அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் எந்த அளவுக்கு நம்பிக்கையோ அதற்குச் சற்றும் குறையாத இறைநம்பிக்கையும் அவனுக்கிருந்தது. பிரபஞ்சம் முழுவதையும் கிருஷ்ணனின் லீலையாகத்தான் புரிந்துகொண்டான். இறைவனின் அளப்பறிய ஆற்றலையும் அளவில்லா பெருங்கருணையையும் கூட அவன் கணிததின் முடிவிலியைக் (infinity) கொண்டுதான் வரையறுப்பான். சக்தி சிவத்தில் பாதியென்றாலும் இருவரும் அறுதியில்லா வல்லமை கொண்டவர்கள்தான், ஏனெனில் முடிவிலியை எப்படிப் பங்கிட்டாலும் கிடைப்பது முடிவிலிதானே என்று சொல்வான். ஏன் தன் அம்மாவின் அதிதிறமைகளை ஒரு கணிதச் சமன்பாடாக வரையறுத்துப் புரிந்துகொள்ள முற்பட்டான். வயதாக ஆக, கணிதத்தையும் இயற்பியலையும் இறையைக் கொண்டு புரிந்துகொள்ளத் தலைப்பட்டான்.
