மாயையில் துளிர்க்கும் மலர்கள்

அந்த அறையின் கதவைத் தட்டிப்பார்த்துவிட்டு, கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றாள். வயதாகியும் அபுவின் மீதான ஈர்ப்பு அப்படியே இன்னுமிருக்கிறது. அவனும் அப்படியே. திங்கள் வெள்ளை, செவ்வாய் மஞ்சளும் சிகப்பும் எனப் பல வண்ணங்களில் ஒவ்வொரு நாளும் கைக்கொள்ளும் அளவு மாத்திரைகள் இருவருமே எடுத்துக்கொள்ளவேண்டியதாகிவிட்டது. இருந்தாலும் என்னைப் படுக்கையிலிருந்து எழுப்பிக் கைதாங்கலாகக் குளியலறைக்கு அழைத்துச் செல்லவும், வெளியே செல்லும்போது என்னை வண்டியில் அமரவைத்துத் தள்ளிக்கொண்டும் செல்கிறான். என்னிடம் அவன் முழுமையாகவே திரும்பி வந்துவிட்டான்.

இலைகளுதிர்ந்த பின் மலைகள்

அந்த நீண்ட திண்ணையில்  ஜாதிமல்லி, காக்கரத்தான், ஜெவ்வந்தி, மரிக்கொழுந்து, நந்தியாவட்டை , மருக்கு, டிசம்பர் பூ, ரோஜா எனப் பலவிதமான வண்ண வண்ண பூக்களின் சிறு சிறு குவியல்களின் மத்தியில் அமர்ந்து பூக்களை ஜோடியாக எடுப்பதும் நாரில் வைத்து விரல்களால் வளைத்து சரக் சரக் என இழுப்பதுமாக ஒரு தாள நயத்துடன் சரம் சரமாக பூக்கள் கட்டுவதும் மாலைகள் சுற்றுவதுமாக அவர் வேறு ஒரு ஆளாக உருவெடுத்திருப்பார். பூ கட்டும்போது அவர் முகமும் கைகளும் வெவ்வேறு பாவனைகளும் அசைவுகளுமாக மாறி அதனுடன் உரையாடிக்கொண்டிருப்பதுபோல இருக்கும்

சுழல்

எண்ணங்கள் பலவற்றைத் தொட்டுத் தொட்டுத் திரும்பிக்கொண்டிருந்தது. மனது எதையும் தொகுக்கும் நிலையிலில்லை. காலையில் லோகமாதேவியை சந்தித்ததை பற்றி நினைத்துக்கொண்டாள். எப்போதும் அவளிடமிருக்கும் அந்தக் கனிவான பார்வையும், உண்மையான அக்கறையும் ஆறுதலாக இருக்கிறது. எத்தனை பிரசவங்கள் பார்த்திருப்பாள். எத்தனை குழந்தைகளின் தரிசனத்தை, முதல் அழுகுரலை அவள் கேட்டிருப்பாள். அவளைவிட வேறு யாருக்குத் தெரியும் தனக்கென்று ஒரு குழந்தை இருக்கும் மேன்மையும், இல்லாமல் இருக்கும் வேதனையும்

தன்னறம்

அவ்வாகனங்கள் மறையும் இடத்திலிருந்த மரத்தடியில் ஒரு பெண் ஆங்கிலத்தில் “உதவி” என்று எழுதப்பட்ட ஒரு பதாகையை முன்னும் பின்னுமாக அசைத்துக்கொண்டிருந்தாள். உடல் பருத்து தலைமயிர்கள் கலைந்து அவள் தோளிலிருந்த ஒரு கனமான பை முழங்கால் வரை நீண்டிருந்தது. அவளுக்குப் பின்புறம் ஒரு சிறு பெண் மர நிழலில் அமர்ந்து புத்தகம் ஒன்றை மடியில் வைத்துப் படித்துக்கொண்டிருந்தாள். என் முன்னால் நின்றிருந்த ஒரு கனரக வாகனத்திலிருந்து சட்டென வெளியேறிய கண்ணுக்குத் தெரியாத வெப்ப புகை ஏற்படுத்திய கானல் நீரில் அவர்கள் இருவரும் நெளிந்து நீரின் ஆழத்திற்குச் செல்வதுபோல இருந்தது. முன்னால் இருந்த அனைத்து வாகனங்களும் நகர நானும் முன்னகர்ந்து விரைந்தேன். எனக்குள் அவர்கள் மேலும் மேலும் ஆழத்திற்குள் சென்றுகொண்டே இருந்தார்கள்.

விடுதலை

அவன் சட்டென என்னிடம், “இங்கிலிஷ் சொல்லிக்கொடு” எனக் கேட்டான்.
நான் சற்றுத் தடுமாறி அவன் சொல்வதை மீண்டும் நினைவுபடுத்தி, “என்ன?” எனத் திருப்பிக் கேட்டேன். பின்பு ஏன் அவ்வாறு கேட்டோம் என நினைத்துக்கொண்டேன்.
அவன் மீண்டும், “இங்கிலீஷ். பேசணும்” என்று ஒவ்வொரு வார்த்தையாகக் கேட்டான். அப்படி அவன் கேட்டபொழுது, அத்தனை பற்களும் தெரியச் சிரிப்பும், கூச்சமும், வெட்கமும் தெரிந்தது. 

தொலைந்து போனவன்

வெகு நேரம் ஆகியும், மதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. …கடைசியாக மதன் என்னிடம் பேசியது நினைவுக்கு வந்தது. நாங்கள் இருவரும், நின்று பேசிக் கொண்டிருந்த அந்த மேட்டினை பார்த்தேன். மதன் அங்கு நின்று அந்த ஆற்றை உற்றுப் பார்த்தது ஞாபகம் வந்தது. அந்த இடுங்கிய கண்ணில் எதைப் பார்த்திருப்பான். எத்தனைப் பொய்யான எதிர்காலம் நம் முன். நம்பிக்கை என்பது வெறும் ஊதிப் பெரிதுபடுத்தப்பட்ட ஒரு பலூன் என்று தோன்றியது. அது இரண்டு மணி நேரம் கூட தாங்கவில்லை.