அதிரியன் நினைவுகள் – 38

This entry is part 37 of 48 in the series அதிரியன் நினைவுகள்

மூலம் : மார்கெரித் யூர்செனார்

தமிழாக்கம் : நா. கிருஷ்ணா

உரோம் நகரம்  எனக்காக ஒரு வெற்றிவிழாவை ஏற்பாடு செய்திருந்தது; இம்முறை அதற்கு நான் சம்மதித்தேன்; துதிபாடுதலுக்கும் , வீண்பெருமைக்குரிய இதுபோன்ற  வழக்கங்களுக்கு எதிரான  எனது குணத்தை மாற்றிக்கொண்டிருந்தேன் என்பது அதற்கான காரணம்; மனித முயற்சியை முன்னிலைப் படுத்தும் இதுபோன்ற விழாக்கள் அனைத்திற்கும் ஆயுள், ஒருநாள் மட்டுமே என்கிறபோதும், எதையும் வெகு விரைவில் மறந்துவிடும்  இவ்வுலகை முன்னிட்டு  இது போன்ற நிகழ்ச்சிகள் ஒருவகையில் அனுகூலமானவை.  இவ்வெற்றி  யூதர் கிளர்ச்சியை ஒடுக்கியதைக் குறித்தது மட்டுமல்ல; இவ்வெற்றிக்குப் பின்புலத்தில் ஆழமான பொருளுண்டு என்பதால் ; ஆனால் அதை நான்  மட்டுமே அறிவேன். இப்பாராட்டுதலில் அர்ரியன் பெயரையும் இணைத்துப் பார்த்தேன். ஆசியக் கண்டத்தின்மிகவும் பின்தங்கிய மத்தியப்பகுதியிலிருந்து வந்தவர்கள் தாங்களென  நம்பிய ஆலன்கள் கூட்டத்தினருக்குத் தொடர்ச்சியானத் தோல்விகளைத் தந்து, அர்ரியன் அவர்களைத் தண்டித்திருந்தார் ; விளைவாக, நீண்டகாலத்திற்கு அவர்கள் நிராகரிக்கப் பட்டனர்.  அர்மீனியா காப்பாற்றப்பட்டது. சாக்ரட்டீஸ் மாணவர் செனோஃபோனின் தீவிர வாசகரான அர்ரியன் தம்மை அவருடைய சீடராக  உணர்ந்தார்; விளைவாக சாக்ரடீஸ் சீடரின் வம்சாவளி  அறிஞர்களுக்குரியது என்கிறபோதும் அவ்வறிஞர்கள் படை நடத்தவும் , சண்டைபோடவும் அறிந்தவர்கள் எனபதைத் தெரிவிப்பதாக இருந்தது.   அன்று மாலை, திபூரில் உள்ள எனது வில்லாவிற்குத் திரும்பி, சோர்வுற்ற ஆனால் அமைதியான இதயத்துடன், எனது காவல் தெய்வத்தின் தினசரி படையலுக்காக  மதுவையும் தூபத்தையும் டையோட்டிமஸ் கைகளிலிருந்து எடுத்தேன்,  

ஒரு சராசரி மனிதனாக இருந்த காலத்தில்,  சேபைன்ஸ்(Sabines) மலைகளின் அடிவாரத்தில், நீர்க்கரையோரம் பரந்துகிடக்கும் இந்நிலங்களை ஒன்றன் பின்னொன்றாக வாங்கிச் சேர்த்தேன்,  விவசாயி ஒருவன் தளராத பொறுமையுடன் தனது திராட்சைத் தோட்டத்திற்கு வேண்டிய நிலத்தை வாங்கி முடித்ததுபோல; பின்னர், இராச்சிய விவகாரங்கள் தொடர்பான  இரு பயணங்களுக்கிடையில் கொத்தனார்கள்,  கட்டிடக்கலைஞர்கள் ஆகியோர் பிடியில் சிக்கி இச்சிறியகாட்டில் நான் தங்க நேர்ந்தது; ஆசியக் கண்டத்தின் அனைத்துவகையான மூடநம்பிக்கைகளிலும் திளைத்திருந்த ஓர் இளைஞன்  பயபக்தியுடன், மரங்களைக் காப்பாற்றக் கேட்டுக்கொண்டான். கீழ்த்திசைநாடுகளில் மேற்கொண்டிருந்த மிகப்பெரிய பயணத்திலிருந்து திரும்பியவுடன்,  ஏற்கனவே கிட்டத்தட்ட முக்கால்பங்கு முடிந்திருந்த பிரம்மாண்டமான நாடக அரங்கினை விரைவில் கட்டிமுடிக்கத் தீர்மானித்துப்  பித்து தலைக்கேறியவன்போல வேலைகளில் இறங்கினேன். ஆனால் திரும்ப இந்தமுறை அங்கு சென்றது இயன்றவரை கண்ணியமாக என் நாட்களை முடிப்பதற்காக. ஒருபக்கம் மகிழ்ச்சி, இன்னொருபக்கம் பணி ; இரண்டையும் எளிதாகக் கொண்டுபோகவேண்டும் என்பதற்காக இராச்சிய நிர்வாகம், பார்வையாளர் கூடம், மேல் முறையீடாக இறுதித் தீர்ப்பிறகு என்னிடம் வரும் கடினமான வழக்குகளுக்கான நீதிமன்றமென அனைத்தும் ஒழுங்கிற்குள் கொண்டுவரபட்டன; விளைவாக உரோம்-  தீபுர் இரண்டு நகரங்களுக்குமான அலைச்சல் களைப்பை மிச்சம்பிடிக்க முடிந்தது. இக்கட்டிடங்கள் ஒவ்வொன்றிற்கும் போசைல்(Poecile), அக்காடமி (Academy), பிரிட்டனியம்(Prytaneum) என்று கிரேக்கத்தை நினைவூட்டும் பெயர்களையிட்டேன். ஆலிவ் மரங்கள் நடப்பட்ட இச் சிறிய பள்ளத்தாக்கு டெம்பே அல்ல என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் ஒவ்வொரு அழகான இடமும் இன்னொன்றை ஞாபகமூட்டும் வயதை  அடைந்திருந்தேன். இதில் இன்னமும் அழகு எதுவெனில் கடந்த கால இன்பநினவுகளால், மகிழ்ச்சி ஒவ்வொன்றும் தனது பரிமாணத்தைக் கூட்டிக்கொள்வதாகும். என்னை அப்படிப் பழைய நினைவுகளுக்கு, அதாவது ஆசைகளின் சோகத்திற்கு  என்னைத் தர சம்மதித்தேன்.  பூங்காவொன்றில் போதிய வெளிச்சமின்றி ஒரு பகுதி இருந்தது, அதற்கு ஸ்டிக்ஸ்(Styx) எனப் பெயரிட்டேன் ; அதுபோல காட்டுச் சாமந்தி பரவலாக இருந்த ஒரு புல்வெளிக்கு எலிசியன் புலங்கள்(Champs Élysées) எனப் பெயர் சூட்டினேன், இந்நடவடிக்கைகளைக்கொண்டு  நம்முடைய துன்பங்களுக்கு இணையாக உள்ள வேறொரு உலகிற்கு நான் தயாரானேன் ; எனினும் அங்கு மகிழ்ச்சி என்பது தெளிவற்றது ; நம்முடைய மகிழ்ச்சிக்கு ஈடானதல்ல ; அதிலும் குறிப்பாக, வனாந்திரமான இந்த இடத்தில் மேலும் தனிமைப் படுத்திக்கொள்ள நினைத்து எனக்கென ஒரு புகலிடத்தைக் கட்டச்செய்தேன், அது   வரிசையாகத் தூண்கள் சூழ்ந்திருக்கும் குளமொன்றின் மையத்தில் அமைந்ததொரு ‘பளிங்குத்  தீவு’,  அங்கே, கப்பிதொலினா என்ற பெயரில் ஒர் இரகசிய அறை ; அதனைக் கரையோடு இணைக்கவும், சொல்லப்போனால் கரையிலிருந்து விலக்கிவைக்கவும்   ஒரு திருப்புப் பாலம் ; அது மிகவும் இலேசானது;  அதனைச் சால்வரிகளில் தள்ள ஒரு கைபோதும். இரண்டு அல்லது மூன்று பிரியமான சிலைகளை இந்த விதான மண்டபத்திற்குக் கொண்டுபோக ஏற்பாடு செய்தேன் ; அவற்றில் இந்த மார்பளவு அகஸ்டஸின் சிறுவயதுச் சிலை, எங்கள் நட்புக் காலத்தில் சூடோனியஸ் எனக்குக் கொடுத்தது; நண்பகல் குறுந்துயிலுக்கான நேரத்தின்போது உறங்கவும், கனவு காணவும், வாசிக்கவும் அங்கு செல்வேன்.  விறைத்த கால்களைத் தனக்கு முன்பாகப் போட்டு,  என்னுடைய நாய் வாயிலின் குறுக்கே படுத்திருக்கும் பிரதிபலிப்பொன்று பளிங்கைத் தொட்டு விளையாடும் காட்சிக்கு இங்கு வாய்ப்புண்டு; அடிமை இளைஞன் டியோடிமா, குளிர்ச்சி வேண்டி, ஓர் அகன்ற பாத்திரத்தின் வழவழப்பான விலாப் பகுதியில் தலை சாய்த்திருக்க,   எனது அரசியல் வாரிசு பற்றிய நினைவில் நான் ஆழ்ந்தேன்.

எனக்குக் குழந்தைகள் இல்லை, அதற்காக வருந்துவதுமில்லை. இப்படிச் சொல்லிகொண்டாலும்,  சோர்வு, பலவீனமென்று வருகிறபோது, அதற்கு மாறாக நடந்துகொள்கிறோம். அவ்வகையில்,    என்னைப்போல ஒரு மகனைப் பெற உரியவகையில் முயலவில்லை ; அப்படி நடந்திருந்தால் அவனுருவில் வாழ்ந்திருப்பேன்; அதற்காகச் சிற்சில சமயங்களில் என்னை நிந்தித்துக் கொள்வதுமுண்டு.  ஆனால்,  தேவையற்ற இவ்வருத்தம் ஐயத்திற்கிடமான இரண்டு யூகங்களை அடிப்படையாகக் கொண்டது. மகன் என்பவன் கட்டாயம்  நமது இடத்திலிருந்து நம்முடைய உயிர்வாழ்க்கையை நீட்டிப்பான் என்பது முதலாவது;   இரண்டாவது மனிதர் உருவாக்கத்திலுள்ள  அற்பத்தனமும், விசித்திரமும் நிறைந்த நன்மை, தீமை  என்கிற பிரத்தியேகத் தொகுப்புப் பற்றியது, ஒருவனை வெகுகாலம் அழைத்துச்செல்லும் தகுதி இவற்றுக்கு உண்டெனச் சொல்லப்படுகிறது. எனது நற்பண்புகளை என்னால் முடிந்தவரைப் பயன்படுத்தியுள்ளேன்; தீமைகளையும் எனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால் ஒருவருக்கும், என்னையே சொத்தாக அளிக்கும் உத்தேசமில்லை. மனிதர் தொடர்ச்சியை உண்மையாக நிலைநிறுத்துவது இரத்தப் பந்தமல்ல.  அலெக்சாண்டரின் நேரடி வாரிசு சீசரே அன்றி, ஆசியக் கோட்டையில் பாரசீகஇளவரசி ஒருத்திக்கு  பிறந்த நோஞ்சான் குழந்தையல்ல; சந்ததிகளின்றி இறந்த தளபதி பாமினோண்டஸ்(Épaminondas) தன்னுடைய போர் வெற்றிகளையே வாரிசுகளென்று அறிவித்தார். வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற  பெரும்பாலான மனிதர்களின் சந்ததிகள்  சாதாரணமானவர்கள், அல்லது அதைவிட மோசமானவர்கள், தங்கள் இனம் விட்டுச்சென்ற சக்தி அவ்வளவையும் தங்களுக்கென்று உபயோகித்துத் தீர்ப்பவர்கள். ஒரு மகனை முன்னிட்ட தந்தையின் இளகிய குணம்,  தலைவனின் நலன்களுடன் எப்போதும் முரண்படும். அவனே  ஒரு சக்கரவர்த்தியின் பிள்ளையெனில், ஓர்  அசௌகரியமான இளவரசனுக்கு வேண்டிய கல்வியைக் கற்றாகவேண்டிய நிர்ப்பந்தம் அவனுக்கு உள்ளது;  எதிர்காலத்தில் முடிசூட இருப்பவனுக்கு, இதுவே அனைத்திலும் மோசமானதொரு அனுபவம். அதிர்டஷ்டவசமாக,  நமது அரசாங்கம் பேரரசு  வாரிசு குறித்து விதிமுறையை உருவாக்க  அறிந்திருந்தது, உரோமாபுரியின் இந்த ஞானத்தை நானும் ஏற்றுக்கொண்டிருந்தேன். வாரிசுத் தேர்வில் ஏற்படக்கூடிய தவறுகளையும், உள்ள ஆபத்துகளையும் நான் அறியாதவனல்ல. குருட்டுத்தன்மை என்பது தந்தையின் பாசங்களுக்காக மட்டும் ஒதுக்கப்படவில்லை என்பதும் எனக்குத் தெரியாததல்ல;  அறிவு முன்னிலை வகித்து  அல்லது குறைந்த பட்சம் கலந்துகொண்டு எடுக்கும் எந்த முடிவும்,  தற்செயலாகக் குறுக்கிடும் தெளிவில்லா ஆசைகள் மற்றும் பிடிவாதமான  இயற்கைப்பண்பினும் பார்க்க  மேலானதென்று எப்போதும்  நான் நினைப்பதுண்டு. ஆனால் ஆட்சியும் அதிகாரமும், அதற்குத் தகுதியானவரிடம் ஒப்படைக்கப் படவேண்டும். உலக விவகாரங்களைக் கையாள்வதில் தனது திறமையை நிரூபித்த ஒரு மனிதன் தனதிடத்திற்கு வேறொருவரை நியமிக்கும் செயலென்பது உண்மையில் ஓர் அற்புதமான  செயல் ; காரணம்,  ஒரு மன்னரின் இறுதிச் சிறப்புரிமை என்கிற வகையிலும், அரசாங்கத்திற்கு அவர் ஆற்றும் கடைசிச் சேவை என்கிற வகையிலும் எடுக்கிற முடிவு பாரதூரமான விளைவுகளுக்குப் பொறுப்பாகிறது.  ஆனால் இந்த முக்கியமான தேர்வில் இதுவரைச் சந்தித்திராத சிரமத்தை நான் உணர்ந்தேன்.

என்னைப் பேரரசின் வாரிசென்று  அறிவிக்க  மன்னர் திராயான் இருபது வருடங்கள் எடுத்துக்கொண்டார்; அம்முடிவையும் மரணப் படுக்கையில் இருக்கும்போது  தெரிவித்தார் ; அவருடைய இச்செயலை கண்டித்திருக்கிறேன்.    மன்னர்களின் வாழ்க்கை அபாயங்கள் நிறைந்தது ; இருந்தும்கூட இன்னும் என்னுடைய அரசியல் வாரிசை யார் என்பதைத் தீர்மானிக்கவில்லை;  ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து ஏறக்குறைய பதினெட்டு ஆண்டுகள் முடிந்திருந்தன. இது குறித்து வதந்திகளுக்கும் பஞ்சமில்லை; கிட்டத்தட்ட அனைத்துமே கட்டுக்கதைகள்; பல்வேறு யூகங்களின் அடிப்படையில் உருவானவை. இவ்விஷயத்தில் எனக்கிருந்த ஐயமும், தயக்கமும் இரகசியமாக எடுத்துக்கொள்ளப்பட்டன. என்னைச் சுற்றியுள்ள மனிதர்களில் நேர்மையான அதிகாரிகள் ஏராளமாக இருந்தனர்; ஆயினும் அவர்களில் ஒருவரும் இப்பதவியின் தேவைக்கேற்ற  ஆற்றலையும் ஞானத்தையும் கொண்டவர்களில்லை. பிரிட்டோரியன் ஊர்க்காவல்  படையின் தலைமை நிர்வாகி என்கிற அனுபவத்தோடு,  கடந்தகாலத்தில் என் அன்பான தோழராகவும் இருந்தவர் மார்சியஸ் டர்போ ; அவருடைய நாற்பது ஆண்டுகால நேர்மை  அவருக்குச் சாதகமாகவும் இருந்தது ; பிரச்சினை, அவரும் என்னைப்போல  முதிய வயதினர்.  ஜூலியஸ் செவரஸ் சிறந்த படைத் தளபதி, பிரிட்டனின்  திறமையான  நிர்வாகி என்கிற பெயருமுண்டு ; மாறாக, கீழை நாடுகளின் சிக்கலான விவகாரங்கள் பற்றிய ஞானம் அவருக்குப் போதாது. ஓர் அரசு நிர்வாகிக்குத் தேவையான அவ்வளவு தகுதிகளும் அர்ரியனிடம் இருந்தன; ஆனால் அவர் கிரேக்கத்தைச்சேர்ந்தவர், உரோமாபுரியின் நெறிமுறைகளில்,  கிரேக்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ஒருவர்; ஆதிக்கம்செலுத்த உரியகாலம் வரவில்லை; காத்திருக்கவேண்டும். 

எனக்கான அரசியல் வாரிசுத் தேடலின்போது,செர்வியானஸ் உயிருடன் இருந்தார்; அவரைப் பொறுத்தவரை,  நீண்டநாள் வாழ்வதற்குக் காரணம் இருந்தது, அதொரு பிடிவாதமான அறுபது வருடக் காத்திருப்பு. சக்கரவர்த்தி நெர்வா, தமக்குப்பின் அரசியல் வாரிசாக திராயானை நியமித்தது அவருக்கு ஏமாற்றத்தை அளித்தபோதும், இன்னொருபக்கம்  அவரை ஊக்கப்படுத்தியது; ஏதாவது நல்லது நடக்குமென்கிற எதிர்பார்ப்பு அவருக்கு இருந்தது. ஆனால் இராணுவத்தில் தொடர்ந்து பணியாற்றிய எனது நெருங்கிய உறவினரான இவரை அதிகாரத்தில் சாதாரண பதவியில் அமர்த்தவியலாது;. குறைந்தபட்சம் அவருக்குப் பேரரசில் மதிப்புமிக்க ஒரு பதவியைத் தரவேண்டும், அதாவது மன்னருக்கு அடுத்தவர் என்ற இடத்திற்கு உத்தரவாதம் தரவேண்டிய நிலை. ஆனால் பெரிதாக மரியாதைக்குரிய எதுவும் வாய்க்காத நிலையில், இதிலும் கூட அவருக்குக் கிடைத்தது ஏமாற்றமே. இந்நிலையில் உரிய சந்தர்ப்பத்திற்கெனக் காத்திருந்தவர்போல, நெட்டிலிங்க மரங்களடர்ந்த காடொன்றின் வளைவில் மொசேல் ஆற்றங்கரையோரம் தன்னுடைய அடிமைகளைக் கொண்டு என் மீது தாக்குதலை நடத்தினார். அன்றையதினம் காலையில் ஓர் இளைஞனுக்கும் ஐம்பதுவயது மனிதருக்கும் இடையில் தொடங்கிய ‘நீயா – நானா’ சண்டை, இருபது ஆண்டுகள் நீடித்தது, அதிகாரத்தின் மனநிலையை எனக்கெதிராகத் திசைதிருப்பியதோடு,  பிரச்சினைகளைப் பூதாகரமாக்குவது, எனது சிறு தவறுகளைக்கூட தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதெனத் தொடர்ந்தார். இத்தகைய எதிரிகளே, நமக்கு எச்சரிக்கையுடன் இருப்பதற்குரிய ஞானத்தை வழங்கும் சிறந்த ஆசிரியர்களாகவும் இருக்கிறார்கள் ; மொத்தத்தில், செர்வியானஸ்  எனக்கு நிறைய போதித்தார். நான் ஆட்சிக்கு வந்த பிறகு, தவிர்க்க முடியாததை ஏற்றுக் கொள்ளப் போதுமான பக்குவமும்,  அவருக்கு இருந்தது; நான்கு கான்சல்கள் எனக்கெதிராகச் செய்த சதி வெளிவந்தபோது, தமக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லையென அவர்களை கை கழுவினார்,  அம்மனிதரின் கைவிரல்களில் அழுக்குகள்  ஒட்டிக்கிடந்தபோதும், அவற்றை பொருட்படுத்தவில்லை. அவரிடமும் சில மாற்றங்களை அறியவந்தேன் ; எதிர்ப்பென்று வருகிறபோது  குரலை உயர்த்தாமல் மெல்லப் பேசுவது, அவதூறுகளை மூடிய கதவுகளுக்குப் பின்னால் எழுப்புவதென திருப்தியுற்றார். செனெட் அவையில்  செல்வாக்குமிக்க     பழமைவாதிகளின்  சிறிய ஆனால் சக்திவாய்ந்த பிரிவினர்   எனது சீர்திருத்தங்களுக்கு இடையூறாக இருந்தனர் ; அவர்களின் ஆதரவுடன் எனது ஆட்சியை அமைதியாக விமர்சிப்பது இவருக்குச் சௌகரியமாக இருந்தது. மெல்ல மெல்ல என்னுடைய சகோதரி போலினாவை என்னிடமிருந்து அந்நியப்படுத்த இவரால் முடிந்தது. அவள்மூலமாக அவருக்கு மகளொருத்தி பிறந்தாள், சாலினேட்டர் என்பவனுக்கு அப்பெண் மணமுடிக்கப்பட்டாள் ; அவன் உயர்குடியில் பிறந்தவன். அவனுக்குக் கான்சல்  பதவி அளித்துக் கௌவுரவத்தை மேலும் உயர்த்தினேன் ; ஆனால் இளம்வயதிலேயே சயரோகநோயில் மாண்டான்; எனது சகோதரி மகளும் சிறிது காலமே உயிர்வாழ்ந்தாள். அவளுக்கு ப்ஃயூக்கஸ் என்ற பெயரில் ஒரே மகன் ; அவன் தனது பொல்லாத பாட்டனால் எனக்கெதிராகத் திசைதிருப்பப்பட்டான்.

எங்கள் இருவர்க்கிடையிலான  வெறுப்புகள்  அதனதன் வடிவத்தைத் தக்க வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்திவந்தன.  பொது நிகழ்ச்சிகள் என்று வருகிறபோது, அவருடைய உரிமைகளில் நான் தலையிடுவதில்லை; அவருடைய வயது சக்கரவர்த்தியிடம் சில முன்னுரிமைகள் அளித்திருப்பதை புரிந்து கொண்டு, அவர் கலந்துகொள்ளும் விழாக்களைத் தவிர்த்துவந்தேன்.  உரோமுக்குத் திரும்பும் ஒவ்வொருமுறையும், ​​ஒருவித நாகரீகம் கருதி,  அவருடைய இல்லத்தில் உணவுண்ண அழைக்கிறபோது மறுப்பதில்லை என்கிறபோதும், விழிப்புடன் இருந்திருக்கிறேன்; எங்களிடையே கடிதப் பரிமாறல்களுண்டு; அவருடைய கடிதங்கள் சுவாரஸ்யமாகவும் இருந்துள்ளன.  நாளடைவில், அர்த்தமற்ற இத்தகைய பாசாங்கு உறவுகளில் எனக்கு வெறுப்பேற்பட்டது; அனைத்து விவகாரங்களிலும் முகமூடிகளைத் தூக்கி எறிந்துவிட்டு,  இயல்பாக இருப்பது,  வயதானகாலத்தில் கிடைக்கக்கூடிய அரிய நன்மைகளில் ஒன்றெனக் கருதினேன்.  போலினாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள மறுத்து விட்டேன். பெதார் முகாமில், உடல் அளவிலும், மன அளவிலும் கடுமையாகச் சோர்ந்திருந்த  தருணத்தில்  செர்வியானஸ்  தான் நினைத்ததைச் சாதிக்க விருக்கிறார் என்றும், அதற்கு என்னுடைய தவறுகளே காரணமெனவும் சொல்லக் கேட்டேன் ; எனக்குக்கிடைத்த தகவல்களில் மிக மோசமான தகவலென்று அதைக் கூறமுடியும். தமது சக்தியை அதிகம் விரயம் செய்யாத இந்த எண்பது வயது முதியவர், நோயில் அவதிப்பட்டுக்கொண்டிருந்த ஐம்பத்தேழு வயது நோயாளியின் உயிர்வாழ்க்கைக்கு ஆவன செய்தல்வேண்டும்; என்னுடைய வாரிசை தெரிவு செய்யாது நான் இறக்க நேர்ந்தால்  என்னுடைய அதிருப்தியாளர்கள் வாக்குகளையும்,  எனக்கு மைத்துனர் என்பதால்,  என்னுடைய  விசுவாசிகளின்  ஆதரவையும் அவரால் பெறமுடியும் என்கிற நிலைமை இருந்தது; எனது சாதனைகளைக் குறைத்து மதிப்பிட எனக்கும் அவருக்குமான இந்த மெலிதான  உறவை அவர் சாதகமாக்கிக் கொள்ளக்கூடும்.  இந்நிலையில், ஒரு பேரரசிற்கு மோசமான எஜமானர்கள் அமைவதற்கும் வாய்ப்புகள் நேருவதுண்டென    என்னை அவ்வப்போது சமாதானபடுத்திக் கொள்வேன். ஆகமொத்தத்தில் செர்வியானஸ் ஒரு மோசமான மனிதரென்றும் போகிறபோக்கில் கூறவிடமுடியாது, ஏன் இந்த அசமந்தமான ஃப்யூக்கஸ் கூட, ஒரு நாள் ஆட்சிசெய்யும் திறனைப் பெறக்கூடும். ஆயினும் என்னிடம் மிச்சமிருந்த ஆற்றல், இப்படியான பொய்யை ஏற்க மறுத்தது, செர்வியானஸ் என்கிற  விஷப்பாம்பைக் கொல்வதற்கேனும் உயிர் வாழவேண்டுமென நினைத்தேன்.

தொடரும்……

அதிரியன் நினைவுகள்

அதிரியன் நினைவுகள் – 37 அதிரியன் நினைவுகள் – 39

Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.