிக்கைகள்
  • வட்டார வழக்கு

எல்லாருக்கும் நம்பிக்கை உண்டு. ஆனால் கதைகளில், நமக்கு பழக்கப்பட்ட மனிதர்களின் நம்பிக்கைகள், கதைகளில் அதிகம் பேசப்பட்டவர்களின் நம்பிக்கைகள், ஆச்சரியத்தோடு அல்லது வாழ்வுக்கு அர்த்தம் அளிக்கும் வகையில் விவரிக்கப்படுவதில்லை. நம்பிக்கையை விட அவநம்பிக்கை அதிகம் இருக்கலாம். அர்பன் மித்கள் பேசப்படும்போது கட்டுக்கதையாகவே எடுத்தாளப்படுகின்றன.

ஆனால் அறிமுகமில்லாத வேறு மனிதர்களை விவரிக்கும்பொது அதில் அவர்களுடைய நம்பிக்கைகள் அதிகம் இடம் பெறுகின்றன. அதிலும் அவர்களின் தொன்மங்கள். தம்மளவில் அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் கட்டுப்படுபவர்கள், பிறர், பெரும்பாலும் காலத்தாலோ கல்வியறிவாலோ பின்தங்கியவர்களது தொன்மங்களைப் பேசும்போது அவை குறித்த-, “எனக்கு இந்த நம்பிக்கை இருந்தால்?”- தமது உணர்வுகளைத் திணிக்கிறார்கள். அயல் சுவை அளிப்பதில் தொன்மங்களின் இடம் மிக முக்கியமானது.

உள்ளபடியே இருக்கும் வேறுபாடுகளை விவரிக்கும்போதும்,அந்த விவரணையால், அவர்கள் வேறு என்ற உணர்வு வலுக்கிறது. பழகிப்போன பண்பாட்டில் வாழ்க்கை முறை விவரிக்கப்படுவதில்லை. பொதுப் புரிதல்கள் இல்லாத இடத்தில் வாழ்க்கை விவரணைகள் தேவைப்படுகின்றன. அவை நம்மைப் போன்றவர்கள் இவர்கள் என்ற உணர்வை அளிக்கும் போதே இவர்கள் வேறு என்ற உணர்வையும் அளிக்கிறது.

அன்றாட செயல்களின் விவரணைகளும் தொன்மங்கள் மற்றும் நம்பிக்கைகளும் கூடும்போது அயல் தன்மை வலுவடைகிறது. நம்பிக்கைகள் நம்மைப் பிறரிடமிருந்து வேறுபடுத்துகின்றன.

இந்தக் கதையில் வட்டார வழக்கு இல்லை. ஆனால் அது இருக்கும் கதைகளில் வட்டார வழக்கு ஒரு லென்ஸ் போல் செயல்பட்டு அந்நிய வாசனையை அளிக்கிறது, மண்ணின் மைந்தர்கள் கதையாய் இருக்கும் போதும். அப்படிப்பட்ட கதைகள் நம்மைப் போன்றவர்கள் கதைகளாக இருந்தாலும் அவை நம் கதைகள் அல்ல.

ஆ கி கடலில் வாழும் இனத்தைச் சேர்ந்தவன். அவனது தோற்றமே அவனைக் காட்டிக் கொடுத்து விடுகிறது. நிலத்தில் வாழ்பவர்கள் அவனை தண்ணீர் பாம்பு என்று அழைப்பது அவனை ஆத்திரப்படுத்துகிறது. ஒவ்வொரு முறையும் அவன் அடிக்கப் போகிறான், ஒரு முறை அவன் திறம்படச் செய்யும் வேலையே இதனால் பறிபோகி அவன் கடலுக்குத் திரும்ப நேர்கிறது.

தண்ணீர் பாம்பு பற்றிய கதைதான், பச்சை ஆமை என்று தலைப்பு வைத்திருப்பது எதைக் குறிக்கிறது?

பச்சை ஆமை காலமின்மையை குறிக்கிறது. அது நூறாண்டுகள் வாழும் என்று சொல்லப்பட்டாலும் அது ‘கடலின் மூதாதை’. அது அபூர்வமானது. நாயகனின் அப்பா மட்டும்தான் அதைப் பார்த்திருக்கிறார் என்பதால் அது அவனையும் அவனது தந்தையையும் இணைக்கிறது. அதன் பார்வை ஒரு ஆசிர்வாதம் போல் இருக்கிறது. அதைப் பார்த்தபின் தான் அவன் கடல் எல்லாவற்றையும் சுத்தமாக்கி விடும் என்று ஆசுவாசப்படுகிறான்.

பச்சை ஆமைக்கு மாற்றாய் வருவது தண்ணீர் பாம்பு. அவன் தண்ணீர் பாம்பை வெறுக்கிறான். நம் வாழ்வு மிகவும் சாதாரணமாக, பிறரால் இழிவுபடுத்தப்படுவதாக, அதனால் நமக்கே ஒவ்வாததாக இருக்கும்போது, அயல் சுவை நம் காயங்களை ஆற்றுகிறது. தண்ணீர் பாம்பு என்று ஏளனம் செய்யப்படும் நாயகனுக்கு பச்சை ஆமையின் தொடுகை ஒரு மீட்சி அளிக்கிறது.

தொன்மம் யதார்த்தத்தின் மாற்று அளிப்பது.

நம்மால் மாற்ற முடியாத யதார்த்தத்தை எதிர்கொள்ள நம்பிக்கைகள், தொன்மங்கள் உதவுகின்றன. கடல் தெய்வம், கடலுக்கு மூதாதையான நூறாண்டுகள் வாழும் ஆமை போன்றவை மரணத்தோடு நாளும் போராடும் கடலாடிகளின் வாழ்வில் ஒரு வேர்ப் பிடிப்பு அளிக்கின்றன. எழுத்துக்கும் வாசிப்புக்கும்கூட இது பொருந்தும்.

நூறு நூல்கள்

கனவு மழை புத்தக அறிவிப்பு – மாயக் குரல்

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.