ஒரு ஞானி தானே ஆத்மா என்று உணர்ந்திருக்கிறான். எனவே ஆத்மாவுக்கு கிருஷ்ணர் குறிப்பிடும் அத்தனை இலக்கணங்களும் அந்த ஞானிக்கே சென்று விடுகின்றன. ஒரு ஞானி ஒருபோதும் தன்னை ஞானி என்று உணர்வதில்லை. அவன் எப்போதும் தன்னை ஆத்மா என்றே உணர்கிறான். ஆத்மா எந்தச் செயலையும் செய்யாதது என்று அவன் அறிந்திருப்பதால் அவன் தனது எல்லாச் செயல்களை தன்னுடைய அறிவால் துறந்து விடுகிறான். எனவே அவன் சர்வகர்ம சன்யாசி (எல்லாச் செயல்களையும் துறந்தவன்) என்றழைக்கப்படுகிறான். ஆனால் அவன் செய்து கொண்டிருக்கும் எந்தச் செயலையும் அவன் செய்யாமல் விட்டு விடுவதில்லை.
