விலைமகளிர் தெருவையும் அவன் முதலில் உடல் தேவையை நிறைவேற்றும் இடமாகத்தான் அணுகுகிறான். ஆனால் குறத்தி முடுக்கு தெருவில் உள்ள தங்கம் என்ற இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தின் உடனான உறவு அந்தத் தன்னம்பிக்கையை மெதுவாக உடைக்கத் தொடங்குகிறது. அவள் மற்ற ஆண்களுடன் இருப்பதைப் பார்க்கும்போது அவனுக்குள் ஏற்படும் சங்கடமும் பொறாமையும், உரிமை உணர்வும், “நான் உணர்ச்சியற்றவன்” என்ற அவனுடைய சுயபிம்பத்துக்கு எதிராக நிற்கின்றன. அவளுக்காகப் பணம் செலவழிப்பது, அவளுடைய வீட்டின் உள்தோற்றத்தை மாற்றுவது, அவளை மணக்க வேண்டும் என்ற ஆசை, அவள் இல்லாதபோது ஏற்படும் வெறுமை போன்ற அனைத்தும் அவன் முன்பு மறுத்திருந்த “காதல்” என்ற உணர்வின் வேறு வடிவங்களாகத் திரும்புகின்றன.
