கொடை

தாமரைக்குளத்தைப் பார்த்த பார்த்தன் விழிகளில் அதிசயம் ஆச்சர்யம். குளம் முழுவதும் பூக்கள். இலைகளே தெரியவில்லை. மலர்கள் அனைத்தும் நீரை விட்டு ஒரு முழம் ஒங்கி வளர்ந்து நின்றன. ஒவ்வொரு பூக்களும் ஒரு குழந்தையை துயிலவைக்கும் வட்ட தொட்டில் அளவுக்கு பெரியது. ஒவ்வொரு பூவிலும்   ஆயிரம் இதழ்களாவது இருக்கும்.  ஒவ்வொரு பூவிதழும் ஒரு வாழைப்பூ அளவு இருந்தது. சரவணபொய்கையில் முருகன்  உதித்த தாமரையின்  வம்சமா இவைகள்.  

மலர்கள் அனைத்தும் நீரை விட்டு ஒரு முழம் ஒங்கி வளர்ந்து காற்றில் அசைவது,  பல்லாயிரம் குட்டித் தேர்கள் அந்த குளத்திற்குள் இறங்கி ஊர்வதுபோல் தோன்றியது. சில பூக்களில் அமர்ந்திருந்த அன்னப்பறவைகள் தனது சிறகை விரித்து உலர்த்துவது,    தேரில் வெண்கொடி அசைவதுபோல அழகிய காட்சியை கொடுத்தன. தங்கமணிகளை பேழையில் வைப்பதும் எடுப்பதும்போல்  தேன் குடிக்கும் பொன்வண்டுகள் பூவுக்குள்  நுழைவதும் வெளியேறுவதுமாக இருந்தன.      

 குளத்தில் இருந்து எழுந்த குளிர்ந்த மெல்லிய வாசத்தென்றலால் சிலிர்ப்படைந்தான். பயணக்களைப்பு தீர்ந்து உடல் இளகுவானது.  மலரின் வாசத்தில் உடலே நாசியாகிவிட்டது போன்ற  பரவசம்.   “கண்ணன் ஓய்வெடுக்க தேர்ந்தெடுக்கும் இடமே  செல்வங்கள் நிறைந்ததுதான்“ என்று  பரவசப்பட்டான்.  

முட்டியை தொடும் அளவிற்கு நீண்டு தொங்கிய  கரத்தை உயர்த்தி தோளில் புரண்ட சுருள் குழல் கற்றைகளை அள்ளி உச்சிக்கொண்டைப் கோட்டுக் கொண்டான்.  கன்னத்தில் தேனீக்கள் அமர்ந்து இருப்பதுபோல தோன்றிய தாடியை வலது கரத்தால் மெல்ல  உருவினான்.  பயணத்தில் தோன்றிய வியர்வையில் தாடி நனைந்து பிசுபிசுத்தது.  

குளத்தைச்சுற்றி முதல் சுற்றில் ஆலமரம் பாதிக்குளத்தை மறைத்து குடைப்பிடித்திருந்தது.  இரண்டாம் சுற்றில் நாவல்மரம். நாவல் மரத்தில் பெரும் பெரும பழங்கள். ஒவ்வொரு பழமும் ஒரு கண்ணனோ என்ற நினைவெழுந்தது. பார்த்தன் முகம்  ஒளிகொண்டது. தழை  இமைகளை விலக்கி பூவிழியால் வானத்தைப்பார்த்தது குளம்.    இடது தோளில் தொங்கிய  காண்டீபத்தையும் அம்பராத்தூளியையும் எடுத்து ஆலமரத்தில்   சாய்த்து வைத்து நோக்கினான்.  வில்லேந்திய சடைவிரித்த சிவன்போல தோன்றியதுஅந்த ஆலமரம். ஆயிரம் ஆயிரம்  சடைபுரிகள் தொங்கும் சிவன்.   கைகளை குவித்து உச்சியில் வைத்து கும்பிட்டான். “திருச்சிற்றம்பலம்“

 தூரத்தில் இருந்து எழுந்து பரவிவந்த கண்ணனின் குழலிசை  உள்ளத்தை தழுவியது.  குழலிசை உருகி ஓடும் பொன் குழம்பென  உள்ளம் நுழைந்து  வா வா என்று நரம்புகளை சுண்டியது ஒரு கணம். மறுகணம் போ போ தப்பித்து போ என்று விசையோடு பிடித்து தள்ளியது.  குழல் இசையின் வெம்மையும் தண்மையும் அவன் உள்ளத்தை பிசைந்து உருட்டி தூக்கிப்போட்டு விளையாடியது. அந்த இசையாடலுக்கு நடுவில் ஒழுகும் ஏகாந்த   துளியை சுவைத்தான் பார்த்தன்.

கண்ணனின் குழலிசையே  இருமையின் விளையாட்டுதான். போகவும் விடாது. இணைந்திருக்கவும் விடாது. நடை எந்திரத்தில் பயணிக்கும் பாதம்போல எத்தனை காலம் நடந்தாலும் ஓடினாலும் அங்கேயே  இருக்கும். 

கண்ணன் குழலிசையால் எல்லாவற்றையும் இயக்குகிறான். எங்கும்போகாமல் கட்டியும் வைக்கிறான்.    இருந்தும் அவனுக்கு என்னதான் வேண்டும். அந்த குழலிசையில் ஏன் இந்த ஏக்கம் .   அந்த ஏக்கம்தான் அவன்மீது    ஏக்கம் கொள்ள வைக்கிறதோ? 

ஏகாந்தத்தின் தித்திப்பு தீர  உலகியல் ஆடலின் கசப்பை  மென்று  தவித்தது அர்ஜூனன் நெஞ்சம்.  தனது தலையை உதரிக்கொண்டான். “தாகம், தண்ணீர் கொண்டுவா“ என்று கண்ணன் சொன்ன வார்த்தைகள்   நினைவுக்கு வந்ததும் பரபரப்பானான் பார்த்தன்.   

உடல் தளச்சியை நீக்க இரண்டு கைகளையும் உயர்த்தி விரித்து   ஓங்கி அறைந்தான். தப்பென்று எழுந்த   கை ஓசையில் மரங்களில் பழம் தின்றுக்கொண்டிருந்த கிளிகளும் காகமும் சிட்டுகளும் பயத்தில்   ஓசையிட்டு எழுப்பி  பறந்தன. அது மரகத குடுவையை திறந்துக்கொண்டு நட்சத்திரங்கள் சிதறுவதுபோல் இருந்தது. பறவைகள் மீண்டும் கிளைகளில் வந்து  அமர்ந்து கீச் கீச் என்று பேசிக்கொண்டே பழங்களை  தின்றன.. 

பூக்களில் அமர்ந்திருந்த அன்னக்குஞ்சுகள் தாயின் முதுகில் இருந்து இறங்கி தாயின் சிறகுக்குள் பதுங்கிக்கொண்டு பார்த்தனைப் பார்த்தன. அக்கரையில் தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த பசுக்கூட்டம் தண்ணீர்வழியும் வாயோடு பார்த்தனை அண்ணாந்துப் பார்த்துவிட்டு மீண்டும் தண்ணீர் அருந்தின. கண்ணனின் குழலிசையின் போதை அவைகளின் கண்களில். 

பறவைகள் கொத்திப்போடும்  பழங்கள் தொப் தொப் என்று குளத்தில் விழும் ஓசைகள் எழுந்துக்கொண்டே இருந்தது. குளத்தின் தண்ணீர் இளம்பச்சை நிறத்தில் அலைந்தாடியது.  கண்ணன் குழலிசை  ஒரு மாயவலையை அவன்மீது வீசி  அவனை  சுண்டி   இழுத்தது.  காலையில் கண்ணனிடம் கேட்ட கேள்விக்கு அவன் இன்னும் பதில் தரவில்லையே என்ற நினைப்பு எழுந்ததும் அந்த கேள்வியை மனதிற்குள் மீண்டும்  கேட்டுக்கொண்டான்.  

“எந்த கேள்விக்கும் நுனிநாக்கிலேயே பதில் வைத்திருக்கும் கண்ணன். ஏன் காலையில் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லை. “உனக்கு எத்தனை முறைதான் சொல்வது“ என்ற எண்ணத்தின் வெளிப்பாடா?.“ கூட்டமாக பறந்து வந்த வெண்கொக்குகள் சிறகுகள் அசையாமல் மெல்ல இறங்கி  நாவல் மரத்தில் நிறைந்து உட்கார்ந்தன.  நாவல் மரம் முழுவதும் நாணல்பூக்கள்.   

 “அவன் பதில் சொல்லச்சொல்ல எனக்கு சந்தேகம்தான் அதிகரிக்கிறது. அவன் என் சந்தேகத்தைப் போக்குவதற்கு பதில் சொல்கின்றானா? அல்லது எனது சந்தேகத்தை வளர்ப்பதற்கு பதில் சொல்கின்றானா? என்றே தெரியவில்லை. ஆனால் ஒன்று எத்தனைக் கேள்விகள்  கேட்டாலும் அவனிடம் பதில் இருக்கிறது. அவனும் சொல்லத் தயாராகத்தான் இருக்கிறான். எனக்குதான் புரிந்துக்கொள்ள பக்குவம் வரவில்லை போலும். அதனால்தான் பதில் சொல்லவில்லையோ?. “ ஆலமரத்தில் தியானத்தில் இருந்த மீன்கொத்தி அம்புபோல் குளத்திற்குள் நுழைந்து மீன் ஒன்றை கவ்வி மீண்டும் தனது இடத்திற்கு வந்து அமர்ந்தது. 

 ஆலமரத்தின் வேர்களே அந்த குளத்திற்குள் இறங்குவதற்கு படிபோல இருந்தது. “கண்ணனிடம் சென்றதும் முதல்வேலையாய் அந்த கேள்வியை கேட்டு பதில் பெறவேண்டும். “ நீரை ஆவளோடு தழுவ பாயும் நாகம்போல நீண்ட கால்களை தூக்கி வைத்து குளத்திற்குள் இறங்கினான்.

வேர்போல கிடந்த பாம்பு ஒன்று   தாவி நீருக்குள் விழுந்து நீந்தி இலைகளில் மறைந்தது.    பாம்பு விழுந்த அதிர்ச்சியில் சில மீன்கள் பயந்து துள்ளின.   சில மீன்கள் தாமரையிலையிலும் சில பூவிலும் விழுந்து துடித்தன. 

தூரத்தில் நீருக்குள் மடங்கி எழுந்த பாம்பின்  உடல்மீது சூரிய ஒளிப்பட்டு பொன்னென மின்னயது.   அதன் வயிற்றுக்குள் அது விழுங்கிய கெண்டை மீன் இரை. “ பாம்பு சூல்கொண்ட மீன்“ என எண்ணியக்கணம் அவனுக்குள்  உலுபியின் ஞாபகம் .  உலுபியின் நினைவால் அவள் சூடியிருக்கும் மலர்கிரிடம்போல் தோன்றியது அந்த பூவாயி குளம்.  

பார்த்தன்  ஆவலோடு ஒரு பெரிய மலரைத்தடவி இழுத்து விழிகள் மயங்க அதன் இதழ்களில் தன் உதடுகளைப்பதித்தான் . அவன் உதடுப்பட்டதால் கன்னியது அந்த மலர் இதழ்.  குளிர்ந்த நீரில் நிற்கும்போதும் கொதித்தது அவன் உடல் .  “இன்மையில் கனமானது காமம். தடமின்றி எரிப்பது காமம்“   ஆழமாக காற்றை இழுத்து சுவாசப்பையை நிறைத்து மூச்சை விட்டான். 

இரண்டு கைகளிலும் அள்ளிய நீரை முகத்தில் அடித்தான். உடல் குளிர்ந்து உள்ளம் இளகுவானது.   மூச்சுக்குழலில் நீந்தும் தாமரை மலர்களின் மணம் புத்துணர்வை தந்தபடி உள்ளுக்குள் நீந்தியது.  சுகம்..சுகமாய்  மூச்சுக்குழலில் வாசனை ஓட்டம். 

கண்ணன் குழல் ஒலி வா வா  என்று அழைத்துக்கொண்டே இருந்தது. 

குளிர்ந்த தண்ணீரை அள்ளி மீண்டும் முகம் கழுவிக்கொண்டான். தண்ணீரை அள்ளி வாய் அருகே குடிக்க கொண்டு சென்றவன் கண்ணனுக்கு கொடுத்தப்பின்பு குடிப்போம் என்று எண்ணி, அம்புக்கூண்டைக் கழுவி தண்ணீர் முகந்துக்கொண்டு காண்டீபத்தை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு கண்ணனிடம் வந்தான்.  

பவழமல்லி மரத்திற்கு அருகில் நின்ற பெரிய மகிழமரத்தில் சாய்ந்து கால்களை நீட்டி அமர்ந்தபடி கண்ணன் குழல் வாசித்தான்.  நீலமணி சிலை போன்ற உடல்.  சிலையாகிவிட்டானோ என்ற திடுக்கிடல் நெஞ்சுக்குள்.  குழல் வாசிப்பதால் உதடும் விரல்களும் அசைந்தன.    அவனைச்சுற்றி பவழமல்லி மலர்கள் முத்தும் பவழமும் கலந்து  வரைந்த கோலம்போல சிந்தி கிடந்தன. 

அந்த மகிழமர தேரா? அந்த பவழமல்லி கோலாமா?  பாற்கடல் நடுவில் எழுந்த நீலமலைபோல  விழிமயக்கை உண்டாக்கினான்.   அவன் அமரும் இடமெல்லாம் இந்த பாற்கடல் ஜாலம் எப்படி ஏற்படுகிறது.?  

அர்ஜுனன் உள்ளத்தின் கேள்வி அவன் காதுகளை எட்டியதுபோல இமைகளை திறந்துப்பார்த்து    பூமியில் நீண்டு சாய்ந்து கிடந்த இடது பாதத்தையும் அதன்மீது தூக்கி வைக்கப்பட்ட வலதுப் பாதத்தையும்  மெல்ல அசைத்தான் கண்ணன்.   குறுக்கு நெடுக்காய் சேர்த்துப் பிடித்த இரண்டு செங்கமலமலர்களால் விசுறுவதுபோல அசைந்தன அந்த பாதங்கள்.  நீண்ட பெரிய செவ்வரியோடிய  விழிகள் சிரிக்கவும். முலைக்காம்பில் இருந்து பிடுங்கப்பட்டதும் குதலைமொழி ஊறிவழிவதுபோல சிறுகுமிழ் உதடுகள்  தவிக்கவும் “இத்தனை நேரமா அர்ஜூனா?. தாகம் தாங்கமுடியவில்லை“ என்றான். 

”உனக்கா தாகம்?!  உனக்கு இந்த இடம் பிடித்துவிட்டது. இந்த இடத்தில் அமர்ந்து இந்த சோலை மரங்களுக்கு இசைக்கவேண்டும் என்று நினைத்துவிட்டாய். அவைகளின் தவம் அப்படி. அதற்கு நான் இடையூறாக இருக்க கூடாது என்று தாகம் என சொல்லி  துரத்தி விட்டாய் அதுவும் நான் அந்த பூவாயிக்குளத்தை ரசிக்கவும்“ என்றான்.   

“என்ன சொல்கிறாய் நீ?. எனக்கு தாகமாக இருக்கிறது“ என்று குழலை தனது இடையில் செருகிவிட்டு கையை நீட்டி அர்ஜூனன் கையில் இருந்த தண்ணீரை  பிடுங்கி,  அந்த மரத்தின் அடியில் சிறிது நீரை ஊற்றிவிட்டு ஆவலோடு அவசரமாய் பருகினான். அவன் குரல்வளை ஏறி இறங்குவது இந்திரநீலம் உருள்வதுபோல் இருந்து. காற்றில்  கண்ணன் தலையில் இருந்த மயிற்பீலி விழி  சிரிப்பதுபோல் மெல்ல அசைந்தது.  

கண்ணன் அருகில்  அவனுக்கு இணையாக உட்கார நினைத்த அர்ஜூனன் அவன் பாதத்திற்கு அருகில் சென்று அமர்ந்து  இயல்பாக தொடுவதுபோல அவன் பாத்தை தொட்ட கைகளை தனது நெஞ்சில் வைத்து கண்மூடினான். பார்த்தன் கைகள் தீயில் விரல் பட்டதுபோல்   அதிர்ந்து அமைதியடைந்தது. 

 கண்ணுக்குள் கண்ணன்.   தாமரைமலர் ஒன்றை தனது வலது கரத்தில் வழங்குவதுபோல  ஏந்தி நின்று புன்னகை செய்தான் “பெறுக பார்த்தா!“ என்று அருள்வதுபோல கண்ணன் வலது கரம் நீண்டது விழிகளுக்குள். நீண்ட வலது கரத்தில் அந்த குளத்தில் இருந்த பெரிய செங்கமல மலர்.    இமைக்குள் நீர்அலைகள். அர்ஜூனன் முகத்தை தாழ்த்தி திருப்பிக்கொண்டான். 

கண்ணன் தன்னில் ஆழ்ந்தவனாய்“அழகான மலர்வனம். அற்புத மலர்மணம்“ என்று மகிழமலர் ஒன்றை எடுத்து முகர்ந்து அர்ஜுனன் புருவ மையத்தில் அடித்தான். 

அர்ஜூனனின் புருவ மத்தியின் உள்ளே கண்ணாடி குமிழொன்று வெடித்து வண்ணமுக்ககோணங்கள் தோன்றி வண்ணம் கொட்டின, உடலில் தாங்க முடியாத சிலிர்ப்பு. முதுகுத்தண்டில் நாகம் எழுவது போன்ற துடிப்பு.  பார்த்தன் பறந்து பறந்து வான்தாண்டிச் சென்றான். உடலே இல்லாத உயிரின் நடனம். தலைக்குள் வான் திறந்து திறந்து விரிந்துக்கொண்டே இருந்தது.  தன்னை மறந்து “கண்ணா“ என்றான்.  

அப்பொழுதுதான் துயில் கலைந்து எழுந்தவன்போல கண்ணன் வான்வண்ண மாற்றங்களை நோக்கி. இரவா பகலா என்ற வினா எழும் விழி மயக்குடன் நிற்கும் குழந்தைபோல   “ அழகு“ என்றான். 

“உன்னைவிடவா!” என்பதுபோல அனலாக நோக்கி இன்மையை சுவைப்பதுபோல சிரித்தான் அர்ஜூனன்.  

“என்ன?“ 

“காலையில் நான் ஒரு விடைக்கேட்டேன். நீ இன்னும் கொடை அளிக்கவில்லை“.

“ஓ. அதுவா. உனக்கு கர்ணனை விட்டு வேறு நினைப்பே இல்லையா? என்று கண்ணன் அருகில் கிடந்த பவழமல்லி மலர்களை அள்ளி அர்ஜூனன்  தலையில் போட்டான்.  அந்த கணத்தில் காற்றில் அசைந்த மகிழமரக்கிளையில் இருந்து பூக்கள் பொழிந்துக் கொண்டே இருந்தது கண்ணன் தலையில்.  எங்கோ தூரத்தில் ஒரு சேவல் கூவியது. கழுத்துமணி ஒலிக்க “ம்மா“ என்ற  பசுவின் குரல் காட்டை அசைத்தது.  சற்று தூரத்தில் கண்ணனும் பார்த்தனும் நடத்தி வந்த புரவிகள் மேய்ந்தன. 

“என் மனம்  கர்ணனையே நினைப்பது உண்மைதான். ஏன் என்று தெரியவில்லை“ அவன் சிவந்த நாசியை   இடது கை முட்டியால் தேய்த்து ஊறிஞ்சினான். தலையை தூக்கி கண்ணனைப்பார்க்காமல் அருகில் கிடந்த சிறு குச்சியால் மண்ணைத் தோண்டிக்கொண்டிருந்தான். மண்ணுக்குள் இருந்த இந்திரகோபம் பவழம் நகவர்வதுபோல நகர்ந்து மண்ணுக்குள் மறைந்தது. 

“அவன் உன் ஆடிப்பாவை. ஆடியில் தன்னை நோக்குபவன் கண்களுக்கு நிறைகள் தெரிந்தாலும் அதை அவன் கண்கள் ரசிப்பதில்லை, குறைகளைத்தான் தேடித்தேடி அலைந்து கொண்டிருக்கும் . நீயும் அப்படித்தான். அவனுடைய நிறைகளை காணும்போதெல்லாம் அதனுடன் உன் நிறைகள் உன் அகத்தில் எழுவதில்லை. மாறாக உன் குறைகள் எழுந்துவருகிறது, அதை திருத்துவதற்கு பதறுகின்றாய்.  அவன் இல்லாத ஒன்றை கொடுப்பதில்லை இருப்பதைதான் கொடுக்கிறான். நீயும் இருப்பதைக்கொடு. நிறைவு ஏற்படும் என்று கண்ணன் கைக்கெட்டும் தூரத்தில் இருந்த மல்லிக்கொடியை மெல்லத்தடவினான்.  அப்பால் நாகங்கள் சறுகுகளில் நகரும் ஒலி ஏற்பட்டது. பார்த்தன் விழிகள் கூர்கொண்டன. கண்ணன் விழிகள் களிநடனம். 

தனது அருகில் கிடந்த மகிழமலர் ஒன்றை எடுத்து கண்ணன் பாதத்திற்கு அருகில் வைத்தபடி  அர்ஜூனன் “நானும்தான் கொடுக்கிறேன். அவனுக்கு ஏற்படும் நிறைவு எனக்கு ஏன் ஏற்படவில்லை”.  என்று மௌனமானான். 

கண்ணன் எதுவும் சொல்லவில்லை. பாதி மூடியவிழிகளோடு. உள்ளுக்குள் ஓடும் இசையில் ஆழ்ந்து குளிப்பவன்போல முகம் கனிய அமர்ந்து இருந்தான். இடையில் கட்டியிருந்த மஞ்சள் பட்டில் ஒரு சுருக்கம்கூட விழவில்லை. உட்கார்ந்து இருக்கிறானா அல்லது காற்றில் மிதக்கிறானா என்ற ஐயத்தை ஏற்படுத்தினான். பாலில் மிதக்கும் செங்கழூநீர் பூப்போல தெரிந்தான். மௌனத்தின் எடை  ஏறி அர்ஜூனனை அழுத்த  தாங்கமுடியாமல் அவனே பேசத்தொடங்கினான். 

“நேற்று    நீ ஒரு போட்டிவைத்தாய்.  ஒரு பொன்மலையை கொடுத்து அந்தி சாய்வதற்குள் இதை தானம் கொடுத்து முடிக்கவேண்டும் என்றாய். நானும் அதை வெட்டி வெட்டி வந்தவர்களுக்கு எல்லாம் ஏழுதலைமுறைக்கு  செல்வவளம்  பெருக வாரிக் கொடுத்தேன்.  அந்த மலை குறையவே இல்லை. பெற்றுக்கொண்டவர்கள்  என்னை பாராட்டுவார்கள் என்று நினைத்தேன். வாங்கியவர்கள் அனைவரும் நான் குறைவாகக் கொடுப்பதாகத் தூற்றினார்கள்.  உண்ட உணவே பசியை உண்டாக்குவதுபோல வள்ளலாக நினைத்து கருமியானேன்.     அது நெஞ்சை அறுக்கிறது.

 அதே பொன்மலையை அவன் ஒரு கணத்தில்  ஒருவனுக்கே முழுவதும் கொடுத்துவிட்டான். அவன் வேலை அப்பொழுதே முடிந்துவிட்டது. அவ்வளவு எளிதாக எப்படி அவனால் கொடுக்க முடிந்தது.  ஒருவனுக்குதான்   கொடுத்தான். உலகுக்கே   கொடுத்தவன்போல அவனை உலகம் புகழ்கிறது.  நெஞ்சம் நிறைந்து நிற்கிறான். என் இகழும் அவன் புகழும் என்னை நெஞ்சக்கனலில் எரியவைக்கிறது“ அர்ஜுனன் இமையோரம் ஈரம் ஏற்பட முகத்தை திருப்பிக்கொண்டான்.  தூரத்தில் மேயும் குதிரை தான்பிடுங்கிய புல்லில் இருந்த மண் போவதற்காக  தலையை ஆட்டி உதறியது.  

தேன்குழல்போன்ற சிற்றிதழில்  புன்னகை மலர கண்ணன் “அவனுக்கு புகழும் ஏற்படவில்லை. உனக்கு இகழும் ஏற்படவில்லை. உனது எண்ணம்தான் உன்னை அப்படி நம்பவைக்கிறது“ 

“எனக்கு புரியவில்லை”

“நான் கொடு என்றேன். அவன் கொடுத்துவிட்டான். தனக்கு கிடைத்ததாகவும் அவன் நினைக்கவில்லை. தான்தான் கொடுக்கிறோம் என்றும் அவன் நினைக்கவில்லை. பொன்மலை கிடைத்ததும் அதை உனது என்று நீ நினைத்தாய். நான் கொடுக்கிறேன் என்று நீ நினைத்தாய்.  அவன் அளவுப்பார்க்கவிலை. நீ அளவு பார்த்தாய். நான் எனது என்ற எண்ணம்தான் உனக்கு துக்கத்தைத் தருகிறது.  உனது அளவு பார்க்கும் குணம்தான் உனக்கு இகழாக வந்து இருக்கிறது. அவனின் அளவுப்பார்க்காத தன்மைதான் அவனுக்கு புகழாக வந்திருக்கிறது. நான் எனது என்று நினைக்காமல் நான் கருவி என்று அவன் நினைத்தான் அதனால் அவனுக்கு துக்கம் இல்லை“ 

“ஆமாம் நான் அளவுப்பார்த்தேன். வாங்குபவர் எத்தனைபேர் என்று பார்த்தேன். கொடுப்பது எவ்வளவு என்று பார்த்துப் பார்த்துதான் கொடுத்தேன். அதிகமான மக்களுக்கு கொடுத்தால் அதிகமாக நன்மையடைவார்கள்  என்று நினைத்தேன். நான் கருவி என்று நினைக்காமல் நான் கர்த்தா என்று நினைத்தேன். இதுதான் என் தவறுக்கு காரணமா? இல்லை இதற்கும் மேல் ஏதோ ஒன்று அவனிடம் உள்ளது அது என்னவென்று எனக்கு தெரியவில்லை. உனக்கு தெரியும். நீ சொல்ல மறுக்கிறாய். அதைச் சொல். 

 “அதைச் சொன்னால் புரியாது“ 

சொல்லக்கூடாது என்பதற்கு சொல்லும் பதிலா இது?.  பார்த்தன் சினந்து கண்ணனைப்பார்த்தான். 

கண்ணன் குழந்தைபோல “அர்ஜுனா! உனக்கு சொல்லாமல் வேறு யாருக்கு சொல்வேன். உனக்கு சொல்லவே நான் பிறந்திருக்கிறேனோ என்னவோ? என்று   கன்னத்தில் குழிவிழ சிரித்தான். தாமரை இதழ்களில் முத்துக்கள் பிறக்கும் அதிசயம். உடல் முழுவதும் குளுங்க அவன் சிரிப்பதைப் பார்க்கையில் எண்ணம் எல்லாம் ஒழிந்து நெஞ்சக்கூட்டில் அமைதியின் வாசம்.  அர்ஜுனன் கண்களை முடி தனக்குள் தான்  ஆழ்ந்தான்.  மண்டைக்குள் வானம் விரிந்து விரிந்து ஒளியோடு திகழ்ந்தது.  

“அர்ஜூனா!“  அர்ஜூனன் தனது அசைவின்மை  கணத்தில் இருந்து அசைந்து நிகழ் கணத்திற்கு வந்தான். “சொற்கள் பொருளாகிறது. பொருள் அறிவாகிறது. அறிவு உணர்வாகிறது“ என்றான் கண்ணன். அர்ஜூனன் உள்ளுக்குள் குழைந்து அவன் சொற்களுக்குள் புகுந்தான். 

கண்ணன் தனது பாதத்தை தூக்கி அர்ஜூனன் மடியில் வைத்துக்கொண்டு “அர்ஜூனா! கர்ணன் கொடை வழங்கும்போது சொல் பொருள் அறிவு உணர்வு என்ற நான்கு படிகளில் நகர்ந்து நகர்ந்து ஏறுவதில்லை. உணர்வு என்ற நான்காவது   படியில் துள்ளி ஏறி அக்கணத்திலே சென்று நின்று வழங்குகின்றான். நீ சொல் பொருள் அறிவு என்று மூன்று படிகளை நகர்ந்து நகர்ந்து கடக்கிறாய். அதனால் அறிவு படியில் களைத்து நின்று விடுகின்றாய். சரியா? தவறா? அதிகமா? குறைவா? என்ற கேள்வியின் கொக்கியில் மாட்டி துடிக்கிறாய். பின் எப்படி நீ உணர்வுப்படியை தொடுவாய். கொடை வழங்கும்போது உணர்வு படியில் நீ ஏறுவதே இல்லை.  கொடை வழங்கும்போது உன்னை உணர்வுப்படியில் ஏறவிடாமல்  தடுப்பது எது?. உனக்குள் பார். நீ கண்டுபிடி. அதை நான் உனக்கு தரமுடியாது. தந்தாலும் அதை நீ பெற்றுக்கொள்ளமாட்டாய். நீயே தேடி அடைந்தால்தான் அது உன்னிடம் உனக்கானதாய் இருக்கும். அவர் அவர் தேடி அடைந்தது. அவரவருக்கு உரியது. ஒரு மனம் ஓராயிரம் எண்ணங்கள் அத்தனையும் அனுபவம்“.

 கண்ணன் அங்குதான் இருந்தான். சிறுகுழந்தைபோல் தெரிந்தான். சொற்கள் எங்கோ காலத்தை கடந்த முதுமையின் குகையில் இருந்து வருவதுபோல் அவனுக்குள் இருந்து வந்து உள்ளத்தை கனக்க வைத்தது. அர்ஜுனன் மீண்டும் தன்னில் மூழ்கினான். 

“என்ன அர்ஜூனா? பேச்சே இல்லை“ “

“ஒரு கேள்விக்கேட்டால் நீ ஒரு பதில் சொல்வதில்லை. ஓராயிரம் கேள்விகள் முளைக்க உள்ளத்தை உழுதுவிடுகிறாய்.  அதனால்தான் உன்னிடம் ஆடவர் எவரும் அத்தனை எளிதில் கேள்வியே கேட்பதில்லை.  உனக்கு ஒன்றுமே தெரியாது என்பது பெண்டீர் நினைப்பு. அதனால் அவர்கள் உன்னிடம் கேள்வியே கேட்பதில்லை.  உனக்காகவும் அவர்களே பேசித் திரிகின்றார்கள்.  உன்னிடம் கேள்வி கேட்டு மாட்டிக்கொள்பவன் ஆடவரில் நான் மட்டும்தான். உன் கேள்வியிலேயே பதிலை கண்டடைந்து திருப்திப் படுபவள் பெண்களில் பாஞ்சாலி மட்டும்தான்”.

“என்னை யாரும் சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்கிறாயா?“   

“இல்லை“ 

“பிறகு“ 

“யாரையும் நீ புரிந்துக்கொள்ளவிடவில்லை என்கிறேன்“  அர்ஜூனன் தன் மடியில் தவழ்ந்த கண்ணனின்   பாதங்களை மெல்ல பிடித்துவிட்டான். 

“ஓ! நீ சரியாக புரிந்திருக்கிறாய் என்று நான் எடுத்துக்கொள்ளட்டுமா“ 

“எல்லோரும் உன்னை புரிந்துதான் இருக்கிறார்களோ?. நான்தான் உன்னை  சரியாகப் புரிந்துக்கொள்ளவில்லையோ என்று நினைக்கவைக்கிறாய்“ 

“என்னை புரிந்துக்கொண்டு என்ன செய்யப்போகிறாய். உனது சந்தேகத்தை புரிந்துக்கொள்ள முயற்சி செய். அதுதான் உனக்கு விடுதலை கொடுக்கும்“. 

“அதுதான் புரியவில்லை. அவன் பொன்மலையை ஒருவனுக்குதான் கொடுத்தான்.அதுவும் போகிற போக்கில் கொடுத்தான். என்ன ஒரு அலட்சியம். அதை  வாங்கியவன் மட்டும் அல்ல வாங்காதவனும், “கர்ணனைபோல் யாரால் கொடுக்கமுடியும்“ என்று புகழ்கின்றான். நேற்று மாலைதான் கொடுத்தான். எப்படித்தான் இந்த சூதர்களுக்கு தெரிகிறதோ காலையில் சந்தனையில் ஒருவன் அவன் பொன்மலைக்கொடுத்த வள்ளல் என பாடுகின்றான்.   அவன் வாரிக்கொடுத்தான், நான் கிள்ளிக்கொடுத்தேன் என்று பாடுகின்றான். நான் சும்மா இருந்திருக்கலாம். பெரும்கோட்டின் அருகில் சென்றதால், சிறு கோடு பெருங்கோட்டை   பெரும்கோடு என்று பாறைசாற்றுவதுபோல் ஆகிவிட்டது.     தூக்கிவிடச் சென்று  தூக்கிலிடப்பட்டவன்போல் துடிக்கிறேன்.  நெஞ்சு வலிக்கிறது கண்ணா!“ என்றபோது அர்ஜூனனால் கண்ணீரை கட்டுப்படுத்தமுடியவில்லை. அவன் கண்ணீர் கண்ணன் பாதத்தில் சொட்டியது. கண்ணன் கால்களை இழுத்துக்கொண்டான். பார்த்தன் பரபரப்பாக அதை மேலாடையால்  துடைத்தான்.  உலோக பரப்பு போல உரமேறிய பார்த்தன் நெஞ்சு நெகிழ்ந்து தோலால் ஆன பறையென அதிர்ந்தது.  

“அவன் பொருளைக்கொடுத்து இந்த பெயரைப்பெறவில்லை. என்பது தெரிகின்றது. கொடுப்பதற்கு அவன் எதைப் பெற்று இருக்கிறான். கொடுப்பதற்கு நான் எதைப் பெறவில்லை. அவன் இயல்பு அவனை புகழவைக்கிறது. அந்த இயல்பு என்ன?  என்பதுதான் தெரியவில்லை.“

கண்ணன் பூ உதிர்வதுபோல அந்த வனம் முழுவதும் இசை பரவுவதுபோல சிரித்தான். 

“ஏன் சிரிக்கிறாய்?“

“இவ்வளவு நேரம் பேசிய பின்புதான் நீ கேள்விக்கே வந்திருக்கிறாய். இப்போது புரிகிறதா? ஒரு கேள்வி கேட்க நீ எவ்வளவு நேரம் பேசவேண்டி இருக்கிறது என்று.“ 

“ஆம்! நீ சொல்வது சரிதான். எனக்கு சரியாக கேள்வி கேட்க தெரியவில்லை. சரியான கேள்வி வரும் வரை . எல்லா பதில்களுமே கேள்வியாகிவிடுகின்றன“

“சரியான கேள்வி கேட்டுவிட்டாலே. சரியான பதில் பாதி கிடைத்த மாதரிதான். சரி! உன்கேள்வியை மீண்டம் கேள்“ 

“பெருமை பெரும் அளவிற்கு கொடுப்பதற்கு கர்ணன் எதைப் பெற்று உள்ளான்?. நான் எதைப் பெறவில்லை” 

“இதுவரை நீ புறத்தில் தேடி கொண்டிருக்கிறாய். நீ தேடுவது அகத்தில் இருக்கிறது“

“ஆம். கொடுப்பதற்கு என்று ஒரு அகம் அவனிடம் உள்ளது. அது என்ன என்பதுதான் தெரியவேண்டும்“ 

“ பொறுமையாக இரு.  பதிலை காட்டுகின்றேன்“  

“பதிலை காட்டுகின்றாயா? பதிலை சொல்லவல்லவா வேண்டும்“

“புறத்திற்கு உரிய பதிலை சொல்லலாம். நீயே கண்டு அடைந்துவிடுவாய். அகத்திற்கு உரிய பதிலை சொல்லமுடியாது. வாழ்வியலில் இருந்து  காட்டத்தான் வேண்டும். காட்டினால்தான் நீ புரிந்துக்கொள்வாய்.  சில பதில்களை தெரிந்துக்கொண்டால் போதாது. புரிந்துக்கொள்ளவேண்டும். நீ இந்த கேள்வியை தெரிந்துக்கொள்வதற்காக கேட்கவில்லை. புரிந்துக்கொள்ளக்கேட்கின்றாய். தெரிந்துக்கொள்வதை எல்லாம் பயன்படுத்துவாய் என்பதில்லை. புரிந்துக்கொள்வதையே பயன்படுத்துவாய். நீ புரிந்துக்கொள்வதற்காக பதிலை காட்டுகின்றேன்.“ என்ற கண்ணன் காற்றில் பறந்த தனது மேலாடையை இழுத்து கழுத்தை சுற்றிப்போட்டுக்கொண்டான். 

 தூரத்தில் நாவல் மரத்தில் அமர்ந்து குலாவிக்கொண்டிருந்த ஆண் பெண் மயில்கள் பறந்து வந்து கண்ணன் அமர்ந்திருந்த மகிழமரத்தில் அவன் தலைக்குமேல் அமர்ந்து தனது தோகையை விரித்து ஒன்றை ஒன்று தழுவின. அதை கண்ட கண்ணன் கண்களின் நீலமணி கருவிழி மேல் இமையில் சென்று செருகி ஒரு கணம் இமைப்பின்றி வெண்விழிக்காட்டி நின்றது “ராதே!“ என்று ஒலியற்ற ஓசையில் அசைந்தன கண்ணன் உதடுகள்.  கண்ணன் வலது பாதம் ஒரு தாமரைமலர் தண்டுடன் நீள்வதுபோல எழுந்து  நீண்டு அர்ஜூனன் நெஞ்சத்தை தொட்டது. கண்ணன் வலது பாதத்தின் கட்டைவிரலால் அர்ஜூனன் நெஞ்சக்குழியில் மெல்ல அழுத்தினான். 

“கண்ணா!“ என்ற ஒலியுடன் அர்ஜூனன் தன்னை மறந்து அசையாமல் சிலையாகி  அமர்ந்தான்.  

————————————————————————————–

குருசேத்திரத்தில் கண்ணன் தேரோட்ட அர்ஜூனன்  காண்டீபம் தாங்கி கர்ணனை எதிர்த்தான்.  உக்கிரமான போர். யார் உயிருடன் திரும்புவார்கள்?

 நாக அஸ்திரத்தை அர்ஜூனன் நெஞ்சுக்கு குறிவைக்க சொன்ன  சல்லியன்  சொல்லுக்கு மதிப்பளிக்காமல்   கர்ணன் நாக அஸ்திரத்தை அர்ஜூனன் கழுத்திற்கு குறிவைத்து எறிந்தான்.   கணணன்   தேரை பூமியில் அழுத்த நாகாஸ்திரம் அர்ஜூனன் கழுத்தில் பாயாமல் அர்ஜூனன் கிரீடத்தை கழட்டி கொண்டுப்போனது. கர்ணன் தனது வார்த்தைக்கு மதிப்பளிக்கவில்லை   என்ற ஆத்திரத்தில் சல்லியன் தனது  சினத்தைக்காட்ட குதிரைகளை   சவுக்கால்  அடித்தான்.  போரில் வீரன் மட்டுமல்ல வீரனை சுமக்கும் கரிபரிகளும் போர் செய்கின்றன் என்பதை சல்லியன் மறந்ததால்,  எதிர்பாராத தாக்குதலின் வலிதாங்காத குதிரையின் தடுமாற்றத்தால் கர்ணன் தேர் இயங்கமுடியாமல் பூமியில் புதைந்தது. சல்லியன் கர்ணனை தன்னந்தனியாகத்  தவிக்கவிட்டு ஆத்திரத்துடன் போர்க்களம் விட்டு நீங்கினான்.  பூமியில் மாட்டிய தேரின் சக்கரத்தை நகர்த்த வில் அம்பு இன்றி கீழே இறங்கிய கர்ணன் நெஞ்சில்  கண்ணன் சொல்படி அம்பு எய்தான் அர்ஜூனன். கர்ணன் நெஞ்சுபிளந்தது. குருதி மண்ணில் வழிகிறது. 

 அர்ஜூனன் வென்றான். வென்ற மகிழ்ச்சி அர்ஜூனன் இதயத்தில் எழவில்லை. வெறுமையின் தீயில் விழுந்தது போன்ற வேதனை. கர்ணன் முகத்தை அவனால் ஏறிட்டுப் பார்க்கமுடியவில்லை. 

விண்ணகம் ஏற கர்ணன் உயிர் வழிதேடி தவிக்கிறது.   உடல்வலி உயிரை போ போ என்கிறது. செய்த தருமம் உயிரை இரு இரு என்கிறது.  இருந்தும் இல்லாமல்  தவிக்கிறான் கர்ணன்.  மொத்த வானமும் சுருங்கி ஒரு புள்ளிக்குள் அடைப்பட்டதுபோன்ற தவிப்பு. “இவ்வளவுதானா?“ இதற்கா இத்தனை  வித்தையும்    வேட்கையும். புள்ளி அளவுக்குகூட ஒன்றும் மிஞ்சவில்லையே என்ற வெறுமை அவன் விழிகளில். கண்கள் இருண்டு உலகம் மறைந்து கொண்டிருந்தது. 

கண்ணன் அந்தணர்வடிவில் கர்ணன் முன் நின்று “கொடு“ என்றான். 

கர்ணன் அகத்தில் கண்டுக்கொண்டான். “கண்ணன்“  

“இல்லை என்று சொல்ல வைத்துவிடதே“  கர்ணனால் நிமிர்ந்து உட்காரமுடியவில்லை அவன் தலை சாய்ந்து கொண்டே இருந்தது. 

“இதுவரை செய்த தருமத்தைக்கொடு“ 

நெஞ்சு பிளந்து வழியும் குருதியை அள்ளி கண்ணன் கையில் வைத்துக் நெஞ்சுவிரிய மகிழ்ந்துக்கொடுத்தான் கர்ணன். அவன் உயிர் ஒரு நொடி சுடர்கொண்டு எழுந்து ஆடியது.  ஆனந்தத்தில் அவன் விழிகள் மின்னின. அந்த ஆனந்த மின்னல் அர்ஜூனன் விழிகளை கூசவைத்தது. 

அர்ஜூனன் நெஞ்சு உடைந்து கண்ணீர் வராமல் அழுதான். “ உனது இறப்பு எத்தனைப் பெரிய துரோகம். உனக்கு யார்மீதும் கோபமே வரவில்லையா?.  இது நெஞ்சில் கோபம் தவிர வேறு ஒன்றும் இல்லாத கொடுங் கணமல்லவா? உனக்கு கோபம் வரவில்லையா?  கோபம் இல்லாத நெஞ்சால்தான் இப்படி கொடுக்கமுடியும். நானாக இருந்தால் இந்த துரோகத்திற்கு எத்தனை சினம் கொண்டு கண்ணனை சபித்திருப்பேன். வாழ்நாள் எல்லாம் துரோகத்தை சுமந்த உனது நெஞ்சில் சினமே இல்லையா? சினம் இருக்கும் நெஞ்சால் கொடுக்க முடியாது. நீ ஒவ்வொரு கணமும் கொடுக்கும் நெஞ்சோடுதான் வாழ்ந்து இருக்கிறாய்.  சினம் எழாத நெஞ்சை செய்துக்கொண்டே இருந்திருக்கிறாய். எப்படி சாத்தியம்?. கொடையின் கொடை இது”     

 கர்ணனிடம் தருமத்தை கொடை வாங்கிய கண்ணன். திரும்பி அர்ஜூனனைப் பார்த்தான். 

புரிந்தது என்பதுபோல் அர்ஜூனன் கண்ணனை வணங்கினான். 

“ஆறுவது சினம் அறம் செய“ அகத்தில் ஒலித்துக்கொண்டே இருந்தது. 

————————————————————————————————-

அர்ஜூனன் திடுக்கிட்டு விழித்தான்.  எழுந்து நின்ற கண்ணன் தனது வலது கரத்தை நீட்டி “எழுக“ என்று பார்த்தன் எழ கைக்கொடுத்தான். பார்த்தன் கண்ணன் கைகளைப்பற்றி தனது கண்ணில் ஒற்றிக்கொண்டான். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.