றெக்கை – அத்தியாயம் 18

This entry is part 18 of 18 in the series றெக்கை

இந்தியச் சாயலில் ஒரு பேரிளம்பெண் நடு ராத்திரிக்கு எஸ்பேனிய பெருநிலத்துத் தலைநகரில் மோட்டார் கார் ஓட்டிப் போக, பின் வரிசையில் றெக்கை முளைத்து நீண்டு வளர்த்த இரண்டு பெண்கள் அம்மா, சிறு மகள் வடிவில் அமர்ந்திருக்க காருக்கு வலது வசத்தில் ஒரு நல்ல கருப்பு வயசனனும், இடது வசம் ஒரு நல்ல கருப்பு முத்தச்சியும் ஓடி வந்திருக்கவுமாக சர்ரியல் காட்சி விரிந்திருக்கும். 

இறகு முளைத்த பேரிளம் பெண் காரோடு ஓடி வரும் கிழவியைப் பார்த்து சொல்கிறாள் –

 எனக்கு இப்போ இடுப்பு வலி காணலே கேட்டேளா. அக்கச்சி இஸ்ஸி பதுக்கெ வாகனம் ஓட்டிச்சால் மதியாகுமல்லே? 

மலையாளம் பேசுகிற சுந்தர பெண்குட்டிகள். தினசரி தலை குளித்த, மார்பில் பாற்கடல் ஏந்திய உதடு கனத்த வனிதைகள் எல்லோரும் தேவதைகள்  என்பது எவ்வளவு வாஸ்தவமோ அத்தனைக்கு மலையாளம் பேசுகிற தேவதை மற்றதொரு வினோதம் என்று நிர்மலா நினைத்தாள்.

ஊமை வலி என்று ஓடிக் கொண்டே நிர்மலாவிடம் சொல்கிறாள் முத்தச்சி. நிர்மலா ஆமோதிக்கிறாள்

அப்போ மேல் வீடு போக வாணம் 

முத்தச்சி கிரயோல் மொழியில் நிர்மலாவைக் கேட்கிறாள். 

இந்தப் பெண் யாரென்றே தெரியாமல் நம் வீட்டில் படியேற்றுவது அவ்வளவு சரியாகத் தெரியவில்லை நிம்மி எஜமானியம்மா.

 ஆதரவாக கார் சக்கரம் காலில் படாமல் விலகியும் ஒட்டியும் ஓடிவருகிறாள். 

அல்பி எஜமானீடம் உத்தரவு வாங்கினால் நல்லா இருக்கும் என்று சொல்லிவிட்டு காற்றுக்கு எதிரே ஒச்ச எழுப்பி கூறுகிறாள் –

 கடவுளுக்கு வந்தனம் நான் சரியாக பேசலை மன்னிக்கணும் 

 கார்ச் சக்கரத்தில் ஒரு வினாடி கால் வைத்து வண்டி ஓடுவதை தடுமாற வைத்து சமநிலைக்கு காரைத் திருப்ப கிழவரோடு மறுபக்கத்திலிருந்து கார்க் கதவை இறுகப்பற்றி தரைக்குக் கொண்டு வருகிறாள் முத்தச்சி. 

அசாதரணமான செயல் புரிந்தது குறித்த  பிரக்ஞையற்று சிரித்தபடி காரோடு ஓடி வருகிறாள் அவள்.

சித்திரம் : ஷங்கரா

இதிலும் ஒரு ரசம் உண்டு

நிர்மலா மனதில் அல்பி சொல்லிச் சிரிக்கிறான்

. அவனுக்கு காளை மாடு மூத்திரம் போவதை நின்று பார்ப்பது கூட ரசமானது தான்.

ஹட். பொண்ணுகள் ஒண்ணுக்கு போகிற இடத்திலே உனக்கு என்ன வேலைடா பொறுக்கி ஜர்மானியா.

நிர்மலா சிரித்து உடனே சிரிப்பை அடக்கிக் கொள்கிறாள். 

ஒரு விதத்தில் முத்தச்சி சொல்றதும் சரிதான், புதுசாக அதுவும் பூர்ணகர்ப்பிணியாக வீட்டில் தங்க வரும்போது க்வாரண்டின் செய்வது சரியான காரியம்.  

 கார் வீட்டு வாசலில் நின்றது. 

பேரிளம்பெண் நிர்மலாவையும் முத்தச்சியையும் கையெடுத்து வணங்கி, அக்கச்சி, முத்தச்சி ரெண்டு வியக்திகளும் என்னை காப்பாற்றணும்..என்று சொல்லியபோது சிறுமி றெக்கை விரித்தபடி நாலடி பறந்து தெருமுனைக்கு போக, தெருநாய்கள் பலமாக திட்டி அவளை கார் பக்கம் விரட்டின. 

அடுத்த வினாடி வெண்சிறகு மறைந்துபட அவளோர் ஓநாயாகி பற்களை வெளியே நீட்டி பக்கத்தில் குரைத்தபடி இருந்த தெருநெய் ஒன்றை கழுத்தில் கடித்து தட்சணம் உயிருண்டோ என்று அங்கே இருந்த மனுஷர்களும், நாய்களும் – பேரிளம்சிறகுப் பெண் தவிர – வியப்பும் பயமுமாக உறைந்து போக வைத்தன.

 ஒரே விநாடியில் மறுபடி சிறகுச் சிறுமியானாள் அவள். முத்தச்சி பேரிளம்பெண்ணை இரு கை கொண்டு தூக்கிப் போக வாசல்பூட்டு அதைப் பூட்டி வந்து சாவியை எங்கோ கைமறதாக வைத்து விட்டார் என்று தெரியலானது. ஒரு ஐந்து பூந்தொட்டியில் இன்று அதிசயமாகப் பூத்த கருப்பு ரோஜாக்களின் இடையே சாவி கிடைத்தது.

அக்கச்சி, சின்னக்குட்டிக்கு விசக்கும். தய்வாயிட்டு.வாசல் கதவு பக்கம் நின்றிருந்த முத்தச்சன் சொன்னார் -அடுப்பு பத்த வைக்கிற நேரம் இல்லையே இது, ஆம்மா.பழ வர்க்கம் சிலது எடுத்து வரட்டா, 

அவன் உள்ளே பார்க்க, முத்தச்சி கோதுமை உப்புமா கிண்ட ஆரம்பித்திருந்ததை கண்டார்.

 அஞ்சு நிமிஷம் உப்புமை கிண்டியாச்சு,டாக்டர் எஜமானி சாப்பிடலாம் எல்லோரும்.

சின்னப்பெண் வயிறு நிறைய உண்டாள். பேரிளம்பெண் அரைக் கரண்டி சாப்பிட்டிருந்தால் அதிசயம்.. சாப்பிட்ட உடனே உறங்க கூடாது இந்த எமாற்று பிரபஞ்சத்துலே சின்னா எழுந்து உட்காரு சமத்தில்லையோ. பேரிளம்பெண் சின்னவளிடம் சொல்ல, தாங்க முடியாது உறக்கம் கண்களை தழுவ அச்சிறுmi நித்திரை போனாள்

. ’உங்க ஊர்லே எல்லாம் கிண்டுவீங்களா? முத்தச்சி ஒரு செப்புத் தொட்டில் மிச்ச சொச்சமிருந்த உப்புமாவை எதிர்பார்த்திருந்த முத்தச்சனிடம் கொடுத்து விட்டு வந்தாள். 

நிர்மலாவும் முத்தச்சியும் சாப்பிட அக்கரையாக உணவு கொள்ள, இரண்டு விரலால் பிடித்து வாயில் இட்டு திரும்ப தட்டில் போட்டு அந்த பேரிளம்பெண் தீனி கொள்ளுதல் என்ற சடங்கை ஒரு மாதிரி நிறைவேற்றிக் கொண்டிருந்தாள்.  

நிர்மலா அவளைப் பார்த்து சிரித்தபடி சொன்னாள் – ஒரு டாக்டர் என்ற முறையில் சொல்றேன். சாப்பிட்டா உடம்பு சதைபோட்டுடும்னு ஒண்ணும் தின்னாமல் பட்டினி கிடக்கிற சீர்கேடு ஃபிரான்ஸ்லே அதிகம் ஆச்சே. 

நிர்மலா அந்த பேரிளம்பெண்ணை எப்படியோ  மெலிந்த பாரீஸ் அழகிகளோடு ஒன்றாகிப் பார்க்கத் தோன்றியது தெரியவில்லை. 

தங்கச்சி நான் பாரீஸிலிருந்து வரவில்லை.  ஸ்பெயினில் வசிப்பவளும் இல்லை. சொல்லப் போனால் இந்தக் காலத்தவளும் இல்லை. இன்னம் கூடச் சொன்னால், இந்த பிரபஞ்சத்தில் உங்களைப் போல் ஜீவித்திருப்பவள் இல்லை. மாற்றுப் பிரபஞத்தவள். என் மகளும் தான். உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். என் மகள் என் தாய் தான். எங்கள் பிரபஞ்சத்திலவள் ஒரு ஒட்டகச்சிவிங்கியாக பிறப்பெடுத்தவள். என் விருப்பப்படி எனக்கு அம்மாவாக உருமாறி நான்கு மாதமாகிறது.கடவுச்சொல்லை மறந்து விட்டாள். இன்னும் ஆறு மாதத்தில் கடவுச்சொல்லை இயக்கி என்னைப்போல் அன்னப்பெண் உருவை நீட்டிக்காவிட்டால் மலைப்பாம்பு ஆகி விடுவாள்’ எங்கள் பிரபஞ்சத்தின் சட்டதிட்டங்கள் வினோதமானவை, இனம் விஞ்ஞையர், என் அக்கச்சி தான் காப்பியமான காய சண்டிகை.    ஆனைத்தீ, கொடிய பசியோடு அலைந்தவள். அமுதசுரபி என்ற மாயத் திருவோடு கொண்டு அப்பசி தீர்த்தாள்

.இதென்ன,  உங்களுக்கு ஊண், உறக்கம், புணர்ச்சி இப்படியான அடிப்படை இன்பம் தோய்க்கக்கூட வசதி இல்லை போலிருக்கே – நிர்மலா சிரித்தாள். வந்தவள் அப்படி இல்லை என்று மறுத்துத் தலையசைத்தாள். 

எங்கெல்லாம் வசந்தவிழா கொண்டாட்டமோ அதாவது இங்கே கார்னிவல் போல் தெரிந்தால் நாங்கள் இறங்கி சுகம் கொண்டாடிவோம். புரியலை என்றாள் நிர்மலா. அது அப்படித்க்kதான் நாங்கள் வேற்றுப் பிரபஞ்சத் தில் இருந்து பறந்து தேடி வந்து இறங்குவோம். யார் என்று தெரியாமலே கூட மதுவருந் தி  பெண் என்றால் ஆண்ஐயும் ஆண் என்றால் பெண்ணையும் கூடி மகிழ்வோம்; 

அதெப்படி என்னை யாரும் மேலே தூக்கிக் கொண்டு போகலியே இதுவரை என்று முத்தச்சி கரிசனத்தோடு வினவினாள். வந்தவள் அது உங்கள் நல்லூழ். வேணுமானால் ஏற்பாடு செய்யட்டா என்று சிரிப்புக்கிடையே தெரிவித்தாள். 

நிர்மலா அவளிடம் வயிறு இன்னொரு வாசாலகமான வலி நேரம் தரும் மாயா என்று அவள் கரத்தில் நாடி பிடித்துப் பார்த்தாள். வழக்கம்போல் தான் இருந்தது. உங்க மாரற்று பிரபஞ்சம் பெயர் என்ன என்று தெரிய வந்தா நாடு முழுக்க,பிரபஞ்சம் முழுக்க உடலாட்டத்திலே தான் எல்லோரும் ஈடுபாட்டோட இருப்பாங்க என்றாள் நிர்மலா. 

அதுதான் இல்லை, இதிலே ஆடினால், அடுத்த இந்திரவிழா அல்லது வசந்தவிழா வரை ஆண்மை உடம்பிலே இருக்காது. அப்புறம் ஒரு வருடம் கழிந்து அடுத்த வசந்தவிழா நேரத்திலே திரும்ப வரும். நடுவில் ஒரு வருடம் பேடி ராஜ்ஜியம் எப்படி நாடளவிலே சரிப்படும்”? 

மாயா நாளைக்கு சந்தைக்குப் போய் இரண்டு வீசை கோவைக்காயும் தக்காளிப்பழமும் வாங்கிவர வேண்டும் என்று ராத்திரி மனைவியோடு முதலாட்டு செய்தபடி பொறுப்புள்ள குடும்பஸ்தன் நினைவு கூருதல் போல், பாப்பாத்தியம்மா மாடு வந்துடுச்சு கட்டினா கட்டு கட்டாட்ட போ என்று விட்டோத்தியாக மாடு மாய்த்து வந்த யாதவன் சொல்வது போன்ற தொனியில் சொல்லிக்கொண்டிருந்தபோது பாதியில் நிறுத்தினாள். நிர்மலாவை நோக்கி கறாராக் கேட்டாள் –

துளும்பத் துளும்ப ஒரு கோப்பை வெள்ளை ஒயின் கிடைக்குமா?முத்தச்சி எழுந்து தரையில் கண்ணாடி கதவோடு வைத்திருந்த சிறிய கேபினட்டைத் திறந்து வெளியே எடுத்தது ஒரு பாட்டில் ஜின்னை. வந்தவள் வேண்டாம் என்று மறுத்து விட்டாள். 

பிள்ளைத்தாச்சி கேக்கிறா என்றபடி இன்னும் தீவிரமாகத் தேடி ஒரு சிவப்பு ஒயின் பாட்டிலை எடுத்தாள். மாயா அதை பற்றிப்பது போல் வாங்கி  மேலிருந்த கார்க்குக்கு உதடு கவித்து வாயுபசாரம் செய்து கார்க்கை கழற்றினாள். 

வலிக்குதே. 

அவள் சத்தம் மிகுத்தி வலியைஉணர்ந்து நிர்மலா கையைப் பற்றிக் கொண்டாள். அல்பி எஜமானுடைய பொருளுக்கு உபச்சாரம் பலமாக நடக்குது எஜமானி என்று க்ரயோல் மொழியில் சொல்ல, நிர்மலா  சிரிப்பு வந்த பாவனையில் உடல்மொழியாக மாற்றி கற்பனை செய்து மனதில் லெவியோடு, லெவியோடுதான் உடையின்றி இயங்குவதாக கற்பனை செய்தாள். மாயா பிரசவ வலியால் துடிக்கலானாள்.  

 தொடரும்

றெக்கை

றெக்கை – அத்தியாயம் 17

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.