Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

மிளகு அத்தியாயம் எண்பத்தொன்று 

 1606 கெருஸொப்பா

சித்திரம் : அருண்

சதுர்முக  பஸதி ஆடியது. 

பரமனுக்கு அப்படித்தான் தோன்றியது. அது தூரத்தில் இருந்து கண்ணில் பட்டு மூளையில் உறைந்த காட்சி. பக்கத்தில் அருகனின் சமணக் கோவிலும் ஆடியது. பின்னால் ஏதோ சத்தம். என்னவென்று பார்த்தால் ரிஷபநாதர் ஆலயம் நிதானமாக ஆடிது. தொடர்ந்து சுமதிநாதர், விமலநாதர், மகாவீரர் கோவில்கள் அந்தப் பரம்பில் ஆடத் தொடங்கின. நிசப்தமான  தெருவும் ஆட்டத்தைத் தொடர்ந்தது. பரமன் அவசரமாகத் தெரு ஓர வாதுமை மரத்தைப் பிடித்துக் கொண்டார். 

வண்டிக்காரன் சத்திரத்தில் என்ன சாப்பிட்டோம்?  சுயம்பாகமாக பூஷணிக்காய் புளிக்குழம்பும், குழைய வடித்த சாதமும் தான். 

அந்த சாதத்துக்கும் புளிக்குழம்புக்கும் ஆதாரமாக சுடவைத்த தண்ணீர்? அங்கேயே செப்புப் பாத்திரத்தில் வைத்திருந்த பாதி வரை பாத்திரம் நிறைத்த கிணற்றுத் தண்ணீர்,  அந்தத் தண்ணீரில் போதை தரும் ஏதாவது கள்ளோ சாராயமோ கலந்திருந்ததா? 

பரமனுக்கு எப்படித் தெரியும்? ஆக, தெருவும் கட்டிடங்களும் ஆடவில்லை. பரமன் தான் ஆடுவது. விளக்கு ஒற்றையாக எரியும் கோவில் மண்டபத்துக்குள் நுழையும்போது தலைசுற்றல் கூடவே வந்தது. மண்டபத்தின் மற்றொரு வாயில் திறந்து, வெளியே நான்கு தெருக்கள் சந்திக்கும் விளக்குச் சந்திப்புக்குப் போக வழி தெரிந்தது. 

நைவேத்தியம் இல்லாத கோவிலும் பரிசாரகர்கள் இல்லாத மடைப்பள்ளியும் விளக்கு இல்லாத சந்நிதியுமாக வெற்றிடம் கொண்டு இருந்தது. வெளிப் பிரகாரத்துக்கு திரும்பி நடந்தபோது மறுபடி கட்டிடம் எல்லாம் ஆடும் அனுபவம். 

புளிக்குழம்பில் தொடங்கிய ஆட்டம் இல்லை இது என்று தீர்மானமாகத் தெரிந்தது. நிலநடுக்கமாக இருக்கலாம். 

பரமன் வெளியே வரும்போது யோசித்தபடி ஓடத் தொடங்கினார்.  தெருக் கோடி பெரிய மைதானத்தில் விரிந்தது. பிரகாசமாக தீபம் இன்னும் எரியும் சதுர்முக  பஸதி வெற்றிடத்துக்கு நடுவே பிரதானமாக எழும்பியிருந்தது. அது ஆடவில்லை. சுழன்று கொண்டிருந்தது. 

பரமனுக்கு திடீரென்று தோன்றியது இந்த  பஸதியிலும் இதன் சுழற்சியிலும் தான் பரமன் திரும்ப அவர் காலத்துக்கும், வசித்த பூமிக்கும் போக வழி இருக்கும். 

அது எந்தப் பிரபஞ்சத்தில்? அவர் தான் பரமனா, அல்லது பரமனின் பிரதியா? இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார் அவர்?

அப்படி நினைவு வந்தபோதே  பஸதி சுற்றும் வேகம் அதிகமானது. ஓட்டமாக ஓடிப் போய் சுழலும்  பஸதிக்கு நெருக்கமாக நின்றார்.  பஸதியின் உள்ளே எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் சீரான வெளிச்சம் இரவுக்கும் பகலுக்கும் வித்தியாசம் காணமுடியாமல் அந்தப் பிரார்த்தனை மண்டபம் முழுக்க நிறைத்திருந்தது. 

ஒரு வினாடி உற்றுப் பார்த்தார் பரமன். அது பிரார்த்தனை மண்டபம் இல்லை. தெருவும் கட்டிடங்களுமாக வேறு உலகம் அது. அது பம்பாயில் தாதர் ரயில் நிலையத்துக்கு வெளியே காமத் ஓட்டல் வாசல். 

 ’பங்கஜ் நாரி ப்ரீதம் ப்யாரி’ என்று பங்கஜ் மல்லிக் குரலில் ஓட்டல் ரேடியோ பாடுகிறது.பரமன் துள்ளும் நடையும் சிறு ஓட்டமுமாக ஓட்டலுக்குள் நுழைவதை வெளியே இருந்து பரமனே பார்க்கிறார். 

உள்ளே படியேறும் பரமன் வெளியே இருந்து பார்க்கும் பரமனுக்கு வயதில் பாதிக்குக் கீழ் இளையவன். ஓடிப் போய் அந்தக் காட்சி வெளியில் கலந்துவிட அவர் மனம் துடிக்கிறது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகளின் பம்பாய். முப்பது வயது பரமன். எந்தப் பரமன்? யாருக்குப் பிரதி?

 ரொம்ப நாள் கழித்துப்  பார்க்கும் நகரம். அவசரமாக அங்கே போக பரமன் காலை எட்டிப் போட்டு சதுர்முக  பஸதி பிரார்த்தனை மண்டபத்துக்குள் நுழைகின்றார். 

அது  பஸதி மண்டபம் இல்லை. உள்ளே இருந்த இளைய பரமன் இவரைப் பார்த்துச் சிரிக்கிறான்.   

இந்தப் பரமனுக்குப் பேச வரவில்லை. ஏதோ தப்பு நடந்திருக்கு என்று முணுமுணுத்தபடி வெளியே நடக்க நினைக்கும்போது வா, காப்பி சாப்பிட்டுப் போகலாம் என்று இளைஞன் வற்புறுத்துகிறான். 

நீ நீங்க நீ யார்னு நான் தெரிஞ்சுக்கலாமா? அந்த இளைஞனை பவ்யமாக விசாரிக்கிறார் இந்தப் பரமர். நான் தான் நீங்க. நீங்க தான் நான். சொல்லிவிட்டுச் சிரிக்கிறான் இளைஞன் பரமன். நாம் பரமனின் பிரதிகள்.

இந்தப் பரமனுக்கு எப்படி என்ன பேச வேண்டும் என்று தெரியாமல் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் என்ற அறுதப்பழைய வாக்கியத்தைச் சொல்கிறார். 

போதாது என்றுபட, இந்த சந்திப்பு நல்ல நட்பாக மலரட்டும் என்று சொல்லும்போது பரமனுக்கு இந்த சூழ்நிலைக்குத் தகுந்தபடி பேசியதாக சந்தோஷம். சந்திப்பின் மகிழ்ச்சியை அடைந்தாலே போதும். 

நாம் சந்தித்து பழகி நட்பு வளர்க்க முடியுமானால் தேவையில்லாத குழப்பம் தான் ஏற்படும் என்றபடி காமத் ஓட்டல் மேஜை முன் அமர்கிறான் இளைய பரமன். ஆனாலும் சேர்ந்து இருந்து காப்பி குடிக்கலாம். அவன் சிரிக்கிறான்.

ஒரு காப்பி வாங்கி, ஆளுக்குப் பாதி. நீங்கள் டம்ளரில் குடியுங்கள். நான் வட்டையில் குடிக்கிறேன். வெயிட்டர் சார், சர்க்கரை அதிகமாக, அதிகம் தானே, இங்கே ஒரு ஸ்ட்ராங்க் காப்பி!

காட்சி கலைந்து சதுர்முக  பஸதி சுழல்கிறது. 

ஓரமாக அடித்துச் செல்லப்பட்ட பரமன் சுவரை ஆதரவாகப்  பற்றிக்கொண்டு எழுந்து நிற்கப் பார்க்கிறார். காட்சி நிலைக்க, ஆப்பிரிக்க நாட்டு அரசாங்க அலுவலகம். வெளியே பெயர் எதுவும் போடாத அங்கே வாசலில் கடைசிப் படியில் உட்கார்ந்திருப்பதும் பரமன் தான். 

இரண்டு தாங்குகட்டைகள் நிறுத்தி வைக்க அவற்றை ஊன்றி நடக்க முயலும் அந்த இன்னொரு பரமன் தத்தித் தத்தி நடக்கத் தொடங்க, ஒரு பெரிய நாற்காலியைக் கழிகளில் பிணைத்துச் சுமந்து கொண்டு இரண்டு கருப்பர் இனத்தவர் வருகிறார்கள். 

இன்னொரு பரமன் இந்தப் பரமனைப் பார்த்துச் சிரிக்கிறார். 

உம் தாங்குகட்டைகளை வேண்டாம் என்று தீர்மானித்து விட்டார்கள். சனியன் விட்டது. உம் துன்பமும் சேர்த்து சிலுவை சுமக்க வேண்டும் என்று எனக்கு எங்கள் பிரபஞ்சத்தில் விதித்திருக்கிறது. 

அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே நாற்காலி சுமந்து வந்த கருப்பர் இனத்தவர் அந்தப் பரமனை நாற்காலியில் ஏற்றி மாடிப்படியில் ஏறி தடதடவென்று ஓடுகிறார்கள். 

இந்தப் பரமன் வாசல் படிக்குப் பக்கத்தில் நெருங்க, நாற்காலிக்காரர் அவரிடம் சொல்கிறார் –  உமக்குத்தான் கால்கள் கிழங்கு மாதிரி இருக்கே. நடந்து தான் போய் எல்லா வினோதமும் சுற்றிப் பாரும். எதற்கு உம்மை தூக்கிக்கொண்டு நடக்கவேணும்? 

காட்சி மறுபடியும் குழம்ப, இந்தப் பரமன் மறுபடி  பஸதியின் சுழற்சியில் கால் தடுமாறித் தரையில் விழுகிறார். எழுந்திருக்கும்போது நடுவயது பரமன் தாதர் மின்சார ரயில் பரபரப்பாக வந்து போய்க் கொண்டிருக்கும் தாதர் ரயில்வே ஸ்டேஷன் மேம்பாலத்தில்அடுத்த கல்யாண் விரைவு லோக்கல் ட்ரெயின் வந்து கொண்டிருப்பதை உன்னிப்பாகப் பார்த்தபடி நிற்கிறார். அவர் கையிடுக்கில் லெனின் கடிதங்கள் தொகுப்பு மராட்டி மொழிபெயர்ப்பு புதுப் புத்தக வாடையோடு அமர்ந்திருக்கிறது. 

மூன்றாவது ப்ளாட்பாரத்துக்கு சத்ரபதி சிவாஜி டெர்மினல் – கல்யாண் விரைவு லோக்கல் வருவது தெரிய தடதடவென்று தாதர் மேம்பாலப் படிகளில் ஓட்டமும் நடையுமாக விரைகிறார் நடுவயது ஆனவராகத் தோன்றும் பரமன்.  

இந்தப் பரமன் அவர் பாதையில் குறுக்கிடுகிறார். காட்சியாக வந்த பரமன் இவரிடம் சொல்கிறார் – விலகிப் போ. என் ரயில் வந்துவிட்டது. 

அதற்குள் தாதர் லோக்கல் கிளம்பி விடுகிறது. வந்த பரமன் தாவி வண்டியில் ஏறும்போது நிலை தவறி ஓவென்று அலறல். வந்த பரமனின் இடது கால்  நடைமேடைக்குக் கீழே எலக்ட்ரிக் ட்ரெயின் சிக்கிக் கொண்டிருக்க வண்டி நகர்கிறது. 

இந்த கெருஸொப்பா பரமன் ஐயோ வேணாம் வேணாம் என்று கூக்குரலிட ஓரமாக நிர்மல் முனிவர் நக்னராக வீற்றிருந்து உபன்யாசம் செய்து கொண்டிருக்கிறார். 

உன்னையே நீ அகன்று நின்று பார்க்கிறாய். வேண்டுவதும் வேண்டாததும் எதுவென்று தீர்மானிப்பது உன் கையிலும் மனோசக்தியிலும் இல்லை. பொறுத்திரு. உன் ரயில் இன்னும் வரவில்லை. 

நிர்மல முனிவருக்குக் காணிக்கையாகக் கையிடுக்கில் வைத்திருந்த லெனின் கடிதங்கள் புதுப் புத்தகத்தை அளித்து அவர் காலில் விழுந்து வணங்குகிறார் பரமர். சதுர்முக  பஸதி மறுபடி சுழல்கிறது. வலம் இடமாக இருக்கிறது இந்த சுழற்சி. 

மண்டபத்தில் தாதர் ரயில்வே ஸ்டேஷன் காட்சி பின்னோக்கி நகர, ரயிலும், மனுஷர்களும் பின்னால் போகிறார்கள். மேம்பாலத்தில் ஏறுகிறவர்கள்  பஸதிச் சுவருக்கு முதுகு காட்டிக்கொண்டு இறங்குவதாகவும். இறங்குகிறவர்கள் ஏறுகிறதாகவும் காட்சி தொடர்கிறது. 

ரயில் நின்று தாமதித்து மறுபடியும் நகரும் முன் இந்தப் பரமனும் அந்த ரயில்பெட்டியில் ஏறிக் கொள்கிறார். வந்த பரமன் கம்பார்ட்மெண்டில் கூட்டத்துக்கு நடுவே  நின்றுகொண்டு மேலே தொங்கும் வாரை இழுத்துப் பிடித்தபடி கால் மாற்றும் போது லெனின் கடிதங்கள் தரையில் விழுகின்றன. 

பக்கத்தில் நின்ற வயதான மராட்டியர் குனிந்து அதை எடுத்துத் தலைப்பைப் படித்து விட்டு வந்த பரமனிடம் கொடுக்கிறார். 

லெனின் வீட்டை விட்டு வெளியே போயிருந்தாரா? கடிதங்களை யாருக்கு எழுதினார் என்று கேட்கிறார். லெனின் அமெரிக்க விண்வெளி வீரர் என்று அடுத்து நின்ற யாரிடமோ விளக்கம் சொல்கிறார். 

 வந்த பரமன் பொறுமையாக லெனின் என்றால் யாரென்று விளக்கிக்கொண்டிருக்கும்போது இந்தப் பரமனிடம் தமிழில் சொல்கிறார் – அடிப்படைப் புரிதல் இல்லாமல் கடிதம், உரை, எழுத்து என்று லெனினை   ரஷ்ய மொழியில் இருந்து ஆங்கிலம் மூலமாக இந்திக்கும் மராட்டிக்கும் எப்படிக் கொண்டு போக முடியும்? லெனின் தன் மனைவி போன்ற நடேஷ்டா கோன்ஸ்டண்டிநோவ்னா க்ரூப்ஸ்க்யாவுக்கு எழுதிய கடிதங்களைப் படிக்க யாரெல்லாம் ஆர்வமாக இருக்கிறார்கள்?

லெனின் விண்வெளி வீரராக இருந்திருந்தால் சோவியத் யூனியனை வழிநடத்திச் சென்றிருக்க முடியுமா? பரமனே பார்த்துச் சொல் என்கிறார். அவருடைய கால்கள் அடிபடாமல் மீண்டுவர காலத்தைப் பின்நோக்கி எடுத்துப் போனவர் யார் என்று கேட்க, வந்த பரமன் எனக்கும் தெரியாது என்கிறார். திரும்ப காட்சி நிலைத்து எல்லாம் பின்னால் போகிற இயக்கம். 

வந்த பரமன் முப்பது வயதில் இருக்கிறார். ஷாலினி மேத்தி கீரையும் ஜவ்வரிசியும் கோதுமை ரவையும் வாங்கி வரச் சொல்லியிருக்கிறாள். மகன் திலீப்புக்கு நூறு கிராம் சாக்லெட்டுகளாவது சயானில் இறங்கி வாங்கிப் போக வேண்டும் என்றபடி வந்த பரமன் பாதி காலியாகி விட்ட ரயிலில் இருக்கை தேடி அமர்கிறார். 

 இன்னொரு ஷாலினி மோரே. இன்னொரு திலீப். இன்னொரு சர்வமங்கள் சால் வீடு உண்டா? இந்த பரமனும் தன்னுடைய முப்பதாம் வயதுக்குப் போகிறார். 

சாக்லெட்களை நானே தின்று விடுவேன் வேண்டாம் என்றபடி ரயில் நிற்கக் காத்திருக்க, காட்சி மறுபடி குழம்புகிறது. சுழலும்  பஸதி, முன்னால் யாருமில்லாமல் உபந்நியாசம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிர்மல முனிவர். ஒரு வினாடியில் அவை நிறைகிறது. அத்தனை பேரும் பரமன் பிரதிகள்.  

பூஜ்ய சுவாமிஜி, என் வண்டி இன்னும் வரவில்லையே. எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் இந்த பாவப்பட்ட மனிதன்? முனிவரின் காலில் விழுந்து கண்மூடிப் பிரார்த்தித்து விட்டு எழுந்து மறுபடியும் தொழுகிறார் பரமன். 

நீர் இன்னும் சற்று இங்கே இருக்கலாம். உமக்கு முன்னே போக நேரம் வருவதை எண்ணிக் காத்திருக்கலாம். சொல்லிவிட்டு நிர்மல முனிவர் கண்கள் மூடித் தியானத்தில் அமிழ்கிறார். 

 பஸதி மறுபடி சுழல்கிறது. 

இதென்ன, கெருஸொப்பாவின் தெருக்கள் இங்கே எப்படி வந்தன? வண்டிக்காரன் சத்திரத்தில் ஜேஜே என்று கூட்டம் நிரம்பி வழிகிறது. வீராயி இடுப்பில் கைவைத்து அணைத்து உக்கிராண அறை இருட்டில் அவளை முத்தமிடுகிறவன் பரமன் ஜாடையில். ஜாடையில் என்ன, பரமனேதான். 

என்ன பார்க்கறே நான் உன் பிரபஞ்சத்திலே இருக்கப்பட்டவன் இல்லை. மற்ற எத்தனையோ பிரபஞ்சத்திலே ஒண்ணிலே, மேகவீதிங்கற பிரபஞ்சத்திலே இருக்கறவன். இந்த வீராயியும் மேகவீதியில் தான் இருக்கா. சென்னபைராதேவி இங்கே அரசியில்லே. மிட்டாய்க்கடை வச்சிருக்காங்க. ரோகிணி அரசியாக இருக்கற கெருஸொப்பா நாடு இந்தப் பிரபஞ்சத்திலே. எனக்கு குற்றேவல் செய்கிற வேலைக்காரன் என் பிரபஞ்சத்திலே நேமிநாதன்.  சென்னபைராதேவிக்கு அப்பன் நேமிநாதன் எங்க மேகவீதி பிரபஞ்சத்திலே. வீராயியை நான் கல்யாணம் செய்துக்கிட்டு ரோகிணியைப் பெண்டாளப் போறேன். மிங்குவும் கஸாண்ட்ராவும் கெருஸொப்பாவில் பிரபலமான கணிகையர். போகலாம் வர்றியா? 

வேண்டாம் எனக்கு எழுபது வயதாகிறது. இதெதுவும் வேண்டாம். என் வண்டிக்காகக் காத்திருக்கிறேன். 

சொல்லிக்கொண்டிருக்கும்போதே  பஸதி வாசலில் அப்பா அப்பா என்று குழந்தை மஞ்சுநாத் அழைக்கும் ஒலி. மஞ்சு என் குழந்தே வந்துட்டேண்டா என்றபடி இந்த பரமன் வாசலுக்குப் போக அடியெடுத்து வைக்கும்போது காட்சி மறுபடியும் குழம்பி தாதர் ரயில் நிலையத்தில் கூட்டம் குறைந்த ஒரு மழைநாள் காலை. கல்யாண் டோம்பிவிலி லோக்கல் கூட்டமே இல்லாமல் வந்து நிற்கிறது. 

ஏறிக்கோ உன் வண்டி வந்தாச்சு என்று நிர்மல் முனிவர் சொன்னபடி கண் மூடித் தியானிக்கிறார்.   அவரது வலது கரம் ஆசியருளுவதாக விரிந்துள்ளது.

வாசலில் மஞ்சுவின் குரல் அப்பா அப்பா என்று தீனமாக அழைக்கிறது. பரமன் தயங்கி ஒரு வினாடி நின்றுவிட்டு ரயிலில் ஏறிக் கொள்கிறார். வண்டி நகர்கிறது. அவருடைய வலது கால்  கணுக்காலுக்குக் கீழே இல்லை. 

தாங்குகட்டைகள் ஈரமான கம்பார்ட்மெண்ட் பெஞ்சில் நீள நெடுக இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு வைக்கப்பட்டுள்ளன.  பஸதி திரும்ப மெல்லச் சுழல்கிறது. 

அம்பலப்புழைக்கு  வந்திருக்கீங்க என்று யாரோ அவரை அணைத்துப் பிடித்து ஆட்டோ ரிக்‌ஷாவில் அழைத்துப் போகிறார்கள். இங்கே தான் போகணும் என்று சொல்லி இறக்கி விட்டு தாங்குகட்டைகளை கையிடுக்கில் பொருதுகிறார்கள். வாசல் கதவைத் திறந்து உள்ளே நிறுத்துகிறார்கள். 

பெயர்ப்பலகை திலீப் ராவ்ஜி என்று அறிவிக்கிறது.    அழைப்பு மணியை அழுத்துகிறார். தீனமாகக் குரல் எழுப்புகிறார்.

திலீப் உங்கப்பா வந்திருக்கேன். பசிக்கறது. 


மிளகு: இரா முருகன் - நாவல்

மிளகு அத்தியாயம் எண்பது மிளகு – அத்தியாயம் எண்பத்திரண்டு
Exit mobile version