அதிரியன் நினைவுகள் – 43

This entry is part 42 of 48 in the series அதிரியன் நினைவுகள்

மூலம் : மார்கெரித் யூர்செனார்

தமிழாக்கம் : நா.கிருஷ்ணா

இராச்சியபரிபாலன விவகாரத்தில் ஆற்றவேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. எனது மாமியார் மத்திதியாவிடமிருந்து சீதனமாகப் பெற்ற ஆப்ரிக்க பண்ணை நிலங்களை முன்மாதிரி விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படவேண்டும் ; திரேஸ் பகுதியில் போரிஸ்தெனெஸ் என்கிற எனது அருமைக் குதிரையின் பெயர்கொண்ட கிராமத்து விவசாயிகளுக்கு,  கடுமையான குளிர்காலத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அரசு உதவிக்கான உரிமையை வழங்கும் அதேவேளையில் பேரரசின் இரக்கத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள எப்போதும் தயாராக இருக்கிற நைல் நதிப் பள்ளத்தாக்கைச் சேர்ந்த பணக்கார விவசாயிகளுக்கு வழங்கிவரும் மானியத்தொகை இனி வழங்கப்பட மாட்டாதெனத் தெரிவிக்க வேண்டும்; கல்வித்துறையின் தலைமை நிர்வாகி  ஜூலியஸ் வெஸ்டினஸ் என்பவரிடமிருந்து,  அரசாங்கப்பள்ளிகள் திறப்புப் பற்றிய அறிக்கைவரவேண்டும் ; பல்மைரேனிய பகுதி  வணிக நெறிமுறைகளை மறுசீரமைப்பிற்கு உட்படுத்தவேண்டும் – இப்படி செய்யவேண்டியவை வரிசையாக இருந்தன, நன்கு யோசித்து அவற்றுள் தேவையானவற்றைச் செய்துமுடித்திருந்தேன்;  உதாரணத்திற்கு விபச்சாரிகளுக்குக்குரிய கட்டணம், வணிக வண்டிகளின் ஆயத்தீர்வை போன்றவற்றைக் குறிப்பிடமுடியும். மருத்துவர்களும்,  நீதிபதிகளும் ஒரு மாநாட்டின் கீழ் தற்போது ஒன்றிணைக்கப் பட்டுள்ளனர் ;  அவர்களிடம், கர்ப்க்பகாலத்தின் வரம்பை நிர்ணயிக்க வேண்டுமெனவும், அதன் மூலம் இப்பிரச்சினையில் ஓயாமலெழுகிற சட்டச் சச்சரவுகளுக்கு முடிவு கட்டும்படியும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இராணுவ குடியிருப்புகளில்  இருதார மணங்கள்  அதிகரித்து வருகின்றன ; இவ்வழக்கத்தைத் தடுக்கும் வகையில், ஓய்வுபெற்ற படைவீரர்களைத் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கும் புதிய சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாமென்றும், விவேகத்துடன் ஒரு நேரத்தில் ஒரு பெண்ணை மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றும், இவ்விவகாரத்தில் என்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறேன். ஏதென்ஸிலும், உரோம் நகர உதாரணத்தைப் பின்பற்றி ஒரு பாந்த்தியன் தேவாலயம் அமைக்கப்பட்டது; அதற்கெனச் சில வாசகங்கள் என்னால் எழுதப்பட்டுச் சுவர்களில் பொறிக்கப்பட்டன. உதாரணத்திற்கு  எதிர்காலத்தில் நான் செய்யப்போவது என்ன, கிரேக்க நகரங்களுக்கும், நாகரீமற்ற காட்டுவாசிகளுக்கும் இதுவரை செய்தவை என்ன என்பதெல்லாம் அக்கல்வெட்டுகளில் சொல்லியிருந்தேன். உரோமைப் பொறுத்தவரை நான் என்ன செய்திருக்கிறேன் என்பது நான் சொல்லாமலேயே அனைவருக்கும் விளங்கும். 

அடுத்து, நீதித்துறையின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களைத் தொடரவேண்டிய அவசியம் ஏற்பட்டது. முதலாவதாக சிலிசியா மாகாண விவகாரம் ; இங்கு  ஆளுனருக்குக் கால்நடைத் திருடர்களைக் களையெடுக்க வெறுமனே  மரணதண்டனைபோதாது ; பதிலாகச் சித்திரவதை செய்து கொல்லவேண்டும் ; எனவே நான் அவரைக் கண்டிக்க வேண்டியிருந்தது.  மலிவாக, மனிதர்கள்  உழைப்பை பெறும்நோக்கில் அரசு நிர்வாகங்களும்  நகராட்சிகளும்,  குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட கட்டாய உழைப்புத் தண்டனைகளைத் தவறாகப் பயன்படுத்திவந்தன, ஆனால் இவ்விஷயத்தில் அடிமைகள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர். எனவே  பிற குற்றவாளிகளைப் போலவே அடிமைக் குற்றவாளிகளுக்கும் இத்தண்டனையைத்  தடைசெய்தேன் ;  ஆனால் வெறுக்கத்தக்க இந்த நடைமுறை  வேறு பெயர்களில் மீண்டும் பிரயோகிக்காமல்  கண்காணிப்பது முக்கியம். இன்றைக்கும் பழைய கார்த்தேஜ் பிரதேசத்தின் ஒரு சில பகுதிகளில் குழந்தைகளைப் பலிகொடுப்பது வழக்கிலுள்ளது. இப்பிரச்சினையில் சிதைக்குத் தீமூட்டிப்பார்ப்பதில் ‘பால்’ பூசாரிகளுக்குள்ள ஆர்வத்தை தடுக்கத் தெரிந்திருக்கவேண்டும். ஆசியா மைனரில் செலூசிட் வம்சாவளிகளிடத்தில்,  நமது குடிமுறை நீதிமன்றங்களுக்கு எப்போதுமே தவறான அபிப்ராயங்கள் இருப்பதால் அவ்வாரிசுகளின் உரிமை விவகாரங்களில், முறைகேடாக நடந்துகொள்கின்றன. இந்த நீண்டகால அநீதியைச் சரிசெய்தேன். கிரேக்கத்தில், ஹெரோட் ஆட்டிகஸ் சம்பந்தப்பட்ட வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை. முத்திரை பதிப்பிக்க சிவப்புவண்ண மெழுகு குச்சிகள், சிட்டக்கல் அழிப்பான் ஆகியவற்றோடு பிளேகனின்  அஞ்சல்பெட்டியொன்றும் என்னிடம் இருந்தது, என் இறுதிக்காலம்வரை  இப்பெட்டி என்னுடனிருக்கும். 

நோயின்றி செல்வாக்குடன் வாழ்ந்த காலத்தைப் போலவே, இன்றைக்கும் மக்கள் என்னைக் கடவுளென்று நம்புகிறார்கள். அகஸ்டஸ் வழிவந்த இப்பேரரசின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கக் கடவுள்களிடத்தில் நம்பிக்கைவைத்து   காணிக்கை செலுத்தும் அம்மக்கள்தான் எனக்கும் கடவுள் பட்டத்தைத் தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். நன்மைதரும் இத்தகைய நம்பிக்கைகள் அர்த்தமுள்ளவை என்பதற்குரிய காரணங்கள் அனைத்தையும் ஏற்கனவே நான் கூறியுள்ளேன். ஒருமுறை பன்னோனியாவிலிருந்து கால்நடையாகவே  ஒரு வயதான பார்வையற்ற பெண்மணி என்னைத்தேடி வந்தாள்; பார்வையை இழந்திருந்த அவளுடைய கண்களின் பாவையை, என்னுடையை கைவிரல்கொண்டு  தொடும்படிக் கேட்டுக்கொண்டாள். அதனுடைய அற்புதத்தை முன்னதாக அவள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கவேண்டும்,  அதுபோலவே நடந்தது, குருட்டுப்பெண்மணிக்குப் பார்வை திரும்பக் கிடைத்தது,.  சக்கவர்த்தியான தனது கடவுளிடத்தில் அவள் கொண்டிருந்த நம்பிக்கையை இது தெரிவிக்கிறது. வேறு சில அற்புதங்களும் நிகழ்ந்தன; எபிடாரஸ் யாத்ரீகர்கள் தங்கள் கனவில் மருத்துவக் கடவுளான அஸ்க்லெபியஸைக் காண்பதுபோல, நோயாளிகள் சிலர், தங்கள் கனவில் நான் வருகிறேன் எனத் தெரிவிக்கிறார்கள். கனவுகண்ட இரவுக்குப்பின் விழிக்கிறபோது நோயிலிருந்து குணமடைந்திருப்பதாகவும் அல்லது குறைந்தபட்சம் தேறிவிடுவோம் என்கிற நம்பிக்கைக்கு ஆளாவதாகவும் கூறுகின்றனர். ஆயினும், நிவாரணமளிக்கும் விந்தை சக்தியைப் பெற்றுள்ளதாக அவர்கள் நம்பும் நானே நோயில் வாடிக்கொண்டிருக்கிறபோது, இதற்காக எப்படி மகிழ முடியும்.  கடவுளென்கிற புதிய அந்தஸ்தை சற்று வேதனையுடனேயே ஏற்கிறேன். சாம்ராச்சியமென்று வருகிறபோது, பல்வேறு மக்களுக்கும் நாட்டில் உதாரணமுண்டு ; அதற்கொரு உதாரணம் இச்சம்பவம். வளர்ச்சி கண்டிராத மாகாணத்தில் மிகவும் தள்ளியிருந்த பகுதியிலிருந்து சக்கரவர்த்தியாகிய என்னைத் தேடிவந்த இக்குருட்டுப் பெண்மணியை எனது ஆட்சியின்கீழிருந்த  பண்டைய தாராகோணா அடிமையாகக் கண்டேன். இருபது வருடம் மகிழ்ச்சியோடு அம்மக்களுக்கு உழைத்திருக்கிறேன் ; அதற்கான வெகுமதியே இன்று அவர்கள் என்மீது வைத்திருக்கும்  மகத்தான நம்பிக்கை.  

அலெக்ஸாண்ட்ரியாவைச் சேர்ந்த ஒரு யூதரின் படைப்பொன்றை, பிளேகன் சமீபத்தில் எனக்குப் படித்துக் காண்பித்தார், அந்த யூதரும் மனிதர்களினும் பார்க்க மேம்பட்டதொரு சக்தியை எனக்கு அப்படைப்பில் வழங்கியுள்ளார். நூலில் இடம்பெறும் மன்னன் சாம்பல்வண்ண தலைமுடியுடன்   நிலத்தடி கனிமவளங்களைத் தேடி, மண்ணின் உற்பத்திச் சக்திகளைச் செயல்படவைத்து, பூமியெங்கும் அமைதியையும் சுபிட்சத்தையும் நிலைநாட்டி, இனப்பேதமின்றி அனைத்துமக்களுக்கும் அவரவர் வழிப்பாட்டிற்குரிய தேவாலயங்களை நிர்மாணித்து, மாந்த்ரீகக்  கலைகளில் தேர்ச்சிபெற்று, இறுதியில் இளைஞன் ஒருவனைப் பரலோகத்திற்கு அனுப்பிவைக்கும் தீர்க்கதரிசிபோலப் பூமியெங்கும் வலம் வருவதாகச் சித்தரிக்கப்  பட்டிருந்தான்; அதனை எள்ளி நகையாடாமல் நான் வரவேற்றேன். பல செனட் அங்கத்தினர்கள் மற்றும் மாகாண ஆளுனர்களினும் பார்க்க இந்த உணர்வுமிக்க யூதன் என்னை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கவேண்டும், உண்மையில் என்னைக் குறித்த அர்ரியன் கருத்தை இந்த எதிராளி உறுதி செய்திருக்கிறார். காலப்போக்கில் ஒரு சிலரின் பார்வைக்கு,  நான் எப்படி இருக்க விரும்பினேனோ அப்படி இருந்ததால், எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி, 

ஆனாலிது மிகவும் அற்பமானதொரு வெற்றியாக எனக்குப் பட்டது. தற்போதெல்லாம் இக்கீர்த்திக்குப் பெருமையைச்சேர்ப்பது எனக்கு வெகு நெருக்கமாகவுள்ள   முதுமையும் இறப்பும். நான் நடந்து செல்கையில், எதிர்ப்படும் மனிதர்கள் வழிவிட்டு ஒதுங்கி பணிவுடன் நிற்கிறார்கள்.  முன்பெல்லாம் முகத்தில் அமைதியையும் பிரகாசத்தையும் தேக்கிநிற்கும் ஜீயுஸ்(Zeus) கடவுளோடு என்னை ஒப்பிடுவதுண்டு, தற்போது நீண்டயுத்தத்திற்கும் கடுமையான ஒழுக்கநெறிக்கும் கடவுளான  மார்ஸ் கிராடிவஸுடனோ(Mars Gradivus) அல்லது கடவுள்களால் ஈர்க்கபட்டு  கண்ணியவான் எனப் பலரும் போற்றும் நூமா(Numa)வுடனோ என்னை ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். அண்மைக் காலமாக  இழுபட்ட வெளுத்த முகம், குத்திட்ட கண்கள்,  வலிந்து  விறைத்த நிலையில் வைத்திருப்பதுபோலத் தோற்றம் தரும் இந்த உடல் அனைத்தும் நரகலோகத்தின் கடவுளான புளூட்டோவை அவர்களுக்கு நினைவூட்டுகிறது. இத்தகைய அபரிமிதமான மரியாதை தரும் போக்கு ஒரு தொற்றுபோல பரவத் தொடங்க, தம்பித்தவர்கள் எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு சிலரும், பிறர்போல மரியாதைத்தர முயற்சித்து இயலாமற் போனவர்களும், மற்றும் என அன்பிற்குரிய ஒரு சில நண்பர்களும். இத்தகைய சூழலில் ஃப்ரோண்ட்டோ என்கிற ஓர் இளம் வழக்குரைஞன், எதிர்கால நீதிபதி, உன்னுடைய ஆட்சிக்காலத்தில் ஐயத்திற்கிடமின்றிச் சிறந்த ஊழியனாகவும்  இருப்பான்,  செனெட்  அவையில் அவன் நிகழ்த்த வேண்டிய உரைசம்பந்தமாக ஆலோசனைபெற என்னிடம் வந்திருந்தான்.  என்னிடம் உரையாடும்போது குரலில் நடுக்கம், அதனுடன் கண்களில் பயம் கலந்த மரியாதையையும் என்னால் காண முடிந்தது. மனிதர்களிடம் நட்பின் அடிப்படையில் கிடைக்கிற    அமைதியான மகிழ்ச்சி,  எனக்கு இனியில்லை என்றானது. என்னை அனைவரும் வணங்கத் தொடங்கிவிட்டார்கள் ; மிகவும் நேசிக்கிறோம் என்ற பெயரில் என்னைக் கொண்டாடுகிறார்கள்..    

ஒரு சில தோட்டக்காரர்களுக்கு வாய்க்கும் சந்தர்ப்பம்  எனக்கும் அமைந்தது.  மனிதர் கற்பனையில் நான் பதியமிட  முயற்சித்த அனைத்துமே வேர்பிடித்திருந்தன. எனது காரியங்களில் ஆண்ட்டினூஸ் வழிபாட்டுமுறை உருவாக்கமே மிகவும் பைத்தியகாரத்தனமான செயலாகப் பட்டது. அதன் காரணமாக அளவுகடந்த வேதனைகளுக்குத்  தனியொருவனாக  ஆளானேன்.  கடவுள்களுக்கு அலையும் காலம் நம்முடையது. தவிர, அக்கடவுள்கள் நம்முடைய காலத்திற்கேற்ப உக்கிரத்துடனும், இன்னல்களை முகத்தில் தேக்கியும், நடைமுறை வாழ்க்கை என்கிற மதுவில் கல்லறை உலகின் உவர்ப்பான தேனைக் கலந்து நமக்கு வழங்குபவர்களாவும் இருக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நம்மிடம் உள்ளது; தெல்பி(Delphis) பகுதியில், இறந்த ஆண்ட்டினூஸ் தற்போது வாயிற்காப்போன்  ஆவிகளின் இல்லத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்  இருண்ட பாதைகளின் நிர்வாகி ; எலியூசிஸ் நகரில், அவனுடைய வயதும், அந்நியன் என்கிற அவனுடைய அடையாளமும் என்னோடு சேர்ந்து அவன் சமயத் தீட்சைபெறத் தடையாக இருந்தன. உண்மையில்  அவன் விளங்காப் புதிரான பாக்கஸ்(Bacchus) கடவுளைப்போலவே ஒரு மர்ம இளைஞன்; அறிவுக்கும் ஆன்மாவிற்கும்  இடைப்பட்ட தேசத்தின் இளவரசன். வயதில் முதிர்ந்த ஆர்கேடியர்கள் ஆண்ட்டினூஸைக் கானகத்தெய்வங்களான பான்(Pan), டயானா(Diana) ஆகியோருடன் இணைத்து பார்த்தார்கள். தீபுர் விவசாயக் குடிகளோ தேனீக்கள் வளர்ப்பில் தேர்ந்த இளவயது அரிஸ்டேயஸ்(Aristaeus) என்றே கருதினர். ஆசிய மக்களிலோ இலையுதிர்காலத்தின் தாக்குதலுக்கும், கோடைகாலத்தின் சீற்றத்திற்கும் ஆளாகும் தங்கள் கருணைக் கடவுள்கள் வடிவத்தில் அவனைப் பார்த்தனர். பண்பாடற்ற தேசங்களில், அம்மக்கள், வேட்டை நாட்களிலும் பயணத்தின்போதும் என்னோடு துணக்கு வருகிற ஆண்ட்டினூஸை வேறுவிதமாகக் கண்டனர் ; அவன் அவர்களுக்கு பௌர்ணமி இரவுகளில் புதர்களுக்கிடையே, மேலாடையில்  சுருட்டிவைத்திருக்கும் ஆத்மாக்களுடன் சவாரி செய்யும் திரேஸ் குதிரை வீரன் தோற்றத்தில் தெரிந்தான். 

இவை அனைத்திற்கும், ஏற்றுகொள்ளப்பட்ட வழிபாட்டு மரபுகளில் தொடர்ந்து ஏற்பட்ட  அபரிதமான வளர்ச்சியும், ஒருசில மக்களின் இச்சகப் போக்கும்,   அரசு மானியங்களை எதிர்பார்க்கிற சில சமயக்குருமார்களின் கேவலமான நடவடிக்கைகளுமே காரணமாக இருக்கக்கூடும். சோகமும் இனிமையும் கொண்ட ஆண்ட்டினூஸ் முகம் பாமர பக்திகாரணமாக ஏழைகளுக்கும், நலிந்தோர்க்கும் சகாயத்தின் வடிவம் ; தங்கள் பிள்ளைகள் இளம்வயதில் பறிகொடுத்த ஒரு சிலருக்கு அவன் முகம் ஆறுதலையும் தருகிறது ; பொதுவாக எந்தவொன்றிற்கும் இயற்கையாகவே தன்னை மறுசீரமைத்துக் கொள்ளும் தன்மை உள்ளுக்குள் உறைந்துள்ளது என்பதால், எளிய இதயங்களின் அபிலாஷைகளில்   தன்னை இழக்கும் இளைஞனின் முகம் என் பிடியிலிருந்து நழுவுகிறது. அலைபாயும் சுருள்சுருளான தலைமுடி, முகத்தில் சிறிதுகாலமே  காணமுடிந்த  களங்கமற்ற வசீகரமான சிரிப்பென்று  பித்தினியா நாணயங்களில் உள்ள பதினைந்து வயது பையனின் உருவம், பிறந்த குழந்தைகளின் கழுத்தில் இன்றொரு தாயத்து. கிராமத்தில் இளம்வயதினர் கல்லறைகளிலும் ஆணியடித்து மாட்டியிருக்கின்றனர். முன்பெல்லாம், எனது சொந்த மரணத்தைப் பற்றிச் சிந்திக்கிறபோது, தன்னுயிரைப் பொருட்படுத்தாது கப்பலின் பயணிகளுக்காகவும்,  சரக்குகளுக்காகவும் அஞ்சுகிற ஒரு மீகாமனாக  இருந்துள்ளேன் ; அப்போது இதுபோன்ற நினைவுகளும்  என்னுடன் மூழ்கிவிடும் என்று கசப்புடன் எனக்கு நானே கூறிக்கொள்வதுண்டு. ஆக என் நினைவின் ஆழத்தில் கவனமாகப் பாடம்செய்யப்பட்ட  இளம் வயது உடல், இரண்டாவது முறையாக அழிவைக் காணப்போவதாக நினைத்தேன். இருந்தபோதிலும்   இந்த அச்சம் நியாயமானது என்கிறபோதும் ஓரளவிற்கே தணிந்துள்ளது. இந்த இளம்வயது மரணத்திற்கு என்னால் இயன்றவரை ஈடுசெய்திருக்கிறேன். வடிவமாக, சாயலாக, மெலிந்த நிழலாக, குறைந்த பட்சம் ஒரு சில நூற்றாண்டுகள் இம்மண்ணில் அவன் ஜீவித்திருப்பான்.  மரணமின்மைக்கு இதைக்காட்டிலும் பெரிதாக எதையும் செய்துவிடமுடியாது.

தொடரும்….

அதிரியன் நினைவுகள்

அதிரியன் நினைவுகள் – 42 அதிரியன் நினைவுகள் – 44

Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.