அதிரியன் நினைவுகள் – 45

This entry is part 44 of 48 in the series அதிரியன் நினைவுகள்

மூலம் : மார்கெரித் யூர்செனார்

தமிழாக்கம் : நா.கிருஷ்ணா

எனது பொறுமை வீண்போகவில்லை ; பலனளிக்க ஆரம்பித்திருக்கிறது. என்னுடைய துன்பங்களும் தற்போது குறைவு, விளைவாக, வாழ்க்கை இனிக்கிறது. எனது மருத்துவர்களிடம் கோபித்துக்கொள்வதில்லை. முட்டாள்தனமான அவர்களுடைய சிகிச்சைமுறைகள் என்னைக் கொன்றிருக்கின்றன. ஆனால் அம்மனிதர்களின் நோய்பற்றிய அனுமானத்திற்கும் பாசாங்குப் பெருமைக்கும்    ஒருவகையில் நாம் அனைவருமே பொறுப்பு. நாம் அனைவரும் துன்பத்திற்கு  அஞ்சுபவர்கள் என்பதை மருத்துவர்கள் அறிந்தவர்கள். எனவேதான் அவர்கள் நம்மிடம் பொய்சொல்லவேண்டியுள்ளது.  முன்புபோல அவர்களிடம் சண்டைபிடிக்க எனக்கும் சக்தியில்லை. என்னால் மிகவும் நேசிக்கப்பட்ட பிளட்டோரியஸ் நெபோஸ்(Platorius Nepos) எனக்கு நம்பிக்கைத்  துரோகம் செய்தார் என்பதற்கு உறுதியாக ஆதாரமிருந்தும், இப்பிரச்சினையில் அவர் மனதை நோகடிக்க விருப்பமின்றித் தவிர்த்தேன்; தண்டிக்கவில்லை.  உலகத்தின் எதிர்காலம் பற்றியும் எனக்குக்  கவலையில்லை ; அதுபோல உரோமாபுரியில் அமைதி எத்தனை காலம் நீடிக்கும் என்பது பற்றிய  கவலையோ, அதன் பொருட்டு கணக்கிடும் முயற்சிகளோ இல்லை ; அத்தகைய பொறுப்பைக்  கடவுள்களிடம் ஒப்படைத்து விடுகிறேன். இப்படிச் சொல்வதால் மனிதர் நீதியிடமிருந்து வேறுபட்ட கடவுள்கள்  நீதியிடத்திலோ அல்லது மானுட ஞானத்தின் மீதோ நான் கூடுதல் நம்பிக்கை கொண்டிருக்கிறேன் எனப் பொருள்கொள்ள வேண்டாம். முரண்களில் உண்மையுண்டு.   வாழ்க்கை மிகக் கொடியது, நமக்கது தெரிந்த உண்மை. எதனால் இப்படித் துல்லியமாகச் சொல்லமுடிகிறதெனில், மனிதகுலத்தின் நிலைமை குறித்து எனக்குப் பெரிதாக எதிர்பார்ப்புகள் இல்லை; ஆயினும் அவர்களுடைய சந்தோஷ நாட்களும், அரைகுறையான முன்னேற்றமும், நற்பணிகளில் திரும்ப இறங்குவதும் அல்லது விட்டதைத் தொடர்வதும் அல்லது அதுபோன்ற முயற்சிகளும் அற்புதமானவை ;  இவை  நமக்கு நேர்ந்த கணிசமான கேடுகளையும், தோல்விகளையும் ;  நம்முடையை அக்கறையின்மையையும், தவறுகளையும் ; போதுமானவகையில் ஈடுகட்டக்கூடியவை. பேரழிவுகளும் இடிபாடுகளும் தவிர்க்கமுடியாதவை ;  அதுபோல ஒழுங்கின்மையும்  வெற்றி பெறும், அதனாலென்ன ? அவ்வப்போது ஒழுங்கும் வெற்றி பெறும்; இழப்பைச் சரிசெய்யும்.  இரண்டு யுத்தங்களுக்கிடையே  அமைதி மீண்டும் திரும்புவதுபோல. சுதந்திரம், மனிதாபிமானம், நீதி போன்ற சொற்கள்-  அவற்றுக்கு நாம் கொடுக்க முயற்சித்த  பொருளை, பல் வேறு இடங்களில் மீண்டும் அவை பெறும். புத்தகங்கள் அனைத்துமே அழிந்துவிடாது. உடைந்த நமது சிலைகள் சரி செய்யப்படும். நம்முடைய இன்றைய  குவிமாடங்கள், தூபிகள், முகப்புகள் ஆகியவற்றிலிருந்து புதிய புதிய குவிமாடங்களும்,  தூபிகளும் பிறப்பெடுக்கும். ஒரு சில மனிதர்கள்  சிந்தனை, செயல், உணர்வு ஆகியவற்றில் நம்மைப்போலவே இருப்பார்கள். இந்த விட்டுவிட்டுத் தொடர்கிற அழியாத தன்மையில், ஒழுங்கற்ற இடைவெளியில் பல நூறு ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ள இத்தொடர்ச்சிகளை நான் கணக்கிடத் துணிகிறேன். 

இவ்வுலகம் என்கிற பேரரசைக் காட்டுமிராண்டிகள் எப்போதாவது கைப்பற்ற நேரிட்டாலுங்கூட  அவர்களுக்கும்  நம்முடைய சில வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய நெருக்கடி ஏற்படும். மித்திரா(Mithra) சமயத்தின்  பூசாரியான ஒரு பஸ்டோஃபோர்(pastophore) அல்லது ஒரு கிறித்துவப் பாதிரியார், இவர்களில் யாரேனும் நாளை  உரோமிலுள்ள நம்முடைய பிரதான மதக்குருவின் இடத்தைப் பிடித்துவிடுவார்களோ என ஷப்ரியாஸ் கவலைப்படுகிறார்.  துரதிர்ஷ்டவசமாக அந்த நாள் வந்து விட்டால், வத்திக்கான்  கரையில் உள்ள எனது வாரிசு ஒரு துணைவட்டத்தின் அல்லது பிரிவினைவாதிகளின் குழுத் தலைவராக இருப்பதை நிறுத்திவிட்டு, அதிகாரத்தின் உலகளாவிய நபர்களில் ஒருவராக மாறுவார். நம்முடைய ஆவணங்கள், அரண்மனைகள் அனைத்திற்கும் இனி அவர் வாரிசு, அனைத்தும் அவருடைய சொத்து. நாம் எதிர்பார்த்திருக்க மாட்டோம், முற்றிலும் அவர் வேறாக இருப்பார்.  நித்திய உரோமின் இத்தகைய மாற்றங்களுக்கு எனக்குப் பூரண சம்மதம் ; அமைதியாக ஏற்றுக்கொள்வேன்.

மருந்துகளால் எனக்கு எவ்விதப் பயனும் இல்லை என்கிற நிலைமை. கைககால்களில் வீக்கம் கூடியிருந்தது. இப்போதெல்லாம் படுத்து உறங்குவதில்லை ; உட்கார்ந்தபடித் தூங்குகிறேன். மரணத்தின் நன்மைகளில் ஒன்று, அது மீண்டும் படுக்கைக்கு நம்மை அழைத்துச் செல்வதாகும். ஆண்ட்டொனைனஸ(Antoninus) ஆறுதல் படுத்துவது இப்போது என் கையில்.   எனது பிரச்சினைக்கு, மரணம் சரியானத் தீர்வாக  இருக்குமென்கிற எண்ணம் வெகுநாட்களாக  என்னிடத்தில் இருப்பதை அவருக்கு நினைவூட்டுகிறேன். வழக்கம்போல எனது விருப்பங்கள் கடைசியில் பூர்த்தியாகின்றன ;  ஆனால், அவை நினைத்ததைக் காட்டிலும் மெதுவாகவும், வெளிப்படையின்றியும்   நிறைவேறுகின்றன. நோயில் வாடியபோதும் என்னை இறுதிவரைத் தெளிந்தமனிதனாக  அது விட்டுவைத்திருப்பதில் எனக்கு  மகிழ்ச்சி. தவிர முதுமை அதன் சோதனைக்கு உட்படுத்தாமல் வைத்திருப்பதோடு அதற்கென்றுள்ள  கடினத்தன்மை, விறைப்பு, வறட்சி,  மற்றும் மிதமான ஆசைகள் ஆகியவற்றிலிருந்து என்னை விடுவித்திருப்பதும் சந்தோஷத்திற்குரிய  விஷயம். என் கணக்கீடுகள் சரியாக இருக்குமெனில்,  இன்றைய தினம் நானடைந்த வயதில்தான்  என் தாயும் இறந்தாள். என் தந்தை நாற்பது வயதில் இறந்தார் ; அவ்வயதோடு அவ்வயதின் பாதி ஆண்டுகளை ஏற்கனவே நான் கூடுதலாக வாழ்ந்துமுடித்துள்ளேன். அனைத்தும் தயார் ; உதாரணத்திற்கு சக்கரவர்த்தியின் ஆத்மாவைக் கடவுள்களிடம் சுமந்து செல்ல இறுதிச் சடங்கிற்குக் கழுகு ஒன்று வேண்டும், அப்பறவைகூட இருப்பில் உள்ளது. என்னுடைய கல்லறை மண்டபத்தின் கூரையில் தற்பொழுது கப்பிரெஸ்கள் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன ; நோக்கம், நடுவானில் ஒரு கருப்பு பிரமிட்டை எழுப்புதல். இப்பணி வெப்பம் தணியாத என்னுடலின் சாம்பல் அங்கு எடுத்துச்செல்லப்படும் நேரத்தில் முடிந்துவிடும். ஆண்ட்டொனைனஸிடம்  சபீனாவை பின்னர் அங்குக் கொண்டு செல்லும்படிக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். அவளது மரணத்தின் போது உரிய தெய்வீக மரியாதைகளை அவளுக்கு வழங்கவில்லை ; நான் புறக்கணித்திருந்தேன் ; அம்மரியாதைகள் அவளுக்குச் சொந்தமானவை ; அவற்றை அவளிடம் சேர்ப்பதுதான் முறை. இழைத்த தவறை திருத்திக்கொள்ளுதல்  தப்பான செயலல்ல. பிறகு, ஏலியஸ் சீசரின் எஞ்சியவற்றை என்னருகே வைக்கவேண்டும் என்பதும் என்னுடைய விருப்பம். 

அவர்கள் என்னை பையெ(Baiae) நகரத்திற்கு  அழைத்துச் சென்றனர். ஜூலை மாத வெப்பம்,  பயணம் கடினமாக இருந்தது, ஆனால் கடலோரப்பகுதிகளில், சங்கடங்களின்றிச் சுவாசிக்கிறேன். கரையோரம்  கசங்கிய பட்டுப்போல  அலைகளின் மெல்லிய முணுமுணுப்பும்  வருடலும், உடன்   இளஞ்சிவப்பில் நீண்ட ஒளிரும் மாலை, சுகமான அனுபவம். ஆனால் நான் பிடித்திருக்கும் இப்பலகைகள்  என் கைகளை  ஊன்ற ; இருந்தும், அவை நடுங்குகின்றன. ஆண்ட்டனைஸுக்கு ஆள் அனுப்பப்பட்டது,  தூதுவன் ஒருவன் உரோம் நகருக்குச் சிட்டாய்ப் பறந்தான். குதிரை போரிஸ்தெனெஸ் குளம்படிச் சத்தம் காதில் விழுகிறது,  நான்கு கால் பாய்ச்சலில்  குதிரைவீரன் திரேஸ்….

எனக்கு மிகவும் வேண்டப்பட்ட சிறு மனிதர்கூட்டம் பதற்றத்துடன் எனது கட்டிலை நெருங்குகிறது. ஷப்ரியாஸ் என் நிலைகண்டு வருந்துகிறார். வயதான மனிதர்களின் முகச்சுருக்கங்களோடு கண்ணீர் இசைவதில்லை. வழக்கம்போல அழகான செலெர் முகத்தில்  விசித்திரமானதொரு அமைதி. ஒரு நோயாளியின் கவலையை, சோர்வை அதிகரிக்கக்கூடிய எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதுபோல என்னைக் கவனித்துக்கொள்வதில் அவன் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்கிறான். ஆனால் டையோடீமஸ் அழுதுகொண்டிருந்தார் ; அவருடைய தலை தலையணைகளில் புதைந்திருந்தது. அவருடைய எதிர்காலத்தை உறுதி செய்தேன். அவருக்கு இத்தாலி பிடிக்காது. அவருடைய கனவு கடாராவுக்குத் திரும்பி நண்பர் ஒருவருடன் இணைந்து பேச்சாற்றலுக்கென்று ஒரு பள்ளியைத் திறக்கவேண்டும் ; தன்னுடைய கனவை அவர் நனவாக்கக் கூடியவர். என்னுடைய மரணத்தினால் அவர் இழக்கப்போவது ஒன்றுமில்லை.   ஆயினும், அவருடைய மெல்லிய தோள், அணிந்திருந்த அங்கியின் மடிப்புகளின்கீழ் நடுங்கிக் கொண்டிருந்தது. என்னுடைய விரல்களில் அவருடைய கண்ணீரின் மென்மையை உணர்கிறேன். அதிரியன் இறுதிமூச்சுவரை  மனிதாபிமானத்துடன் நேசிக்கப்பட்டான்.

என் அன்பிற்குரிய ஆத்மா, நீ அளவிற் சிறியவன் ; நீரிலும் மிதப்பாய், காற்றிலும் அலைவாய். எனது உடலின் துணை மட்டுமல்ல நல்விருந்தும் ஆவாய்….. உன்னுடைய பழைய விளையாட்டுகளை நீ துறக்கவேண்டும்;  இந்த ஒளியிழந்த, கடினமான, வெறுமையான இடத்தில் இனி நீ வாசம் செய்யவேண்டும். சற்றுப்பொறு ; அவசரப்படாதே ;  அதற்கு முன்பாக நம்முடைய பழகிய நதிக்கரைகளையும், இனி ஒருபோதும் காணச்சாத்தியமற்ற பொருட்களையும் இருவரும் சேர்ந்து காண்போம்…விழிகளிரண்டும் திறந்திருக்க மரணத்திற்குள் பிரவேசிக்க முயற்சிப்போம்……

முற்றும்

அதிரியன் நினைவுகள்

அதிரியன் நினைவுகள் – 44 “அதிரியன் நினைவுகள்” –  குறிப்புகள் – 1

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.