ஒரு மண்ணின் நினைவுகளும், ஒரு சமூகத்தின் ஆன்மாவும்

மலையாள மூல நாவல்: “தட்டகம்” (சாகித்ய அகதமி விருது பெற்றது)
எழுத்தாளர்: கோவிலன்
தமிழ் மொழிபெயர்ப்பு- நிர்மால்யா

சில நாவல்கள் ஒரு கதையை மட்டும் சொல்லிவிட்டு முடிந்துவிடுகின்றன. சில நாவல்கள் ஒரு காலத்தை நம் முன் நிறுத்துகின்றன. ஆனால் கோவிலனின் தட்டகம் அதையும் தாண்டி, ஒரு மண்ணின் நினைவுகளையும், ஒரு சமூகத்தின் ஆன்மாவையும், ஒரு மக்களின் வாழ்வியலையும் நம் மனதில் பதித்துவிடுகிறது. அதனால்தான் இந்த நாவலை வாசித்து முடித்த பிறகும் முப்பிலிச்சேரி நம்மை விட்டு அகலுவதில்லை.

நிர்மால்யாவின் தமிழாக்கம் இந்த நாவலின் மிகப்பெரிய பலம். மலையாள மொழியின் மணமும், கேரள நாட்டார் வாழ்க்கையின் துடிப்பும், தமிழில் எந்த அந்நியத்தன்மையும் இல்லாமல் இயல்பாக வந்து சேர்கின்றன.

முப்பிலிச்சேரி என்ற கிராமமே இந்த நாவலின் உண்மையான கதாநாயகன். அந்த மண்ணில் வாழும் மனிதர்கள், அவர்களின் குடும்பங்கள், மரபுகள், உறவுகள், பகைகள், காதல்கள், துயரங்கள், நம்பிக்கைகள் அனைத்தும் சேர்ந்து ஒரு சமூகத்தின் கூட்டு நினைவாக மாறுகின்றன. இந்த நாவலில் தனி மனிதனை விட, ஒரு சமூகத்தின் வாழ்க்கையே முக்கியமானதாகிறது.

உண்ணேரி முத்தப்பனும் பகவதியும் இந்த நாவலில் வெறும் நாட்டார் தெய்வங்களாக வருவதில்லை. அந்த மண்ணின் ஆன்மாவாகவே வாழ்கின்றனர். முதல் கள் முத்தப்பனுக்குப் படையல் செய்யப்பட்ட பிறகே மக்கள் அருந்துவது போன்ற காட்சிகள், நாட்டார் வழிபாடு என்பது கோவிலுக்குள் மட்டுப்பட்ட சடங்கல்ல; அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது என்பதை உணர்த்துகின்றன. தெய்வம், இயற்கை, உழைப்பு, மனிதன் ஆகியவை ஒன்றையொன்று பிரிக்க முடியாத உலகமாக இங்கு விரிகிறது.

களரிப்பறம்பும் கள்ளுக்கடையும் முப்பிலிச்சேரியின்  முக்கிய அடையாளங்களாக நாவல் முழுவதும் வருகின்றன. களரி அந்த மண்ணின் வீர மரபையும் ஒழுக்கத்தையும் நினைவூட்டுகிறது. கள்ளுக்கடை வெறும் குடிக்கும் இடமல்ல; அங்கேதான் செய்திகள் பரவுகின்றன, அரசியல் பேசப்படுகிறது, உறவுகள் உருவாகின்றன, மோதல்கள் வெடிக்கின்றன. ஒரு கிராமத்தின் இதயத் துடிப்பை கோவிலன் கள்ளுக்கடையின் வழியே பதிவு செய்கிறார்.

இந்த நாவலில் பெண்கள் வெறும் துணைக் கதாபாத்திரங்களாக இல்லை. சமூகத்தின் இயக்க சக்திகளாக இருக்கிறார்கள். உண்ணிமாயா, கொழும்பிலிருந்து பொருளாதார வசதியுடன் வரும் கொழுந்தனை விரும்பி, அதே மனிதன் வேலை இழந்து வறுமையுடன் திரும்பியபோது ஒரு கிழிந்த பாயை மட்டும் கொடுத்து ஒதுக்கும் காட்சி, மனித உறவுகளில் பொருளாதாரத்தின் தாக்கத்தை மிக நுட்பமாக வெளிப்படுத்துகிறது. சீருட்டியின் நடை, அசைவு, உடல் மொழியை கோவிலன் வர்ணிக்கும் விதம், பெண்ணின் உயிர்ப்பை இலக்கியமாக மாற்றுகிறது. காளியம்மு, ஒரு பொறுப்பான குடும்பத் தலைவியாக மனதில் நிற்கிறாள். குடும்பத்தைச் சுமந்து நிற்கும் அமைதியான வலிமை அவளிடம் இருக்கிறது. இந்த மூன்று பெண்களும் சேர்ந்து அந்தக் காலத்து கேரளப் பெண்களின் பல்வேறு முகங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்.

தைத்தற குஞ்ஞிக்கணாரன்,வலியப்புரைககல் உணிக்கோரன்,வாத்தியார் ராமன்குட்டி,அம்முக்குட்டி,மனோர்மணி அம்மா, பாணன் கறுப்பன், தாச்சுட்டி சேகவர்,  பாண்டிநாட்டு(தமிழ்நாட்டு) சந்நியாசி, நாயாடி ராமன், குஞ்ஞாப்பன்,குஞ்ஞாராமன்,அப்புக்குட்டன் என எண்ணற்ற கதாபாத்திரங்கள் நாவலில் வருகின்றன.அப்புக்குட்டன் இந்த நாவலில் தொடக்கம் முதல் இறுதி வரை நம்மோடு பயணிக்கும் முக்கியமான கதாபாத்திரம். அவன் வாழ்க்கையின் வழியாகவே ஒரு தனி மனிதனின் வளர்ச்சியையும், ஒரு சமூகத்தின் அரசியல் விழிப்புணர்வையும் கோவிலன் பதிவு செய்கிறார். களரிக்குச் செல்லும் சிறுவனாக அறிமுகமாகும் அப்புக்குட்டன், காலத்தின் அரசியல் அலைகளிலிருந்து விலகி நிற்பதில்லை. காந்தியின் சிந்தனைகளும், ‘வெள்ளையனே வெளியேறு’ (Quit India) இயக்கத்தின் எழுச்சியும் அவன் மனதில் புதிய விழிப்புணர்வை உருவாக்குகின்றன. 1942 ஆகஸ்டு 9 காந்திஜி கைது செய்யப்பட்ட செய்தி அவனை உலுக்குகிறது. அதன்பின் வகுப்பறையைவிட நாட்டின் விடுதலையே முக்கியம் என்ற எண்ணத்தில், நள்ளிரவில் அரசாங்கத்திற்கு எதிராகச் சுவரொட்டிகள் ஒட்டும் இளைஞனாக அவன் மாறுகிறான். இந்த மாற்றம் ஒரு கதாபாத்திரத்தின் வளர்ச்சி மட்டுமல்ல; கேரளத்தின் கிராமங்களுக்குள்ளும் இந்திய விடுதலைப் போராட்டத்தின் தீ எவ்வளவு ஆழமாகப் பரவியிருந்தது என்பதற்கான இலக்கியச் சாட்சியாகவும் அமைகிறது. அவர்கள் அனைவரும் தங்கள் குடும்பப் பெயர்களுடனும், பரம்பரை அடையாளங்களுடனும் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். ஆரம்பத்தில் இது வாசகருக்குச் சற்று சவாலாக இருந்தாலும், பின்னர்தான் அந்தக் குடும்பங்களும் அவற்றின் பின்னணிகளுமே முப்பிலிச்சேரியின் சமூக வரலாற்றை உருவாக்குகின்றன என்பதை உணர முடிகிறது.

இந்த நாவலின் மிக முக்கியமான பலங்களில் ஒன்று, கேரளத்தின் சாதிய அமைப்பை எந்த முழக்கமும் இல்லாமல், வாழ்க்கையின் இயல்பாகப் பதிவு செய்திருப்பதுதான். உயர்சாதி, தாழ்சாதி என்ற பொதுவான பிரிவுகளைத் தாண்டி, ஒவ்வொரு சாதிக்கும் அடுத்த சாதிக்கும் இடையே கடைப்பிடிக்கப்பட்ட ‘தீண்டாபாடு’ கூட அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கதையில் இடம் பெறுகிறது. யார் யாரிடமிருந்து எவ்வளவு தூரத்தில் நிற்க வேண்டும் என்ற மனிதாபிமானமற்ற சமூக ஒழுங்கு, வாசகரை அதிர்ச்சியடையச் செய்கிறது. ஆனால் கோவிலன் அதை கோபத்துடன் அல்ல; வரலாற்றின் அமைதியான சாட்சியாகப் பதிவு செய்கிறார்.

என்னை மிகவும் கவர்ந்த மற்றொரு அம்சம் கல்வி பற்றிய விவரணை.. பள்ளி என்பது வெறும் எழுத்தறிவு கற்பிக்கும் இடமல்ல; ஒரு புதிய சமூகத்தின் தொடக்கம் என்பதை கோவிலன் உணர்த்துகிறார். கேரளம் கல்வியில் முன்னோடி மாநிலமாக உருவானதற்கான விதைகள் அந்தக் காலத்திலேயே கிராமங்களில் விதைக்கப்பட்டிருந்தன என்பதை இந்த நாவல் நமக்கு நினைவூட்டுகிறது.

இந்த நாவலில் ஏழ்மையும் மிக இயல்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வறுமையைப் பற்றி பெரிய உரைகள் இல்லை. சிறிதளவு பருக்கைகள் மிதக்கும் கஞ்சியும், பலா இலை கரண்டியும் போதுமானவை; அந்தக் குடும்பங்களின் வாழ்க்கை நம் கண்முன் விரிந்துவிடுகிறது. வறுமையை வாசகர் உணர வேண்டும் என்பதற்காக கோவிலன் கண்ணீரை வரவழைக்க முயலவில்லை. அன்றாட வாழ்க்கையின் சிறிய பொருட்களே அந்தக் காலத்தின் பொருளாதார வரலாற்றைச் சொல்லிவிடுகின்றன.

தட்டகம் ஒரு முறை வாசித்துவிட்டு அலமாரியில் வைக்கக்கூடிய நாவல் அல்ல. இது மீள் வாசிப்பைக் கோரும் நாவல். காரணம், இதில் வரும் கதாபாத்திரங்கள், குடும்பப் பெயர்கள், உறவுச் சங்கிலிகள், நாட்டார் நம்பிக்கைகள், சாதிய அடுக்குகள், பண்பாட்டு அடையாளங்கள் என அனைத்தும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. முதல் வாசிப்பில் இந்த நாவலின் பரிமாணத்தை புரிந்து கொள்கிறோம். மீள் வாசிப்பில் இன்னும் பல திறப்புகளை இந்த நாவல் கொடுக்கும் என்று தெரிகிறது.

கோவிலன் எந்த இடத்திலும் வாசகருக்கு பாடம் நடத்தவில்லை. ஆனால் ஒரு கிராமத்தின் வாழ்க்கையை நேர்மையாகப் பதிவு செய்வதன் மூலம் ஒரு சமூகத்தின் வரலாற்றையும், அதன் மாற்றங்களையும், அதன் பெருமைகளையும், அதன் குறைகளையும் நம் முன் நிறுத்துகிறார்.

தட்டகம் ஒரு நாவல் மட்டுமல்ல. அது ஒரு மண்ணின் பண்பாட்டு நினைவகம். ஒரு சமூகத்தின் சுயசரிதை. கேரளத்தின் நாட்டார் ஆன்மாவை இலக்கிய வடிவில் பாதுகாத்து நிற்கும் அரிய படைப்பு. அதனால்தான் இந்த நாவல் வாசித்து முடிந்த பிறகும் முடிவதில்லை; வாசகரின் நினைவிலும் சிந்தனையிலும் தொடர்ந்து வாழ்கிறது. அதுவே கோவிலனின் மிகப்பெரிய இலக்கிய வெற்றி.


Discover more from சொல்வனம் | இதழ் 372 | 09 ஆக 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.