முடிசூட்டப்படாத ஆட்சியாளர்

மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா
தமிழாக்கம் : கார்த்திக்

தாயைப் பிரிந்து தந்தையிடம் வந்து நான்கு வருடங்களே ஆகியிருந்தன. இருவது வயதியிலேயே ஒரு அரசனுக்கு தேவையான தகுதிகள் அனைத்தையும் பெற்றிருந்தான். ஆயுத பயிற்சியை சத்ரியர்களின் காலன் எனப் பெயர் பெற்றிருந்த பரசுராமிடம் பயின்றான். வேத வேதாந்தங்களை வஸிஷ்டரிடமும் சுக்ரரிடமும் கற்றான். தந்தையிடம் வந்தவுடன் இளவரசனாக அடுத்த அரசனாக அறியப்பட்டான். இருந்தும், அவனது தந்தை சத்யவதியை திருமணம் செய்துகொள்ள வேண்டி. அரியணையும் திருமணமும் தேவையில்லை என சபதம் பூண்டு “பீஷ்மர்” என பெயர் பெற்றான்.

அவனது தந்தை சந்தனு இறந்தபொழுது, அவனது தம்பிகளான சித்ராங்கதன் மற்றும் விசித்திரவீரியன் இருவரும் வயதில் மிக சிறியவர்களாக இருந்ததால் பல வருடங்கள் அவர்களுக்கு பதில் பீஷ்மரே அரசாண்டார். சித்ராங்கதனுக்கு உரிய வயது வந்தவுடன் அவனை அரசனாக்கினார். ஆனால் , கந்தர்வர்களுடனான போரில் அவன் இறக்க, விசித்திரவீர்யன் மன்னன் ஆனான்.

ஆனால், அவனும் விரைவில் இறந்துவிட வாரிசு இல்லாமல் தவித்தது இராஜ்ஜியம். எதிரிகளிடம் இருந்து அரசை காப்பாற்ற, பீஷ்மர் மீண்டும் அரசாங்கத்தை வழி நடத்தினார். அவர் யோசனைப்படியே, குழந்தை இல்லா இரு விதவைகளும் வியாசர் மூலம் பாண்டு மற்றும் திருதராஷ்டிரனை பெற்றனர். அவர்கள் இருவருக்கும் பட்டம் காட்டும் வயது வரும்வரை பீஷ்மரே ஆட்சியை வழிநடத்தினார். அரியணையில் அமராமலே பல வருடம் ஆட்சி அவரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

திருதராஷ்டிரன் பார்வையற்றவனாய் இருந்ததால், இளையவனான பாண்டு அரியணை ஏறினான். இருந்தும், அவன் பெற்ற சாபத்தினால், அரச பதவியை துறந்து, தனது மனைவியர் குந்தி மற்றும் மாத்ரியுடன் கானகத்தில் குடியேறினான். இந்த நேரத்தில், அரசை வழி நடத்தும் பொறுப்பு மீண்டும் பீஷ்மரின் தோள் மேலே.

அவரது வாழ்நாளிலே அவர் நிம்மதியாக இருந்த காலம் குறைவே. தந்தையிடம் வந்து சேர்ந்ததில் துவங்கி, இரத்த சொந்தங்களிடையே நடைபெற்ற கோர குருஷேத்திர யுத்தம் வரை அவர் பார்த்தது துரோகங்களும், பகையுமே. இருந்தும், அவை எதுவும் அவரை பாதிக்கவில்லை. எப்படி தன்னில் எந்த அசுத்தம் வந்து சேர்ந்தாலும் அவற்றால் களங்கமடையாமல் புனிதமாய் தூய்மையாய் அவரது அன்னை கங்கை ஓடிக் கொண்டிருக்கிறாளோ அது போன்றே வாழ்ந்தார் பீஷ்மர்.


சமாதான தூது

துருபதன், பாண்டவர்களின் சார்பாய் பேச தூதுவனாக ஒரு பிராமணனை அனுப்பினார். நன்கு கற்று தேர்ந்த அந்த பிராமணன், கௌரவர்களின் சபைக்கு வந்தபொழுது பீஷ்மர், விதுரர் மற்றும் திருதராஷ்டிரனால் வரவேற்க பட்டு கௌரவிக்கப்பட்டார்.

“இந்த அவை அறிவாளிகளாலும், சிறந்த மனிதர்களாலும் நிரம்பியுள்ளது. இந்த இராஜ்ஜியமானது கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள் இருவருக்கும் சொந்தமானது. பாண்டவர்கள் ஆட்சி செய்த சமயத்தில், தங்களது பிரதேசத்தை முன்னேற்ற கடுமையாக உழைத்தனர். அது உங்கள் அனைவருக்கும் தெரியும். சூதாட்டத்தின் மூலம் அநியாயமாக அவர்களது இராஜ்யம் பறிக்கப்பட்டது. இருந்தபொழுதும், நிபந்தனையை ஏற்று பதிமூன்று ஆண்டுகள் வனத்தில் கழித்தனர். இப்பொழுது, அந்த பதிமூன்று ஆண்டுகாலம் முடிவடைந்த நிலையில் அவர்களுக்கு சேர வேண்டிய அவர்களது இராஜ்யத்தை உடனடியாக திருப்பித் தருமாறு அவர்கள் கேட்டுக் கொள்கின்றனர். அவர்களுக்கு போரில் விருப்பமில்லை என்றாலும் நீங்கள் யுத்தம்தான் வேண்டும் என்றால் அவர்கள் பக்கத்தில் பல பலசாலி அரசர்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டும். மேலும், அர்ஜுனனுக்கு உதவியாய் பகவான் ஸ்ரீகிருஷ்ணனும் அவர்கள் பக்கத்தில் உள்ளார். எனவே , இங்கே உள்ள சிந்திக்கத் தெரிந்த பெரியவர்கள் துரியோதனனுக்கு நல்லவற்றை எடுத்துக் கூறி பாண்டவர்களின் இராஜ்ஜியத்தை திருப்பித் தர செய்வீர்களாக!” என தான் வந்த காரியத்தை எடுத்துக் கூறினார் அந்த ப்ராமணர்.

“பாண்டவர்கள் நலமாக இருப்பதும், அவர்கள் பக்கத்தில் பலம் அதிகம் இருப்பதும் மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர்கள் பக்கத்தில் ஸ்ரீகிருஷ்ணர் இருப்பது அவர்களுக்கு நன்மையே. நீங்கள் தூதுவராக இங்கு வந்தாலும், உங்கள் பேச்சில் அது எதிரொலிக்கவில்லை. நீங்கள் உபயோகப்படுத்திய வார்த்தைகள் நேரடியாக, மிகக் கூர்மையாக இருந்தன. அதிகப்படியான கஷ்டத்திற்கு உள்ளானலும் தர்மத்தை பாண்டவர்கள் எந்த நாளும் கைவிடவில்லை. அவர்களுக்கு அவர்கள் இராஜ்யத்தை மீண்டும் அளிப்பதே…” என பீஷ்மர் பேசிக் கொண்டு இருக்கையிலேயே கர்ணன் இடைமறித்தான்.

“இதற்கு ஒரு முடிவே இல்லையா? துரியோதனனை மிரட்ட முயற்சிக்க வேண்டாம். அவர்கள் பக்கத்தில் மத்ஸ்ய மற்றும் பாஞ்சால அரசர்கள் மட்டுமே உள்ளனர். மேலும், அவர்கள் வனவாச நிபந்தனையை மீறினார்கள். அவர்கள் தலைமறைவு காலம் முடியும் முன்பே கண்டுபிடிக்கப்பட்டனர். எனவே, அவர்கள் மீண்டும் வனவாசம் சென்று அதன்பின் சாதாரண பிரஜைகளாக வாழ வேண்டும்.”

இதைக் கேட்ட பீஷ்மர் கோபத்துடன் “ராதேயா! உன் முட்டாள்தனமான பேச்சை நிறுத்து. இந்த பிராமணரின் பேச்சை கேக்காவிடில், துரியோதனனுக்கு அழிவு நிச்சயம்!” என்றார்.

இதைத் தொடர்ந்து அவையில் பெரும் குழப்பமும், கூச்சலும் ஏற்பட, திருதராஷ்டிரன் குறுக்கிட்டான்.

“ராதேயா! தூதுவரிடம் இப்படி பேசுவது முறையாகாது” என்று கர்ணனை பார்த்துக் கூறியவர், அந்த தூதூதுவரிடம் “ஓ தூதுவரே! அரசவையில் நாங்கள் கூடி பேசிய பிறகு எங்கள் முடிவை என் தூதுவனான சஞ்சயன் மூலம் சொல்லி அனுப்புகிறேன் என பாண்டவர்களிடம் தெரிவிப்பாயாக!” என கூறினான்.

மத்ஸ்ய தேசத்துக்கு திரும்பிய அந்த பிராமணர் நடந்ததை உள்ளபடி பாண்டவர்களுக்கு எடுத்துக் கூற, அவர்களும் சஞ்சயனுக்காக காத்திருக்கத் துவங்கினர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை

அஸ்வத்தாமனின் கோபம் தொடர்ந்த தூதுப்படலம்

Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.