தீப்பெட்டி

ஆஷாபூர்ணா தேவி

(தமிழில்: நரேன்)

நான் எப்போதும் பெண்களை தீப்பெட்டிகளுடன் ஒப்பிடுவேன். ஏன்? தீப்பெட்டிகளின் தன்மைதான் அதற்குக் காரணம் – நூறு இலங்கைகளை எரித்துவிடும் அளவிற்கு அதனிடம் தீமருந்து இருந்தும் அவை சமையலறையில், உக்கிராணத்தில், படுக்கையறையில் அங்கிங்கும் எங்குமென அப்பாவியாகச் சாந்தமாகக் கிடக்கும் – பெண்களும் அச்சு அசலாக அதே போலத்தான்.

உங்களுக்கு ஓர் உதாரணம் வேண்டுமா?

நம் முன்னே இருக்கும் இந்த மிகப்பெரிய மூன்றடுக்கு வீட்டை நன்கு கவனமாகப் பாருங்கள் – 

ஞாயிறு காலை.

சலவைக்காரன் வந்து காத்துக் கொண்டிருக்கிறான்.

அஜீத்தின் அழுக்கு மூட்டைக் குவியலை சலவைக்காரனிடம் கொடுப்பதற்கு சில கணங்களுக்கு முன்னால் நமீதா அதன் பாக்கெட்டுகளை கடைசியாக ஒரு முறை சோதித்தபோதுதான் அக்கடிதத்தைக் கண்டுபிடித்தாள்.

கசங்கி முறுங்கிச் சுருட்டியிருந்த அக்கடித உறையின் வாய்ப்புறம் கிழிந்திருந்தது, அதன் மேல் நமீதாவின் பெயர் இருந்தது.

…த்தூம்! நமீதாவின் நாடி நரம்புகளிலெல்லாம் தீப்பற்றிக் கொண்டது. தன் கையிலிருந்த துணிகளைக் கீழே போட்டுவிட்டு அக்கடிதத்தைப் பிரிப்பதற்காக படுக்கையின் மீது அமர்ந்தாள்; அதில் குறிப்பிட்டிருந்த தேதியைத்தான் அவள் முதலில் பார்த்தாள். அதிலிருந்த தேதியை வைத்துப் பார்த்தால் அக்கடிதம் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே வந்திருக்க வேண்டும்.

அவள் உறையைத் திருப்பி தபால் முத்திரையிலிருக்கும் தேதியோடு ஒப்பிட்டுப் பார்த்தாள்; அவள் கணிப்பிற்கு அதுவும் சாட்சியென நின்றது.

ஆமாம், இக்கடிதம் மூன்று நாட்களுக்கு முன்னால் வந்திருக்கிறது.

அஜீத் அதைப் பிரித்திருக்கிறான், படித்திருக்கிறான், பிறகு அதை மடித்துச் சுருட்டி கசக்கி தன் பாக்கெட்டுக்குள் போட்டு அதை அப்படியே விட்டுவிட்டான். நமீதாவிடம் இதை ஒருமுறையேனும் குறிப்பிட வேண்டும் என்ற அவசியத்தையே அவன் உணரவில்லை. 

த்தூமென கொழுந்துவிட்டு மேலெழுந்த தீ ஜூவாலை இப்போது அவளது மனத் தந்தி ஒவ்வொன்றையும் மீட்டி சீறொலியெழுப்பி நின்று எரிந்தது. 

அதற்குக் காரணம் இச்சம்பவம் ஏதோ ஒரு நாள் நிகழ்ந்துவிட்ட விபத்து அல்ல; வேண்டுமென்றே செய்யப்பட்டது.

அஜீத்தின் சுபாவமே அப்படியானதுதான்.

தபால் பெட்டியின் சாவியை, இக்கூட்டுக் குடும்பத்தின் ஐம்பத்திரண்டு கைகளின் இடைவெளிகளில் நுழைந்து பிடித்து அதை எப்படியோ இவன் தனது உடைமை ஆக்கிக்கொண்டிருக்கிறான். நமீதாவின் பெயரிடப்பட்ட உறையுடன் கடிதம் அதில் எப்பொழுது இருந்தாலும் அதை அவன் முதலில் எடுத்து பிரித்துப் படித்துவிட்டுதான் அவளிடம் கொடுப்பான். பல சந்தர்ப்பங்களில் அவளிடம் அதை அவன் கொடுக்காமலே போயிருப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. குறைந்தபட்சம் அப்படியொரு சந்தேகம் நமீதாவின் மனதில் வேர் ஊன்றியிருக்கிறது, மிகவும் ஆழமாகவே.

இருப்பினும், சற்றேனும் தன் மனைவி மீது சந்தேகப்படும்படியான ஒரு கடிதத்தைத் தன்னால் கண்டுபிடிக்க முடிந்தது என்று அஜீத்தால் மெய்யான ஒரு வாதத்தை இந்நாள் வரையிலும் முன் வைக்க முடியவில்லை.

ஆனாலும்… ஆனாலும் இந்த அசிங்கமான பழக்கம் அவனை விட்டு விலகிப் போகவில்லை.

நமீதாவின் கோபத்தினாலோ, அவள் இதை தனக்கெதிரான குற்றமாக உணர்வதினாலோ, அவளின் கசப்பூட்டும் வசவுகளினாலோ, அவனை வெட்கமுறச்செய்யும் அவளது முயற்சிகளினாலோ, அவளின் கேலிச் சொற்களினாலோ – எதனாலும் இப்பழக்கம் நிற்கவில்லை.

அவள் இதைப் பற்றிய பேச்சை எடுத்தால், அவன் முதலில் சிரிப்புடன் அதைப் புறந்தள்ள முயற்சி செய்வான். சிரிப்பு அவனுக்குக் கை கொடுத்துக் காப்பாற்றவில்லையென்றால் அவளைத் திட்டத் தொடங்குவான்.

அவள் ஒரு நிமிடம் அப்படியே அசையாமல் அமர்ந்து அக்கடிதத்தை முழுமையாகப் படித்தாள்.

அதில் பெரிதாக எதுவும் இல்லை, நமீதாவின் அம்மாவிடமிருந்து வந்திருக்கும் ஒரு கடிதம்.

அது அவரின் வழக்கமான மன்றாடல் – அந்த நற்பெண்மணி பல்வேறு புகார்களும் தனது இன்னல்களும் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே போவதை ஒரு செய்தியென மீண்டும் ஒருமுறை பதிவு செய்திருக்கிறார். துன்பத்திற்கு மேல் துன்பம், அவர் அறையின் மேற்கூரை விரிசலுற்று மழை நீர் இடைவிடாது நீரோடை போல ஒழுகுகிறது; இது உடனடியாக சரி செய்யப்படவில்லையென்றால், எடை மிகுந்த கூரை உடைந்து விழுந்து அதனடியில் நொறுங்கி அவர் உயிர் விடக் கூடும். நிச்சயமாக அப்படியான ஒன்று தனக்கு நேரும் என்ற அச்சம் அவருக்கில்லைதான். காரணம், அவர் மகள் ஒரு மகாராணி, அவர் மருமகன் பரந்த இதயம் கொண்ட பெரிய மனதுக்காரன். எனவே – இத்யாதி இத்யாதிகள்…. 

கணவனோ மகனோ உடனில்லாத நிராதரவான ஒரு விதவை, தன் மகளின் தோற்றத்தை மட்டுமே பலமாகக் கொண்டு வசதியான குடும்பத்தின் வீட்டிற்குள் அவளை அனுப்பி ஒப்படைத்ததில் வெற்றி கண்டவள். ஆனால் அந்த நற்பெண்மணி கிடைக்கும் சிறிய சந்தர்ப்பங்களில் கூட இவ்விஷயத்தில் தன்னுடைய சாதூர்யத்தை சுட்டிக் காட்டி பெருமைப்பட்டுக் கொள்வதை நிறுத்துவதேயில்லை. அப்படியான சந்தர்ப்பங்களையும் அவர் எப்படியும் தேடிப் பிடித்துவிடுகிறார்.

நமீதாவின் அம்மாவிடமிருந்து புதிய கடிதமொன்று வரும்போதெல்லாம் அஜீத் ஏளனமாகச் சிரித்துவிட்டுச் சொல்வான், “அதை ஏன் சிரமமெடுத்து படிக்கனும்? நான் போய் மணியார்டரை அனுப்பிடறேன்”.

நமீதாவின் தலை வெட்கத்தாலும் அவமானத்தாலும் தரை நோக்கித் தொங்கும். அதனால், சில காலம் முன்பு, கட்டுமீறிய கோபத்திலும் வருத்தத்திலும் நமீதா தனக்கு தபால் அட்டைகள் அனுப்பக் கூடாது என்று அம்மாவிற்கு தடைவிதித்திருந்தாள். அதன் பிறகு ரகசியமாக எப்போதெல்லாம் தன்னால் பிடித்திழுத்துச் சேர்த்து வைக்க முடிகிறதோ அப்போது தன் அம்மாவிற்கு அச்சிறு பணத் தொகையை அனுப்பி வைக்கலாம் என்று நினைத்திருந்தாள். இந்நிலையில் – வந்திருக்கும் உறையிட்ட கடிதத்திலும் இதே கதைதான்.

சட்டென்று நமீதா தன் தாயின் மீதான கோபத்தால் தீப்பிழம்பாக மாறினாள். 

ஏன், ஏன் அவர் இப்படி எப்போதும் பிச்சை எடுக்கிறார்?

ஏன் நமீதா தன்னுடைய சுயமரியாதையையும் கண்ணியத்தையும் காப்பாற்றிக் கொள்ள அவர் விடுவதில்லை? இல்லை, இந்தமுறை கடிதமெழுதி மிகத் தெளிவாக தன் அம்மாவிடம் சொல்லிவிடவேண்டும்: “என்னால் இனி எதுவும் செய்ய முடியாது, என்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்காதே.”

சரியாக அப்போதுதான் தன் சாவகாசமான ஞாயிற்றுக்கிழமைக் குளியலை முடித்துவிட்டு அறைக்குள் நுழைந்தான் அஜீத். இத்தனை நாள் உளக்கொதிப்பாக இருந்து தற்போது அவமதிப்பினால் கூர் தீட்டப்பட்ட அவளின் கடுஞ்சினம் அவன் மேல் வன்மையாகப் பாய்ந்து தாக்க விரும்பியது. “இந்த லெட்டர் எப்போ வந்தது?”, நமீதா கர்ஜித்தாள்.

அஜீத் தன்னுடைய பிழையின் அளவை மதிப்பிட்டபடி தலை சாய்த்து அவளை நோக்கினான்.

‘இதற்காக இன்னும் கொஞ்சம் கைக்காசு’ என்று நினைத்துதான் அக்கடிதத்தை நமீதாவிடம் கொடுக்கவேண்டியதில்லை என்ற முடிவிற்கு வந்திருந்தான்; அதைக் கிழித்துத் தூர வீசிவிடுவதாகத்தான் இருந்தான். மிகப் பெரிய தவறு செய்துவிட்டான்.  

அதற்காக அஜீத் வருந்தி தலைகுனியப் போவதில்லைதான்.

நினைவுகூரக் கடுமையாக முயற்சிப்பவனைப் போன்ற பாவனையில் சொன்னான், “லெட்டரா? எந்த லெட்டர்? ஓஹோ… ஆமா ஆமா… உன் அம்மாவிடமிருந்து ஒரு லெட்டர் வந்தது உண்மைதான். உன்னிடம் கொடுக்கனும்னு இருந்தேன், எப்படியோ முடியாமப் போச்சு.”

“ஏன் உங்களால் கொடுக்க முடியாம போச்சு? ஏன்? ஏன்? பதில் சொல்லுங்க, ஏன் அதை எங்கிட்ட கொடுக்க முடியாமப் போச்சு?”

“ஏன் இப்படி நச்சரிக்கிற?”, அஜீத் சொன்னான். “நான் மறந்துட்டேன் – வேறென்ன?”

“பொய்!” நமீதா பாம்பைப்போலச் சீறினாள்.

“ஏன் நீ உன் வாய்க்கு வந்ததெல்லாம் பேசுற? மனிதர்களுக்கு மறதியே வராதா?”

“இல்லை, வராது! என் லெட்டரை நீங்க ஏன் திறந்தீங்க?”

இந்தக் குற்றச்சாட்டை அஜீத் காற்றில் கலைத்துவிட முயற்சித்தான். “நான் திறந்தா என்ன? என் சொந்த மனைவியோட லெட்டரை..”

“பேசாமயிருங்க, கொஞ்சம் பேசாம இருங்க… நான் பேசறேன். என்ன காரணத்துக்காக நீங்க எனக்கு வரும் லெட்டரையெல்லாம் திறக்கணும்? கூடாதுன்னு உங்களிடம் நான் ஒரு ஆயிரம் முறையாவது சொல்லியிருக்கேன் இல்லையா?”

நமீதாவின் கோபத்தை கண்டு அஜீத் அஞ்சுவதில்லை ஆனால் அவளுடன் சண்டையிடுவதற்கு அச்சப்படுவான். அதனால் அவன் ஒரு அசட்டுத்தனமான சிரிப்பைக் காட்டிச் சொன்னான், “நீ இதைத் தடுக்கிறாய் என்றால் நிச்சயமா அதுல ஏதோ இருக்கு. உனக்கு யாரும் ரகசியமா காதல் கடிதங்கள் அனுப்புவதில்லை என்பதை நான் உறுதிபடுத்திக்க வேண்டாமா?”

“போதும் நிறுத்துங்க! என்னவொரு கீழ்த்தரமான அசிங்கமான மனுஷன் நீங்க!”

இதற்குப் பிறகு தன்னுடைய பொய்யான புன்னகையை அஜீத்தால் தொடரமுடியாது. அவனும் விஷமேறிய கத்தியைக் கையில் எடுத்துக் கொண்டான். அவன் சொன்னான், “ஓ அப்படியா! இரவும் பகலும் மருமகனிடம் உள்ளங்கைகளை விரித்து பிச்சை கேட்டுப் புலம்புறவங்க உயர்குடி மக்கள்! சாணி அள்ளுபவனின் மகள் மகாராணி ஆகிட்டாள், அப்புறம்…”

“வாயை மூடு!” நமீதா உரக்கக் கத்தினாள்.

அவர்களின் அறை மூன்றாவது மாடியில் இருக்கிறது, அந்த வகையில் அது ஓர் ஆசீர்வாதம்தான். இல்லையென்றால் அந்தக் கத்தலுக்கு அத்தனை பேரும் என்னவென்று பார்க்க வந்திருப்பார்கள்!

“வாயை மூடணுமா?” அஜீத் இரைந்தான். “எதுக்கு மூடணும்? நான் இப்போ தெளிவாவே சொல்றேன்! நான் அப்படித்தான் உனக்கு வரும் லெட்டரையெல்லாம் பிரிப்பேன். எனக்கு என்ன தோணுதோ, எது விருப்பமோ அப்படித்தான் செய்வேன். நீ என்ன பண்ணுவ? உன்னால எதாவது பண்ண முடியுமா?”

“என்னால முடியாதா? என்னால எதுவுமே பண்ணமுடியாதா?” கிட்டத்தட்ட மூச்சுத் திணறலில், நமீதா ஒவ்வொரு வார்த்தையாகத் தெளிவாக உச்சரித்தாள்: “என்னால எதாவது செய்ய முடியுங்கிறதை நீங்க பார்க்க விரும்புறீங்களா?”

அவள் உடனடியாக திகைப்படையச் செய்யும் செயல் ஒன்றைச் செய்தாள். மேஜையின் மேலே அஜீத்தின் சிகரெட்டுகளுக்கு அடுத்து இருந்த அவனின் தீப்பெட்டியை வெடுக்கென எடுத்தாள், விஷ்ஷ்ஷ்ஷ்.…! ஒரு தீக்குச்சியைப் பற்ற வைத்து தன் புடவையின் மீது வைத்தாள்.

ஒரு பணக்கார மனைவியின் மிக நேர்த்தியான புடவை முந்தானை சட்டெனத் தீப்பற்றிக் கொண்டது. 

அடுத்த கணமே, “உனக்கென்ன பைத்தியம் பிடிச்சு போச்சா?” என்று சொன்னபடி அஜீத் அவள் பக்கம் பாய்ந்து எரிந்து கொண்டிருக்கும் சேலைப் பகுதியைத் தன் கைகளுக்கிடையில் இழுத்துத் தட்டி நெருப்பை அணைத்தான். 

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அவன் இப்போது கொஞ்சம் பயந்து போயிருந்தான். அவன் நமீதாவின் முகத்தை நடுக்கத்துடன் பார்த்தான். பிரகாசமாக, சுடரும் சிவப்பில் நெருப்பொன்று அங்கே இன்னும் எரிவதைக் கண்டான். 

அந்த நெருப்பை தன் கைகளால் தட்டி அணைக்கும் தைரியம் அவனுக்கு இல்லை, அதனால் அவன் அதன் மீது நீரை ஊற்ற முயன்றான். மிகுந்த சிரமத்துடன் அவன் இயல்பாகப் பேசுவதற்கு முயற்சி செய்தான். “உனக்கு கோவம் வந்துட்டா சுய நினைவை இழந்துடற, இல்லையா? ஒரு பெண்ணுக்கு இவ்வளவு கோவம்! ஊஃப்ப்ப்….”

அதற்கு நமீதா என்ன சொல்லியிருப்பாள் என்று யாரால் ஊகிக்க முடியும், அந்த நேரத்தில் நாத்தனார் ரினி அறைக்குள் அடியெடுத்து வைத்துவிட்டாள்.

உள்நுழைந்ததுமே துளைக்கும் தொனியில் சொன்னாள், “அண்ணி, எவ்வளவு நேரம் டோபி உங்களுக்காகக் காத்திருக்கிறது? உங்க துணி எதுவும் அவனிடம் கொடுக்கப்போவதில்லைன்னா அதையாவது அவனிடம் சொல்லி அனுப்புங்க!”

ஒன்றிரண்டு நொடிகளுக்கு நமீதா அசையாது அப்படியே நின்றாள், கீழே அவளுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் சலவைக்காரனின் முகத்தை நினைவுக்குக் கொண்டுவந்திருப்பாளாக இருக்கலாம். பிறகு அழுக்குத் துணிகளை எடுத்து அவற்றைப் பிரிக்கத் தொடங்கினாள். “நான் இப்போ வரேன்னு அவனிடம் சொல்லு. துணிகளை எடுத்து வரேன்.”

நமீதா எப்போதும் தன் மனதிலிருப்பதைப் பேசிவிடுபவள், அதனால் அவள் முகத்திற்கு நேரே அவளை யாரும் தாக்கிப் பேச முடியாது. ஆனால் கூரான சொற்களால் அவளை லேசாக நெருடுவார்கள். அவளது இரண்டாவது நாத்தனார் காலைநேர வேலைகளினால் கிட்டத்தட்ட முழுதாக சோர்வடைந்திருந்தாள், இவளைப் பார்த்ததும் வியர்வை அப்பிய தன் முகத்தில் கோணலான ஒரு புன்னகையைக் காட்டிச் சொன்னாள், “நல்லது, எப்படியோ குறைந்தபட்சம் கீழே இறங்கி வரலாம்னாவது முடிவு பண்ணிட்டீங்களே! ஆண்டவா! உங்களுக்கு நேரங்காலமே கிடையாதே, ஒரு சின்ன வாய்ப்பை எப்படியாவது பிடிச்சு உங்க ரூமுக்கு போய் கணவனோடு கொஞ்சிக் குலவத் தொடங்கிடுவீங்களே. காதல் பேச்செல்லாம் எப்பவுமே பழசாகிடாது போல?”

நிலைமையை எடை போட நமீதா ஒருமுறை தன்னைச் சுற்றிப் பார்த்தாள். காலை நேர அதிரி புதிரிகளையும், இரண்டு பக்கமும் நெருக்கும் மனிதக் கூட்டத்தையும் பார்த்தாள். அவள் குரலில் பதற்றம் இருக்கக் கூடாது. அதனால் அவளும் ஒரு மெல்லிய புன்னகையை வரவழைத்து மிகவும் மென்மையான குரலில் சொன்னாள், “ஓ… அப்படியெல்லாம் ஒன்னுமில்லை. நீங்க எப்போவாது வந்து எட்டி பார்க்கணும். எங்க பேச்செல்லாம் எப்பவுமே சண்டைப் பேச்சுகள்தான், தெரியுமா உங்களுக்கு?”

இரண்டாவது அண்ணி ஹூஹூ என்று சிரித்துச் சொன்னாள், “போதும் நிறுத்து ஓரவத்தி, ஆனைய இடுப்பில கட்டி முறத்தாலே மறைப்பாளாம். நாங்க ஒன்னும் கழுதைப் புல்லை தின்னு வளரலை. நாங்க எதுக்கு எட்டி பார்க்கனும்? இருபத்தி நாலு மணிநேரமும் நீயேதான் எங்க கண்ணு முன்னாலே காட்டுறியே – “

தன் வெளுப்பான முகத்தில் கவர்ச்சியான சிவப்பு தோன்றச்செய்யும்படியான ஒரு சிரிப்பைச் சிரித்தாள். அப்படியான ஒரு சிரிப்பை சிரித்து முடித்ததும் சொன்னாள், “மேலே சொல்லுங்க. ரொம்ப குறும்பான விஷயங்களைத்தான் நீங்க பேசுவீங்க…”

எப்போதும் வேலையாயிருக்கும் பெரிய அண்ணி அங்கிங்கும் ஓடிக்கொண்டிருந்தாள். “காய் கறியெல்லாம் வெட்டி முடிச்சிட்டீங்களா இல்லை வெட்டியா கதை பேசிகிட்டு இருக்கீங்களா?” சட்டெனெ ஓட்டத்தை நிறுத்தி பிறகு கேட்டார். “அதென்ன? ஓ அதென்ன அபசகுனம்? சின்னவளே உன் முந்தானை ஏன் இப்படி கரிஞ்சு போயிருக்கு?”

நமீதாவும் வேலையைத் தொடங்கியிருந்தாள், ஆனால் ஒரு நொடிதான். அடுத்த கணமே, தன் முந்தானையை வேகமாக பின்னால் மடித்துவிட்டுச் சிரித்தபடி சொன்னாள், “ ஓ… அதை ஞாபகப்படுத்தாதீங்க!  நீங்கள் என்னை எச்சரித்தபடியே நடந்துபோச்சு. உங்க பேச்சை நான் கேட்கலை, இப்போ என்ன ஆச்சு பாருங்க! அடுப்பிலேர்ந்து தண்ணீ கொதிக்கும் பாத்திரத்தை முந்தனையால பிடிச்சு தூக்கினேன் இப்படி ஆகிடுச்சு.”

நமீதா உருளைக்கிழங்குகள் இருந்த கூடையை தன் பக்கமாக இழுத்து அவற்றை உரிக்கத் தொடங்கினாள். தன் மனதில் அம்மாவிற்கு ரகசியமாகக் கொஞ்சம் பணத்தை அனுப்பவது எப்படி என்பது பற்றிச் சிந்திக்கத் தொடங்கினாள். அவள் அம்மாவிற்கு அவளால் நிச்சயமாக இப்படி எழுதி அனுப்ப முடியாது: “என்னால் இனி எதுவும் செய்ய முடியாது, என்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்காதே.” 

அங்கே முழுக் கிராமத்திற்கும் தெரியும் நமீதா ஒரு ராணியென்றும், அவள் கணவன் பரந்த இதயம்கொண்ட பெரிய மனதுக்காரனென்றும். 

இதனால் – மிகச் சரியாக இதனால்தான் நான் பெண்களை தீப்பெட்டிகளுடன் ஒப்பிடுவேன். எத்தனையோ பொங்கிச் சீறும் தீயைப் பற்ற வைக்க தங்களிடம் தேவையான மூலப்பொருட்கள் இருந்தாலும் அவை தாமாகப் பற்றிக்கொள்வதில்லை, ஆண்களின் பெருந்தன்மை பெரிய மனது என்ற முகமூடிகளையும் கொழுந்துவிட்டு எரித்துவிடுவதில்லை. தங்களைப் போர்த்திருக்கும் வண்ணமயமான ஓடுகளைக் கூட தீயிடுவதில்லை. 

அவை தங்களையே எரித்துக் கொள்ளாது – ஆண்களுக்கும் இது தெரியும்.

அதனால்தான் அவர்கள் அவற்றை அக்கறையில்லாமல் சமையலறையிலும் உத்திரத்திலும் படுக்கையறையிலும் அங்கும் இங்கும் எங்குமென கிடத்தி வைத்திருக்கிறார்கள்.  

சற்றும் எந்த பயமுமின்றி தங்கள் பாக்கெட்டுகளுக்குள்ளும் போட்டுக் கொள்கிறார்கள்.

முந்தைய பதிவுகள்:

https://solvanam.com/?p=80869

Series Navigation<< குடியுரிமை 150 டன் எடைத் தொன்னில்சௌவாலி >>

3 Replies to “தீப்பெட்டி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.