- பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -1
- சிற்றின்பம் மற்றும் உணர்திறன்
- பழிவாங்கும் தீ – அம்பை
- காதலில் துறவி
- மணலில் கட்டப்பட்ட பாலம்
- கொக்கென நினைத்தாயோ ?
- கொலையாளியை ஜீரணித்தவர்
- பெரும் பசியை ஆற்றிய ஒரு பருக்கை
- ஏகலைவன்
- தவறாக விதிக்கப்பட்ட சாபம்
- பகைவனுக்கும் அருள்வாய்!
- கீசக வதம்
- வீரனாக மாறிய பேடி
- அஸ்வத்தாமனின் கோபம்
- முடிசூட்டப்படாத ஆட்சியாளர்
- தொடர்ந்த தூதுப்படலம்
- தொடரும் விதுர நீதி
மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா
தமிழாக்கம் : கார்த்திக்

விதுரர் திருதிராஷ்டிரனுக்கு புத்திசாலி மற்றும் முட்டாளின் குணநலன்களை விளக்கினார். ஒரு சிறந்த ராஜா தந்தை, தாய், குரு , நெருப்பு மற்றும் ஆன்மாவை வணங்குவான். தூக்கம், சோம்பலாய் இருப்பது, மந்தமாய் இருப்பது, பயம், கோபம் மற்றும் காரியங்களை தள்ளிப்போடுதல் துன்பத்திற்கு வழிவகுக்கும். ஏழு வகையான தீமைகளை தவிர்க்க வேண்டும். ஞானம், பிறந்த வம்சம் , கற்றுக்கொள்ளுதல், சுய கட்டுப்பாடு, யோசித்து பேசுதல், வலிமை, ஆராய்ந்து பரிசளித்தல், நன்றியுணர்வு ஆகிய எட்டு குணங்கள் அவனுக்கு பெருமை சேர்க்கும். ஒன்பது துவாரங்கள்1 ,மூன்று தூண்கள் 2 மற்றும் ஐந்து சாட்சிகள் 3 நம் உடலை உருவாக்குகின்றன. இவற்றை ஆன்மா கட்டுப்படுத்துகிறது. போதையில் இருப்பவன் , கவனம் செலுத்தாதவன், பைத்தியக்காரன், களைப்படைந்தவன், கோபக்காரன், பசியில் இருப்பவன், தோல்வியில் வெறுப்படைந்தவன், கோழை, பயத்தில் இருப்பவன் மற்றும் காமத்தில் ஆழ்ந்தவனிடம் நல்லொழுக்கம் இருக்காது.
ஆழ்ந்த சோகத்திலும் கட்டுப்பாடுடன் இருப்பவன் மற்றும் எந்தவித கெட்ட எண்ணங்களும் இல்லாமல் அனைவரிடமும் கருணையுடனும், மன்னிக்கும் தன்மையுடன் நடந்துகொள்பவன் போற்றத்தக்கவன் ஆவான். எப்படி ஒரு வண்டு பூவை காயப்படுத்தாமல் தேனை உறிஞ்சுகிறதோ அவ்விதமே ஒரு ராஜாவானான் தன் மக்களிடம் வரி வசூல் செய்ய வேண்டும்.
பெரிய குடும்பத்தில் பிறந்தாலும் நல்ல குணங்கள் இல்லையெனில் ஒருவனுக்கு மரியாதையை கிடைக்காது. பொறாமையை குணப்படுத்த முடியாது. பணம் தரும் போதை மதுக் கூட தராது. தன் செல்வம் முழுவதும் இழந்தப் பின்புதான் இது ஒருவனுக்குப் புரியும்.
தன் சுற்றி இருப்பவர்களைக் கட்டுப்படுத்தி, தான் வளரவேண்டும் என ஒரு அரசன் விரும்பினால் அவன் முதலில் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
மனிதனின் உடல் ஒரு தேர். ஆன்மா அந்த தேரை செலுத்தும் தேரோட்டி. உணர்வுகள் தேரை இழுக்கும் குதிரைகள். அந்த உணர்வுகளை பழக்கப்படுத்திக் கட்டுப்படுத்த பயின்ற ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் அமைதியாய் பயணிக்கிறான். உணர்வுகளை அடக்க முடியாதவன் சொல்ல இயலாத துன்பங்களை அடைகிறான்.
பேசும் வார்த்தைகளை கட்டுப்படுத்துவது கடினம். நாம் பேசும் நற்சொற்கள் நன்மையை தரும். ஆனால், இழிசொற்களோ துன்பத்தையே விளைவிக்கும். ஒரு காடு அழிக்கப்பட்டால் மீண்டும் உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால், வார்த்தைகளால் சுடப்பட்ட இதயம் மீண்டும் திரும்பக் கிடைக்காது.
தன் உணர்வுகளை தாண்டி வர முயற்சிக்காதவனை வெற்றிப் பெற கடவுள் அனுமதிப்பதில்லை.
அனைத்து உயிர்களிடமும் கருணையுடன் நடந்து கொள்பவன் எல்லா புண்ணிய நதிகளிலும் குளித்த புண்ணியம் பெறுவான். அவனுடைய நற்செயல்களுக்காக உலகம் அவனை நினைவுகொள்ளுமானால் அவனுக்கு சொர்க்கத்தில் சிறந்த இடம் கிடைக்கும்.
தங்கம் நெருப்பினால் சோதிக்கப்படுவது போல் , பெருங்குடியில் பிறந்தவன் அவன் குணத்தினாலும், நேர்மையான மனிதன் அவன் நடத்தையினாலும், வீரன் சோதனைக் காலத்திலும் , சுயக் கட்டுப்பாடுடையவன் வறுமையிலும், நண்பர்களும் எதிரிகளும் கஷ்ட காலத்திலும் சோதிக்கப்படுவர். தியாகம், கல்வி, செல்வம், மற்றும் பரிசு சுய லாபத்திற்காக உபயோகப்படுத்தப்படலாம். ஆனால், உண்மை, மன்னிக்கும் தன்மை, கருணை, போதுமென்ற மனம் இவை நான்கும் மிக சிறத்தவர்களிடம் மட்டுமே இருக்கும்.
இரவில் நிம்மதியாக தூங்க பகலில் அதற்கேற்ற விஷயங்களை செய்ய வேண்டும். கடினமான மழை காலத்தை சமாளிக்க மற்ற எட்டு மாதங்கள் உழைக்க வேண்டும். முதுமையில் மகிழ்வாக இருக்க இளமையில் உழைக்க வேண்டும். மரணத்திற்கு பின்பான நல் சொர்க்கத்திற்கு வாழ்நாள் முழுவதும் சிறந்த காரியங்களை செய்யவேண்டும்.
திருதிராஷ்டிரனனின் வேண்டுகோளின் பேரில் நல்லவர்கள் மற்றும் தீயவர்களின் குணநலன்களை விளக்கிய விதுரர், நேர்மையின் பாதையில் ஒருவன் எப்படி செல்லமுடியும் என விளக்கத் துவங்கினார். தனக்கு ஆர்வம் இருக்கும் விஷயங்களில் தேர்ச்சி பெறுதல், அவதூறு பேசாமல் இருத்தல், நண்பர்களுடன் சண்டை போடாமல் இருப்பது, நல்மனிதர்களின் பழக்கம் , கோபத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் இனிமையான பேச்சுகளின் மூலமே ஒருவன் நேர்மையின் வழி நடத்தல் சாத்தியம் எனக் கூறினார்.
அரசன் ஐந்துவிதமான வலிமைகளைக் கொண்டிருத்தல் அவசியம். அவற்றில் கடைசியாய் இருக்க வேண்டியது ஆயுத வலிமை, பிறப்பின் வழி வரும் வலிமை, செல்வம் சேர்த்தல், நல் அமைச்சர் குழாம். ஆனால் , எல்லாவற்றையும் விட முக்கியமானது மற்றும் முதன்மையானது அறிவின் வலிமை.
திருதிராஷ்டிரன், ஆன்மா, அதன் இறப்பு மற்றும் சுயத்தை அறிதலை பற்றி விளக்க சொல்லிக் கேட்டான். அதற்கு விதுரன், தான் இதற்கு சரியான நபர் இல்லையென்றுக் கூறி , சனத்சுஜாதா என்ற முனிவரை வரவழைக்கிறேன் எனக் கூறினார்.
இதன்பிறகு தியானத்தில் அமர்ந்த விதுரர், சனத்சுஜாதாவை வர வேண்டினார். அவரது தியானத்தை ஏற்று அவரும் வருகைப் புரிந்தார்.
அவர் கூறியதாவது
“அறியாமையே இறப்பு மற்றும் அறிவே இறவாமையின் இரகசியம். தன்னைப் பற்றி அறிதல் இறவாமையை நோக்கி அழைத்துச் செல்லும். அதர்மம் அறிவை மறைத்து சுயநலத்தில் தள்ளும். அதனால் ஒருவன் மீண்டும் மீண்டும் நரகத்தில் வீழ்கிறான். எனவே அறியாமையே இறப்பாகும். தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி சுயக்கட்டுப்பாட்டுடன் இருப்பவனை இறப்பு தீண்டுவதில்லை ஏனெனில் அவன் இறப்பை கண்டு பயப்படுவது இல்லை.”
தன் வாழ்நாளில் தோன்றும் ஆசைகளுக்கு மத்தியில் தன் அறிவை மட்டுமே நம்பி இருப்பவன் இறப்பைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை. இறப்பினால் ஒருவனது உடல் அழியும். ஆனால், அறிவினால் அந்த இறப்பு அழிந்துவிடும்.
துறவு மற்றும் சுயக்கட்டுப்பாட்டின் அவசியம் என்ன ? அதை எப்படி கடைப்பிடிப்பது என விளக்குமாறு திருதிராஷ்டிரன் கேட்டான்.
” மனது மற்றும் மொழியின் எல்லையை தாண்டி இருக்கும் பிரம்மனை அடைவதே துறவின் லட்சியம்.”
ஆறு வகை துறவுகள் உள்ளன.
- வசதிகள் இருந்தும் லௌகீக ஆசைகளில் ஈடுபடாமல் இருத்தல்
- சடங்குகள் மூலம் கிடைக்கும் பயனால் அதில் ஈடுபடாமல் இருத்தல்
- உலக விஷயங்களில் இருந்து விலகி இருத்தல்
- சோகத்தை கடந்து வருதல்
- சிந்தனை மற்றும் செயலில் நேர்மை
- தன் நெருங்கிய உறவினராக இருந்தாலும் தேவையானவர்களுக்கு அளிப்பது
பிரம்மன் நமது மனத்திலேதான் உள்ளார். ஆனாலும் நாம் அதை உணர்வது இல்லை. உண்மைக்கான தேடலின் மூலம் மட்டும் அதை உணர இயலும்.
பிரம்மனின் குணநலன்கள் என்னவென்று கூறுங்கள் என மீண்டும் வினவினான் திருதிராஷ்டிரன்.
“அதை போன்று வேறேதேவும் இல்லை. அதை பார்க்க இயலாது. அதை அறிந்துகொள்வது கடினம். எல்லை வகுத்துக் கொண்ட அறிவினால் அதை உணர இயலாது. என்றும் மாறாமல் நிரந்தரமாய் இருக்கும். அது நாம் காணும் இந்த உலகமே. அதில் இருந்துதான் அனைத்தும் உருவாகிறது. அதனுள்ளேயே எல்லாம் அடங்குகிறது. அதை உணர்ந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். “
திருதிராஷ்டிரனின் கேள்விகளுக்கு விடை சொன்ன முனிவர் அவர்களிடம் இருந்து விடைபெற்றார்.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
