“இப்பப் பாரு,” அவர் சொன்னார், “நாம புதரை அடுக்கற கலையைப் பயில்கிறோம். அது ஒரு அடிப்படையான கலை. தவிர்க்கவியலாத கலையும் கூட. உன்னோட ‘அருங்கலைகள்,’ உன்னோட இசை, இலக்கியம் எல்லாத்தயும் பத்தி எனக்குத் தெரியும்- நானும் படிக்கப் போயிருக்கேன் – உன் கிட்ட நான் சொல்றேன், அதெல்லாம் அவசியம் இல்லை, விருப்பப் பாடங்கள். புதரை அடுக்கற கலை இருக்கே, அது விருப்பப் பாடமில்லை.”
“நீங்க ஸிம்ஃபனி இசையைப் பத்திச் சொல்றீங்களா?” ஆஸ்டின் நிறுத்தி இருந்தான், அவனுக்கு ஸிம்ஃபனி இசை என்பது எத்தனை முக்கியம் என்பதைக் குறித்துக் காட்டுவது போல அசைவற்று நின்றான்.
“ஸிம்ஃபனிகளா! பாழாப் போச்சுது, ஆமாம்!” ஆன்டி சொன்னார். “ஸிம்ஃபனிகளை எழுதவும், அதை எல்லாம் நடத்தவும், இசைக்கவும் தெரிஞ்ச ஒரு சமூகத்தை எடுத்துக்க, அதுக்குப் பாங்கா ஒரு சுமை புதரை அடுக்கத் தெரியல்லைன்னா, அவங்களுக்கு ஒரு மண்ணும் கெடைக்கப் போகிறதில்லை.”