தைரியம்

ஓடுகின்ற தண்ணீர் நினைத்தால்
முகத்தின் பிம்பத்தை கொண்டு போயிருக்க முடியும்
அப்படிச் செய்யவில்லை
தைரியமாக அங்கேயே நிறுத்தியது
வெகு நூற்றாண்டுகள் கழித்தும் மனிதர்கள்
நீரோடையைப் பார்க்க வந்து குனிவர்
இன்னும் வெகு நூற்றாண்டுகளுக்கு
தைரியம் நின்ற இடத்திலேயே நின்று பேசப்படும்
வாழ்வின் சாரம்
வாழ்வின் சாரம் மிகவும் அலுப்பூட்டுகிறது
இதற்குத்தானா என்பதே எதிலும் மிஞ்சுகிறது
ஒரு மலைப் பயணம் மேற்கொள்ளலாம் எனக்
கிளம்பிக் கொண்டிருக்க
மலையே இறங்கி வந்து கைகளில் என்னை
ஏந்திக் கொள்ளுகிற அதிசயம் நிகழ்ந்தால் கூட
எதுவும் மாறாதென்று தோன்றியது
முதலில் அதிசயம் நிகழட்டும்
ஏனெனில் காலைச் சூரியன் எல்லாவற்றின் மீதும்
மஞ்சளைப் பூச தயார் நிலையில் உள்ளது
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “செல்வசங்கரன் கவிதைகள்”