புத்தக அறிவிப்பு – மாயக் குரல்

This entry is part 56 of 72 in the series நூறு நூல்கள்

என்னுடைய சிறு கதைகள் தொகுப்பு ”  மாயக்குரல்”  என்ற பெயரில் வெளிவந்திருப்பதை  உங்களுக்குத் தெரிவிப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் தொகுதியில் பெரும்பாலான கதைகள் சொல்வனத்தில் வெளியிடப் பட்டவை

வரம்

நல்லதுதான், ஒரே முதலீட்டை நம்பி இருக்க முடியாது, இன்றைக்கு என்ன ஆயிற்று என்று சொல்லுங்கள், தேவைப்பட்டால், இன்னொன்று பார்க்கலாம், என்னுடைய நீண்ட கால நண்பன் தான்“ என்று இன்னொரு பெயரை உதிர்த்தார். நானும் கேள்விப் பட்டிருக்கிறேன்.  ஆனால் எனக்கு பழக்கம் இல்லை, எழுதிக் கொண்டேன். ஒரு வேளை அவருக்கு அதில் ஏதாவது கமிஷன் கிடைக்குமோ என்னவோ என்ற ஒரு சந்தேகம் இருந்தது.

பரிசு

பனிச் சிறுத்தைகளை படம் எடுப்பது மிகக் கடினம். முதலில் கண்களுக்கே எளிதாகத் தென்படாது. அவற்றுக்கு “ மலைப் பேய் “ என்றே பட்டப் பெயர் உண்டு. அவை பனி படர்ந்த மலைகளில் சுமார் ஒன்பதாயிரம் முதல் பதினெட்டாடிரம் அடி உயரத்தில் வசிப்பவை. குளிர் காலத்தில் மலையில் சற்று கீழே இறங்கி வரும். உருவத்தில் புலிகளை விட சிறியவை. உடலில் இருக்கும் சாம்பல்  நிறத் திட்டுகள், பனியிலும் பாறைகளின் பின்னணியிலும் அவை இருப்பதையே மறைத்து விடும். இந்தியாவில் இமைய மலைத் தொடரில் சுமார் நானூறு பனிச் சிறுத்தைகள் இருப்பதாகத் தகவல். நிறைய புகைப் பட நிபுணர்கள் அவைகளைத் தேடித்தேடிப் படம் எடுப்பதற்கு அவை எளிதில் காணக் கிடைக்காததே முக்கிய காரணம்.

ரசம்

முகத்தில் ஒரு புன்னகை வரவழைத்துக்கொண்டு அரைக் கண்ணை மூடிக்கொண்டு ரசிப்பது போல தூங்க முயற்சி செய்தேன். ஆனால் மூக்கை மூட முடியவில்லை. வடைதான், அதுவும் இங்கே கர்னாடகாவில் அம்போடே என்று வெளியே மொறுமொறுப்பாகவும் உள்ளே மெதுவாகவும் இருக்கும் அருமையான வடை செய்வார்கள்.

விடை

மலையில் ஒரு கருத்த சிகரம் மேகங்களுக்கு நடுவே உயர்ந்து மறைந்திருந்தது. அந்தச் சிகரத்துக்கு அருகில் மேகங்கள் சூழ்ந்திருக்க மழை பெய்துகொண்டு இருந்தது. “ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து..” சத்யா பாடினாள். மொபைலில் படம் எடுக்கக் கை தானாகச் சென்றது. ஃபோன் இல்லை என்பது மறுபடியும் நினைவுக்கு வந்தது. கிளம்பும்போதே வாங்கி வைத்துக்கொண்டு விட்டார்கள்.

அறிவு

வார்டில் நர்சுக்கு உதவி செய்ய ரம்பா என்று பெயரிட்டு ரோபோவை அமர்த்தினோம். அதுவும் ஒரே வாரத்தில் நிறைய வேலைகளை கற்றுக் கொண்டது. தொடாமலேயே நெற்றியில் டெம்பரேசர் பார்த்தது. எழுதி வைத்த சார்டைப் பார்த்து வேளைக்கு மருந்து எடுத்துக் கொடுத்தது.

தரிசனம்

உள்ளே சின்ன அறையில் வழக்கத்துக்கு அதிகமாக ஆட்கள் கூட்டமாகத் தென்பட்டார்கள். ஓரமாக தரையில் படுக்கை, ஜூர வேகத்தில் உடம்பு அதிர ,அரைக் கண்ணைத் திறந்தபடி ராமானுஜன் படுத்திருந்தான். மூச்சு சிரமப் பட்டு வந்தது. பக்கத்தில் கைக்கெட்டும் இடத்தில் சில பேப்பர்கள். இரண்டு நாள் முன்பு கூட ஏதோ எழுதிக் கொண்டிருந்தாக லட்சுமி சொன்னாள். அருகிலேயே ஜானகி தரையில் உட்கார்ந்திருந்தாள். அந்தப் பக்கம் தோல் பெட்டி இருந்தது. ராமசந்திரராவ் நின்றிருந்தார். ராமானுஜனின் தம்பிகள் இரண்டுபேர், கூடவே இன்னும் இரண்டு பேர் இருந்தார்கள். ராவ்தான் வருகையைக் கண்டு லேசாக தலையை அசைத்தார். மௌனம், ராமானுஜனின் கனத்த மூச்சைத்தவிர.

செந்திலின் சங்கீதம்

அதுவரை ஒரே ராகத்தில் வாசித்து வந்து விட்டு, இந்த கீதம் மாறுதலாக, மிக அழகாகத் தோன்றியது. தொடக்கத்தில் எளிதாக இருந்தது. ஆனால் ஒரு வரியில் தாவுவது போல மேலே போகும் இடம் வரவில்லை. பல முறை முயன்ற பிறகும் கை தடுக்கியது. ஆரம்பித்ததிலிருந்து ஒரு நாள் கூட இந்த மாதிரி ஆனதில்லை. செந்திலுக்கு கோபம் வந்தது. மீனாட்சி மாமிதான், “நான் முதல்லயே சொன்னேனே, பொறுமை வேணும், வீட்டுக்குப் போய் நூறுதரம் வாசி, தானாக வரும்,”என்றார்.

மொழி

எந்த வெளி நாட்டுக்குப் போனாலும் உடனே, எங்கே சரவணபவன் என்று தேட மாட்டேன். சைவமாகவே வளர்ந்திருந்தாலும், இப்போது எல்லா உணவு வகைகளையும் விரும்பிச் சாப்பிடுவேன். ஸ்வீடனில் ஏறக்குறைய அழுகிய மீனையும், பாரிசில் தவளைக் கால்களையும், ஜெர்மனியில் பன்றி மாமிச ஸாசேஜை உப்பு கூட இல்லாத மசித்த உருளைக் கிழங்குடன் ருசித்து சாப்பிட்டிருக்கிறேன்