இரத்தம் வரும்வரைத் தனதுடலைச் சொறிந்துகொள்ளும்…

This entry is part 33 of 48 in the series அதிரியன் நினைவுகள்
  • மார்கெரித் யூர்செனார்
  • தமிழில் : நா. கிருஷ்ணா
A. SHAHABUDDIN

என்னுடைய  வாழ்க்கை, மேலோட்டமாகப் பார்க்கிறபோது குறைகாண முடியாதது; முன்னெப்போதையும்விட ஒரு பேரரசருக்குரிய கடமையை நிறைவேற்ற என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். பணியில் கூடுதலாக  நிதானத்தையும் தெளிவையும் கடைப்பிடித்தேன் அல்லது ஒருவேளை,   முன்பைவிட ஆர்வமுனைப்புடன் செயல்பட்டேன். புதிய யோசனைகள்,  புதிய பந்தங்கள்  போன்றவற்றில்  வழக்கமாக நான் ஆர்வத்துடன் இருப்பேன் ; தவிர எதற்கும் வளைந்துகொடுக்கக்கூடிய மனநிலையானது, கடந்தகாலங்களில் சுற்றியுள்ள மனிதர்களின் எண்ணங்களுக்குள் பிரவேசிக்கவும் அவற்றில் நியாயத்தைக் கண்டறியும் முயற்சியில் எனக்குத் தேவையானவற்றைக் கற்கவும் உதவியது ; அவற்றையெல்லாம் இக்காலக்கட்டத்தில் வெகுவாக இழந்திருந்தேன். 

எனது செயல்முறைகளைத் தீர்மானித்த காரணங்களிலொன்று பொதுவாக என்னிடத்திலுள்ள ஆர்வம் ; அதுவே எனது சிந்தனையையும் ஊக்குவித்தது ;   ஆனாலது, அர்த்தமற்ற சில்லறை விவகாரங்களில் கவனம் செலுத்தியது, உதாரணமாக  எனது நண்பர்களுக்கென்று எழுதப்பட்ட கடிதங்களைத் திறந்து படித்து, அவர்கள் கோபத்திற்கும் ஆளானது. அவர்களின் காதல் விவகாரங்களும், கணவன் மனைவி சண்டைகளும், வாசித்த கணத்தில் மகிழ்ச்சியைத் தந்தன. இப்பிரச்சினையில் சந்தேகத்தின் பங்குமுண்டு: காரணம், கொஞ்ச நாட்கள், நஞ்சு  குறித்த பயத்திற்கு இரையானேன்.  கொடூரமான இந்த அச்சத்தினை, நோய்வாய்ப்பட்டிருந்த சக்கரவர்த்தி திராயான் கண்களில் முன்பு பார்த்திருக்கிறேன். பிரச்சினை என்னவெனில் சம்பவத்தைச் சான்றுடன் நீருபிக்கப் போதாதவரை, அரியணயிலிருக்கிற ஒருவர் எப்படி இதை வெளியிற் சொல்ல முடியும், கூறினால் அபத்தமென்பார்கள். ஆட்டிப்படைக்கும் இதுபோன்றதொரு அச்சத்தை ஒரு மனிதரிடத்தில் அதுவும் மரணத்தின் வாசலில் காத்திருக்கும் ஒருவரிடம் காண்பது வியப்புக்குரியது என்றாலும், மற்ற மனிதர்களிடமிருந்து நான் வேறுபட்டவன் ; இதனை என்னால் சாதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியுமெனக் கூறப்போவதில்லை. அடக்கிவைத்த கோபம், சிறு சிறு மடத்தனமான செயல்கள், அற்பவிஷயங்கள் போன்றவற்றைச் சகியாத மிருகக்குணம், தவிர்க்கவியலாமல் என்னோடு ஒட்டிக்கிடக்கும் பிறர்மீதான வெறுப்பென்று என்னிடமும் சொல்லவிருந்தன.. உதாரணத்திற்கு, கவிஞர் ஜூவனல்(Juvenil) தம்முடைய அங்கதச் செய்யுளொன்றில்(Satires) என்னைப் பெரிதும் மகிழ்விகத்த அவிநயக்கூத்தாடி பாரிசு(Paris) என்பவரை அவமதித்திருந்தார். இக்கவிஞரின் வசைகளும், கர்வமும் எனக்கு அலுப்பூட்டியிருந்தன; கிரேக்கம் மற்றும் கீழ்த்திசை நாடுகள்மீதான அவருடைய கடுமையான வெறுப்பும், தம்முடைய இரசனையை நம்முடைய மூதாதையர்களின் எளிமை பாதித்திருப்பதுபோலக் காட்டிக்கொள்ளும் அவருடைய பாவனைகளும்,  அவரிடமுள்ள பாசாங்குக் குணத்தை நமக்கு உறுதிப்படுத்தும்வகையில் அவரிடம் காணும் பல்வேறு குற்றத்தின்  கலவையும், வாசகரின் உணர்வுகளைத் தூண்டுகிற அவருடைய நன்னெறிகள் பற்றிய  முழக்கத்தையும் பெரிதாக என்னால் கொண்டாட முடிந்ததில்லை.   ஆயினும் அவரொரு கல்விமான், அது நிமித்தம் சில மரியாதைகள் இருந்தன; அவர் உரோமிலிருந்து வெளியேறவேண்டுமெனத் தண்டனை வழங்கப்பட்டது; தனிப்பட்ட முறையில் அவரிடம் இதனைத் தெரிவிக்கத் தீபுருக்கு(Tibur) அவரை வரவழைத்தேன். உரோம் நகரின் ஆடம்பரத்திற்கும், போகத்திற்கும் பழகியிருந்த அம்மனிதர், இனி மாகாணத்திற்கென்றுள்ள நெறிமுறைகளை நேரில் தெரிந்துகொள்ளமுடியும்; ஆணழகரான நடிகர் பாரிசுவை இழிவுபடுத்த நினைத்து இவர் எழுதியது, கடைசியில் இவருடைய நாடகத்தையே முடித்துவைத்தது.  

இக்காலக்கட்டத்தில்தான், நாடுகடத்தப்பட்ட  சோஃபிஸ்ட் , ஃபேவரினஸ்(Favorinus) சௌகரியமாக  கியோஸ் தீவில், வாழ்ந்துவந்தார் – ஒருகாலத்தில் நான் கூடப் பலகாரணங்களை முன்னிட்டு அங்கு வாழ விரும்பினேன்.- அவ்வாழ்க்கை குறித்து அவர் கசந்து கூற, நான் காதில் கேட்டதில்லை. ஏறக்குறைய இச்சமயத்திலேயே வேறொரு சம்பவமும் நடந்தது. தமது ஞானத்தை வர்த்தகம்செய்து பிழைத்த, ஒரு நியாயவாத தத்துவவாதியை(Cynic), அவர் பட்டினியால் வாடுவதாக முறையீடு செய்தபின்பும்  விருந்து மண்டபத்திலிருந்து, அவர் அசுத்தமாக இருந்த காரணத்தை முன்வைத்து, வெளியேற்றவேண்டியிருந்தது; இம்மனித உயிரின் தகுதிக்குரியன ஒருவேளை வேறெங்கேனும் இருக்கலாம்;  நாய்களின் குரைப்பு, பரிசாரகர்களின் சிரிப்பு – இவற்றுக்கிடையில் வெளீயேற்றப்பட்ட அப்பிதற்றல் ஆசாமியைப்  பயத்தால் இருமடங்கு வளைந்திருந்த உடலுடன்  காண எனக்கு மகிழ்ச்சி. அதன் பின்னர் தத்துவம், இலக்கியம் போன்ற விஷயங்கள் என்னை அதிகம்  ஈர்ப்பதில்லை. 

சீரான நடைபாதைத் தளம், மெருகூட்ட உபயோகித்த மெழுகு ஒழுகிக் கொண்டிராத பளிங்குக்கல் மேசை,  கறைகளோ ஒழுங்கீனங்களோ காணமுடியாத துல்லியமான  உடமைகள், தளவாடங்கள் நிறைந்தது எனது  மாளிகையான வில்லா ; இம்மியளவும் அங்கு குறைகாண முடியாது, எனது அரசியல் வாழ்க்கையும் அதைப்போலவே அப்பழுக்கின்றி இருக்கவேண்டுமென எதிர்பார்த்தேன் ;  தவறு சிறிய அளவில்  என்றால் கூட, கோபமுறுவேன். 

சமீபத்தில் கப்படோசியாவின் ஆளுநராக நியமிக்கப்பட்ட அர்ரியன் சமர்ப்பித்த அறிக்கை, காஸ்பியன் கடலோரமுள்ள சிறு இராச்சியத்தை ஆண்டுகொண்டிருந்த பராஸ்மன்ஸ்(Pharasmanès) மீது குற்றம் சாட்டியிருந்தது. இவர், மன்னர் திராயான் காலத்தில் உரோமானிய அரசுக்கு விசுவாசமாக இருக்கத் தவறி, பெரும் இழப்பை ஏற்படுத்தியிருந்தார் ; அதைத் தற்போதும் தொடர்வதாக அறிக்கை தெரிவித்தது. இச்சிற்றரசர் நயவஞ்சகமாக ஆலன்கள்(Alans) என்கிற காட்டுமிராண்டிகள் கூட்டத்தினரை நம்முடைய  எல்லைப்பகுதிக்கு அனுப்பிவைத்தார்;  ஆர்மீனியாவுடனான அவருடைய யுத்தம் கீழைநாடுகளின் அமைதியைப் பாதித்திருந்தது.  இந்தக் குறுநில மன்னரை உரோமுக்கு வருமாறு கட்டளையிட்டேன்; நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சாமோசேட்(Samosate) நகரத்தில் கூட்டப்பட்ட மாநாட்டில் கலந்து கொள்ள மறுத்திருந்தார் ; இம்முறையும் நம்முடைய அழைப்பைப் புறக்கணித்தார். தன் மறுப்புக்கு மன்னிப்புக் கோரும்வகையில் பொன்னாலான முந்நூறு பொன் அங்கிகளை எனக்குப் பரிசாக அனுப்பிவைத்தார்,  குற்றவாளிகளை விலங்குகளுக்கு இரையாக்குகிறபோது, அரங்கில் அவற்றை அரசாங்க உடைகளாக அணியச் செய்தேன். சிற்றரசர் செய்த காரியத்தை ஓரளவு ஈடுசெய்வதுபோல அமைந்த எனது எதிர்வினை, இரத்தம் வரும்வரைத் தனதுடலைச் சொறிந்துகொள்ளும்  ஒரு மனிதனின் செய்கைக்குரிய திருப்தியை எனக்குத் தந்தது.

எனக்கு ஒரு செயலாளர் இருந்தார்,  ஆனால் அவரைப் பற்றி பெரிதாக  எதுவும் சொல்வதற்கில்லை.  உரோமானிய நிர்வாக நடைமுறைகளை ஆழமாகத் தெரிந்துவைத்திருந்தார் என்பதால் அவரை என்னுடன் வைத்திருந்தேன்; ஆனால் அவருடைய அடாவடித்தனமும் பிடிவாதமும்,புதிய வழிமுறைகளை முயற்சிக்க மறுத்ததும், பிழைகண்டுபிடித்தலில் அவரிடமிருந்த ஆரவமும் கணிசமாக எனது பொறுமையைச் சோதித்தது. வழக்கத்தை விட ஒரு நாள் அம்முட்டாள் மனிதர் கூடுதலாக எனக்குக் கோபத்தைமூட்ட, அடிப்பதற்காகக் கையை உயர்த்தினேன்; துரதிர்ஷ்டவசமாக, என் கையில் ஒரு எழுத்தாணி இருந்தது; அது அவருடைய  வலது கண்ணைக் குருடாக்கியது. வலியால் அம்மனிதர் துடித்தார் ; அடியைத் தடுக்க முயன்ற அவருடைய கை பொருத்தமற்றவகையில்  வளைந்திருக்க, வலிப்பு கண்டதுபோலிருந்த முகத்திலிருந்து இரத்தம் பீறிட்ட அக்காட்சியை ஒருபோதும் என்னால் மறக்கவே முடியாது. ஹெர்மோஜேனெஸை உடனடியாக அழைத்துவரக் கட்டளையிட, அவரும் முதலுதவிகளைச் செய்தார்; தொடர்ந்து கண்மருத்துவர் கேபிடோவிடம் ஆலோசனை கேட்கப்பட்டது. ஆனால் அதனால் பயனேதுமில்லை ; கண் இழந்தது இழந்ததுதான். சிலநாட்களுக்குப்பிறகு அச்செயலர் திரும்ப தமது பணிக்குத் வந்தபோது முகத்தில் கண்கட்டு இருந்தது. அவரை அழைத்துவரச்செய்து, அவருக்குத் தரவேண்டிய இழப்பீட்டை அவரையே முடிவு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொண்டேன். ஒருவித விஷமப் புன்னகையுடன்  என்னிடம் அவர் கேட்டது இன்னொரு வலது கண். கடைசியாக ஓய்வூதியம் பெறுவதற்கு ஒப்புக்கொண்டார். அவரை என் சேவையில் தொடர்ந்து வைத்திருந்தேன்; அவருடைய இருப்பு ஓர் எச்சரிக்கையாக என்னுடன் இருந்தது, ஒருவகையில் தண்டனையாகக் கூட எடுத்துக்கொள்ளலாம். பரிதாபத்திற்குரிய அம்மனிதரின் கண்ணக் குருடாக்க நான் விரும்பியதில்லை. அதுபோல என்னை நேசித்த ஒரு குழந்தை இருபது வயதில் மரணித்ததையும் நான்  விரும்பியதில்லை.

தொடரும்…

அதிரியன் நினைவுகள்

அதிரியன் நினைவுகள் – 33 காட்டுப்பன்றி இலச்சினையை நாட்டுப் பன்றியெனத் தவறாகப் புரிந்துகொண்டு…

Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.