பனி நிலமும், தனித்த பறவைகளும் – வேணு தயாநிதி கவிதைகள்

வேணு கவிதைகளை அகம் புறம் என இரண்டு வகைமைகளிலும் எழுதியிருக்கிறார். புறம் நோக்கிய கவிதைகள் இயற்கை, மனிதர்கள், நகரம், கோவில்கள் என்றும் அகம் சார்ந்த கவிதைகள் வாழ்வின் பொருள், தனிமை, பிரிவு, மரணம் ஆகியவற்றை சுட்டியும் அமைந்துள்ளன. ஒப்புநோக்க புறம் சார்ந்த கவிதைகளே தொகுப்பில் மிகுதியாக உள்ளன. வேணு காட்சிகளையும் நுண் தருணங்களையும் கவிதைகளில் மிக விரிவாகவே பதிவு செய்திருக்கிறார்.

மூன்று கவிதைகள்

அவர்
கடந்து செல்லும் பாதையில்
எட்டுத் திசைகள்
பன்னிரண்டு ராசிகள்
மற்றும் பஞ்ச பூதங்கள்
துவைத்த ஆடைகளாய்
தொங்குகின்றன
கிளைகளில்.

திரை விலகிய அறையின் அதிசயங்கள்

கண்ணாடி இழைகளின் நெடுஞ்சாலைகளில்
முட்டி மோதிக்கொண்டு
முடிவற்று அலைந்த
பதில் வரப்பெறாத
அஞ்சல்களின் சமிக்ஞைகள்,
உருவம் பெற்று
பேச ஆரம்பித்து விட்டன
ஒலிபெருக்கியில்.

கை தவறிய மூக்குக் கண்ணாடியின் ஞானோபதேசம்

கார்த்திகையின் பெருக்கில்
தாவிக் குதிக்கும்
கெண்டையாக,
குளத்து நீரில்
நழுவிச் செல்லும்
அர்த்தங்கள்.

வேணு தயாநிதி கவிதைகள்

பனி பூத்து 
பனி கொழித்து
உப்பளம் போல் 
நிறைந்து விட்ட
நடைபாதையை தாண்டி
சாலையின் ஓரத்தில்
தியானித்து நிற்கும், 
பிடுங்கி 
தலைகீழாய் நட்டது போல் 
இலையின்றி நிற்கும் 
பிர்ச் மரம்.