ஆதிச்சநல்லூரில் இருந்த சிறு அருங்காட்சியகம் இரண்டாம் வகை. நிலத்திற்கு அடியே உள்ள பாறைகளை குடைந்து, மண்ணை அகழ்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மண்பானைகளை சுற்றி வந்து பார்வையிட மர சட்டங்களால் ஆன பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. விட்டத்தில் பொருத்தப்பட்ட குவி விளக்குகளின் வெளிச்சத்தில் நாம் நடக்கும் பாதைக்கு அடியே இருந்த இந்தப் பானைகள் வெண்மை, நீலம், கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் மெளனமாக மிளிர்ந்தன. இவை யாவும் முதுமக்கள் தாழி என்றழைக்கப்படும் ஈமத்தாழிகள் (Burial urns). அதாவது, இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய பயன்படுத்தப்படும் மண் கலன்கள்.
