வனத்தின் மடியில் — ஓர் அழிப்பின் வாசிப்பு

ச. பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’  – புத்தக வாசிப்பனுபவம்

‘ சோளகர் ’ என்பார் தமிழக மற்றும் கர்நாடக எல்லை வனப்பகுதிகளில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவர் ஆவர். அம்மக்களின் தாய் மொழியான சோளகர் மொழியில் இச்சொல்லிற்கு “ வனத்தைச் சார்ந்தவர்கள் ” என்பது பொருள். மேலும், அம்மக்கள் தங்கள் வாழிடத்தை ( ஊர் )  

‘ தொட்டி ’ எனக் குறிப்பிடுகின்றனர். ஆக இந்தப் புத்தகம் அந்தப் பழங்குடி இன மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்திருக்கிறது என்பது ‘ சோளகர் தொட்டி ’ என்ற தலையங்கம் மூலம் வெளிப்படுகிறது; ஆனால், அதைத் தாண்டியும் வாசகர்களால் மறக்க முடியாதபடியும் அல்லது இப்படைப்பு இலக்கியம் தவிர ஆவணப்படம், நாடகம் அல்லது வேறு எந்தக் கலை வடிவில் வந்திருப்பினும் பார்வையாளர்களால் மறக்கவே முடியாத அதிர்வை ஏற்படுத்த வல்ல பல விடயங்களையும் தனக்குள் கொண்டுள்ளது என்பது சந்தேகத்திற்கு இடமற்றது. 

எழுத்தாளர் ‘ச. பாலமுருகன் ’,  ஈரோடு பவானியைச் சார்ந்தவர். கோவையில் வழக்குரைஞராக பணியில் இருப்பவர். ‘ தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தில் ’ இருப்பவர். பழங்குடி இன மக்களின் நல்வாழ்வுக்காக குறிப்பிடத்தகுந்த பல செயல்களைச் செய்தவர் என்பதை அறிய முடிந்தது. அவற்றுள் இந்த நாவலுக்கு பெரும் பங்கு இருக்கிறது.

இரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் இந்நாவலின் முதல் பாகம், சோளகர்களின் வாழ்க்கையை நமக்கு அறிமுகப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறது என்பேன். அதாவது, கதாபாத்திரங்களின் பெயர்கள் தொடங்கி, அவர்களின் உடை , தொழில் , வீடு , உணவு , கலாச்சாரம் என எல்லாவற்றையும் நிகழ்வுகளுடன், பாத்திர வார்ப்புகளுடன்,   ஒரு நல்ல கதை சொல்லலுடன்,  அறிமுகப்படுத்துகிறார். வனத்தின் அல்லது மலையின் எல்லையில் தங்கள் தொட்டியைக் கொண்டுள்ள அம்மக்கள்  தங்களுக்கென்று பல தலைமுறைகளாக இருந்து வரும் நிலத்தில் பயிர் செய்கின்றனர், காடுகளில் இருந்து கிழங்கு , தேன் முதலியவற்றைக் கொண்டு வந்து  பணமாக்கிக் கொள்கின்றனர் , வனத்திற்கு வேட்டையாடவும் செல்கின்றனர். பல தலைமுறை நிலங்களைப் போலவே, பல தலைமுறைகளாக நாட்டுத் துப்பாக்கிகளையும் வைத்திருக்கிறார்கள். அதைத் தம் மூதாதைகளின் பொக்கிஷமாகக் கருதி முறையாக பராமரித்தும் , வேட்டைக்குப் பயன்படுத்தியும் வருகின்றனர். அம்மக்களின் வாழ்வியலைக் குறித்து பேசும் போது கஞ்சாவைத் தவிர்க்கவே இயலாது. நாம் தேநீரைப் பருகுவது போல அவ்வளவு அடிக்கடி தொட்டியின் ஆண்கள், சில பொழுதுகளில் பெண்களும் கஞ்சாவைப் புகைக்கிறார்கள். வனத்தில் கஞ்சாச் செடிகள் மிக எளிதாக அவர்களுக்குக் கிடைத்தபடி இருக்கிறது; அல்லது அதைக் கண்டுகொள்ளும் திறன் படைத்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். ஒரு கொண்டாட்டம் என்றால் தொட்டிக்குப் பொதுவாக 

‘ உக்கடத் தீ ’ மூட்டி தொட்டினர் எல்லோரும் அதைச் சூழ்ந்து அமர்ந்தும் ஆட்டம் போட்டும் களிக்கின்றனர். அந்தச் சமயங்களில் நாதஸ்வரத்தை ஒத்த பீனாச்சியையும், தப்பையும் வாசிக்கின்றனர். அவர்களின் எல்லாக் கொண்டாட்டங்களிலும், துக்கங்களிலும் அந்த இசைக் கருவிகள் வாசிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.     

      நாவலில் நமக்குக் காட்டப்படும் சோளகர் தொட்டிகளுக்குத் தலைவர் அல்லது பட்டக்காரர் என ஒருவர் இருக்கிறார். அவரே அத்தொட்டியின் மூத்த மகன்; பொறுப்பாளி.  ‘ கோல்காரன் ’ என்கிற பொறுப்பில் ஒருவர் இருக்கிறார். அவரும் தலைவரைப் போலவே தொட்டியின் எல்லா நிகழ்வுகளுக்கும் பொறுப்பாளி. மேலும், தொட்டி மக்கள் வழிபடும் தெய்வத்திற்கு பூசைகள் செய்து பராமரிக்கும் பொறுப்புக்கும் சொந்தக்காரர். குழந்தைப் பிறப்பு , திருமணம் , திருவிழா என சில நிகழ்வுகளைக் காட்டுவதன் மூலம் அம்மக்களின் சடங்குகள் , அந்தக் குழுவுக்குள்ளான உட்பிரிவுகள் , மரபு என எல்லாம் சொல்லப்படுகின்றன. முதல் பாகத்தில் இந்த அறிமுகத்தினூடே வேறொரு முக்கிய திருட்டும் அடையாளப்படுத்தப்படுகிறது. கதையின் மையப்பாத்திரமான 

‘ சிவண்ணா ’ வின் தந்தை பேதனின் கதையில் அது நிகழ்கிறது. நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்ததைப் போலவே சோளகர்களுக்கென தலைமுறைகளாகப் பாத்தியப்பட்ட விளைநிலம் இருந்து வருகிறது. அவற்றுள் பேதனுடையது முக்கியமானதாகும். வனத்தை விட்டு விலகி நம் மாதிரி நிலத்தில் வசிக்கும் கீழ்நாட்டுக்கார குடியானவன் ஒருவன் பேதனின் விளைநிலத்தை சூது செய்து மிகக் குரூரமாக அபகரித்துக் கொள்கிறான். இந்த ஒற்றைச் சம்பவம் அந்த மக்களின் யாருமற்ற கையறு நிலையை நமக்கு உணர்த்துகிறது. அந்த வனம் மட்டுமே தன் பிள்ளைகளான அம்மக்களை அணைத்துக் கொள்கிறது. அப்படியிருக்கையில், அந்த வனமும் மெல்ல மெல்ல அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுக் கொண்டிருப்பதன் படபடப்பை அம்மக்களும் வாசகர்களான நாமும் உணரும்படியாக முதல் பாகம் முடிகிறது. 

  நாவலின் இரண்டாம் பாகத்தை நான் வாசிக்கையில் ஒரு பீதி எந்நேரமும் என்னைச் சூழ்ந்திருந்ததை உணர்ந்தேன். அடுத்தடுத்த அத்தியாயங்களைத் திருப்பத் தயக்கம் காட்டினேன். நான் என் வலக்கை நடுவிரலை  பின்னோக்கித் திருப்பி அது என் மணிக்கட்டை எவ்வளவு தூரம் எட்டுகிறது என்று சோதித்தேன் , நான் வாசித்துக் கொண்டிருந்த அறையில் மலம் மற்றும் மூத்திரத்தின் வாடை வீசுவதாகக் கற்பனை செய்து பார்த்தேன், பலர் காண நான் வலுக்கட்டாயமாக அம்மணமாக்கப்படின் எப்படியிருக்கும் என்று நினைத்துக் கொண்டேன் , அந்நினைப்பே எனக்குள் ஒரு பாதுகாப்பின்மையை உருவாக்குவதை அறிந்தேன் , மேலும், என் ஒவ்வொரு நகமும் பிடுங்கப்படுவதை , என் உடலில் மின்சாரம் பாய்வதை , என் குடும்பத்தினர் என் கண் முன்னே நிர்வாணமாக்கப்பட்டு அவர்களை நானே லத்தி கொண்டு அடித்துத் துன்புறுத்த வேண்டி வரும் சூழலை , பசியால் உயிர்ப்பிரிந்து கொண்டிருக்கும் தருவாயில் நான் கழித்த மலத்தை நானே திண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை , இன்னும் என்னைத் தொந்தரவு செய்யும் பல உணர்வுகளுக்கு ஆளானேன். இவ்வளவு சொல்லியும் கூட மிகக் குறைச்சலாகச் சொல்லியிருக்கிறேன் என்றே படுகிறது. இம்மாதிரி கொடுமைகளை எல்லாம் சோளக மக்கள் எதிர்கொள்ள நேர்கிறது இரண்டாம் பாகத்தில். இவற்றையெல்லாம் வாசிக்கும் போது நம்மை பீடிக்கும் ஒருவித சூன்யத்திலிருந்து விலக்கிக் கொள்ள இது ஒரு புனைவு தானே என்ற சமாதானத்தை நமக்கு நாமே சொல்லிக் கொள்ள முடியாது. நாவலில் சொல்லப்பட்டுள்ள கொடூரங்களுக்கும் மேலான சித்திரவதைகளை அப்பழங்குடியின மக்கள்  உண்மையாகவே அனுபவித்திருக்கிறார்கள் என்ற உண்மை நம்மை நிம்மதியிழக்கச் செய்கிறது. 

 இத்தனைக் கொடுமைகளையும் அம்மக்களுக்கு நிகழ்த்துபவர்கள் தமிழக மற்றும் கர்நாடக காவல்துறையினர். காவல்துறையினரால் இது நிகழ்த்தப்படுகிறது எனில் அம்மக்கள் செய்த குற்றம் என்னவென்ற ஐயம் நமக்குள் எழும். வனப்பகுதியை ஒட்டி அவர்கள் வாழ்வு அமையக் காரணமான இயற்கையைத் தான் காரணம் காட்ட வேண்டும் அதற்கு; ஆம் வேறொரு குற்றமும் நிகழ்த்தியிருக்கவில்லை அவர்கள். நேரடியான காரணமும் இருக்கிறது. தமிழக மக்களுக்கு நன்கு தெரிந்த ஒரு நபர் வீரப்பன். ஒரு சாராருக்கு அவர் போராளி; இன்னொரு சாராருக்கு அவர் குற்றவாளி. அந்தச் சந்தனக்கடத்தல் வீரப்பனின் தேடுதல் வேட்டையின் போது, வீரப்பனின் உளவாளி என்ற சந்தேகத்தின் பேரிலும் , வீரப்பனுக்கு உணவுப்பொருட்கள் கொடுத்து உதவுவதாகக் குற்றம் சாட்டியும்,  இதுபோல வீரப்பனைக் காரணம் காட்டி பலவகையில் அம்மக்களை விசாரணை என்ற பெயரில் போலீசார் நிகழ்த்தியவையே நான் மேற்குறிப்பிட்ட கொடூரங்கள். குறிப்பிட்ட காட்சிகளை வாசிக்கும் போது விசாரணை , ஜெய் பீம் மற்றும் விடுதலை முதலிய திரைப்படங்களின் விசாரணைக் காட்சிகள் நினைவுக்கு வந்தன. அந்தப் படங்களில் காட்டப்பட்டுள்ளவற்றைக் காட்டிலும் பல மடங்கு வதைகள் நிகழ்ந்திருக்கின்றன அந்தச் சோளகரின மக்களுக்கு. 

           காவல்துறைக்கு இருக்கும் அதிகாரத்தை எவ்வளவு தவறாகப் பயன்படுத்த முடியுமோ அவ்வளவுத் தவறாக பயன்படுத்தியிருக்கிறார்கள்; அதுவும் அப்பாவி மக்கள் மீது. ஏறக்குறைய தீவிரவாதிகளைக் காட்டிலும் மிக மோசமாக விசாரணைக் கைதிகளை ( சோளகர் மக்கள் ) நடத்தியிருக்கின்றனர். அம்மக்களின் உதவியினாலே தான் போலீசாரால் வனத்திற்குள் நுழையவே முடிகிறது. ஆனால், துளி அளவு நன்றி உணர்வு ஏன் மனிதத்தன்மையே அல்லாத நடவடிக்கைகளே அம்மக்களுக்குக் கைம்மாறாகத் திரும்பக் கிடைக்கின்றன. அவர்கள் இநத அப்பாவி மக்களைத் துன்புறுத்துவதில் காட்டிய முனைப்பை வீரப்பனை பிடிக்கக் காட்டியிருந்தால் அவர் விரைவில் பிடிபட்டிருப்பாரோ என்னவோ ?. வீரப்பன் நல்லவனா கெட்டவனா என்ற வாதத்திற்குள்ளோ , வீரப்பனுக்கும் காவல்துறைக்குமான மோதல்கள் பற்றியோ நாவல்  பேசவேயில்லை. வீரப்பனின் தேடல் வேட்டையின் போது தமிழக மற்றும் கர்நாடக போலீசார் அப்பாவி பழங்குடி மக்கள் மீது நிகழ்த்திய அடக்குமுறைகளையே உருக்கமாகப் பதிவு செய்கிறது.  

          போலீசாரின் இந்த நடவடிக்கைகளுக்கு நியாயம் கற்பிக்க அவர்கள் பார்வையிலிருந்து இந்த நாவலை அனுகினாலும், அதில் சுயநலத்தைத் தவிர வேறு எந்தக் காரணமும் இருக்கவில்லை என்று படுகிறது. ஒரு சில பழங்குடி இன மக்கள் வீரப்பனுக்கு உதவி வந்ததும் , போலீசாரைக் குறித்து அவனுக்குத் தகவல் சொல்லி வந்ததும் உண்மையாகத் தான் இருக்க வேண்டும். ஆனால், அந்த உண்மையை பல கொடுமைகளை நிகழ்த்திக் கண்டறிந்து விட்டும் கூட அவர்களைக் கொல்வது, உண்மையாகவே வீரப்பனை பார்த்துக் கூட இராத அப்பாவி மக்களை வீரப்பனின் ஆட்கள் என போலியாய்த் திரித்து அவர்களைச் சுட்டுக் கொன்று விட்டு பத்திரிகைகளில் அந்த வதந்தியைப் பரப்பியது,  மிக முக்கியமாக சோளகப் பெண்டிரை பாலியல் வன்புணர்வு செய்தது முதலிய இவற்றிற்கெல்லாம் என்ன நியாயம் இருக்க முடியும் அவர்களிடம் ? அத்தனைப் பெண்களை வன்புணர்வு செய்கின்றனர். சிறுமி , நடுவயதுப் பெண் , கர்ப்பிணி , மாதவிலக்காயிருக்கும் பெண் எனக் கருணையே காட்டாமல் திட்டமிட்டு கூட்டு பாலியல் வன்புணர்வு செய்கின்றனர். சில சமயங்களில் ஒரு குற்றவாளியைப் பிடிக்க இத்தனைச் சுதந்திரத்தை காவல்துறைக்கு வழங்கிவிட்டு அதனை முறையாக மேற்பார்வையிடாத அரசு மீது கடுங்கோபம் எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை; ஏறக்குறைய அம்மக்களின் மீது நிகழ்த்தப்பட்ட எல்லா வன்முறைகளிலும் அரசின் பங்கும் இருப்பதாகத்தான் பொருள். எந்தக் குறிப்பிட்ட அரசும் இதற்கு விதிவிலக்கல்ல; வீரப்பனின் தேடுதல் வேட்டையின் காலமான 1989 முதல் 2004 வரையிலும் தமிழகத்தில்  தி.மு.க மற்றும் அ.தி.மு.க என இரு கட்சியினரும் மாறி மாறி அதிகாரத்தில் இருந்து வந்துள்ளனர் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அம்மக்கள் வாக்குரிமைப் பெற்றிருந்தனரா என்பது குறித்த தகவல்கள் நாவலில் இல்லை; ஒருவேளை அவர்கள் வாக்குரிமை அற்றவர்களாக இருந்ததுதான் அரசுகளின் இந்த மெத்தனப்போக்கிற்குக் காரணமாக இருக்ககூடுமோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. ஆக, அதிகாரத்தின் பேரில் தமிழக மற்றும் கர்நாடக போலீசாரால் வதைக்குட்பட்ட பழங்குடி இன மக்களின், நம்மை  பாதிப்புக்குள்ளாக்கக்கூடிய பல அபயக்குரல்களைத் தாங்கியுள்ள இந்தச் 

‘ சோளகர் தொட்டி ’ தமிழ் மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலும் மக்களைச் சென்றடைய வேண்டிய ஒரு வரலாற்றுப் பதிவு.  

***

பிரசுர விவரங்கள்:

  • சோளகர் தொட்டி
  • ச. பாலமுருகன்
  • பதிப்பகம்: எதிர் வெளியீடு
  • பக்கங்கள்: 288

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.