திறந்து விடு

வெறும் காலோடு இருவரும்தான் ஒன்றாக ஓடினார்கள். ஓடும்போது சகினாவின் துப்பட்டா கீழே விழுந்தது. அதை எடுக்க அவன் குனிந்தபோது, அவள் அலறினாள், “அப்பா, போகட்டும் விடு!” ஆனால் அவன் துப்பட்டாவை எடுத்துக் கொண்டான். அந்த நினைவு வந்தவுடன், தன்னுடைய மேலங்கியின் பையில் கையை விட்டு அதிலிருந்த துப்பட்டாவை வெளியில் எடுத்தான். துப்பட்டா அவனிடம்தான் இருக்கிறது — ஆனால் சகினா எங்கே?

மின்மினிகள்

காரில் அமர்ந்து ராஜாவாக சவாரி போகிற கற்பனை அவனுக்குள் செத்து விழுந்தது. உடம்போடு மனமும் சேர்ந்து இடிபட, கால்களுக்கு நடுவில் நசுங்கிக் கொண்டு உட்கார்ந்தான். காரின் ஜன்னல் வழியே பார்த்தால் வானமும் மேகமும்தான் தெரிந்தன. பஸ்ஸில் போனால் ரோட்டோர மரங்களும் மக்களும் பின்நோக்கி வேகமாகப் போவார்களென்று கேட்டிருந்ததெல்லாம் ஞாபகம் வந்தது. எக்கினால் வெளியே பார்க்கலாம். ஆனால் உட்கார்ந்திருப்பவர்களின் முழங்கால்களை இடித்துக்கொண்டு எழுந்திருக்கவேண்டும். ‘உட்காரு, உட்காரு’ என்று முதுகில் அழுத்தி, கீழே மீண்டும் உட்கார்த்திவிட்டால் இன்னும் அவமானம். ‘நடந்தே வந்திருக்கலாம். கஷ்டம்தான், இருந்தாலும் இப்படி கூனி குறுகுவதற்கு அந்த கஷ்டமே பரவாயில்லை.’

பலி

“அதெல்லாம் வைச்சிருப்பான். நீ ஒண்ணும் கவலப்படாதே. மாரியம்மா தைரியமான பொண்ணு. அவ அக்காவ கொடுமப் பண்ணுன மாதிரி இதுகிட்ட நடக்காது. எல்லாம் சரியா வந்துடும்.” அம்மாவின் ஆறுதலுக்காக சொல்லிவைத்தேனேத் தவிர, என் பேச்சில் அவ்வளவு உறுதி இல்லை. இந்த மக்களிடம் ஆணின் அதிகாரம் என்பது கல்லில் செதுக்கிய கட்டளையைப்போல. ஆம்பளைக்குச் சளைக்காமல் காட்டிலும் மேட்டிலும் உடம்பு உழைத்தாலும், பொம்பளை கொஞ்சம் அனுசரிச்சுத்தான் போகவேண்டியிருந்தது.