தெலுங்கு மூலம் : வாரணாசி நாகலட்சுமி
தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்
சுவரில் தொங்கிய காலண்டர் காற்றில் ஆடியது. அதில் தாயின் தோளில் உறங்கும் ஆண் குழந்தையும், பாசம் பொங்கும் கண்களால் அவனைப் பார்த்திருக்கும் தாயும் இருந்தார்கள். புருஷோத்தம் வருவான் என்று காத்திருந்த நிர்மலாவின் பார்வை காலண்டரின் மேல் விழுந்தது.
“அழகான குழந்தை. தாயின் அரவணைப்பில் எந்த கவலையுமில்லாமல் நிம்மதியா இருக்கான்” என்று நினைத்துக் கொண்டாள். மெத்தையில் தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்த மகன் நந்துவைப் பார்த்து, “என்னுடைய இந்தக் குட்டிச் செல்லம் பெரியவனாறதுக்குள்ள அவனைத் தூக்கி வைத்துக்கொண்டு இதே போல ஒரு போட்டோ எடுத்துக்கணும். எத்தனை முறை கேட்டாலும், ‘இன்று, நாளை’ என்கிறார் இவுங்கப்பா” என்று அதிருப்தியோடு நினைத்துக் கொண்டாள்.
உறக்கத்தில் நந்துவின் உதடுகளில் இருந்து புன்னகை வழிந்தது. நிர்மலாவின் உள்ளத்தில் தாய்ப் பாசம் பெருகியது. எந்தக் கவலையும் இல்லாத உலகத்தில் உலாவும் குழந்தையைத் தூக்கித் தொந்தரவு செய்ய அவள் விரும்பவில்லை. ஆனால் வேறு வழியில்லை. அவள் சமையலறையைச் சுத்தம் செய்து அவனுக்கு வேண்டிய எல்லாவற்றையும் கூடையில் எடுத்து வைத்துக் கொண்டு விட்டாள். ஆட்டோ அழைத்து வரச் சென்ற புருஷோத்தம் வரும் போது எல்லாம் ரெடியாக இருக்க வேண்டும். அவனை நினைத்து அவள் மனம் சுருங்கியது.
“அங்கே எல்லாம் எப்படி இருக்குமோ என்னவோ. அந்தக் கண்ணாடிக்காரன் கூறியது போல சண்டைக் காட்சியில் கத்தி, கோடாலி எல்லாம் இருக்குமோ என்னவோ. குட்டிச் செல்லம் பயப்படுவானே. அனாவசியமாக இதில் இறங்க வேண்டி வந்தது” என்று நினைத்து நிம்மதியின்றித் தவித்தாள்.
ஆட்டோவைத் தேடி கடைத்தெருவில் நடந்து கொண்டிருந்த புருஷோத்தம், “சமீபகாலமாக வாழ்க்கை நல்ல நிலைமைக்கு வரும் குறிப்புகள் நிறையவே தென்படுகின்றன” என்று உற்சாகமாக நினைத்துக் கொண்டான். “எல்லாம் நினைத்தபடியே நடக்கும். கவலை வேண்டாம். இந்த நிம்மி நாய்க்குட்டியை சரியாக மேனேஜ் செய்தால் போதும்” என்று மனைவியைப் பற்றி நினைத்துக் கொஞ்சம் எரிச்சலடைந்தான். நான்கு அடி எடுத்து வைத்ததும், சாலையின் ஓரம் நின்றிருந்த ஆட்டோ தென்பட்டது. டிரைவர் பின் சீட்டில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தான். ஆச்சர்யத்தோடு, “சாரதி ஸ்டுடியோவுக்கு வரியா” என்று கேட்டான் புருஷோத்தம். “ஏறுங்க” என்பது போல கையைக் காட்டிவிட்டு முன் சீட்டிற்கு மாறினான் டிரைவர்.

வீட்டுக்கு வழி சொல்லிவிட்டு, “பேப்பரில் என்ன புது செய்தி?” என்று கேட்டான்.
“புதுசா என்ன இருக்கப் போவுது? கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பேப்பர்ல பாதி செய்தி இதுதான். மீதி பேப்பர்ல எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தல், தலைவர்களின் வாக்குறுதிகள், சினிமா செய்திகள். இவ்ளோதான்” என்றான் ஆட்டோ டிரைவர் அலுத்துக் கொண்டே.
“மீதியெல்லாம் நமக்கெதுக்கு? சினிமா செய்தி என்ன சொல்லுது? நம்ம ஃபீல்ட் அதுதானே” என்றவன், பெருமையோடு காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்.
டிரைவர் திரும்பி புருஷோத்தமைப் பார்த்து, “’நீயே நான்’ங்கற சினிமா பார்த்தீங்களா, சார்?” என்று கேட்டான்.
“மூணு தடவ பார்த்தேம்ப்பா. சூப்பர் ஹிட் மூவி. அதுல என்ன விசேஷம்?” ஆர்வத்தோடு கேட்டான் புருஷோத்தம்.
“அதுல குதிரை மேல ஃபைட்டிங் சீன் இருக்கு பாத்தீங்களா? அது பத்தி ஏதோ தகறாரு நடந்திச்சாம், சார். ‘அனிமல் வெல்ஃபேர் போர்டு’ காரங்க அந்த சினிமா ஓடக் கூடாதுன்னு கேஸ் போட்டாங்களாம்” என்றான்.
“ஏனாம்?”
“அந்த போர்டுகாரங்ககிட்ட பர்மிஷன் வாங்காமல் விலங்குகளை ஆக்டிங் செய்ய வைக்கக் கூடாதாம்.”.
“இவுங்க பிரச்சினைதான் என்னவாம்? நாளைக்கு சினிமால மாடுங்களையும். கழுதைங்களையும் காட்டினாலும் பிரச்சினை பண்ணுவங்களா?” ஏளனமாகக் கேட்டான் புருஷோத்தம்.
“விலங்குகளை நடிக்க வெச்சு சித்திரவதை செய்வது குற்றமாம், சார்”.
“ரொம்ப அழகுதான் போ. அதுங்க மேல சுமை ஏற்றி கஷ்டப்படுத்தினாலோ, வயல் வேலைகள் செய்ய வெச்சாலோ தப்பில்லையா? சினிமால ஹீரோவுக்குச் சமமா ஆக்ட் செய்ய வெச்சா தப்பா?” கிண்டலாகச் சிரித்து, “அதோ அந்தக் கடைக்கிட்டே நிறுத்து” என்றான்.
தோளைக் குலுக்கியபடி ஆட்டோவை நிறுத்தினான் டிரைவர். மகனோடு நிர்மலா ஏறியவுடன் ஆட்டோ கிளம்பியது. சற்று தொலைவு சென்றதும் நிர்மலாவின் முகத்தைப் பார்த்தான் புருஷோத்தம். அவள் கண்களில் வெளிப்பட்ட வருத்தம் அவனுக்குத் தெளிவாகப் புரிந்தாலும், அவற்றைப் பற்றி அவன் கவலைப்படுவதில்லை. அவனுடைய கவனமெல்லாம் தன் விருப்பம், தன் தேவை, தன் முடிவுகள் பற்றியே இருக்கும். நிர்மலாவின் முகமும் கண்களும் மூக்கும் சிவந்து காணப்பட்டதைப் பார்த்ததும் அவனுக்கு ஆத்திரமாக வந்தது.
“ஏண்டி இப்படி தரித்திரம் புடிச்சா மாதிரி முகத்த வெச்சிருக்கே? உன் புள்ளையில்லாட்டா அவுங்களுக்கு ஆயிரம் புள்ளைங்க கிடைப்பாங்க. இன்னும் பேச்சு கூட வரதுக்கு முன்னாடியே இவன் ஹீரோ ஆகப் போறாண்டி, பைத்தியக்காரி. ஹேப்பியா பார்ட்டி வெச்சுக் கொண்டாடாம அழுதுட்டிருக்கியே. அங்கே அவுங்க உன்னோட முகத்தப் பார்த்தாங்கன்னா, நம்பள வந்த வழியே அனுப்பிடுவாங்க” குரலை உயர்த்தாமல் நிர்மலாவிடம் அழுத்தமாகக் கூறினான் புருஷோத்தம்.
ஆட்டோ டிரைவர் முன்னால் இருந்த கண்ணாடி வழியாக பின் சீட்டில் நடப்பதை பார்த்தான். அவள் அழுது சிவந்திருந்த கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தாள். அவள் மடியில் ஒரு வயது தாண்டிய ஆண் குழந்தை கன்னத்தில் திருஷ்டிப் பொட்டோடு கொழுகொழுவென்று அழகாக அமர்ந்திருந்தான். கருநிறக் கண்களால் உலகத்தை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான். எரிச்சலோடு பார்வையை பாதையில் செலுத்திய புருஷோத்தமனுடைய கண்கள் டிரைவரின் கண்களைச் சந்தித்தன. முகம் சுளித்து, “நீ ரோட்டைப் பார்த்து ஓட்டுய்யா” என்றான் கடுப்பாக.
டிரைவர் வேகத்தை அதிகரித்து, “உண்மையைச் சொல்லணும்னா, விலங்குங்கள் நடித்த சினிமா எல்லாமே பிரச்சனையில் மாட்டிகிட்டவை தான். ‘ஹாத்தி மேரே சாத்தி’ மூவியில் இருந்து ‘ஜோதோ அக்பர்’ வரை எல்லா சினிமாவும் வழக்கில் சிக்கியவையே” என்றான் பழைய உரையாடலைத் தொடர்ந்தபடி.
“இவுங்க பிரச்சினைதான் என்ன?” சலிப்போடு கேட்டான் புருஷோத்தம்.
“என்னமோ சார். தினம் இத்தனை மணி நேரம் தான் வேலை செய்யணும், ஷூட்டிங் ஸ்பாட்ல கால்நடை மருத்துவர் ஒருத்தர் இருக்கணும், இன்னும் என்னென்னவோ ரூல்ஸ் இருக்குதாம் சார். விலங்குகளுக்கு தொந்தரவு கொடுக்காம நடிக்க வைக்கணுமாம்” பேபரில் படித்த விவரங்களை எல்லாம் ஒப்பித்தான் டிரைவர்.
‘சரி தான். சின்னக் குழந்தைகளை சினிமாவில் நடிக்கக் வைக்கக் கூடாதுன்னு இன்னும் ரூல்ஸ் போடலை. ஜலதோஷம் பிடித்தாலும் இருமினாலும் நடிக்கக் கூடாது, கண் மேல் லைட் படக் கூடாது, காதுல சத்தம் விழக் கூடாதுன்னு எல்லாம் ரூல்ஸ் போட்டங்கன்னா நம்ம வாயில மண்ணுதான்’ என்று நினைத்துக் கொண்ட புருஷோத்தம், குழந்தையையும், விருப்பமில்லாமல் அமர்ந்திருந்த நிர்மலாவையும் கவனித்து, ‘இவ காதுல விழுந்திசின்னா ஏதோதோ கண்டிஷன் போட்டு தொல்லை கொடுப்பா. எவனாவது லாயர் கிட்ட போய் கேஸ் போட்டாலும் போடுவா. அதுல ஆச்சர்யப்படுறதுக்கு இல்லை’ என்று நினைத்துக் கொண்டான்.
மீண்டும் அதற்குள், “இவ ஒரு மடச்சி. இவளுக்கு அத்தனை அறிவு கிடையாது. இந்த டாப்பிக்கை இதோடு விட்டுவிடுவது நல்லது’ என்று நினைத்து, “யார் பிரச்சினை எப்படியிருந்தால் நமக்கென்ன” என்றான்.
நிர்மலாவின் மனம் கடந்து போன சம்பவங்களைச் சுற்றி வந்தது. புருஷோத்தம் வேலை செய்யும் கம்பெனி மூடப்படும் நிமைக்கு வந்தது, சரியாக அப்போதே ‘எப்போதும் உனக்காக’ என்ற சினிமாவில் ஒரு வயது ஆண் குழந்தையின் கதாபாத்திரத்திற்காக அழகான குழந்தை வேண்டும் என்று பேப்பரில் அறிவிப்பு வந்தது. அவர்கள் கேட்டதற்கிணங்க பையனின் போட்டோ மற்றும் பிற விவரங்களை போஸ்ட் செய்தான். எதிர்பார்த்துக் காத்திருந்த பின் அவர்களிடமிருந்து ஸ்க்ரீன் டெஸ்டுக்காக அழைப்பு வந்தது. குழந்தையை அழைத்துக் கொண்டு அவளும் கணவனும் சாரதி ஸ்டுடியோவுக்குச் சென்றார்கள். பெரிய ஷெட் போட்ட கட்டடங்கள், சக்கரம் வைத்த ட்ராக்ஸ் மீது ஊர்ந்த கேமராக்கள், அவற்றை நடத்தியபடி ஏதோ புரியாத மொழி பேசிய டெக்னிஷியன்கள் என்று அது ஒரு புதிய உலகமாகத் தோற்றமளித்தது. அவர்களைப் போலவே சின்னக் குழந்தைகளோடு வந்த பெற்றோர் பலர் பொறுமையாகக் காத்திருந்தது, ஹீரோயின் தூக்கக் முடியாமல் தூக்கியவுடன் குழந்தைகள் அழுதது, அந்த அழுகையைக் கண்டு கொள்ளாமல் மைக்கில் கேட்ட பாட்டிற்குத் தக்கவாறு ஹீரோயின் ஸ்டெப்ஸ் போட்டது என்று எல்லாமே அதுவரை பார்த்திராத புது உலகம்.
மேலுக்கு மகிழ்ச்சியோடு விசாரித்துக்கொள்வது போல் தோற்றமளித்தாலும் அங்கிருந்த பெற்றோர் அனைவரும் ஒருவரையொருவர் போட்டியாளராகப் பார்த்ததை உணர்ந்தாள். புருஷோத்தம், அந்தக் குழந்தைகளோடு நந்துவை ஒப்பிட்டு, “இவுங்க எல்லாம் வெறும் வேஸ்ட். நம்ம பையனோடு போட்டி போடக் கூடியவங்க யாரும் இல்லை. நம்ம பையன் அவுங்க அப்பாவையே உரிச்சு வெச்சிருக்கான்” என்று அவளுடைய காதில் கூறியபடி காலரை தூக்கி விட்டுக் கொண்டதை நினைத்துப் பார்த்தாள். அப்போது வரை அவள் மகிழ்ச்சியாகவே இருந்தாள்.
ஒரு மணிக்கு காரியரில் அனைவருக்கும் உணவு வந்தது. “எல்லாரும் சாப்பிட வாங்க சார்” என்று கேட்டரிங்காரர் அழைத்ததும் “கல்யாண வீட்டில் மாப்பிளை மரியாதை போலுள்ளது” என்று மகிழ்ந்தான் புருஷோத்தம்.
ஆனால், “ஷூட்டிங் என்றால் விளையாட்டு அல்ல. கல்யாணத்துக்குப் போயிட்டு வர்ர மாதிரி இல்ல. சின்ன குழந்தைங்களால இந்தனை லைட் வெளிச்சத்தையும் சூட்டையும் தாங்கமுடியாது. சண்டைக் காட்சில குழந்தைகளைத் தூக்கிப் போட்டுப் பிடிப்பாங்க. கத்தி, பிஸ்டல், குழந்தைங்களைத் தூக்கத் தெரியாத ஹீரோயின் கையில் சிக்கி குழந்தைகள் நசுங்குவது எல்லாம் நடக்கும். எதுக்கு வந்தோம் கடவுளேன்னு தோணும். ஆனாலும் சினிமா என்றால் ஒரு குஷி, அவுங்க கொடுக்குற பணத்தின் மீது ஆசை. நீங்க என்ன சொல்றீங்க?” என்றான் புருஷோத்தமின் அருகில் அமர்ந்திருந்த கண்ணாடி போட்ட ஆசாமி.
அப்போது வரை சினிமாவில் ஊஞ்சல் சீன்கள், சின்ன குழந்தைகளை ஹீரோவும் ஹீரோயினும் அங்கும் இங்கும் தூக்கிச் சென்று விளையாட்டுக் காட்டுவது என்று இவற்றைப் பற்றியே நினைத்திருந்த நிர்மலாவுக்கு குழந்தையை பிடுங்கிக் கொண்டு ஓடிப்போகும் காட்சிகள், குண்டர்களின் பயங்கரமான வேடங்கள், அழுது அழுது வெளிறிய குழந்தைகளின் முகங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தன. அவளுக்கு சாப்பிடக் கூட பிடிக்கவில்லை. “நாம போயிடலாங்க” என்று புருஷோத்தமிடம் கெஞ்ச ஆரம்பித்தாள். அவனுக்குத் தாங்க முடியாத கோபம் வந்தது.
“ஏண்டி? என்னாச்சு? அந்தக் கன்ணாடிக்காரன் சொன்னதை அப்படியே நம்பிட்டியா? அவனோட புள்ளையைப் பார்த்தியா? எலிக் குஞ்சு மாதிரி இருக்கு. நம்ம குழந்தை போட்டிக்கு வந்திட கூடாதுன்னு அவனுக்கு ஒப்பாரி” என்று அவனைத் திட்டித் தீர்த்தான்.
“இவன் செலெக்ட் ஆனாத்தானே வேணுமா வேண்டாமான்னு நாம தீர்மானிக்க முடியும்? அந்த டெஸ்ட் ஏதோ நடந்து முடியட்டுமே. அதுக்குள்ள ஏன் பிடுங்கி எடுக்குறே?” என்று அவளைக் கடித்து கொண்டான்.
நந்துவின் முறை வருவதற்குள் அவன் தூங்கி விழித்து கொண்டு விட்டதால் உற்சாகமாக இருந்தான். வெளிச்சத்தை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவனை தூக்கிக் கொண்டு பின்னணியில் கேட்ட பாட்டிற்கு ஏற்ப நான்கைந்து ஸ்டெப் போட்டு நடந்து விட்டு ஹீரோயின் சென்று விட்டாள். சரியாக ஒரு வாரத்தில் நந்து செலக்ட் ஆகிவிட்டதாகத் தெரிந்தது. உடனே சென்று அவர்களுடைய நிபந்தனைகள் எல்லாவற்றுக்கும் சம்மதிப்பதாக எழுத் கொடுத்துவிட்டு வந்தான் புருஷோத்தம்.
“என்ன கதைங்க? சண்டைக் காட்சியெல்லாம் உண்டா?” என்று கேட்டாள் நிர்மலா.
“அட, இவ ஒருத்தி. சண்டைக் காட்சி இருந்தா இவனா போடப் போறான்? எதுக்கு அழணும், எதுக்கு சந்தோஷப்படணும்னு கூட உனக்குத் தெரியாதா?” என்று ஒரு சத்தம் போட்டு அவள் வாயை அடக்கினான் புருஷோத்தம்.
“ஃபைட்டிங் இருந்தால் இருபதாயிரம் இல்லிங்க, ஒரு லட்ச ரூபா கொடுத்தாலும் நமக்கு வேண்டாம்” என்று அவள் பிடிவாதமாகச் சொன்னாள்.
“பணத்தோட மதிப்பு தெரியாம பேசாதே. லட்சத்துக்கு எத்தனை பூஜ்யம்னு தெரியுமா உனக்கு? எனக்கு இவன் ‘பேட் லக்’ எடுத்து வந்துட்டான்னு நினச்சு வருந்திட்டிருந்தேன். எத்தனை ‘லக்கி ஃபெலோ’ன்னு இப்போதான் தெரிஞ்சுது. நீ இந்தமாதிரி குறுக்கே வராம இருந்தா இவனோடு சேர்ந்து எனக்கும் சான்ஸ் கிடைக்கும்னு நினைக்குறேன்” என்றான் மகிழ்ச்சியாக.
இத்தனை நாள் கழித்து மகனை ‘அதிரிஷ்டக்காரன்’ என்று சொல்லி தூக்கிக் கொஞ்சுவதைப் பார்த்து அவளுக்கு ஆறுதலாக இருந்தது. அதுமட்டுமின்றி, அவள் எத்தனை வேண்டாமென்று சொன்னாலும் அவன் கேட்கமாட்டான் என்பதும் அவளுக்குத் தெரியும். அவனை எதிர்த்துப் பேசினால் வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. எத்தனை பிடிக்காத விஷயமானாலும் அவளுடைய எதிர்ப்பு மழைக்காலத்தில் முளைக்கும் காளான் போன்றதே. அதற்கு வலிமையிருக்காது. அதனால் எப்போதும் போலவே தன்னுடைய அச்சத்தை மனத்திற்குள் அடக்கிவிட்டு அவன் கூறியது போல செய்வதற்குத் தயாரானாள்.
அதன் பலனே இன்றைய பயணம். கணவன் அதட்டிய உடனே மடியில் அழகாகப் படுத்திருந்த நந்துவைப் பார்த்து, “நாந்தான் அனாவசியமா பயப்படுறேனோ என்னவோ, அங்கே எல்லாம் நன்றாகத்தான் நடக்கும் போலிருக்கு” என்று தன்னைத் தானே ஆறுதல் படுத்திக் கொண்டாள் நிர்மலா.
ஷூட்டிங் நடக்கும் இடத்தை அடைந்த போது மணி ஒன்பதாயிற்று. பதினோரு மணிவரை காத்திருந்த பின் ஹீரோயின் ‘காமினி மேடம்’ வருகை தந்தாள். “நந்துவுக்கு மேக்கப் செய்யணும். கூட்டிட்டு வாங்க” என்று அவசரப்படுத்தினார்கள். மேக்கப் ரூமில் அவனுக்கு பௌடர் பூசி. கன்னத்தில் இருந்த கருப்பு மையைத் துடைத்துவிட்டு கருப்பு ஸ்டிக்கர் போட்டு ஒட்டினார்கள். டைப்பர் கட்டி, சில்க் ஜிப்பா, பைஜாமா அணிவித்தார்கள். கழுத்தில் இரண்டு சங்கிலி போட்டார்கள்.
அரைமணி நேர தாமதத்திற்குப் பிறகு தாலாட்டுப் பாடும் சீன் தொடங்கியது. அந்த லைட்டுகளின் வெப்பம், பழக்கமில்லாத முகங்கள் எல்லாம் பார்த்து குழந்தை நிறுத்தாமல் அழத் தொடங்கினான். தேவையான எஃபெக்ட்டுக்காக ரொம்ப நேரம் அவஸ்தைப்பட்டார்கள். ‘ஏர் கூலர்’ அருகில் உட்கார வைத்து, வீட்டிலிருந்து எடுத்து வந்த பருப்பு சாதமும் தயிர்சாதமும் ஊட்டி விட்டாள் நிர்மலா.
அதன் பிறகு அவன் கொஞ்சம் அமைதியாக இருந்து, அவ்வப்போது கொஞ்சம் சிரித்த முகத்தோடும் இருந்ததால் தாலாட்டின் முதல் சரணம் எடுக்க முடிந்தது. இறுதியில் ஹீரோவும் ஹீரோயினும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு பகபகவென்றும் கலகலவென்றும் சிரித்த பின்னர் காட்சி முடிவடைந்தது. இறுதிக் காட்சியில் குழந்தை அழுததால் அவனுடைய முகம் தெரியாமல் ஷூட் செய்துவிட்டு ‘பேக்கப்’ என்றார்கள்.
மறுநாள் கிளம்பியதில் இருந்து ‘ஃப்லிம்சிட்டி’ சென்று சேரும் வரை நந்து நன்றாகத் தூங்கினான். ஆனால் அங்கு போன பின்னர் தோட்டத்தில் ஹீரோயினோடு நடிக்கும் சீனில் நிறுத்தாமல் அழுது தீர்த்தான். பளபளப்பான ‘சம்கி’ வைத்துத் தைத்த புடவை கட்டியிருந்த கதாநாயகி அவனைத் தூக்கிக் கொண்டு அங்குமிங்கும் ஓடிய போது நிர்மலாவால் பொறுக்கவே முடியவில்லை. அந்த புடவையில் இருந்த சம்கி எல்லாம் நிர்மலாவின் இதயத்தில் குத்துவது போலிருந்தது. புருஷோத்தம் டீ காப்பி எடுத்து வரும் பையன்களை அதட்டிக் கொண்டும், சாப்பாடு நேரத்தில் கேட்டுக் கேட்டு வாங்கித் தின்று கொண்டும் காலம் கழித்தான். ஷூட்டிங் இடைவேளையின் போதெல்லாம் ஓடிச் சென்று குழந்தையை வாங்கிக் கொண்டிருந்த நிர்மலாவைப் பார்த்து, “அவசரத்தைப் பாரு” என்று சொல்லிச் சிரித்தான். ஷூட்டிங் முடிந்த பின் அவர்களுடைய வேன் ஒன்றில் ஏறி வீடு வந்து சேர்ந்தார்கள். புருஷோத்தம் சீட்டியடித்துக் கொண்டு மகிழ்ந்திருக்கையில், குழந்தையை கவனித்து, வீட்டு வேலை எல்லாம் முடிந்து களைப்போடு படுத்துறங்கினாள் நிர்மலா.
மறுநாளும் அதே போல் ஃப்லிம்சிட்டிக்குப் போனார்கள். டைரக்டர் காட்சியை விவரிக்கையில், இருவரும் கவனத்தோடு கேட்டார்கள். முதலில் மார்கெட்டில் ஷாப்பிங் செய்யும் ஹீரோயினின் கையிலிருந்து குழந்தையைக் ரௌடிகள் பிடிங்கிக் கொண்டு ஓடிப் போவது வரை எடுப்பார்கள். அடுத்த சீனில் ஹீரோயினின் கத்தல் கேட்டு போலீசார் அவர்களைத் துரத்திச் செல்வார்கள். குண்டர்கள் ஓடிப் போய் ரயில்வே ஸ்டேஷனை அடைவார்கள். அங்கு ரயில் தண்டவாளத்தின் குறுக்கே கொஞ்சம் சேஸிங் சீன் நடக்கும். அப்போது ஹீரோ என்ட்ரி தருவார். ட்ரெயினில் ஒரு சண்டைக் காட்சி. பிறகு ஹீரோ ஒரு கோடௌனில் ரௌடிகள் அனைவரையும் சுற்றி வளைத்துப் பிடித்து மண்ணைக் கவ்வ வைத்து, குழந்தையைக் காப்பாற்றுவார். இறுதியில் ஏர்ப்போர்ட்டில் குழந்தையோடு கூட ஹீரோவும் ஹீரோயினும் விமானத்தில் ஏறுவார்கள் என்று கதையை விவரித்தார் டைரக்டர்.
கேட்டுக் கொண்டிருந்த நிர்மலாவுக்கு இதயம் நின்று விடும் போலிருந்தது. கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. டைரக்டர் அதை பார்த்து, “எதுக்கும்மா அத்தனை பயப்படுறே. எங்கேயுமே குழந்தைக்குத் தொந்தரவு கொடுக்க மாட்டோம். எங்களை நம்புங்கம்மா” என்றார். அவள் குளிர் காற்று வீசிய மேகத்தை போல நடுங்கினாள்.
“வேண்டாம் சார், இதெல்லாம் எங்க குழந்தைக்கு வேண்டாம். வேற யாருக்காவது இந்த சீனெல்லாம் கொடுத்துடுங்க சார். எங்க நந்துவுக்கு வேண்டாம்” என்றாள் அழுகையினூடே.
சுற்றிலும் டெக்னிஷியன்கள் கூடினார்கள். “என்ன ஆச்சு?” என்று கேட்டுக் கொண்டே தயாரிப்பாளர் வந்தார். விஷயத்தைப் புரிந்து கொண்டவுடன், “என்னய்யா புருஷோத்தம்? எல்லாம் சொல்லி அவுங்க சம்மதிச்ச அப்புறம் தான் குழந்தையை அழைச்சுட்டு வந்தேன்னு சொன்னாயே? பாதி ஷூட்டிங் ஆன பிற்பாடு ஆயிரக்கணக்கில் அட்வான்ஸ் வாங்கிட்டு, இப்போ இப்படி அடம் பிடிச்சா எப்படிப்பா?” என்றார் கோபத்தோடு.
புருஷோத்தம் நிர்மலாவின் அருகில் வந்து தோளை சுற்றிக் கையைப் போட்டு “இப்படி பயந்தால் எப்படிடீ? குழந்தை அழாமலே பெரியவனா வளர்ந்திடுவானா?” என்று கேட்டான் அவளைக் கொஞ்சுவதுபோலச் சிரித்தபடி. அவனுக்குள்ளே பொங்கி எழுந்த கோபமெல்லாம் இடது கை வழியே அவளைச் சுற்றி அவளுடைய வலது தோளைப் பிடித்திருந்த கை விரல்களிடம் வந்து சேர்ந்தது. கட்டைவிலை அவளுடைய தலைமுடியில் செலுத்தி தலையை பலமாக அழுத்தினான். மீதி விரல்கள் கோபத்தோடு அவளுடைய தோளைச் சுற்றி இறுகின. அந்தச் செயல் அளித்த குறிப்பை உணர்ந்தவுடன் உதவியற்றவளாக துயரத்தைத் தொண்டை அடைக்க விழுங்கிக் கொண்டாள் நிர்மலா.
பகல் முழுவதும் மார்க்கெட் சீன் ஷூட்டிங் நடந்தது. ரௌடிகள் தூக்கிக் கொண்டு ஓடிய போது குழந்தையின் அழுகை அசலாக இருக்கும் என்பதால் நந்து அழுதாலும் கண்டுகொள்ளாமல் ஷூட்டிங்கைத் தொடர்ந்து நடத்தினர்.
கனத்த இதயத்தோடு வீடு வந்து சேர்ந்த போது இரவாயிற்று. ஒரு புறம் சமையல் செய்து கொண்டே மறுபுறம் வெந்நீர் காய்ச்சி நந்துவுக்குக் குளிப்பாட்டினாள். அவனுக்கு சோறு ஊட்டி தூங்கச் செய்தாள். அதுவரை புருஷோத்தம் கூண்டில் அடைப்பட்ட சிங்கத்தைப் போல காத்திருந்தான். தன்னுடைய கவலையில் அவனுடைய ஆத்திரத்தை கவனிக்காத நிர்மலா களைப்போடு வெளியே வந்தாள்.
“என்னடி? என்னடி அங்கே வந்து வேஷம் போடுறே? கிளிக்குச் சொல்லிக் கொடுத்த மாதிரி சொன்னாலும் அங்க வந்து அந்த அழுகை அழுவறே? இந்த சான்ஸ் மட்டும் கை நழுவிப் போயிருந்தா, அங்கேயே உன்னை வெட்டிக் கூறு போட்டிருப்பேன்” என்று உறுமியவன், அவள் தலை முடியைப் பிடித்து பலமாகப் பின்னால் இழுத்தான்.
சிவந்த கோடுகள் நிறைந்த விழிகளால் முறைத்துப் பார்த்தவனைக் கண்டு அவளுக்குத் தலை சுற்றியது. இதுவரை அவளை அவன் அடித்ததில்லை. வலது தோளில் அவன் அழுத்திப் பிடித்திருந்த இடம் இன்னும் வலித்தது. இந்தச் சினிமா வேடத்தில் இருந்து தன் பிள்ளை எப்படித் தப்புவான் என்று அவளுக்குப் புரியவில்லை. சிகிச்சைக்கு வழியில்லாத நோயை வாயை மூடிக் கொண்டு பொறுத்துக் கொள்வதைப் போல இதயத்தைக் கல்லாக்கிக் கொண்டு மெளனமாக இருந்து விட்டாள் நிர்மலா.
தட்டில் சாப்பாடு போட்ட உடனே வயிறு நிறையச் சாப்பிட்டு ‘பேவ்’ என்று ஒரு ஏப்பததையும் விட்டு தட்டிலேயே கை கழுவிக் கொண்டு அவன் எழுந்த போது, அவளுக்கு வயிற்றைப் புரட்டியது. பாத்திரங்களைத் தேய்த்து முகம் கழுவிக் கொண்டு வந்து குழந்தையின் அருகில் அவள் படுத்த போது, புருஷோத்தம் வண்ண வண்ணக் கனவுகளில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான்.
தன்னை மறந்து அசந்து போய் தூங்கி கொண்டிருந்த குழந்தையின் உடலெங்கும் கண்ணாடியும் சம்க்கியும் குத்திக் கன்றிப் போன அடையாளங்கள் தெரிந்தன. அவனைப் பத்திரமாக இறுக அனைத்துக் கொண்டு படுத்த நிர்மலாவின் கண்களில் இருந்து வெப்பமான கண்ணீர் வழிந்தது.
விடியற்காலையில் நந்துவின் உடல் சூடாக அவள் மேல் படவே டக்கென்று எழுந்தாள் நிர்மலா. பரபரப்பாக கணவனை எழுப்பினாள். எரிச்சலோடு எழுந்தான் புருஷோத்தம். குழந்தைக்கு ஜுரமாக இருப்பதாகக் சொன்னவுடன் அவனுக்குத் தன்னுடைய வண்ணக் கனவுகள் சிதறிப் போய்விடும் என்ற அச்சம் ஏற்பட்டது. சீக்கிரம் ஷூட்டிங் முடிந்து சினிமா ரிலீஸ் ஆனால் மேலும் வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்திருந்தான். அதற்குள் இந்தப் பயல் ஜுரத்தைக் கொண்டுவந்து விட்டானே என்று அவனுக்குச் சலிப்பாக இருந்தது.
“போய், அந்த குரோசின் பாட்டிலை எடுத்துட்டு வா” என்றான். இரண்டு ஸ்பூன் சிரப் குழந்தைக்கு ஊட்டி அவனை மீண்டும் படுக்க வைத்தாள். குழந்தையின் கால், கை, நெற்றி எங்கும் தன்னுடைய குளிர்ந்த விரல்களால் தடவி விட்டுக் கொண்டு அருகிலேயே படுத்தாள் நிர்மலா.
காலையில் புருஷோத்தமை எழுப்பி, காபி கொடுத்து, “இன்னைக்கு ஷூட்டிங் வேண்டாங்க. ஒருநாள் நிறுத்துவோம்” என்றாள் கெஞ்சுவது போல.
அவளை ஒரு பைத்தியத்தைப் பார்ப்பது போலப் பார்த்து, “எட்டு மணிக்கு வேன் வரும். ரெடியா இரு” என்றான் அதிகம் பேசுவது அநாவசியம் என்பது போல.
வாசலில் வேன் சத்தம் கேட்டதும், “அங்க செட்ல வந்து குழந்தைக்கு ஜுரம்னு சொன்னாயோ, என்னை விட கெட்ட வில்லன் வேறொருத்தன் இருக்கமாட்டான். ஜாக்கிரதை” என்றான் சுருக்கமாக.
நந்துவுக்கு மீண்டும் குரோசின் சிரப் கொடுத்து தோளில் சாய்த்துக் கொண்டு, அந்த பாட்டிலையும் கையோடு எடுத்துக் கொண்டு வேன் ஏறினாள். ஃப்லிம்சிட்டியில் இருந்த ரயில்வே ஸ்டேஷனில் அன்றைக்கு ஷூட்டிங் நடந்தது. போலீசார் துரத்த குண்டர்கள் தண்டவாளத்தின் குறுக்காக ஓட்டமெடுத்தார்கள். போலீசாருக்குப் பிடிபடாமல் குழந்தையை ஒருவர் கையிலிருந்து இன்னொருவர் கைக்குத் தூக்கி எறிவது போலக் கொடுத்துக் கொண்டே ஓடினார்கள். பலவிதமாக ஷூட்டிங் நடந்தது. இடைவேளை வரை கடவுளை வேண்டிக் கொண்டே இருப்பதும், இடைவேளையின் போது ஓடிப்போய் குழந்தையை வாங்கிக் கொள்வதுமாக நிர்மலா உன்மத்தம் பிடித்தவளைப் போல இருந்தாள். குழந்தை சிரிக்க வேண்டிய சீன் இல்லை எனபதால், அவன் அழுதாலும், தொய்ந்து விழுந்தாலும் கவலையின்றி ஷூட்டிங் நடந்தது. நிர்மலாவும் அவர்களுக்கு ஒத்துழைப்பாக நடந்து கொண்டாள். எப்படியோ இது முடிந்தால் போதும் என்று ஆகிவிட்டது அவளுக்கு.
மாலையில் ஷூட்டிங் முடிந்தபோது குழந்தைக்கு மீண்டும் ஜுரம் கொதித்தது. இரவு இருமலும் ஜலதோஷமும் சேர்ந்து கொண்டது. மூக்கு ஒழுகிக் கொண்டும் பலவீனமாக அழுது கொண்டுமிருந்த நந்துவைப் பார்த்து புருஷோத்தம் என்ன நினைத்தானோ, அருகில் இருந்த குழந்தை நல மருத்துவரிடம் தூக்கிச் சென்றான். அவன் வாங்கிவந்த மருந்துகளைக் கொடுத்து ஒரு இட்லி ஊட்டி மெதுவாகப் படுக்க வைத்தாள் நிர்மலா. எதுவும் பேசாமல் வேலை செய்து கொண்டிருந்த மனைவியைப் பார்த்து வழிக்கு வந்து விட்டாள் என்று மகிழ்ந்தான் புருஷோத்தம்.
பொழுது விடிந்த பின்னும் நந்துவுக்கு ஜுரம் குறையவில்லை. புருஷோத்தம் சற்று நேரம் யோசித்துவிட்டு சினிமாக்காரர்களுக்கு போன் செய்து சொன்னான். “ஐயோ, அப்படியா? காமினி மேடம் டேட்ஸ் ரொம்ப கஷ்டப்பட்டு கிடச்சுது சார். சரி. போகட்டும். ஹீரோயின் இருக்குற சீன மட்டும் இன்னைக்கு ஒருநாள் எடுத்துக்குறோம். அடுத்த ரெண்டு நாள் பிரேக் கொடுக்கலாம். நம்ப யூனிட்ல டாக்டர் இருக்காரு. ஒரு மணி நேரத்துல, இல்லாத போனா ரெண்டு மணி நேரத்துல குழந்தையோட சீனை முடிச்சிடலாம்” என்றார்.
நிர்மலா வழக்கம் போல புருஷோத்தமிடம் திட்டு வாங்கிக் கொண்டு ரெடியாகிக் கிளம்பினாள். உடம்பு சரியில்லாமல் இருந்த நந்துவைப் பார்த்து யூனிட்டில் எல்லோரும், “ஐயோ” என்றார்கள். தயாரிப்பாளர் கூட வந்து பார்த்தார். குழந்தை இருக்கும் சீன்களை எல்லாம் கிடுகிடுவென்று எடுத்து விட்டு விரைவாக ஸ்பெஷல் வேனில் வீட்டுக்கு அனுப்பும்படி சொல்லிவிட்டுச் சென்றார். முதலில் ஹீரோவும் ஹீரோயினும் குழந்தையோடு விமானத்தில் ஏறும் காட்சியை முடித்தார்கள். அதன் பிறகு ஹீரோ கோடௌனில் குண்டர்களோடு சண்டையிடும் போது குழந்தையை மார்போடு இறுக அணைத்துக் கொண்டு ஹீரோயின் ஓடி வந்து காரில் ஏறும் காட்சியைப் படமாக்கினார்கள். சரிந்து விழுந்து அழுது கொண்டிருந்த நந்துவைப் படமாக்கிய காட்சிகள் தத்ரூபமாக வந்தன.
காதுகளில் பெரிய ஜிமிக்கி, கழுத்தில் பழைய பாணி ‘ஆண்டிக்’ நகைகள், கண்ணாடி வைத்துத் தைத்த புடவையோடு வெய்யிலில் தளதளவென்று ஒளிர்ந்து கொண்டிருந்த காமினி மேடம், டிஷ்யூ பேப்பரால் வியர்வையைத் துடைத்துக் கொண்டு வந்தாள். மனத்தில் இருந்த அருவருப்பெல்லாம் முகத்தில் காட்டி, “அப்பப்பா என்னா அழுகை? காது ரெண்டும் கிழிஞ்சு போச்சு” என்றாள் காரில் ஏறுகையில்,
“இந்த வெய்யிலில் இந்த டிரெஸ், மேக்கப், அதோடு கூட காதில் அழும் குழந்தையோடு ஓடுவது” சிரித்துக் கொண்டே காரின் கதவைச் சாத்தினாள் ஹீரோயின்.
அழுது அழுது ஓய்ந்து போன நந்துவை இதயத்தோடு சேர்த்து அணைத்துக் கொண்டு கசந்த மனத்தோடு வேனில் ஏறினாள் நிர்மலா.
நந்துவுக்கு ஒரு வாரமாக ஜுரம் குறையவேயில்லை. பயத்தால் திடுக்கிட்டு உடல் சிலிர்த்து சோர்ந்து கிடந்த குழந்தையை நிர்மலா கண்ணுக்கு இமைபோலப் பார்த்துக் கொண்டு சரியான உறக்கமோ உணவோ இல்லாமல் இருந்தாள். அவனுக்கு உடம்பு சரியானபோது இளைத்துத் துரும்பாகி இருந்தான்.
நிர்மலாவுக்கு யூனிட்டில் இருந்து போன் வந்து விடுமோ என்று அச்சமாக இருந்தது. “இன்னும் போன் வரலையே? வேறே யாரையாவது புக் பண்ணிட்டாங்களோ?” என்று புருஷோத்தமுக்குச் சந்தேகமாக இருந்தது. பொறுமையின்றி நேராக சினிமா அலுவலகத்துக்குச் சென்றான். எந்த உபத்திரவத்தை விலைக்கு வாங்கி வருவானோ என்று பயந்து கொண்டே முன்னறையில் நிர்மலா அமர்ந்திருந்தாள்.
மாலையில் மகிழ்ச்சியோடு புருஷோத்தம் வீடு வந்து சேர்ந்தான். கையில் பெரிய பாக்கெட். முக்கியமான வேலை எதையோ சாதித்தது போல நிர்மலாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, பிரேம் போட்ட பெரிய போட்டோவை வெளியில் எடுத்தான். அது குழந்தையைத் தூக்கிக் கொண்டு சிரிக்கும் காமினியின் போட்டோ. வாயில் விரலை வைத்து அசௌகரியமாகத் தெரிந்தான் நந்து. காமினி, கண்ணாடி பதித்த புடவையில், கல் நகை அணிந்து செயற்கைப் புன்னகையோடு விளங்கினாள். போட்டோவை எங்கே மாட்டுவது என்று சுற்றிப் பார்த்து, சுவரில் ஏற்கெனவே தாயும் குழந்தையும் இருந்த காலண்டரைக் கழற்றி விட்டு, அந்த ஆணியில் மாட்டித் தொங்க விட்டான்.
போட்டோவில் தெரிந்த மகனைப் பார்த்து, “நந்து ராஜா, சூப்பர் ஸ்டார் நந்து ராஜா. நாளையிலிருந்து ஷூடிங்கில் பிசியா இருக்கப் போறேடா. உன்னை நீக்கிட்டாங்களோ என்னவோன்னு பயந்து போய் பார்த்தா, புது சினிமாவில் வேஷம் கிடைச்சிருக்குடா, ‘லக்கி ஃபெலோ” என்றான் அடக்க முடியாத மகிழ்ச்சியோடு.
கீழே கிடந்த காலண்டரை உணர்ச்சியற்றுப் பார்த்து சுவரில் சாய்ந்தமர்ந்த நிர்மலாவின் முகத்தில் ஏதோ மாற்றம் தெரிந்தது. கையை இறுக மூடினாள். “தன் குட்டிகளின் பாதுகாப்புக்காக பூனை கூடப் புலியாக மாறும்” என்று எண்ணிக் கொண்டே எழுந்து நின்றாள்.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
