சுரேஷ் சுந்தரேசன் எழுதியுள்ள இந்த ஆங்கில நாவல் கரானா (Gharana ) வட கர்நாடக மாநிலத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்த இசை மேதையான சந்திரகாந்த் ஷிருர் என்பவரின் வாழ்க்கை பயணத்தை விவரிக்கிறது.அவரது வாழ்க்கைப் பயணத்தின் ஊடாக ஹிந்துஸ்தானி இசையின் பல்வேறு கரானாக்கள் (கரானா,Gharana என்றால் ஹிந்துஸ்தானி இசையின் Khayal களை பாடல்களை பாடும் பாணி.அது ஒவ்வொரு குடும்பத்துக்கும்/வீட்டுக்கும் மாறுபடும். இந்தியில் Ghar என்றால் வீடு எனவே ஒவ்வொரு வீட்டிலும் பாடும் பாணிக்கு Gharana என்று பெயர்.)அதன் உஸ்தாதுகள்,(ஆசிரியர்கள்) அவர்களது வாழ்க்கைகள், 1947ல் நடந்த இந்தியப் பிரிவினை இந்திய இந்துஸ்தானி இசை கலைஞர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் அலைக்கழிப்பு ஆகியவற்றையும் விவரிக்கிறது.

ஒரு முழு வாழ்க்கையை விவரிக்கும் கணிசமான அளவு நீண்ட நாவல் எந்த இடத்திலும் தொய்வில்லாமல், சுவாரஸ்யம் குன்றாமல் எழுதப்பட்டுள்ளது. இந்துஸ்தானி இசையின் நுணுக்கங்கள் நாவல் முழுக்க விரவி இருந்தாலும், அதைப்பற்றி அதிகம் தெரியாதவர்களும் படித்து ரசிக்கும் வண்ணம் மனித உணர்வுகள் கலைஞர்களின் இயல்புகள் அவர்களது எளிதில் ஊகிக்க முடியாத,மனப்போக்குக்கள்,புரிந்துகொள்ள முடியாத விசித்திர நடவடிக்கைகள் ஆகியவை முக்கிய இடம்பெறுகின்றன.ஹிந்துஸ்தானி இசையின் நுணுக்கங்கள் அறிந்திருந்தால் வாசிப்பு மேலும் ஆழம் பெரும்.இன்னமும் அதிகம் ரசிக்கவும் முடியும்.
அதற்கு இந்த நாவல் சொல்லப் படும் பாணி முக்கியப் பங்காற்றுகின்றது. நாவல் முழுக்கவே ஆசிரியரின் கூற்றாகவோ,அல்லது முற்றிலும் தன்னிலையிலோ எழுதப்படாமல், ஒவ்வொரு கட்டமும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் கோணத்தில் சொல்லப்படுவது படிப்பதில் ஆர்வத்தைக் கூட்டுகிறது.ஒவ்வொரு இசைக் குடும்பத்திலும் இருக்கக் கூடிய விசித்திரமான பழக்க வழக்கங்கள்,நோய்கள்,அவர்களின் பரம்பரைக்கே விடுக்கப்பட்ட சாபமோ என்று சந்தேகிக்க வைக்கும் நிகழ்வுகள் என்று விரிகிறது நாவல்.கூடவே இந்துஸ்தானி இசை என்பது எவ்வளவு தூரம் ஒரு இந்து-முஸ்லீம் பண்பாட்டுக் கலவை என்பதையும் நாவல் மிக அழகாகக் காட்டுகிறது.
மகத்தான இசைக் கலைஞர்கள் குடத்திலிட்ட விளக்கு போலவும், சாதாரண கலைஞர்கள் மிகப் பெரிய உயரங்களுக்கு சென்று அமர்வதுமான விதியின் விளையாடலும் நாவலில் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. குழந்தை மேதையான சந்திரகாந்த் ஷிருர் எனும் மகத்தான கலைஞன் தனக்குரிய இடத்தை அடைந்தானா அவன் அடைந்த நிலை அவனுக்குத் திருப்தியளிக்கிறதா என்ற கேள்வியும் நாவலின் முடிவில் எஞ்சி நிற்கிறது.அவனது கரானாவை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லக்கூடியவர் யார் என்ற கேள்வியும்,நவீன கல்வி வேலை வாய்ப்புகள் ஆகியவை நமது பாரம்பரிய கலைக்கழி வளர்த்தெடுப்பதற்கு தடையாக மாறும் சிக்கலும் நாவலில் கோடி காட்டப்படுகிறது.
நாவலைப் படித்து முடித்த பிறகு,நாவலில் வரும்,உஸ்தாத் சஜ்ஜத் கான்,உஸ்தாத் நிஸ்ஸார் கான்,உஸ்தாத் ஜாஃபர் அலி கான், ஷாந்திநாத், முஸ்தாஃபா கான்,போன்ற இசைக்கலைஞர்களும்,நிப்பூரின் மடத்திலுருக்கும் சுவாமிகளும்,சித்தபுருஷர் போலிருக்கும் ஞானப் பிரகாசரும், மனதில் நீங்காத இடம் பிடித்து விடுகின்றனர்.அவர்களுக்கு எந்த விதத்திலும் சளைக்காதவண்ணம் மெஹ்ருன்னிஸா, சபா பேகம்,சரஸ்வதி, சந்திரகாந்தின் ,அவரது சிஷ்யை வைஷாலி, சந்திராகாந்தின் அஜ்ஜி (பாட்டி) ஆகிய பெண் பாத்திரங்களை படைப்பதிலும் ஆசிரியர் பெரும் வெற்றியைப் பெறுள்ளார்.இவ்வளவு பாதத்திரங்ளும் அவரவர்க்கே உரிய தனித்துவத்துடன் சித்தரிக்கப்பட்டிருப்பது நாவலாசிரியரின் முக்கியமான வெற்றி என்றும் சொல்லத் தோன்றுகிறது.
இது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டால் நன்றாக இருக்கும். அல்லது நாவலாசிரியர் சுரேஷ் சுந்தரேசனே இதை தமிழிலும் எழுதலாம் சுரேஷ் சுந்தரேசன் முகநூலில் Raaga Suresh என்ற ஐடியில் இருக்கிறார். அங்கு அவரது இசை இலக்கியப் பங்களிப்புகளை அறிந்து கொள்ளலாம்.தமிழ் வாசிப்பு சூழலில் இன்னும் விரிவாக அறிமுகம் செய்யப்பட வேண்டியவர் சுரேஷ் சுந்தரேசன்.
எழுத்தாளர்: Suresh Sundaresan
வெளியீடு: Hyderabad Book Trust
வகை: Fiction
பக்கங்கள்: 316 pages
ASIN : B0DCYZVBJS
பின்னட்டை: இந்துஸ்தானி இசையில் ஈடுபாடு கொண்ட வட இந்தியாவிலிருந்தும் தார்வாட் பகுதியிலிருந்தும் ஒரு குழுவினரின் நான்கு தலைமுறைகளில் கதை பரவுகிறது – அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, ஒருவருக்கொருவர் பிரச்சினைகள் – கூடவே இசை மீதான அவர்களின் ஆர்வங்களும் தொடர்கிறது. அரசியல்மயமாக்கப்பட்ட துறையில் கடும் போட்டிகளுக்கு நடுவே தங்களுக்கு ஒரு பெயரை உருவாக்க முயல்வது; மாணவனாகவும் சீடராகவும் இருந்து தங்கள் சொந்த கச்சேரிகளை வழங்குவதற்கும் அசல் பாணியை உருவாக்குவதற்கும் மினுக்கிடுவது; இறுதியாக, தானே குருவாக பிரத்தியேகமான பள்ளியையும் வழித்தோன்றர்களையும் உருவாக்க வேண்டும், இதனால் வட்டத்தை முடித்து புதிய சுழற்சியைத் தொடங்கலாம்.
பொருளடக்கம்:
- Shanthinath
- Chote Ustad meets Chandrakanth
- This Boy is a Prodigy
- Sajjad Hussain
- A Dramatic Intervention
- Jaffar brings Meherunnisa Home
- Life Lessons
- An Independent Indian Nation
- Two Deaths
- A Guru for Nissar Ali Khan
- Nissar Ali Sings at Nippur
அச்சு நூல்: Buy Gharana Book Online at Low Prices in India | Gharana Reviews & Ratings – Amazon.in
மின் புத்தகம்: Gharana – Suresh Sundaresan – Google Books
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
