நான்கு சுவர்களுக்குள் விரியும் அகாலம்

நரேன்

ஆஷாபூர்ணா தேவியின் சிறுகதைகளை முன்வைத்து

கொரோனா பெருந்தொற்று கால ஊரடங்கு உடைத்தெறிந்த பல கற்பிதங்களில் ஒன்று ‘வீடு ஆனந்த ஊற்றின் தோற்றுமுகம்’ என்பது. குடும்பம் என்ற அமைப்பு மனித நாகரிக வளர்ச்சியின் உச்சியில் முளைத்த மலர் என்பது இந்தியச் சூழலில் பெரும்பாலும் உண்மைக்கு அருகாமையில் இருப்பதைப் போலத் தோன்றினாலும் அதன் எல்லைகளும், அவ்வமைப்பின் ஊசி இலைப் பின்னலை பொத்திக் காக்கும் காரணிகளும் எண்ணற்றவை. முதல் சில நாட்களுக்கு நொடி குறையாமல் குடும்பத்தினர் அனைவரும் ஒரே கூரைக்குள், அறைகளாகப் பிரிந்துகிடந்தாலும், சலிப்பின்றி முகம் பார்த்துக் கொள்வதற்கு விதவிதமான விளையாட்டுகள் தேவையாயிருந்தன. மேலும் பல மாதங்களுக்கு இடைவிடாது வீடடைந்து இருக்க வேண்டிய சூழலாக அது நீண்டதும் பதற்றம் பற்றிக் கொள்ளத் தொடங்கியது. தன் இயல்பு வாழ்வு என்று தான் உருவகித்திருந்த ஒரு பழகிய, இடம் செயல்பாடு காலம் என்ற கூறுகளுடைய வட்டத்திற்குள் மீண்டும் திரும்ப இயலாது என்ற பயம் தொற்றிக்கொண்டது. அதன் அடிப்படையில் மூன்று காரணிகள் உண்டு. நிச்சயமாகப் பொருளாதாரம் முதன்மையானது. பெரும்பான்மையான இந்தியக் குடும்பங்கள் வறுமையில் மூழ்கும் முனையில் நின்று கொண்டிருந்தனர். சிறுகச் சிறுகச் சேமித்த வாழ்வு குலைந்துவிடாமல் விரிசல்களை அடைக்க வேண்டிய நிலை. இரண்டாவதாக மனங்களின் வறுமை. நெருங்கிய மனங்களின் இண்டு இடுக்குகளைக் கூர் நோக்கத் தொடங்கியதில் சிரிப்பும் இன்முகமும் தேய்ந்து போனது. அடுத்தவர் விரும்பும் முகமூடியை அணிந்து களைவதற்கு மறைவிடம் அற்றுப் போனது. மனித மனப் பொந்துகளிலிருந்து தீ நாக்குகள் தன் இல்லத்தினரிடையே சீறியது. இத்தனை நாள் வெளியே வேலையிடத்தில் தேநீர்க் கடைகளில் சக வாகன ஓட்டிகளிடத்தில் பிச்சைக்காரர்களிடத்தில் தெருநாய்களிடத்திலும் கூட வெளிப்படுத்தி வீடு வந்து குளிரும் வெறுப்புக் கங்குகள் அத்தனையும் வீட்டிற்குள்ளேயே பற்றி எரியத் தொடங்கின. மூன்றாவதாக, மூட்ட மருட்சியின் (claustrophobic) விளைவுகள். முதல் சில நாட்களில் பெரும் பரப்பினைப் போல விரிந்திருந்த நான்கு சுவர்களும் சுருங்கத் தொடங்கின. ஒற்றைக் கூரையின் கீழ் வரிசை வீடுகளில் பல குடும்பங்களின் வாழ்விடங்கள் காலையில் குளித்து வெளியே வேலைக்குப் போவதற்கும் இரவு திரும்பி புழங்கித் தூங்கி எழுவதற்கும் மட்டுமே போதுமானதாக இருந்தது. இப்போது முழு நாளும் இச்சிறு தரையில் அடைந்திருப்பது சவப்பெட்டியில் சுவாசித்துக் கிடப்பதற்குச் சமமாகிப்போனது. உணர்வுகள் சுவர்களில் மோதி எதிரொலித்து பன்மடங்காக வீரியமடந்தன. ஒரு சொல் ஒரு பார்வை கூட பல வருடப் பிணைப்புக் கண்ணிகளை உடைக்க போதுமானதாக இருந்தது. இந்த மூன்றினில் பின் இரண்டை நுண்ணுணர்வுடன் கையாள்வதுதான் குடும்ப அமைப்புகள் நிலைத்திருப்பதற்கு மட்டுமல்ல அவற்றைச் சகித்துக்கொள்வதற்கும் அவசியம் என்பது சிறிது சிறிதாகப் புலப்பட்டது. 

இந்தச் சூழலையும் அதன் விளைவுகளையும் 1940லிருந்து 80கள் வரையிலான வங்காளத்தின் வாழ்வியல் சற்றேறக்குறைய ஒத்திருந்தது. இருபெரும் பஞ்சங்களும், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேசத்தின் எல்லைப் பிரிவினைச் சார்ந்த போர்களும் கலவரங்களும் படுகொலைகளும் வெள்ளப் பேரழிவுகளும், பெருந்தொகையில் அகதிக் குடியேற்றங்களும் வங்காளத்தின் வறுமைக்குக் காரணிகளாக இருந்தன. கல்கத்தாவின் மக்கட் தொகையில் மூன்றில் ஒரு பங்கு தெருக்களில் வாழ்ந்தனர். இவர்களைவிட ஓரளவு மேம்பட்ட நிலையிலிருந்த நடுத்தர மக்கள் வங்காளத்தின் மரபார்ந்த குடும்ப அமைப்பைப் பற்றிக்கொண்டு கூட்டுக்குடும்பங்களாக வாழ்ந்தனர். ஒரே வீட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஒன்றாக வாழ்வது மிகச் சாதாரணமாக இருந்த காலகட்டம். ஆஷாபூர்ணா தேவியின் கதைகள் பெரும்பாலும் இம்மத்திய வர்க்கத்துக் குடும்பங்களிலிருந்து முளைப்பவை. வறுமை இக்கதைகளின் பின்னணியில் ஒரு திரையென இருந்தாலும் சிறுகூடத்திற்குள் உலவும் மனிதக் கூட்டத்தின் மனங்கள் ஒன்றுடனொன்று முயங்குவதும் மோதிக்கொள்வதுமே மையமென அமைபவை. அடைபட்ட சுவர்களுக்குள் கணவன் மனைவி மகன் மகள் என இரத்த உறவுகளுக்குள் மிக நுண்மையாக வெளிப்படும் வன்முறைகளும் ஆதிக்கமும் மெல்லிய அடக்குமுறைகளையும் ஒவ்வொன்றாக தொட்டெடுக்கும் ஆஷாபூர்ணா தேவியின் சிறுகதைகளை ஊரடங்குச் சூழலில் இன்று மீட்டெடுத்து வாசிக்கையில் இயல்பில் மனிதன் தனிமையானவன் என்பதும் அவ்வுண்மையை தன்னிடமிருந்து மறைக்கும் பொருட்டே உறவுகளின் பின்னால் தன்னை ஒளித்துக்கொள்கிறான் என்பதையும் ஒரு தரிசனமாக அவர் கண்டடைவதை உணரமுடியும். தனக்கு வீடொன்று இருப்பதினாலேயே அவன் அவ்வீட்டிற்குரியவனாகிவிட முடியுமா என்ற கேள்வி தொடர்ந்து அவரின் சிறுகதைகளில் முன்வைக்கப்படுகிறது. கணநேரத்தில் தனக்கு மிகவும் அண்மையாகத் தோன்றிய பலவருடம் ஊடாடிக் கொண்டாடிய உறவு அந்நியமாக மாறிவிடும் விந்தையை அவர் கதைகளாக எழுதி எழுதிக் கண்டடைந்திருக்கிறார். 

ஆஷாபூர்ணா தேவி அவர் முதல் சிறுகதை 1936ல் வெளிவந்ததில் தொடங்கி கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் தொடர்ந்து படைப்புலகில் கோலோச்சியவர். நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களும் ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகளும் எழுதியவர். சிறுவர்களுக்கான கதைகளுக்குத் தனிக் கணக்குண்டு. கல்கத்தா எனும் மாபெரும் நகரத்தின் சின்னஞ்சிறிய தெருக்களுக்குள் அண்டிக்கொண்டிருக்கும் குடும்பங்களின் தனிப்பட்ட வாழ்வினூடாக மனித மனம் செயல்படும் விதங்களை ஆய்ந்தவர். குடும்பத் தலைவியாக ஒரு அன்னையாக இருந்துகொண்டு இத்தனை வீரியமாகப் படைப்புலகில் செயல்பட முடியுமா என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது. இவர் முகம் வெளியுலகிற்குத் தெரியும் வரையிலும் இவர் புனை பெயரில் எழுதும் ஒரு ஆண் என்றே நம்பப்பட்டது. திரும்பத் திரும்ப குடும்பங்களைப் பற்றிய கதைகளையே எழுதுபவர் என்றும் ‘சமையலறை எழுத்தாளர்’ என்றும் அவர் விமர்சிக்கப்பட்டார். நவீன முற்போக்கு இலக்கியம் வீறுகொண்டெழுந்த காலகட்டத்தில் இவரின் கதைகள் குடும்பம் என்ற பழமைவாதத்தை மீண்டும் நிலைநிறுத்தப் பார்க்கிறது என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டார். இவர் கதைகளில் வரும் பெண்கள் தங்களுக்கு எதிரான அநீதிகளைக் கண்டு கோபம் கொள்பவர்களாகவும் அதற்கு எதிரான குரலெழுப்புபவர்களாகவும் இருந்தாலும் அவர்கள் வீட்டை விட்டு “வெளியேறுவதில்லை” என்று பெண்ணியவாதிகள் இவர் கதைகளை மறுத்தனர். அதே நேரத்தில் இவர் பெண்களின் கதைகளை மட்டுமே எழுதும் ஒரு பெண் எழுத்தாளர் என்ற சுருங்கிய பார்வையும் சிலரிடமிருந்தது. மஹாஸ்வேதா தேவி போன்ற எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை அரசியல் பிரதிநிதித்துவப்படுத்தி போராட்டக் குரல்களாக மாற்றிக் கொண்டிருந்த காலத்தில் ஆஷாபூர்ணாவின் கதைகள் உலகப்பொதுமையான ஒரு நோக்கில் மனங்களை மையப்படுத்திய ஒரு குரல் எங்கோ ஆழத்திலிருந்து ஒலிப்பதைப் போல வெளிப்பட்டுக்கொண்டிருந்தன.

கால இடப் பரிமாணம்

ஆஷாபூர்ணா தேவியின் சிறுகதைகளைக் காலம் – இடம் எனும் பரிமாணங்களின் கண்கொண்டு வாசிக்கையில் அவை உருதிரளும் விதங்களைக் காணமுடிகிறது. அனேக கதைகள் வீட்டிற்குள் நிகழ்கிறதென்பதாலேயே “இடம்” என்பது ஒரு தனிப்பாத்திரமாகவே மாறிவிடுகிறது. சுவர்கள் பன்மடங்கு மேலெழுந்து நிற்பதைப் போலத் தோன்றும். வீடுகளின் விவரிப்புகளில் சுவர்களைத் தவிர வேறெதுவும் பெரியதாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்காது. நாற்காலிகள் மேஜைகள் கட்டில்கள் இவை அத்தனையும் வெறும் ஜடப் பொருட்களாக அவ்வீட்டின் ஊமைச் சாட்சியங்களாக மட்டுமே நிற்கும். அவற்றிலிருக்கும் அழகிய வேலைப்பாடுகளோ அப்பொருட்களின் தரமோ நிறங்களோ கூட இக்கதைகளுக்குப் பொருட்டல்ல. அதனாலேயே வீடு என்பது சுவர்கள் மூடிய ஒரு பெரும் பரப்பாக மாற்றப்பட்டு அதனுள் ஊடாடும் கதைகளின் மேல் மட்டுமே வெளிச்சம் பாய்ச்சப்படுகிறது. “வீடு” எனும் இடம் கால மாற்றங்களுக்கு உட்படாதவையாக எந்நிலத்திற்கும் சார்ந்தவையாக மாறிவிடுகிறது. 1950 களில் கல்கத்தா வீட்டில் நிகழும் கதை கொரொனா ஊரடங்கில் கோவை வீட்டொன்றில் நிகழ்வதற்கான சாத்தியத்தையும் உடனழைத்து வருகிறது.

சில நேரங்களில் மனிதர்கள் புழங்கும் ‘வீடு’ எனும் இடம் அவர்களின் சிறைகளாகவும், அவர்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் எல்லைகளாகவும், மீறிப் பாய நினைக்கும் தடுப்புகளாகவும் அமைந்துவிடுகிறது. மற்றொரு தருணத்தில் முதுகைச் சாய்த்து மூச்சு விடும் சுதந்திர வெளியாகவும், இருப்பின் அர்த்தமாகவும், தனிமனிதனை சமூகமெனும் அபாயத்திலிருந்து தற்காலிகமாக காப்பதாகவும் இருக்கிறது. ஒரே “இடம்” இருவேறு எதிர்நிலைகளாக உருமாறும் விந்தையை ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்கிறது இவரது சிறுகதைகள். ‘தீப்பெட்டி’ எனும் சிறுகதையில் இவ்வெதிர் நிலைகளின் மிகச் சிறப்பான குறியீடாகவும், வீட்டையும் அதில் வாழும் பெண்களின் மனதையும் குறிப்பதாகவும் ‘தீப்பெட்டி’ அமைகிறது. ஆயிரம் இலங்கைகளை எரித்துவிடும் நெருப்பை தனக்குள் வைத்திருந்தாலும் தீப்பெட்டி வீட்டின் ஏதோவொரு மூலையில் பொறுப்பற்று போட்டு வைக்கப்படுகிறது. கட்டுக்குள் அடக்க முடியாத நெருப்பை எந்நேரத்திலும் கொழுந்துவிடச் செய்யும் இப்பெட்டி அதன் உண்மையான தன்மையைக் கொண்டு மதிக்கப்படுவதில்லை. ஆனால் சிறு உரசலில் அது சீறும் போது விதிர்ப்புக்குள்ளாகிறது எதிர் மனங்கள். நேரடியாகவே ஒரு பெண்ணின் உவமையாகத் தீப்பெட்டியைச் சொல்லித் துவங்கும் இச்சிறுகதையில் உரசலும் தீப்பிடித்தலும் அது அணைக்கப்படுவதும் கணநேரத்தில் நடந்துவிடுகிறது. ஆனால் அந்த ஒற்றைத் தீப்பொறி, அவள் கண்களில் அணைக்கப்படாமல் நின்று எரியும் நெருப்பு, பல்லாயிரமாண்டுகளாக அணைக்கப்படாமல் இருக்கும் சீதையின் நெருப்பு எனும் தொன்மத்துடன் தன்னை இணைந்துக் கொள்கிறது. தீப்பெட்டி எனும் இச்சிறு இடத்தினுள் பொதிந்து இருக்கிறது ஆதிகாலத்துத் தொன்மம். 

தன்னிரங்கல் (Neejer Jonno Shok) சிறுகதையில் இரவில் திடீரென தனக்கு முடக்குவாதம் வந்து கைகால்களை அசைக்க முடியாமல் நின்றுவிட்டதாகப் பயந்துவிடும் அபினாஷ் தன் அறுபது ஆண்டுகால வாழ்க்கையைச் சட்டென நினைவுகூர்ந்து கழிவிரக்கம் கொள்கிறார். சின்னஞ்சிறு கட்டிலில் தன் மனைவியுடன் ஒன்றாகத் தூங்கியது அவர் நினைவிற்கு வருகிறது. பேத்திகள் வளர்ந்துவிட்ட பிறகு மனைவி அடுத்த அறைக்கு தன் படுக்கையை மாற்றிக்கொள்கிறாள். இரண்டு அறைகளுக்குமிடையில் ஒரு சில அடிகள்தான் தூரம். அவர்களின் அறைகளைப் பிரிப்பது வெறும் ஒரு திரைச்சீலைதான். ஆனால் அந்த தொலைவு அவரால் எண்ணிப்பார்க்கமுடியாததாக இருக்கிறது. தன்னுடைய மரண ஓலம் அவள் காதுகளுக்கு எட்ட முடியாத தூரத்தில் இருப்பதாக வருத்தம் கொள்கிறார். கற்பனையில் ஒரு மரணத்தை நிகழ்த்திப் பார்க்கிறார். அதுவே அவர் மீது அக்கறையின்றி வாழும் மனைவி மகன்களுக்குத் தான் தரும் சாபம் என்று நினைக்கிறார். அது நிறைவேறாமல் போகுமிடத்தில் மீண்டும் தான் ஒன்றுமற்றவன் என்று நினைத்துக் குமைகிறார். உண்மையில், தன் உடலில் நிகழ்ந்துவிட்டதாக நினைக்கும் முடக்குவாதம் எப்பொழுதோ அவர் மனதில் உண்டாகிவிட்டிருக்கிறது. தனக்கென ஒரு தினசரியை மாற்றம் இல்லாமல் செய்கிறார். மாறிவரும் போக்குகளோடு இணைந்து கொள்ளும் தன் மனைவியைக் குறைசொல்கிறார். முப்பது ஆண்டுகளாக ஒரே மாதிரியான வாழ்வை வாழ்வதே பெருமையெனக் கொள்ளும் இவர், எவரும் உதாசீனப்படுத்தக்கூடிய இடத்தில் தேங்கிவிடுகிறார். அவரது குடும்பம் அவரைச் சுற்றி அமர்ந்து அவருடன் பேச முயலும்போது தனக்கு ஒன்றுமில்லை என்பதை உணர்ந்தவுடன் அதைக் காட்டிக்கொள்ள மறுக்கிறார். கண் இமைகளின் அடியில் தன்னை மறைத்துக்கொள்கிறார். கண் இமை போன்ற அவ்வளவு மெலிதான திரை அவ்விடத்திலிருந்தும் அது நிகழும் காலத்திலிருந்தும் அவரை தொலைதூரத்தில் ஒளிந்துகொள்ளச் செய்கிறது.

சிறை எனும் இச்சிறுவார்த்தையின் அர்த்தம் பெருகிக்கொண்டே செல்லும் தன்மையுடையது. பறவையின் சிறுகூடாக இருந்தாலும் புத்தம்புதிய அரண்மனையாக இருந்தாலும் அதைச் சிறையாக மாற்றிக்கொள்ளும் சாத்தியம் அதில் வாழும் மனிதர்களுக்கு மட்டுமே உரியது. சிறைவாசி (Bondini) சிறுகதையில் வரும் சாருபாலா சிறையிலிருப்பதையே மறந்து வாழும் ஒரு சிறைவாசி என்று அவளின் மகன் நினைக்கிறான். எந்நேரமும் கஞ்சா போதையிலும் குடிபோதையிலும் இருக்கும் கணவனுடன் போராடுவதுதான் தன் தினசரி வாழ்வு என்பதை ஏற்றுக்கொண்டவளாகிறாள் அவள். கதையின் தொடக்கத்தில் மனித இனத்தை இவ்வளவு சிறிய அளவினராகப் படைத்ததிற்காகக் கடவுளுக்கு நன்றி சொல்கிறாள். இந்த உயரத்தில் இருப்பதினால்தான் அவளும் அவள் கணவனும் இருபத்தி மூன்று வயதாகும் தன் மகனுடன் இந்த வீட்டில் வாழமுடிகிறது. மிகச் சரியாக அவர்கள் அளவிற்கே உரிய மெத்தையைத்தான் அங்கே போடமுடியும். இவ்வளவு சிறிய இடத்தில் வாழவேண்டிய சூழலை ஏற்படுத்திக்கொடுத்த கடவுளைச் சபிக்காமல் தன்னை இதற்கேற்றார் போல் சிறியதாகப் படைத்த ஆண்டவனுக்கு நன்றி கூறும் அபத்தச்சுவைகள் ஆஷாபூர்ணா தேவியின் சிறுகதைகளுக்குரிய தனிச் சிறப்பு. தன் குடும்பத்தின் சீரழிவிற்குக் காரணமான அப்பாவை எதிர்த்து குரல் எழுப்பி அவரை வீட்டு விட்டு வெளியேறச் சொல்கிறான் மகன். தன் அம்மாவைத் தனியாக வைத்துக் காப்பாற்றும் நம்பிக்கையுண்டு அவனுக்கு. ஆனால் பெரியவர்களை மதிக்கத் தெரியாத ஒருவன் இருக்கும் இவ்வீட்டில் என்னாலும் இருக்க முடியாது என்று கணவனுடன் வெளியேறும் சாருபாலாவின் முடிவு என்றும் அவிழ்க்கமுடியா மனிதப் புதிர்களில் ஒன்று. இளவரசியை சிறைபிடித்து வைத்த அரக்கன்  அவளின் சுவடென்று எதுவுமே மிஞ்சாமல் தின்றுவிட்டானெனத் தோன்றுகிறது மகனுக்கு. சிறைவாசி இல்லாவிட்டாலும் சிறை சிறையாகத்தான் மிஞ்சுமா? சிறைவாசி இருப்பதனால்தான் அது சிறையென்றே மாறுகிறதா? எனில், சிறையென்பது சுவர்களால் ஆனது இல்லையா? இதற்கு நேரெதிராக ‘பறவை மாளிகை’ (Ponkhi Mahal) எனும் சிறுகதையில் நூறாண்டுகளாக கடைப்பிடித்து வரும் ஒரு மரபிற்கு அடிமையாகிவிடக் கூடாது என்று வைராக்கியத்தை வளர்த்துக் கொள்கிறாள் ஷோரோனா. ஆஷாபூர்ணா தேவியின் இச்சிறுகதையின் களம் ஒரு அரண்மனை. கல்கத்தாவின் பெட்டி வீடுகளிலிருந்து அவர் வெளியே வந்து ஜமீன்தார்களின் மரபுகளை நோக்குகிறார். வீடுகள் அதன் அளவினால் மட்டுமல்ல அதற்கப்பாற்பட்டு அவற்றின் மீறமுடியா வழக்கங்களினாலும் கூட மக்களை இறுகப்பிடித்து வைத்திருக்கிறது. பேரன் ஒருவன் பிறந்துவிட்டால் ராணியாகத் தான் வாழ்ந்த மாளிகையை விட்டு வெளியேறும் ஒரு வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது, ஷோரோனாவின் ஜமீன் குடும்பத்தில். ஜமீன்தார் முறைக்கு எதிரான கலகங்கள் தோன்றத் தொடங்கியிருந்த காலகட்டம். அரண்மனையை விட்டு வெளியேறி வாழ்வது சாத்தியமானதல்ல. கணவனிடமிருந்து விலகியிருக்க வேண்டும் என்ற மரபிற்கு அவள் தயாராகவே இருந்தாலும் இம்மாளிகையை விட்டு அவள் போவதாக இல்லை. மரபை உடைக்கத் தயாராகிறாள். பறவை மஹால் என்று தலைப்பிலேயே குறீயீட்டு அர்த்தத்தை உணர்த்தும் ஆசிரியர் தேவி, ஷோரோனா தன் முடிவை மாற்றிக் கொள்ளும் ஒரு தருணத்தை மிக நுண்மையாகச் சென்று தொடுகிறார்.

இப்படி மனிதர்கள் அடுத்த அடியெடுத்து வைப்பதற்குக் காரணிகளாக இருக்கும் பல முடிவுகள் பெரும்பாலும் எந்தத் தர்க்கத்தையும் கடைப்பிடிப்பதில்லை. அதனால்தான் எந்த அலங்காரங்களுமற்ற, மனிதர்களின் மீது மட்டுமே தன் கவனத்தைக் குவிக்கும் ஆஷாபூர்ணா தேவியின் சிறுகதைகள் கால எல்லைகளுக்கு அப்பால் சிந்தனையைச் சீண்டிக்கொண்டேயிருக்கிறது. ‘பிரம்மாஸ்திரம்’ மற்றும் ‘வாழ்க்கைச் சட்டகம்’ (Kathamo) என்ற இரண்டு சிறுகதைகளிலும் ஒரு ஆணின் விஷக் கூர்மை கொண்ட சிந்தனை செயல்படும் முறையை நுணுகி ஆராய்கிறது. வேலையின்றி தவிக்கும் கணவன் தன் மனைவியைத் தற்போது பெரும் தொழிலதிபராக இருக்கும் அவள் முன்னால் காதலனிடம் தூதுபோகச் சொல்கிறான். கடிகாரத்தின் சிறு முள்ளைத் திருப்பி வைப்பதன் மூலமாக இரவைப் பகலாக்கிவிட முடியும் என்று எண்ணுவதைப் போல என்றோ காலத்தில் மறைந்துவிட்ட உறவை லேசாகத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள முயல்கிறான். கணவனுக்காக மட்டுமல்ல தன் குடும்பத்தின் வறுமையைப் போக்கத் தான் எய்தும் பிரம்மாஸ்திரம் என்றும் இதைக் குறிப்பிடுகிறான். தீர்க்கமாக மறுக்கும் மனைவியை வற்புறுத்துகிறான். கோபமாகக் கத்துகிறான். கெஞ்சுகிறான். கடைசியாக ஒரு மனைவி கணவனின் விருப்பத்தை நிறைவேற்றாமல் இருப்பது சரியல்ல என்று நாடகமாடி அவளை ஒப்புக்கொள்ளச் செய்கிறான். ஆனால் தான் எய்த அஸ்திரம் தன்னை நோக்கித் திரும்பும் சாத்தியத்தை அவன் நினைத்துப் பார்க்கவில்லை. அவ்வஸ்திரம் இருமுனைகளாக அவனை நோக்கித் திரும்புகிறது. அவள் சென்ற வேகத்திலேயே திரும்பி வந்து வேலை கிடைத்துவிட்டதாகச் சொல்கிறாள். முதலில் மகிழும் அவன் பிறகு அவ்வெற்றி கூர்மையாக வந்து தன்னைத் தாக்குவதை நிதானமாக உணர்கிறான். உள்ளுக்குள் இவளைப் பார்த்ததும் முன்னால் தோழன் வெறுப்பானென்றும் வேலை இல்லையென்று மறுப்பானென்றும் இவன் மனம் மௌனமாக எண்ணியிருந்தது. ஆனால், தோழனோ மகிழ்ந்து இவள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டான் என்பது இதயத்தின் ஆழத்தில் தைக்கப்பட்ட அம்பு எனப் புலப்படுகிறது. அவன் நிதானமடைவதற்குள் அவள் அடுத்த தாக்குதலை நிகழ்த்திவிடுகிறாள். அவள் தோழன் வேலை கொடுத்தது கணவனுக்கு இல்லை தனக்குத்தான் என்று சொல்கிறாள். குடும்பத்தின் வறுமையைப் போக்குவது மனைவியின் கடமையும்தான் அதைத் தானே ஏற்றுக்கொள்வதாகச் சொல்லி அங்கிருந்து சென்றுவிடுகிறாள். உறவுகளின் பெயரால் நிகழ்த்தப்படும் மெலிதான வன்முறைகள் தன்னை நோக்கியே திரும்பிவரும்போது அதை எதிர்கொள்வது அவ்வளவு சுலபமல்ல. ‘கதாமோ’ என்ற சிறுகதையில் கேஷவ் ராய் அப்பாவின் சொத்திற்குப் பங்காளியாக வந்து நிற்கும் சிறுவனான தன் தம்பியைக் கொல்லத் துணிந்துவிடுகிறான். அப்பாவின் இரண்டாவது மனைவிக்கு தன் மகன் வயதில் ஒரு மகன். அப்பா இறந்துவிட அவனின் இளவயது சித்தி சொத்தை இரண்டாகப் பிரித்து பங்கு கேட்கிறாள். நீதிமன்றம் செல்லும் கேஷவ் ராய் இந்த வழக்கு தனக்குச் சாதகமாக மாறாது என்பதை உணர்ந்துகொள்கிறார். திரும்பி வரும் வழியில் குளக்கரையில் தன் மகன் கோபால் விளையாடிக்கொண்டிருப்பதைக் கண்டதும் கோபம் கொள்கிறார். யாருமில்லா இவ்விடத்தில் இவன் இருப்பது ஏன் என்று நினைக்கும்போதே அது தன் மகன் கோபால் அல்ல அவன் அப்பாவின் இரண்டாவது மனைவியின் மகன் மாணிக் என்று தெரிகிறது. இவ்விடத்தில் ஆஷாபூர்ணா தேவி ஒரு ஆண் மனதின் ஆழத்திலிருக்கும் வாரிசு மரபின் எப்போதும் விழித்திருக்கும் ஒரு கூர்மையைக் கண்டுவிடுகிறார். ஏதோவொருவகையில் அங்கு விளையாடும் அச்சிறுவன் தன் அப்பாவின் நீட்சி என்பது அவன் அகக்கண்ணுக்கு ஒரு மாயத்தோற்றமாகவேனும் புலப்படுகிறது. சற்று சுதாரித்து, யாரும் இல்லாத இடத்தில் இருக்கும் இவனை ஆற்றில் தள்ளிக் கொன்றுவிட்டால் தன் வீட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டியிருக்காது என்று எண்ணுகிறான். குளத்தை நெருங்கிச் செல்லும் அவனால் அக்காரியத்தைச் செய்ய முடியாது என்பது அவனுக்கே உறுதியாகத் தெரியும்.    

இளைப்பாறும் இடமாக, ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக மனம் குடிகொள்ளும் இடமே இல்லம் என்றாலும் அங்கு மனிதன் ஆடும் விளையாட்டுகளுக்கும் குறைவிருப்பதில்லை. மகிழ்வும் துயரமும் எந்தப் பூச்சும் இல்லாமல் வெளிப்படும் இடமே அது ஆயினும் ஒரு சிறு ஒப்பனையை மனம் எவ்வாறேனும் விரும்பி ஏற்றுக்கொள்கிறது. துயரம் (Shok) எனும் சிறுகதையில் கணவனும் மனைவியும் ஒரு துயரத்தின் பின்னணியில் ஆடும் சிறு ஆட்டம், பகிர்ந்துகொள்வதற்கு யாரும் இல்லாத நேரங்களில் வீடு சிறு இடைநேரத்திற்கு அதன் அர்த்தத்தை இழந்துவிடுகிறது என்பதைச் சுவாரசியமாகக் காட்சிப்படுத்துகிறார் ஆஷாபூர்ணா. ஒரு மர்மக் கதைக்கு இணையான விவரிப்புகள் கொண்ட இக்கதையில் மனைவியின் அம்மா இறந்துபோன செய்தி தபால் அட்டையில் வருகிறது. அது தபால் அட்டையில் வரவேண்டிய செய்தியே அல்ல, முதலில். இவ்வளவு தாமதமாக வந்திருக்கும் இச்செய்தியை மனைவியிடம் சொன்னால் அவள் உருக்குலைந்து போவாள். ஆனால் பிரச்சினை அது மட்டுமல்ல, ஊருக்கு உடனே கிளம்ப வேண்டியிருக்கும். மாதத்தின் முதல் நாள் விடுப்பு எடுத்தால் முதல் ஏழு நாட்களுக்குச் சம்பளம் கிடையாது என்ற விசித்திர விதிகள் உண்டு அவரின் அலுவலகத்தில். துக்கச் செய்தியைச் சொல்லி அவளின் மனதைத் தேற்றிய பிறகு அலுவலகம் செல்வதென்றால் தாமதம் ஆகிவிடும். அதனால் தபால் அட்டையை அவளே கண்டுகொள்ளட்டும் என்று வைத்துவிட்டுச் சென்றுவிடுகிறார். மனைவியின் கண்களில் இது பட்டதும் அவள் நொறுங்கிப் போகிறாள். அவளின் அதீத நேசத்திற்குரிய அம்மாதான். கதறியழும் துக்கம் மேலெழுகிறது, ஆனால் தன் துயரத்திற்குச் சாட்சியொன்று இல்லையெனில் அதன் உண்மையான கனம் எப்படி வெளிப்படும். தன் துயரத்தைத் தாங்குவதற்கு உடன் ஒருவர் இல்லையெனில் வீடென்று ஒன்று இருப்பது எதற்கு. அவள் கடிதத்தை மறைத்து விடுகிறாள். கணவன் வந்து எடுத்துக் கொடுக்கட்டும் என்று. இருவரும் சேர்ந்து ஒரு சிறு நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். நேரத்தைச் சற்று ஒத்திப்போடுகிறார்கள். அப்பகலிடமிருந்து ஒரு துக்கச்செய்தியை மறைத்து அந்நாளை என்றைக்கும் போன்ற ஒரு சாதாரண நாளாக மாற்ற முயல்கிறார்கள். இச்சிறிய வீட்டிற்குள் நின்றபடி சுற்றிச் சுழலும் அத்தனையையும் அவர்களுக்கு மட்டும் அர்த்தமற்றதாக மாற்றிவிட நினைக்கிறார்கள்.

மூச்சு முட்டும் இடங்களில் கூட தங்களை நெருக்கி உள்ளே தள்ளி இப்பயணத்தின் முடிவைப் பார்த்துவிடத் துடிப்பதற்குக் குறியீடாக ராஜோனி அவனின் பை வெடித்துவிடும் அளவிற்குப் பொருட்களை உந்தித் தள்ளி ஜிப்பை அழுத்தி மூடுவதாக ‘ஆகாஷ்மதி’ கதை துவங்குகிறது. அஸ்ஸாமிலிருந்து வருடத்திற்கு பத்து நாள் மட்டுமே தன் மனைவி மக்களைப் பார்க்க வங்காள கிராமத்திற்குச் சென்று வருபவன் அவன். நடுவயதைத் தாண்டிய பிறகும் வேலை பார்த்து வீட்டிற்குப் பணம் அனுப்பி வாழ்க்கையைக் கடத்திக்கொண்டிருக்கிறான். அஸ்ஸாம் காடுகளிலிருந்து அவனுக்குப் பத்து நாள் மட்டுமே ஓய்வு. மகன்கள் வேலைக்குச் செல்லத் துவங்கிவிட்டதால் ராஜோனி திரும்ப வேலைக்குச் செல்ல வேண்டியதில்லை இங்கேயே இருந்துவிடவேண்டும் என்று குடும்பத்தினர் கிராமத்தினர் அவனிடம் வேண்டுகிறார்கள். இது அவனுக்குப் பெருமகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இனி யாருக்கும் அடிமைப்பட்டு இருக்க வேண்டியதில்லை. எந்த வேலையையும் கூடச் செய்ய வேண்டியதில்லை. சொந்த கிராமத்தினரால் மதிக்கப்படும் ஒரு பெரியவராக வலம் வரலாம். ரயிலில், வேலையிலிருந்து விலகுவதாக எழுதிய கடிதத்தைக் கொடுத்துவிடும் பொழுதுதான் ராஜோனி தனக்குள் ஏதோ கலக்கமூட்டுவதாக உணர்கிறான். இனி இங்கேயே, தன் வீட்டிலேயே இருக்கவேண்டுமென்ற எண்ணம் இப்போது நிம்மதியிழக்கச் செய்வதாக இருக்கிறது. பதற்றம் அடையும் அவன், திடீரென அஸ்ஸாமிற்கு கிளம்பிச் செல்வதாக முடிவெடுக்கிறான். தான் நேரிலேயே சென்று வேலையை விடும் தகவலைச் சொல்லிவிட்டுவருகிறேன் என்பதை ஒரு காரணமாகச் சொல்கிறான். அடைக்க முடியா அந்தப் பையில் மீண்டும் துணிகளையும் பொருட்களையும் அடைத்து ஜிப்பை அரைகுறையாக அழுத்தி மூடி அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிடுகிறான். பத்து நாட்கள் வீட்டிற்கு வருவதற்காக வருடம் முழுதும் ஏங்கும் அவன் இனி வீட்டிலிருந்து வெளியேற வழியில்லை என்பது அவனை வேறொருவனாக மாற்றிவிடுகிறது. அப்புதிய வேடத்திற்கு அவன் உண்மையிலேயே தயாராக இல்லை. என்றுமே பழகிக்கொள்ள முடியாத அஸ்ஸாம் காட்டையே அவன் தேர்வு செய்கிறான்.  

ஏதோவொரு வகையில் அடைபட்ட வீட்டிற்குள் மனிதர்கள் விலங்குகளைப் போலத்தான் உழல்கிறார்கள். பல்வேறு விதமான விலங்குப் பண்புகள்கூட ஒருவருக்கு இருக்கலாம். காட்டைப் போல மாயத்தோற்றம் கொண்டு விரிந்த பரப்பாக ஒரு வீடு உணரப்படும்போது அங்கு எந்தச் சமரும் இல்லாமல் ஒருவர் மற்றொருவரிடத்தில் அன்பு பாவிக்கிறார்கள். ஒரு சிறு சொல்லில், மெல்லசைவில் அக்காட்டின் வெளி எனும் மாயம் அழிந்து வெறும் நான்கு சுவர்கள்தான் என்று உணர்ந்து மிரளும்போது கூண்டில் அடைபட்ட விலங்கினைப் போலச் சீறிப் பாயக் காத்திருக்கிறார்கள். உடலும் உணர்வும் மடங்கி ஒரு சிறு பரப்பிற்குள் அடைபடுகிறது. அதன் விளைவுகளை எந்நேரமும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதுதான் உறவுகளைச் சிதைவுறாமல் காப்பதற்கு உதவுகிறது. 


தன் படைப்பின் குறுகிய பரப்பின் மீதான விமர்சனங்களை மிக எளிதாகக் கடந்துவிடுகிறார் ஆஷாபூர்ணா தேவி. தான் பார்த்ததை மட்டுமே எழுதியதாகக் கூறுகிறார். தனக்கு மிகப் பரிச்சயமான வாழ்க்கையிலிருந்தே கதைகளை அள்ளி அள்ளி எடுத்திருக்கிறார். வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் பெண்களுக்கு அனுமதியற்ற ஒரு சூழலில் பிறந்தவர். அம்மாவின் வாசிப்பு பழக்கம் அவரை தொற்றிக் கொண்டது. திருமணத்திற்குப் பின்பு கணவனின் ஆதரவினாலும் பெரிய வீட்டிற்குக் குடிபெயர்ந்து அங்குத் தனிமையில் அமர்ந்து வாசிக்கவும் எழுதவும் இடம் கிடைத்ததாலும் இடைவிடாது அவரால் இலக்கியத்தில் ஈடுபடமுடிந்தது. வீடும் இலக்கியமும் மட்டுமே அவரின் விருப்பத்திற்குரியவனாக இருந்திருக்கிறது. இரண்டிலுமே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவராக வாழ்ந்தார்.  

ஆஷாபூர்ணா தேவியின் படைப்புகளைப் பெண்ணியக் கதைகளாகவோ அல்லது குடும்பக் கதைகளாகவோ மட்டும் பார்ப்பது அவரது படைப்புத் தன்மையை சிற்றளவும் புரிந்துகொள்ளப்படாத பார்வையாகவே இருக்க முடியும். அவரது எண்ணற்ற சிறுகதைகள் மனித மனங்களின் ஆழம் சென்று அவனின் தன்னுணர்வற்ற நிலையுடன் விசாரணை செய்கிறது. அடிப்படையில் உறவுகள் செயல்படும் விதத்தைக் கூர்தீட்டிப் பார்க்கிறது. சொந்த அனுபவத்தினாலும் அவரது தன் இயல்பினாலும் அவர் கதைகள் அடைபட்ட ஒரு சிறு இடத்திற்குள் நின்றபடி காலத்தை அண்ணாந்து பார்க்கிறது. இங்கிருந்து ஒரு நூலை எறிந்து பல்லாண்டுகளாக வாழும் ஒரு இனத்தின் சிடுக்குகளை விடுவிக்க முயல்கிறது. நான்கு சுவர் கொண்ட ஒரு வீட்டை மனித ஆழ்மனதின் உருவகமாக மாற்றுகிறது. ஒரு வீடு உயிர் கொண்ட மனித மனமாக அன்பிற்காக ஏங்குகிறது, பகிர்தலுக்காகக் காத்திருக்கிறது, கண நேரத்தில் கண்களை மூடி உக்கிரமாக வெறுப்பைக் கக்குகிறது. உடல்கள் தோன்றி மறைந்தாலும் வாழ்ந்த மனங்களின் சாட்சியாகச் சிதைவுறும் வரையில் வீடுகள் நின்றிருக்கும். காட்டை விட்டு வெளியேறிய மனிதன் தன் வாழ்வின் பெரும்பகுதியை ஒரு கூரையின் கீழ்தான் கழிக்கிறான். அவனைச் சுற்றியிருக்கும் சுவர்கள் அவன் எண்ணங்களை மாற்றியமைக்க வல்லது. ஏதோவொரு வகையில் அச்சுவர்கள் மனிதர்களிடம் பேசத் துவங்கிவிடுகின்றன. மனிதர்கள் வெளியேறுவதும் திரும்பி வருவதையும் அச்சுவர்களே தீர்மானித்துவிடுகின்றன. ஒருவனிடத்தினுள்ளிருந்து மிருகத்தை வெளிக்கொணர்ந்து வருபவை இவையே என்றாலும், கட்டுக்கடங்காத அம்மிருகத்தை ஆசுவாசப்படுத்தி மீண்டும் உள்ளே பூட்டி வைப்பதற்கும் இச்சுவர்களை விட்டால் காடு துறந்த மனிதனுக்கு வேறு போக்கிடமில்லை! 

தொடர்புள்ள பதிவுகள்:

5 Replies to “நான்கு சுவர்களுக்குள் விரியும் அகாலம்”

  1. ஆஷாபூர்ணாதேவி தலையணை மீது கைவைத்து அமர்ந்து எழுதும் படமும் நூல் அனுபவம் எழுதியிருக்கும் விதமும் ஒரு புதிய உலகிற்குள் அழைத்துச் செல்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.