அதிரியன் நினைவுகள் – 42

This entry is part 41 of 48 in the series அதிரியன் நினைவுகள்

மூலம் : மார்கெரித் யூர்செனார்

தமிழாக்கம் : நா.கிருஷ்ணா

ஆண்ட்டனைனஸ் (Antonninus) தத்தெடுப்பிற்குப் பின்னர், அடுத்துவந்த மாதங்கள் மோசமானவை ;  குறிப்பாக பயெ  நகரில் தங்கநேர்ந்ததும், அதனைத் தொடர்ந்து உரோமுக்குத் திரும்பியதும் ; இவற்றோடு சப்பந்தப்பட்ட மனிதர்களிடம் உடன்பாடுகாண நடத்திய பேச்சுவார்த்தைகளும் எளிமையானவை அல்ல ; என்னிடத்தில் இன்னமும் மிச்சம் மீதியென ஒட்டிக்கிடந்த சக்திக்கும் அப்பாற்பட்ட காரியங்கள். மீண்டும் சாகவேண்டுமென்கிற எண்ணம் என்னை ஆட்கொண்டது, ஆனால் அதற்கான காரணங்களில் வெளிப்படைத் தன்மை இருந்தது, பாசாங்கில்லை ; உண்மையென ஒப்புக்கொள்ளும்படி இருந்தது ; விளைவாக எனது மோசமான எதிரிகள் கூட  அது குறித்து ஏளனம் செய்யமுடியாதென்கிற நிலைமை ;  ஆக எனக்கு ஆதரவாக அனைத்துமிருந்தன, தடையேதுமில்லை.  உலக விவகாரங்களையெல்லாம் ஒழுங்குபடுத்திய பின்னர் தமது பண்ணைவீட்டில் ஓய்வெடுக்கும் சக்கரவர்த்தி, தமது இறுதி முடிவை இலகுவாக்கிக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என்பதை அவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள். ஆயினும் என்னுடைய நண்பர்களுக்கு என்னைப் பற்றிய கவலைகள் இருந்தன ; அதன் காரணமாகத் தொடர்ந்து அவர்களுடைய கண்காணிப்பின் கீழ் இருப்பதைபோன்ற நிலைமை. பொதுவில் நோயாளி என்பவன் ஒரு சிறைக் கைதி. முன்பெல்லாம் இடது மார்பின்கீழ் என்னுடைய உடைவாளைச் செருக சிவப்பு மையினால் குறியிட்டிருப்பேன்,  சரியாக அந்த  இடத்தில்  வைப்பதற்கு என்னிடம் தற்போது  போதிய தெம்பில்லை. இருக்கிற பிரச்சினைகள் போதாதென்று தற்போது கூடுதலாகக் கட்டுத் துணிகள்,  இரத்தம் தோய்ந்த பஞ்சுகள், கட்டிலருகே  ஓயாமல் விவாதிக்கும் மருத்துவர்களின் பேச்சுகள். இந்நிலையில் தற்கொலைக்குத் தயாராக வேண்டுமெனில், ஒரு கொலையாளியுடைய  கொலை முயற்சிக்குத் தேவையான முன்னெச்சரிக்கைகள் அனைத்தையும் நான் எடுக்க வேண்டும்.

இதுபோன்ற சூழலில் முதலில் நான் நினைத்துப்பார்ப்பது வேட்டையில் எனக்குக் குருவாகத் திகழ்ந்த காட்டுவாசியான  மாஸ்ட்டர் என்ற பெயர்கொண்ட சார்மேதிய மனிதரை. ஆண்டுகள் பலவாக அழகானதொரு ஓநாய்போல அர்ப்பணிப்புக் குணத்துடன் என்னைச் சுற்றிவந்தவர். சிலநேரங்களில் எனது வாயிற்கதவைக் கண்காணிக்கும்படியும் அவரைக் கேட்டுக் கொண்டதுண்டு. ஒருமுறை நான் தனியாக இருந்தேன் ; அதைப் பயன்படுத்திக்கொண்டு அவரை அழைத்து,  அவரிடம் நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்பதையும் விளக்கினேன். முதலில் அவருக்குப் புரியவில்லை. பின்னர் விளங்கிக் கொண்டதற்கு அடையாளமாக அவர் முகம் பிரகாசித்தது ; தொடர்ந்து அவருடைய பொன்னிற முகம் விகாரமடைந்து இறுக்கமானது. என்க்கு மரணம் கிடையாதென நம்புகிறார். அவருக்கு மாலையிலும் காலையிலும் எனது அறைக்கு மருத்துவர்கள் வந்துபோவது தெரியும். எனதுடலில் சிகிச்சைக்காக சில கருவிகளை பிரயோகிக்கிறபோது எனது முனகலையும் காதில் வாங்குகிறார், இருந்தும் அவருடைய நம்பிக்கையில் தடுமாற்றமில்லை. மாஸ்ட்டரை பொறுத்தவரை,  நான் அவரிடம் வைத்த வேண்டுகோள் என்பது கடவுள்களுக்கெல்லாம் எஜமானாகிய   ஒருவன் ஒலிம்பியா மலையிலிருந்து இறங்கிவந்து அவரிடம் கருணையை  எதிர்பார்ப்பது ; ஒரு வகையில் அதற்கான தூண்டுதல் ; இந்நிலையில் அவரிடமிருந்து சற்றுமுன் நான் பறித்திருந்த கத்தியை எனது கைகளிலிருந்து பிடுங்கிக்கொண்டு கூச்சலிட்டபடி வெளியில் ஓடினார். அன்றிரவு பூங்காவின் முடிவில் காட்டுவாசிகளுக்கேயுரிய மொழியில் பிதற்றியபடி இருந்திருக்கிறார். பீதியடைந்த இக்காட்டுவாசியை முடிந்தவரை அமைதிகொள்ள வைத்திருக்கிறார்கள். இச்சம்பவம் என காதுகளை உடனடியாக எட்டவில்லை. மறுநாள் எனது ஊழியனான செலெருக்கும் அச்சம் இருந்திருக்கவேண்டும், என்னுடைய கட்டிலருகே இருந்த மேசையில் உலோகத்தாலான எழுதுகோல் இருந்தது ; அதை எடுத்துவிட்டு நாணற்புல்லினால் ஆன எழுதுகோலை வைத்திருந்தான்.   

எனது தற்கொலைக்கு உதவக்கூடிய ஒரு நல்ல கூட்டாளியைத் தேடினேன். கடந்த கோடையில், தான் இல்லாதபோது எனக்கு மருத்துவம் பார்க்க ஹெர்மோஜேனெஸ் அலெக்ஸாந்திரியாவைச் சேர்ந்த ஓர் இளம் மருத்துவரைத் தெரிவு செய்திருந்தார் ; பெயர் ஐயோலாஸ் ; அவனிடம் முழுமையான நம்பிக்கை கொண்டிருந்தேன். அவனும் நானும் அவ்வப்போது கூடிப் பேசுவோம். பொருட்களின் இயல்பு மற்றும் தோற்றம் பற்றிய கருத்தியங்களை இந்த இளம் மருத்துவனிடம் சேர்ந்து கட்டமைப்பதில் எனக்கு உண்மையில் மகிழ்ச்சி. அவனிடமுள்ள துணிச்சலும், கற்பனையும், ஆழமான கண்களில் கனல்போல எரிகிற  உற்சாகமும் எனக்கு விருப்பமானவை. கிளியோபாத்ராவின் வேதியியலாளர்கள் ஒருகாலத்தில் தயாரித்த அசாதாரண விஷங்களின் நுட்பமான கலவைச் சூத்திரத்தை, இவன்  அலெக்ஸாந்திரியா அரண்மனையில் திரும்பக் கண்டறிந்தது எனக்குத் தெரியும். ஓடியனில் உயர்மட்ட மருத்துவர்கள் அடங்கிய ஓர் அமைப்பை நான் அண்மையில் ஏற்படுத்தியிருந்தேன் ; அக்குழுவில் இடம்பெறும் மருத்துவர்களைத் தேர்வு செய்வதில் மும்முரமாக இருந்த நேரம், அதைக் காரணமாக வைத்து ஹெர்மோஜேனெசை  என்னிடமிருந்து சிலமணிநேரங்கள் விலக்கிவைத்து ஐயோலாஸிடம் அந்தரங்கமாக சில நிமிடங்கள்  உரையாடச்  சந்தர்ப்பம் கிடைத்தது. இலைமறை காயாக  நான் சொல்லவருவதென்ன என்பதை இளைஞன் புரிந்துகொண்டான். என்னிடம் பரிதாபப்பட்டான்; எனது முடிவோடு  உடன்படவும் செய்தான். ஆனால் அவர் ஹிப்போகிரட்டீஸ் பெயரில் எடுத்திருந்த மருத்துவ சேவைக்கான உறுதிமொழி, அவனை எந்தவொரு காரணத்தை முன்னிட்டும்  நோய்வாய்ப்பட்ட ஒருவருக்குத் தீங்கு விளைவிக்கும் மருந்தை வழங்குவதைத் தடைசெய்தது. எனவே மறுத்துவிட்டான்;  தன்னுடைய மருத்துவப் பணிக்குரிய மரியாதையைக் கட்டிக்காப்பதில் திடமாக  இருந்தான்; .நான் வற்புறுத்தினேன். எனது கோரிக்கையை அழுத்தமாக முன்வைத்தேன். என்மீது கருணைகாட்ட அல்லது அவனைத் தவறிழைக்கத் தூண்ட என்னவெல்லாம் இயலுமோ அத்தனை முயற்சிகளையும் கையாண்டேன்.  நான் கெஞ்சிய கடைசி மனிதன் அவனாகத்தான் இருப்பான். இறுதியில் எனது கெஞ்சல் வெற்றிபெற்றது. சிறிதளவு விஷத்தை எனக்கு அளிப்பதாக வாக்களித்துக் கொண்டுவர சென்றான். இளம் மருத்துவனின் விஷத்திற்காக மாலைவரைக் காத்திருந்தேன். பின்னிரவு நேரம், இளைஞன் தன்னுடைய சோதனைச் சாலையில் இறந்துகிடந்த செய்தியை நெஞ்சு பதைக்கக் கேட்டறிந்தேன், அவனுடைய கைகளில் ஒரு கண்ணாடிக்குப்பி இருந்துள்ளது.  பரிசுத்தமான அவனுடைய உள்ளம் எனது வேண்டுகோளை நிராகரிக்க இயலாமல்,   தனது மருத்துவப் பணிக்கு செய்துகொடுத்த சத்தியத்திற்கு விசுவாசமாக இருக்க இவ்வழிமுறையைக் கண்டுள்ளது. 

அடுத்தநாள், ஆண்ட்டனைனஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நேர்மையான இந் நண்பர் கண்ணீரை அடக்க மிகவும் சிரமப்பட்டார். தகப்பனைப் போல அன்பு செலுத்தி,  தான் வணங்கிப்பழகிய ஒருவர் மரணத்தைத் தேடித் தவிக்கிறார் என்ற எண்ணம் அவரால் சகிக்க முடியாதது; ஒரு நல்ல மகனாக தான் செய்யவேண்டிய கடமைகளிலிருந்து  தவறிவிட்டோம் என்கிற எண்ணம் அவரிடம் இருப்பதாகத்  தோன்றியது. எனக்கு வேண்டியவர்கள் என்னுடைய நலனுக்காக எடுக்கும் முயற்சியில் தானும் ஒத்துழைத்து, எனக்குச் சிகிச்சை, வலிகளிலிருந்து தீர்வு, எஞ்சியுள்ள ஆயுள்வரை பிரச்சினைகளற்ற இலகுவான வாழ்க்கை, சாத்தியமெனில் நோயிலிருந்து நிவாரணம் என அனைத்தையும் செய்வதாக  வாக்குறுதி தந்தார்.    இயலுமெனில் நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து எனது அறிவுறுத்தலின்படியும் வழிகாட்டுதல்படியும் நடக்கவேண்டுமென்பது அவருடைய விருப்பம்.  நான் இறக்கும்வரை மொத்த பேரரசையும்  கட்டிக்காப்பது தன்னுடைய பொறுப்பு என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். 

அற்புதமான இதுபோன்ற எதிர்ப்புகளுக்கும்,  வெகுளித்தனமான வாக்குறுதிகளுக்கும்  உள்ள மதிப்பு என்னவென்று எனக்குத் தெரியும். ஆயினும் எனக்கதில் நிம்மதியும் ஆறுதலும் கிடைத்தன. ஆண்ட்டனைனஸுடய எளிய வார்த்தைகள் மீது எனக்கு நம்பிக்கை. இறப்பதற்கு முன்பாக எனதுடலைத்  திரும்ப  எனது கட்டுபாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கிறேன். தன்னுடைய  மருத்துவர் தொழிலின் கடமைக்கு விசுவாசமாக ஐயோலாஸ் தேடிக்கொண்ட மரணம், பேரரசர் என்ற முறையில், இறுதி மூச்சுள்ளவரை நானும் எனது கடமையுடன் இசைந்து  நடக்கத்  தேவையான உற்சாகத்தை அளிக்கிறது. பொறுமை(Patientia) :  நேற்று நான் டொமிஷியயஸ் ரோகடஸைப் பார்த்தேன், அப்போது அவரை நாணயச்சாலையின் நிர்வாகியாக நியமனம் செய்து, புதிய நாணயங்களை அச்சடிக்கும் தலைமைப் பொறுப்பையும் வழங்கினேன். இச்சம்பவம் வருங்காலத்தில் பேசப்படும்; தவிர இந்த நியமனம், என்னுடைய உத்தியோகபூர்வமான கடைசி உத்தரவாகவும் இருக்கும். என்னுடைய சொந்த வாழ்க்கைபற்றிய முடிவுகளில், மரணம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கு மென நினைத்தேன், ஒரு சுதந்திர மனிதனை முடக்கிவைக்கும் உச்சநிகழ்வு அது, இக்கருத்தில் தவறியிருந்தேன். கோடிக்கணக்கான மாஸ்ட்டர்களின் நம்பிக்கை ஆட்டம் காணக்கூடாது, ஐயோலாஸ் போன்ற மனிதர்களை எனது மரணப்பிரச்சினை சோதிக்கக்கூடாது.  என்னைச் சுற்றிலும் அர்ப்பணிப்புப் பண்புடனிருந்த  நண்பர்கள் இருந்தனர்; அவர்களில் ஒரு சிறு பிரிவினருக்கு ‘என்னுடைய தற்கொலை’ முடிவு,   ஒருவகை அக்கறையின்மை மற்றும் நன்றியுணர்வற்ற தன்மையின் அடையாளமாகத் தோன்றக்கூடுமென நான் புரிந்துகொண்டிருந்தேன். நோயின் வதையைத் தாங்கிக்கொள்ள இயலாமல் வலியால் துடித்த ஒரு மனிதனின் அருவருப்பான சித்திரத்தை விட்டுச்செல்ல  நான் விரும்பவில்லை.

எனது உயிர்வாழ்க்கை எனக்கு வழங்கியது ஏராளம் அல்லது எனக்குத் தேவையானவற்றை அதனிடமிருந்துபெற குறைந்த பட்சம் நான் தெரிந்துவைத்திருந்தேன் என்பதுபோன்ற எண்ணங்கள் ஐயோலாஸ் மரணத்தைத் தொடர்ந்து வந்த இரவில், எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தன.  தற்போது, எனது சந்தோஷமான கணங்களைப்போலவே, முற்றிலும் எதிரான காரணங்களை முன்வைத்து, எனது உயிர்வாழ்க்கை இனி கொடுப்பதற்கு எதுவுமில்லை என்பது போல நடந்துகொள்கிறது. ஆயினும் அதனிடமிருந்து கற்பதற்கு ஏதேனும் மிச்சமீதியுள்ளதா என்பது குறித்து உறுதியாக கூற என்னால் முடியாது. அதனுடைய இரகசிய அறிவுரைகளை, இறுதி மூச்சு உள்ளவரை கேட்பேன். என்றும்போல, இனிவரும் நாட்களிலும் அதன் ஞானத்தை நம்பியே நான் இருப்பேன்.  இச்சினேகிதன் எனக்குத் தந்த உணர்வுகளைப் பிரித்துணர்ந்து சுவைக்க முயன்றேன். கடைசியாகக் கிடைத்தவற்றையும் நான் அவசியம் போற்றவேண்டும். எனது தமனிக் குழாய்கள் அவசரமின்றி நுட்பமாக உருவாக்கிய பிரச்சினையாக இருக்கலாம் அல்லது எனது மூதாதையர்களின் சீதனமாக  கிடைத்திருக்கலாம் ;  எனது  சுபாவங்களோ அல்லது இதுநாள்வரை வாழ்ந்த வாழ்க்கை தன் பங்களிப்பாகவோ விட்டுச்சென்றிருக்கலாம் ; காரணங்கள் எதுவாயினும், எனக்கென்று விதித்திருக்கும் இவ்வேதனைகளை மறுக்கும் உத்தேசம் எனக்கில்லை. பொறுமை இன்மைக்கான நேரம் இதுவல்ல. விரக்தியைப்போலவே நம்பிக்கையும் எனக்குத் தற்போது கசக்கும் காலம். வரும்போது வரட்டும், மரணத்தைத் துரிதப்படுத்த இப்போதைக்கு விருப்பமில்லை. 

தொடரும்….

அதிரியன் நினைவுகள்

அதிரியன் நினைவுகள் -41 அதிரியன் நினைவுகள் – 43

Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.