- பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை -1
- சிற்றின்பம் மற்றும் உணர்திறன்
- பழிவாங்கும் தீ – அம்பை
- காதலில் துறவி
- மணலில் கட்டப்பட்ட பாலம்
- கொக்கென நினைத்தாயோ ?
- கொலையாளியை ஜீரணித்தவர்
- பெரும் பசியை ஆற்றிய ஒரு பருக்கை
- ஏகலைவன்
- தவறாக விதிக்கப்பட்ட சாபம்
- பகைவனுக்கும் அருள்வாய்!
- கீசக வதம்
- வீரனாக மாறிய பேடி
- அஸ்வத்தாமனின் கோபம்
- முடிசூட்டப்படாத ஆட்சியாளர்
- தொடர்ந்த தூதுப்படலம்
- தொடரும் விதுர நீதி
ஆங்கில மூலம் : யமுனா ஹர்ஷவர்தன்
தமிழாக்கம் : கார்த்திக்
நாரதரின் அறிவுரையின் படி , திரௌபதி பாண்டவர்கள் ஒவ்வொருவருடனும் ஒரு வருடம் சுழற்சி முறையில் இருப்பாள் என்றும் இதை மீறுபவர்கள் ஒரு வருடம் தலைமறைவாய் இருக்க வேண்டுமென்ற விதிமுறைக்கு ஒத்துக்கொண்டனர். ஒரு நாள் , மாலைவேளையில் ஒரு பிராமணர் அர்ஜுனன் இடம் வந்து திருடப்பட்ட அவரது பசுக்களை மீட்டு தருமாறு கேட்டுக் கொண்டார்.
அப்பொழுது அர்ஜுனனின் ஆயுதங்கள் யுதிஷ்டரரின் வீட்டில் இருந்தன. அவர்களது சுழற்சி முறைப்படி, திரௌபதி அப்பொழுது யுதிஷ்டிரருடன் இருந்தாள். அதனால் அர்ஜுனன் தயங்கினான். இருந்தும், அந்த பிராமணர் திரும்ப திரும்ப வேண்டியதால் யுதிஷ்டரரின் வீட்டிற்கு சென்று ஆயுதங்களை எடுத்துக் கொண்டு திருடப்பட்ட பசுக்களை மீது தந்தான். அதன்பின், தர்மரிடம், ” அண்ணா ! நாம் ஏற்றுக்கொண்ட விதிமுறையை நான் மீறிவிட்டேன். எனவே , நான் நிபந்தனையை காப்பாற்ற, ஒரு வருடம் புனித யாத்திரை செல்கிறேன்” எனக் கூறினான்.
தர்மரோ, அந்த சூழ்நிலை இந்த விதிமீறலுக்கு இடம் அளித்தது. எனவே பார்த்தனின் தவறு இதில் எதுவும் இல்லை என கூறினார். ஆனாலும், தான் சொன்னதை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தான் அவன். அங்கிருந்து பாரதம் முழுக்க வலம் வரத் துவங்கினான். முதலில் கிழக்குக் கடற்கரையோரமாக தனது யாத்திரையைத் துவங்கி பாரதத்தின் தென்கோடி முனையை அடைந்தான். அங்கிருந்து மேற்குக் கடற்கரையோரம் பிரயாணித்து துவாரகையை அடைந்தான்.
அங்கு வந்தவுடன் சுபத்ரையின் நினைவு வந்தது. அழகான துணிச்சலான பெண் ஆன சுபத்திரையை சந்திக்க ஆவல் கொண்டான். உடல் முழுதும் சாம்பல் பூசிக்கொண்டு துறவியாய் அங்கிருந்த கோவில் ஒன்றில் தவம் செய்யத் துவங்கினான்.
விரைவில் நகரம் முழுவதும் புதிதாய் வந்துள்ள யதியை பற்றிய செய்தி பரவியது. ஸ்ரீ கிருஷ்ணருக்கு இந்த செய்தி வந்தவுடன் யதியின் அடையாளங்களைக் கொண்டு அது யாத்திரையில் இருக்கும் அர்ஜுனன் என புரிந்துக் கொண்டார். மேலும், சுபத்திரையின் கவனத்தை தன் பால் ஈர்க்கவே இதை செய்கிறான் எனவும் புரிந்து கொண்டார்.
அர்ஜுனனை நேரில் சந்தித்து அவனின் உண்மை நோக்கத்தை அறிந்து கொண்டார். சுபத்திரையை அர்ஜுனன் மேல் காதல் கொள்ள செய்யவேண்டும் என இருவரும் திட்டமிட்டனர். ஷத்ரியர்களிடையே பெண்ணின் விருப்பத்தை கொண்டு கல்யாணம் செய்து கொள்வது பழக்கத்தில் இருந்த ஒன்றாகும்.
துவாரகை வந்துள்ள யதியை பற்றிய நல்ல செய்திகளாக பலராமனின் காதுகளை எட்டுமாறு செய்தார் கிருஷ்ணர். இவர்களின் சதி ஆலோசனை பற்றி ஏதும் அறியாத பலராமனோ , யதியின் அறிவிலும் தேஜஸிலும் கவரப்பட்டு , சுபத்ராவின் தோட்டத்தில் தங்கவும், அவரது தேவைகளை கவனிக்கவும் சுபத்ராவை பணித்தான். இதற்கு கிருஷ்ணர் பலத்த எதிர்ப்பை தெரிவித்தார். இளம் வயதுடைய ஆணையும் பெண்ணையும் ஒன்றாக தங்க அனுமதிப்பது தவறு என அவர் சொல்ல, பலராமரோ கிருஷ்ணர் எதிர்பார்த்தவாறே அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
விரைவிலேயே , எது நடக்கவேண்டுமோ அது நடந்தது. வந்திருக்கும் யதி, அர்ஜுனன்தான் என்பதை சுபத்ரா அறிந்து கொண்டாள். அர்ஜுனன், சுபத்ரையின் கனவுக் காதலன். விரைவில் இருவரும் காதலிக்கத் துவங்க , நாடகம் அடுத்த கட்டத்தை அதாவது திருமணத்தை நோக்கி நகர்ந்தது.
இந்த விஷயத்தில் கிருஷ்ணர் உதவிக்கு வந்தார். பலராமரை அவர் குடும்பத்துடன் அருகில் இருந்த தீவில் நடைப்பெற்ற 15 நாள் பூஜைக்கு அழைத்து சென்றார். உடல்நலமின்மையை காரணம் காட்டி சுபத்ரா மட்டும் பின்தங்கினாள். அவர்கள் அங்கிருந்து சென்ற பன்னிரெண்டாம் நாள் நல்ல முகூர்த்த தினமாய் அமைந்தது. ஸ்ரீ கிருஷ்ணர் விட்டு சென்ற தேரில் சுபத்ரையுடன் அர்ஜுனன் அங்கிருந்து கிளம்பினான்.
யதி யாரென்றும் அதன் பின் நடந்தவையும் கேள்விப்பட்ட பலராமன் மிகுந்த கோபத்துக்கு உள்ளானார். ஆனால், ஸ்ரீ கிருஷ்ணரின் பேச்சை மீறி இருவரையும் ஒரே இடத்தில தங்க அனுமதித்தது பலராமன் அல்லவா ? இப்பொழுது அவர் யாரை குற்றம் சொல்ல இயலும் ?

இடும்பவனம் & இடும்பி
ஒருமுறை கௌரவர்களின் சதியில் இருந்து தப்பி, யார் கண்ணுக்கும் படாமல் வெகு தூரம் சென்றனர். பீமன் தனது ஒரு தோளில் அன்னை குந்தியை சுமந்து சென்றான். மற்றொரு தோளில் தனது சகோதரர்களில் ஒருவனை மாற்றி மாற்றி சுமந்து சென்றான். நீண்ட தூரம் சென்ற பிறகு ஒரு அடர்ந்த வனத்தை அடைந்தனர். அருகிலேயே நீர் நிறைந்த தாமரை குளம் ஒன்றும் இருந்ததால் அங்கே ஓய்வெடுக்க முடிவு செய்தனர். நீண்ட தூரம் அனைவரையும் சுமந்து வந்ததால் களைத்திருந்த பீமன், குளத்தில் களைப்பு தீர நீராடி வந்த பொழுது, அவனது தாயும் சகோதரர்களும் களைப்பில் உறங்கி இருந்தனர். அவர்களை எழுப்பி குளத்தில் இருந்து நீரை தாமரை இலைகளில் கொண்டு வந்து தந்து பருக செய்தவன் மீண்டும் அவர்களை தூங்க சொல்லி அவர்களுக்கு காவலாக அமர்ந்து கொண்டான்.
அந்த வனமானது கொடிய ராக்ஷஷனான இடும்பனுக்கு சொந்தமான இடும்பவனம் ஆகும். இடும்பனுக்கு நர மாமிசம் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். எப்பொழுதெல்லாம் அந்த வனத்தில் மனிதர்கள் நுழைகிறார்களோ அப்பொழுதெல்லாம் அவர்களை அடித்து சாப்பிடுவது அவனுக்கு பிடித்த ஒன்றாகும். இப்பொழுதும் பாண்டவர்கள் நுழைந்தவுடன் மனித வாசனை அவனுக்கு வந்தது. உடனே தனது தங்கையான இடும்பியிடம் ” தங்கையே ! எனக்கு உணவின் வாசனை அடிக்கிறது. கண்டிப்பாய் இந்த காட்டில் மனிதர்கள் நுழைந்திருக்க வேண்டும். நீ உடனடியாக சென்று அவர்களை பிடித்து வா ! இன்று விருந்தை நாம் மகிழ்வுடன் உண்போம் !” எனக் கூறினான்.
அங்கிருந்து வந்த இடும்பி பாண்டவர்களை பார்த்தாள் . பார்த்தவுடன் அவர்களின் கருணை ததும்பும் முகம் அவளை ஈர்த்தது. அவர்களுக்கு காவலாய் அமர்ந்திருந்த நன்கு பலம் பொருந்திய ஓநாய் போன்ற உடலைக் கொண்டிருந்த பீமனையும் பார்த்தாள். அவனைப் பார்த்தவுடன் அவன் பால் ஈர்க்கப்பட்ட இடும்பி, அவர்களை உணவாக அவள் அண்ணனிடம் கொண்டு செல்லும் எண்ணத்தை மறந்தாள். பீமன் தன்னை பார்க்கவேண்டும் என்ற எண்ணத்துடன் அழகிய பெண் வடிவத்தை எடுத்து அவன் அருகே சென்றாள் . பீமனும் அவளைப் பார்த்தவுடன் அவள் மேல் காதல் கொண்டான்.
அவளை பார்த்து ” அழகிய பெண்ணே ! நீ யார் ” என வினவினான்.
அவள் திரும்ப அவனிடம் ” முதலில் நீங்கள் யார் என நான் அறிந்து கொள்ளலாமா ? அங்கே மலர் போல் உறங்கும் அழகிய பெண்மணி யார் ? யாரிந்த இளம் வாலிபர்கள் ?” என கேட்டாள்.
” நான் பீமன் , அரசன் பாண்டுவின் மகன். அங்கே இருப்பவர்கள் என் சகோதரர்கள் . என் மூத்த சகோதரனும் என் இளைய சகோதரர்களும். அது என் அம்மா . நீ தேவதையா ?” என பதில் உரைத்தான் பீமன்.
அதற்கு இடும்பி ” என் பெயர் இடும்பி, இந்த காட்டை ஆளும் இடும்பனின் சகோதரி. அவன் உன்னை கண்டால் உன்னை தின்றுவிடுவான். உன்னை என்னால் இழக்க இயலாது. உங்கள் அனைவரையும் நான் காப்பாற்ற விரும்புகிறேன். உங்கள் எல்லோரையும் அந்த மலை சிகரத்துக்கு தூக்கி சென்றுவிட்டால் உங்களை அவனால் கண்டுபிடிக்க இயலாது ” என காதல் வேகத்தில் கூறினாள்.
” என்னைப் பற்றி அவ்வளவு தாழ்வாக எண்ணாதே பெண்ணே ! உன் அண்ணன் வரட்டும் அவனை நான் கொள்கிறேன் ” என்று பெருமிதத்துடன் கூறினான்.
விரைவில் பசியினால் பொறுமை இழந்த இடும்பனின் கர்ஜனை கேட்டது. அதைக் கேட்டவுடன் இடும்பி நடுக்கத்துடன் குந்தி அருகே சென்று அமர்ந்து கொண்டாள். மரத்தின் பின்னிருந்து வந்த இடும்பன், தன் தங்கை அழகிய உருவம் எடுத்து மனிதர்களுடன் அமர்ந்திருப்பதை பார்த்தவுடன் கோபம் கொண்டான்.
பீமன் அவனை சண்டைக்கு அழைத்தான். உடனே இருவருக்கும் இடையே மிக கடுமையான சண்டை துவங்கியது. அந்த சப்தத்தில், உறங்கி கொண்டிருந்த குந்தியும் மற்ற சகோதரர்களும் விழித்துக் கொண்டனர். தன்னருகே அமர்ந்திருந்த இடும்பியிடம் அவளை பற்றி கேட்டு வியப்படைந்தாள் குந்தி. யுதிஷ்டிரன் பீமனிடம் ” சண்டையை வளர்த்துக் கொண்டே செல்லாதே ! இரவு கவிழ்ந்தவுடன் ராக்ஷர்களின் பலம் அதிகமாகி விடும் ” எனக் கூறினான்.
உடனே பீமன், இடும்பனை தன்னுடைய பலம் வாய்ந்த கைகளால் உருத்தெரியாமல் நசுக்கி எறிந்தான். அதன் பின், பாண்டவர்களும், குந்தியும் தங்கள் பயணத்தை தொடர முடிவு செய்து அங்கிருந்து கிளம்பினார்கள். வேறு வழித் தெரியாத இடும்பியும் அவர்களை பின் தொடர்ந்தாள் . இதைக் கண்ட குந்தி ” மகளே ! நீ என் எங்களைப் பின் தொடர்கிறாய் ” என வினவினாள்.
இடும்பி நாணத்துடன் பீமனை பார்த்து பின் ” நீங்கள் அவருடைய அம்மா ..” என கூற, குந்தி பீமனை அவன் மனதில் இருப்பதை சொல்ல சொன்னாள் . மிக பெரிய உருவம் கொண்ட பீமன், வெட்கத்துடன் தரையை பார்த்தும் தன் புன்னகையை மறைக்கவும் முயன்றான்.
விரைவில் ஒரு அழகிய இடத்தை அடைந்தனர் அவர்கள். அங்கே இடும்பி அவர்கள் தங்க ஒரு குடிசை நிர்மாணித்தாள் .
அதன் பின், பீமன் இடும்பியை மணந்து அங்கே மகிழ்வாக வாழ்ந்தனர். மகன் பிறந்தவுடன் அவனுக்கு ” கடோத்கஜன்” என பெயரிட்டு அவனை தாயுடன் விட்டுவிட்டு தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்.
பழிக்கு பழி
அரக்கு மாளிகை தீயில் இருந்து தப்பிய பாண்டவர்கள் ஏகசக்கரம் என்ற நகரில் பிராமணர்களாக வேடம் பூண்டு ஒரு பிராமணரின் வீட்டில் தலைமறைவாக வாழ்ந்து வந்தனர் . தினமும் அந்நகரத்தில் பிக்ஷை எடுத்து உண்டு வந்தனர் .
அத்தகைய சமயத்தில் ஒரு நாள் , சகோதரர்கள் நால்வரும் பிக்ஷை எடுக்க வெளியே சென்றிருக்கையில் பீமன் மட்டும் தன் தாய் குந்தியுடன் வீட்டில் இருந்தான் . அப்பொழுது அந்த வீட்டின் உரிமையாளரின் பகுதியில் எதோ குழப்பமான விவாதம் நடப்பது அவர்கள் காதில் விழுந்தது .
“அன்பே! நீ கூறுவதுபடி , நீ எங்களை விட்டு பிரிந்து சென்றால் நான் என்ன செய்வேன்? நம் குழந்தைகள் என்ன செய்வார்கள்? நம் சிறு மகளை நாம் காப்பாற்ற வேண்டும். மேலும் , நம் குலத்தையும் காப்பாற்ற வேண்டும்.” என அந்த வீட்டின் உரிமையாளர் தன் மனைவியிடம் கூறினார் .
“நாதா! நான் போய்தான் ஆக வேண்டும். நீங்கள் செல்ல நான் அனுமதிக்க இயலாது. கணவன் இல்லாமல் , குழந்தைகளை எப்படி ஒரு பெண் பாதுகாக்க இயலும் ? மேலும் , அப்பாவி குழந்தைகள் தந்தை இல்லாமல் எங்ஙனம் வளர்வார்கள்? எனக்கு இறப்பை பற்றிய எந்த கவலையோ பயமோ இல்லை. நான் இறந்த பிறகு நீங்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை கவனமாக வளருங்கள்” என்று அவருடைய மனைவி பதில் கூறினாள்.
இதைக் கேட்ட அவர்களின் சிறு பெண் ” நான் சிறு பெண்தான் . இருந்தாலும் , நான் சொல்வதை இருவரும் கேளுங்கள் . நீங்கள் இறந்துவிட்டால், சிறு குழந்தைகளான நானும் என் தம்பியும் என்ன செய்வோம்? என்னை செல்ல நீங்கள் அனுமதித்தால் , உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும்” என கூறினாள்.
இதைக் கேட்ட பெற்றோர் இருவரும் அவளை அனைத்துக் கொண்டனர் . நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர்களின் சிறு மகன் கையில் ஒரு தடி எடுத்துக் கொண்டு வந்து ” ஏன் எல்லாரும் அழுகிறீர்கள்? யாரும் பயப்பட வேண்டாம். நான் சென்று அந்த அரக்கனை கொன்று விடுவேன் ” என கூறியதைக் கேட்டு அந்த துயரமான நிலையிலும் அனைவரும் சிரித்தனர் .
அந்த சமயத்தில் அங்கே வந்த குந்தி ” நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள் என நான் அறிந்து கொள்ளலாமா ? ” என வினவினாள்.
“சகோதரி ! பகாசுரன் என்ற அசுரன் பதிமூன்று வருடங்களுக்கு முன்பு இங்கு வந்து இந்த நகரின் ராஜாவை கொன்று நகரைக் கைப்பற்றிக் கொண்டான் . பின், வெறி கொண்டவனாய் நகரத்தில் இருக்கும் மக்களை கொல்ல துவங்கினான் . அவனது அராஜகத்தை சமாளிக்க முடியாத மக்கள் அவனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர் . அதன்படி , ஒவ்வொரு வாரமும் , வண்டி நிறைய உணவுப் பொருட்களுடன் ஒரு மனிதரை அனுப்புவதாய் ஒத்துக் கொண்டனர். அதன்படி , ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்து ஒருவர் உணவு கொண்டு செல்லவேண்டும் . அந்த உணவுடன் , உணவு எடுத்து செல்லும் நபரையும் பகாசுரன் விழுங்கி விடுவான் . இந்த வாரம் உணவு எடுத்து செல்ல வேண்டியது எங்கள் குடும்பத்தின் முறை. “
” மக்களை காப்பாற்ற வலிமையான அரசரோ இளைஞர்களோ இல்லாதபட்சத்தில் வலிமையற்ற சாதாரண மனிதர்களாகிய நாங்கள் என்ன செய்ய? ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ முடியாத எங்களால் என்ன செய்ய முடியும்? பேசாமல் , நாங்கள் நால்வருமே அவனுக்கு உணவாக செல்லலாம் என முடிவெடுத்திருக்கிறோம்” என அவர் நிலைமையை குந்திக்கு விளக்கினார் .
“சகோதரரே! நீங்கள் கவலைப்பட வேண்டாம். எனக்கு ஐந்து மகன்கள் . அவர்களில் ஒருவன் இந்த முறை அசுரனுக்கு உணவெடுத்து செல்லட்டும் ” என குந்தி கூற அதை அந்த பிராமணர் மறுத்தார் .
“என்னுடைய மகன் பீமன் மிகவும் பலம் பொருந்தியவன் . ஏற்கெனவே அவன் பல அசுரர்களுடன் சண்டையிட்டு அவர்களை கொன்றிருக்கிறான். எனவே நீங்கள் அதை எண்ணி பயப்பட வேண்டாம். உங்களுக்கு பதில் அவன் செல்வான்” என குந்தி உறுதி அளித்தாள்.
குந்தியின் உத்தரவின் படி இரண்டு வண்டிகள் நிறைய உணவுப் பொருட்களுடன் பகாசுரன் இருந்த குகை நோக்கி சென்றான் பீமன் . அந்த குகையை அடைந்தவுடன் வண்டியை நிறுத்திய பீமன் வண்டியில் இருந்த உணவுப் பொருட்களை சாப்பிடத் துவங்கினான் . பகாசுரனுடன் சண்டையிடும் பொழுது அந்த உணவு கீழே விழுந்து வீணாகிவிடும். மேலும், அவனைக் கொன்றவுடன் குளிக்காமல் உன்ன இயலாது என அவ்வாறு செய்தான் .
உணவின் சுவை நாசியில் ஏற தன் குகையில் இருந்து வெளிவந்த பகாசுரன் , தனக்கான உணவுப் பொருட்களை மானிடன் ஒருவன் உண்பதைக் கண்டு கோபம் கொண்டு தாக்கத் துவங்கினான் . துவக்கத்தில் , அவனது தாக்குதலை கண்டுகொள்ளாத பீமன், ஒரு கையால் உணவருந்திக் கொண்டே மாரு கை கொண்டு அசுரனுடன் சண்டையிட்டான் . உணவுகளை முழுவதும் உண்ட பின் , அங்கிருந்த மரத்தைப் பிடுங்கி அசுரனை தாக்க பதிலுக்கு அசுரன் எறிந்த கற்களை விளையாட்டாக தடுத்தான் . பின் பகாசுரனை தூக்கி தரையில் எறிந்து கொன்று அந்நகர மக்களுக்கு விடுதலை தந்தான் .
Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026
Subscribe to get the latest posts sent to your email.
