கவிதை

காத்திருக்கும் தனியறை

thaniyarai
பூட்டிய கதவுக்குப் பின்னால்
காத்திருக்கிறது
பிசுபிசுக்கும்
தனிமை திரவம்
கதவின் தொப்புல் முடிச்சில்
வெறித்தபடி தொங்கும்
பூட்டின் கண்வழி
சொட்டுச்சொட்டாய்
ஊறி வடிகிறது
உள்ளிருக்கும் திரவம்
சாவித்துவாரத்தில்
கைகள் தழுவி
நடுங்கும் பொழுதில்
கதவைத் துளைத்துகொண்டு
கட்டிலில்போய் விழுகிறது
எனக்கு முன்பே மனது
நீந்திக்கடந்திட முடியா
நெடுந்தொலைவில் நிற்கின்றன
இந்த அறையின் சுவர்கள்
நினைவில் இருக்கும் வீடோ
நனைந்த அப்பளமாய்
எங்கோ கரை ஒதுங்கியிருக்க வேண்டும்
அலையும் நுரையும்
கலைத்துவிடாத
ஆழத்தில் நிற்கும்
இமைகள் இல்லாத
என் அறையின் சுவர்கள்
உறங்குவதுமில்லை
உறங்க அனுமதிப்பதுமில்லை
திறந்த ஜன்னல்கள் எதிலும்
துளியும் வெளிச்சிந்தாத
இந்த பழந்திரவத்தில்
மதுவின் நெடி வீசுகிறது
இருள்கவிழும் நேரமெல்லாம்
ஏறியபடியே இருக்கும்
இந்த திரவமட்டத்தை
பருகிப் பருகியே
பத்திரப்படுத்துகிறது மனது
ஈரம் கனக்கும்
இந்த மதுவின் சிறையை
அறைந்து சாத்திவிட்டு
வெளியேறக்கூடும் என்றாலும்
நிச்சயம் திரும்புவேன்
காத்திருக்கும்
என் தனியறைக்கு.
சோழகக்கொண்டல்

oOo

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.