தொடுதிரை

நூறாண்டு நின்று செழித்துப் படர்ந்த வேம்புதான் சாமி. கிழக்கே உதித்து மேலேறும் சித்திரை மாத முழுநிலா, வானம் குழந்தை முகம்போல தெளிந்து ஒளிர்ந்தது, செவ்வந்திப் பூக்கள் சிரித்திருக்கும் வயல், குலதெய்வம் வேம்புக்கு முன்னால் சக்கரைப் பொங்கல், வெற்றிலை பாக்கு, பூ பழம், பொறிகடலை படையல், மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றிவைக்கும் அம்மா, ஆற்றுநீரில் தெரியும் மணல்போன்ற அம்மாவின் வண்ணம். இலைவழி வழியும் நிலவு அம்மாவின்மேல் பொன்பொழியும் கணம். இடுப்பு வேட்டியில் இறுக்கிக்கட்டிய துண்டோடு, திறந்த மார்போடு, கற்பூரதீபம் ஏற்ற பனை மரம்போல் நிற்கும் அப்பா.

ருருவின் பிரம்மத்வாரா

“எனக்கு என்ன? ஏன் என் பிரிய ருரு என்னைவிட்டு புழுழுவாக மாறி ஓடுகின்றான். இந்த கனவின் அர்த்தம்தான் என்ன? யாரிடம் கேட்பேன்“ அவள் பயத்தால் தவித்தாள். காரணம் இன்றி கண்கள் அடிக்கடி நனைந்தது. காலையில் இருந்து அந்த கனவு அவளை அலைகழிக்கிறது. தோழிகளிடம் சொல்ல கூச்சமாக இருந்தது. “அர்த்தமில்லா கனவுக்கு அர்த்தம் தேடி. பெரும்பாலையில் அலைகிறேனோ?“ கனவை உதற முயற்சித்தாள், அவளால் முடியவில்லை. கனவு அவளை வாகனமாக்கி பயணம்போனது.

விசும்பின் துளி

மனைவியின் காது மூக்கு ஓட்டைகள் ஓட்டையாகவே இருக்க தென்னவிலக்கமாறு சீவுகள் காவல்காக்கிறது. தொண்டை ஓட்டையை மூட ஏதாவது ஒரு குச்சி இருந்தால் வயலெல்லாம் எதற்கு? தோடும் மூக்குத்தியும் அடகுவைத்து விதை வாங்கி விதைத்த விதைகால் நிலம் இது. விதை பழுதில்லை வயலும் பழிவாங்கவில்லை. பால் இல்லா மார்பை எத்தனை முறை சப்பினால் என்ன? வயல் பாலில்லா தாய்போல தவித்துக் கிடக்கிறது. குட்டிக்குட்டி பச்சப்பிள்ளைகள் தண்ணீர் இன்றி காய்ந்து சுருள்கின்றது. பாளம் பாளமாய் சூட்டில் வெடிக்கும் வயல் மார்வலியில் கேவும் தாயின் வாய்புண்போல வெடித்துக்கொண்டே போகிறது