உறங்காமை

தூக்கமும் நம் கண்களைத் தழுவட்டுமே!

இந்தியாவின் மிகச்சிறந்த இதிகாசமான இராமாயணத்தில் இரு முக்கிய தூக்கங்கள் இடம்பெறுகின்றன. 

இமைகள் கண்களைக் காப்பது போல, ஸ்ரீ ராமரையும் சீதாபிராட்டியையும், 14 வருடங்கள். தூங்காமல் லட்சுமணன் உறங்காவில்லியாகப் பாதுகாத்தான்.  அவனது மனைவியான ஊர்மிளா பகல் இரவாக 14 ஆண்டுகள் அவனது உறக்கத்தையும் சேர்த்துத் தூங்கினாள். விஸ்வாமித்திர மகரிஷி தந்த வரத்தினால், மனித இயல்பை மீறிய தூக்கமின்மையை அவனால் கைக்கொள்ள முடிந்தது. 

கும்பகர்ணனோ,  தூக்கத்தின் நாயகன். ‘நித் யத்வம்’ என்று வரம் கேட்க தவத்தில் இருந்தவன் நாவில் , சரஸ்வதி தேவி அமர்ந்து கொண்டு அதை ‘ நித்ரத்வம்’ என்று   மாற்றிச் சொல்ல வைக்கிறார். 

உறக்கம் ஆட்கொள்ளாத உயிரினங்கள் உலகத்தில் இல்லை. நம் மரபில் தாலாட்டு என்பது முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

நீலாம்பரி ராகம் இரவின் ராகமாக கையாளப்படுகிறது பிள்ளைத்தமிழ் பாடல்கள், தேவாரங்கள், ஆழ்வார் பாசுரங்கள் போன்ற பலவற்றில் கடவுளுக்குத் தாலாட்டுப் பாடி சீராட்டுகிறோம்.அதே இலக்கியத்தில் தூக்கத்திலிருந்து எழுப்பவும் பாடல்கள் இருக்கின்றன. மார்கழி மாதத்தில் துயில் எழுப்ப என்றே  திருப்பாவை ,திருவெம்பாவை. திருப்பள்ளி எழுச்சி போன்ற பாடல்கள் மிகவும் பிரசித்தம். மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணத்தை ‘அறிதுயில் அரங்கன்’ என்று கொண்டாடுகிறோம். ‘தூய  தாமரைக்கண்களும் துவரிதழ் பவழ வாயும்’ என்ற பாசுரம், பெருமாளின் கண்கள் தூய தாமரையை ஒத்திருப்பதைுயும், அவை தாம் அரைக் கண்கள்  என்று பதம் பிரிக்கும் வகையிலும் அமைந்திருக்கும் அழகும்்தமிழின் சிறப்பல்லவா?

தமிழ் திரைப்படப் பாடல்களில்  ‘காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே’,  ‘தூங்காத பெண்ணொன்று கண்டேன்’, ’கண்ணுறங்கு சூரியனே’,  ‘தூங்காத கண்கள் இரண்டு’ என்று பாடப்பட்ட பாடல்களை அடுக்கிக் கொண்டே போகலாம். 

குறைந்தது ஆறு மணி நேரமாவது மனிதன் தூங்கினால், அவனது ஆரோக்கியமும், ஆயுளும் வலுப்படும் என்று அறிவியலும் சொல்கிறது. ஆயினும், இந்த உலகில் பலர் தூக்கமின்மை என்னும் நிலையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தூக்கமின்மை, கனவுகள் என்பதைப்  பற்றி ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள கட்டுரையை தமிழில் பார்க்கலாமா? 

அதிகாலை 3 மணிக்கு’தூங்குகிறாயா?’என்ற கேள்விக்கு  ‘ம்… ம்’என்று பாதி விழிப்பு பாதி தூக்க நிலையில் பதில் வந்தால், உறக்கம் வராமல் தவிப்பவர் தன் விதியை நொந்து கொண்டு புரண்டு படுப்பதைத் தவிர வேறு வழியில்லை. (உரையாடலைத் தொடர்வது விவாகரத்தை நோக்கிய பாதையாகத் திரும்பும் அபாயம் ஏற்படலாம்.) எண்ணற்ற படுக்கைகளில் எண்ணற்ற தம்பதிகளால் முணுமுணுக்கப்படும் ஒரு உரையாடல் தான் இது.

தூக்கம் என்பது ஒரு நேர்த்தியான ஆஃப்-ஆன் குமிழிஅல்ல, மாறாக முற்றிலும் மனித மற்றும் அவனது இனம் புரியா பன்முகச் செயல்பாடு என்பதை , நினைவில் கொள்ள வேண்டும். உறக்கம் என்பது சிக்கலான மற்றும் வேறு எந்த இயற்கை செயலையும் போலவே பல உளவியல் சிக்கல்களால் நிர்வகிக்கப்படுகிறது. நாம் தூங்கிக் கொண்டிருக்கும்போதும் நம்மைச் சுற்றி ஏதோ அசைவதை உணரலாம், அல்லது விழித்திருந்து “இல்லை!” என்றும் சொல்லலாம். 

“தூக்கமின்மையின் முக்கியத்துவம் மிகப் பெரியது, மனிதனைத் தூங்க முடியாத விலங்கு என்று வரையறுக்க நான் ஆசைப்படுகிறேன்” என்று E. M. சியோரேன் (E M Cioran) ஒருமுறை எழுதினார். நல்லபடியாக நடக்கும்போது, நம் வாழ்வில் மூன்றில் ஒரு பங்கை எடுத்துக்கொள்ளும் தூக்கம், இரண்டு எதிரெதிர் இருத்தலியல் குழப்பங்களை ஏற்படுத்துகிறது. முதலாவது உணர்வு பற்றியது:  பொதுவாக, நாம் தூங்குகிறோம் என்பதை   அறிவோம், ஆனால் எப்போது தூங்கத் தொடங்கினோம், எதுவரை அது நீடித்தது என்பதை அறிய முடியாது, ஏனெனில் தூக்கம் அதன் இயல்பில் இல்லாதது. இரண்டாவது குழப்பம், உண்மையில், நாம் நினைவில் கொள்ளக்கூடியவற்றுடன் தொடர்புடையது, அதுதான் கனவுகளின் அனுபவம். அறியப்படாத தூக்கச் செயலில் ஈடுபடும்போது, நாம் துடிப்பான, தீவிரமான, மறக்க முடியாத அனுபவங்களை அனுபவித்திருக்கிறோம், அதே நேரத்தில், மாயைகள் என்பதையும் இரவில் கற்றுக்கொள்கிறோம். கதை விளக்கத்தின் சாத்தியத்திற்கு வெளியே கருந்துளைகள் இருப்பதாக தூக்கம் நமக்குச் சொல்கிறது; நாம் தூங்கும்போது காணும் கனவுகள், நமது முழு இருப்பும் ஒரு புனைகதையாக இருக்கலாம் என்பதைக் கூறுகின்றன. “அது கனவு இல்லைன்னு நமக்கு எப்படித் தெரியும்?” என்பது  தத்துவஞானியின் வற்றாத கேள்வி, சிவப்பு மாத்திரை குழப்பம் ! (The Matrix Movie. சிவப்பு, நீல மாத்திரைகள்) நாம் அனைவரும் ஆரம்பத்தில் ஏற்பட்ட நிம்மதியை உணர்ந்திருக்கிறோம் – ‘ஓ, அது வெறும் கனவுதான்! – சோகமாக மாறுகிறது: ஓ, அவர் மீண்டும் உயிருட;ன் இல்லை. அது வெறும் கனவுதான்.’ எனவே முரண்பாடு: நம் கனவுகள் நமது முதன்மையான விவரிப்பு அனுபவமாக இருந்தாலும், நமது மிகத் தீவிரமான உண்மைகளுக்கு அவற்றை ஒரு உருவகமாகப் பயன்படுத்தினாலும், நமது தூக்க அனுபவத்தை நாம் விவரிக்க முடியாது. “அது ஒரு கனவு போல இருந்தது,” என்று நாம் ஏதோ ஒரு மகிழ்ச்சியான விஷயத்தைச் சொல்கிறோம்; “அது ஒரு கனவு,” என்று ஏதோ ஒரு துக்ககரமான விஷயத்தைச் சொல்லி பெருமூச்சு விடுகிறோம்.

தவிர்க்க முடியாமல், நமது விழிப்புணர்வு நிலைகள் பற்றிய உண்மையையும் ஆறுதலையும் கண்டறியும் நம்பிக்கையில், இடைக்கால மக்கள் நட்சத்திரங்களை நோக்கிச் செல்வது போல, நாம் விஞ்ஞானிகளிடம் திரும்புகிறோம். “Why We Sleep” என்ற புத்தகத்தில், பெர்க்லியில் மனித தூக்க அறிவியல் மையத்தை நடத்தும் மேத்யூ வாக்கர், நனவு மாணவர்கள், அதன் இல்லாமை பற்றி என்ன அறிந்திருக்கிறார்கள் என்பதை நேர்த்தியாக சுருக்கமாகக் கூறுகிறார். மயக்கத்தில்  அல்லது சுய உணர்வற்ற நிலையி்ல் சிக்கலான கட்டமைப்பு இருப்பதைக் காட்ட அவர் சிரமப்படுகிறார். ஆழ்ந்த தூக்கத்தைத் தொடர்ந்து REM தூக்கம் அல்லது கனவு தூக்கம் வருவது என்பது மட்டுமல்ல; நாம் தூங்கும் நேரங்களில் இந்த இரண்டு நிலைகளும் முன்னும் பின்னுமாக உறுதியாக ஊசலாடுகின்றன. நமது சர்க்காடியன் தாளத்தின் குறிப்பானான மெலடோனின் (Melatonin) பற்றி மட்டுமல்ல, நாம் விழித்திருக்கும் நேரங்களில் குவிந்து “தூக்க அழுத்தம்” அல்லது ஹோமியோஸ்டேடிக் தூக்க உந்துதலை உருவாக்கும் அடினோசின் (Adenosine) பற்றியும் கற்றுக்கொள்கிறோம், அடினோசின் நம்மை கோழித் தூக்க மயக்கத்திற்குக் கொண்டு செல்லலாம். காஃபின், (Caffrine) அடினோசினின்  வேலையைத் தடுக்கிறது என்று நமக்குச் சொல்லப்படுகிறது. (இது ஒரு சக்திவாய்ந்த மருந்து! பல்வேறு பொருட்களின் செல்வாக்கின் கீழ் சிலந்திகளால் நெய்யப்பட்ட வலைகளின் திகிலூட்டும் வரைபடங்களை வாக்கர் காட்டுகிறார். (LSD-எடுத்துக் கொண்ட பிறகும் கூட சிலந்திகள் சரியாக வலையைப் பின்னுகின்றன. ஆனால் lattes காஃபியை உட்கொண்டால் அவை பின்னும் வலைகளால் ஒரு ஈயைக் கூட பிடிக்க முடியாது போகிறது.)

இந்தப் பக்கங்களில் நிவாரணத்தைத்  தேடும் நாட்பட்ட தூக்கமின்மை உள்ளவர்கள் – அது  பெரிய விஷயமல்ல- மக்கள் குறைந்தபட்ச தூக்கத்துடன் நன்றாக நிர்வகிக்கிறார்கள் என ஆறுதல் சொல்லும் நிபுணர்களிடமிருந்து எதையும் பெற்றுக் கொள்ள இயலாது என்பதை அறிந்து கொள்வது நலம். அதற்குப் பதிலாக, தூங்காததன் விளைவுகள் நாம் பயந்ததை விட மோசமானவை என்று எச்சரிப்பார்கள். நாம் தூங்காதபோது எல்லாம் தவறாகிவிடுகிறது. நமது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஏற்படும் சேதம் வியக்கத்தக்கது; நான்கு மணி நேரம் மட்டுமே இரவு தூக்கம் இருக்கையில் “நோய் எதிர்ப்பு மண்டலத்தில் சுற்றும் இயற்கை கொலையாளி செல்களில் 70 சதவீதத்தை” அது எவ்வாறு துடைத்தெறிந்தது என்பதைக் காட்டும் ஆரோக்கியமான இளைஞர்களின் ஆய்வை வாக்கர் மேற்கோள் காட்டுகிறார். தூக்கமின்மை கொண்ட எலிகள் – எலிகளைக் கூட விழித்திருக்கச் செய்வது கொடூரமாகத் தெரிகிறது- ஆனால் , அரசியல் காணொலிகளை மீண்டும் மீண்டும் காண்பிப்பதன் மூலம்(!) அந்த எலிகளின் நோய் வளர்ச்சியில் இருநூறு சதவீதம் அதிகரிப்பு ஏற்படுகிறது எனக் கண்டறிந்திருக்கிறார்கள். இந்தத் தூக்கமின்மை கொண்டு வருவது புற்றுநோய் ஆபத்து மட்டும் அல்ல. “உங்கள் இருதய அமைப்பில் அளவிடக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்த உங்களுக்கு முழு இரவு தூக்கமின்மை தேவையில்லை” என்று வாக்கர் விளக்குகிறார், ஒருவித உற்சாகத்தோடு வாக்கர் இதை விவரிப்பதை கேட்டால், ஒருக்கால் அவருக்கு இதில் ஒரு அசுர தொழில் மகிழ்ச்சி இருக்கிறதோ என்றே நாம் சந்தேகப்படுகிறோம்.’உறங்காத உங்கள் நிலையால் உங்கள் இதயம் அதிவேகமாக துடிக்கிறது, நாளங்களில் பாயும் ரத்தம் அதிக அழுத்தத்துடன் பயணிக்கிறது. இது மிகை ரத்த அழுத்தத்திற்கு காரணி ஆகிறது.
எரிமேல் எண்ணை என்பதைப் போல் இந்த மிகை அழுத்தம், அந்த ரத்த நாளங்களை சீர் செய்ய இயலாத நிலைக்குத் தள்ளி விடுகிறது. நாளங்கள் தடிக்கின்றன. அவை மிகை அழுத்தத்தினால் வெடிப்புக்கு உள்ளானால், இதய நோய், மூளை செயலிழப்பு போன்ற விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படுகின்றன. இதையெல்லாம் படித்த பிறகும் தூக்கம் என்னவோ நமக்கு கண்ணாமூச்சி தான் காட்டுகிறது. உடைந்த நாளங்களை இனி நீங்கள் திறம்பட சரிசெய்ய முடியாது என்பதும் பயமுறுத்தும் ஒன்று.

இது காரணிகளின் ஒரு தூள் கிடங்காகும், 

தூக்கமின்மை உள்ளவர்கள் நன்றாகத் தூங்குபவர்களுடன் சரியாக இணைகிறார்கள், ஆனால் அந்த நல்ல தூக்கம் உள்ளவர்கள் கூட அவர்கள் தூங்க வேண்டிய அளவுக்குத் தூங்குவதில்லை. மனிதர்கள் “இருநிலை” (biphasic) தூக்கத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளனர் என்று வாக்கர் கூறுகிறார் – அதாவது, ஒரு நாளைக்கு இரண்டு தூக்க அமர்வுகள் தேவையாம். நவீனமயமாக்கப்பட்ட சமூகங்களில் உள்ளவர்களை விட  நீண்ட காலம் தூங்கும் பாரம்பரிய சமூகங்களில் உள்ளவர்கள்,  சிறிது நேரம் உயிர் காக்கும் தூக்கத்தை, அதாவது இரு வேளை தூக்கத்தை மேற்கொள்கிறார்கள். நமது விசித்திரமான தூக்க முறைகள் நமது பரிணாம வளர்ச்சியை விளக்கக்கூடும் என்று வாக்கர்  ஊகிக்கிறார். மற்ற விலங்குகளை விட நாம் குறைவாகவே தூங்குகிறோம், ஆனால் நமது குரங்கு மற்றும் குரங்கு உறவினர்களை விட ஒப்பீட்டளவில் அதிக REM தூக்கத்தையும், அது கொண்டு வரும் கனவுகளையும் பெறுகிறோம். REM தூக்கத்தின் போதுதான் நாம் “உணர்ச்சி செயலாக்கத்தில்” ஈடுபடுகிறோம் என்று வாக்கர் வலியுறுத்துகிறார். இந்த கட்டத்தில் ஏற்படும் நினைவூட்டல் மோதல்கள். நமது அனுபவங்களுக்கிடையில் புதிய தொடர்புகளை உருவாக்குகின்றன, மேலும் நாம் புத்துணர்ச்சி பெறுகிறோம்; நமது மீண்டும் உருவாக்கப்பட்ட நரம்பியல்    வலையமைப்புகளால் புத்துயிர் பெற்று அறிவொளி பெறுகிறோம்.

நீங்கள் தூங்கினால், நிச்சயமாக அப்படித்தான். டீன் ஏஜ் பருவத்தின் பிற்பகுதியில், அனைத்து வகையான சுய உணர்வுகளும் படியும் போது, ஸ்கிசோஃப்ரினியாவைப் போலவே, தூக்கமும் ஆபத்தான முறையை அடைந்து விடுகிறது.. பதினெட்டு வயதில், ஐரோப்பாவிற்கு ஒரு குடும்பப் பயணத்திற்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது, என் கண்கள் மூடவில்லை, அப்போதுதான் எனக்கு முதல் கடுமையான தூக்கமின்மை ஏற்பட்டது. காரணம் வெளிப்படையாக ஜெட் லேக், ஆனால், காரணத்தை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, நான் பீதியை உள்வாங்கிக் கொண்டேன்.

பல தசாப்தங்களுக்குப் பிறகு, மற்றவர்கள் நல்ல உணவை நினைவுபடுத்துவது போல் நல்ல தூக்கத்தை நான் நினைவுபடுத்துகிறேன். (அதிர்ஷ்டவசமாக நான் கிட்டத்தட்ட எதையும் நினைவுபடுத்த முடியாத அளவுக்கு அதிகமான நல்ல உணவை சாப்பிட்டிருக்கிறேன்.) ஒன்பது மணிக்கு மேல் நான் தூங்கிய ஒரு நாள் காலை; பதினொரு மணிக்கு குழந்தைகள் என்னை எழுப்ப வேண்டியிருந்த மற்றொரு நாள் என அனுபவங்கள் எனக்கு. சில பயங்கள், தூக்கமின்மையைப் போல உளவியல் ரீதியாக மிகவும் வேதனையாக இருக்கும். உடல்  சுயநினைவை இழக்காது, மேலும் அதை இழப்பது என்பது இருப்புக்கு அல்லது இல்லாமல் போகும் விருப்பத்துடன் செய்ய முடியாத ஒன்று. எனவே ஒருவர் தூங்கும் மனைவியை /கணவரை மட்டுமல்ல, உலகில் விழித்திருக்காத அனைவரையும், குழந்தைகள் முதல் பழைய திருட்டு படங்களில் வரும் கைக்கூலிகள் வரை எண்ணியெண்ணி பொறாமைப்படுவார்கள் ஸ்டீவ் மெக்வீன் துப்பாக்கியின் பின்புறத்தால் தலையில் அடித்ததும் எதிரியின் உதவியாளர்கள் உடனடியாக மயக்கமடைந்து விடுவார்கள் என்பதைப்பார்த்து பொறாமைப்படுவார்கள். (உண்மையில் நடக்கக்கூடிய ஒன்றல்ல.)

தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஒவ்வொரு இரவும் படுக்கையறையிலிருந்து வரவேற்பு அறைக்கும், சமையல் அறைக்கும் சென்று சென்று திரும்புவார். இச்செயல் ஒரு விசித்திரமான முறையில், தூக்கத்தின் பகடியாகும், இதை வாக்கர் சித்தரிக்கிறார்,  நனவான கட்டமைப்பைக் கொண்டுள்ளது இந்த நடை பயிலல் என்று சொல்கிறார். தூங்க முடியாமல் இருப்பதும் விழித்திருப்பதும் இரண்டு தனித்துவமான அமைப்புகள். தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் அரிதாகவே எழுந்து, ஒரு மணி நேரம் வேலை செய்து, வீட்டின் அமைதியை அனுபவிப்பார்கள். இது நமக்கு இல்லாத ஒரு அமைதியான நிலையைக் குறிக்கிறது; நாம் அவ்வளவு அமைதியாக இருக்க முடிந்தால்,  தூங்கிக்கொண்டிருப்போம் அல்லவா? இல்லை, தூக்கம் அளிக்கும் அதே ஊசலாடும் நிலைகளில் தூக்கத்தைத் தேட நாம் முனைகிறோம். பதட்டமாக நடப்பது, அல்லது ஆரம்பகால கிறிஸ்தவ வரலாற்றின் பாட்காஸ்ட்களைக் கேட்பது, அல்லது  துஷ்யந்த் ஸ்ரீதர், நரசிம்மன் விவாதங்களைப் பார்ப்பது, இரவு நேர தொலைக்காட்சி பார்ப்பது, நாம் தூங்கவில்லை என்ற உண்மையைப் பற்றி சிந்திக்காமல் இருக்கப் போதுமான கவனத்தை சிதறடிக்கும் விஷயங்களைத் தேடுவது, நம்மை இன்னும் விழித்திருக்க வைக்கும் அளவுக்கு கிளர்ச்சியடையச் செய்வது எல்லாம் நம் செயல்களே!

உண்மையில்,  தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட இருவர் ஒரு வீட்டையோ அல்லது ஒரு குடியிருப்பையோ பகிர்ந்து கொள்ளும்போது, அவர்கள் ஒருவருக்கொருவர் துணையைத் தேடாமல் இருவருமே மற்றவரின் துன்பத்தை நன்கு அறிந்திருக்கிறார்கள். மற்றவர் நகர்வதைக் கேட்டு, லைட் சுவிட்சைப் போட்டு அணைத்து, தரையில் தட்டும்போது, தூக்கமின்மை உள்ளவர் பச்சாதாபப்படுகிறார், அதே நேரத்தில் பரிவு காட்டுவது என்பது இருவருக்கும் மறதிக்கான கதவைத் தடுப்பதாகும் என்பதை உணர்கிறார். ஏனென்றால், தூக்கமின்மை உள்ள நாம் விழித்திருக்கும் வாழ்க்கையை வாழவில்லை; நாம் தூக்கத்தைத் தேடுகிறோம். நம் அருகில் படுக்கையில் தூங்குபவரைப் போலவே, நமக்கும் ஒரு இரவு உள்ளது, அது நமக்கு நன்றாகத் தெரியும் – அது இறுதியில், போதுமானதாக இல்லாவிட்டாலும், தூக்கத்திற்கு அடிபணிகிறது.

நட்சத்திர தூக்கமின்மை உள்ளவர்கள்,  தங்கள் சொந்த இரவு கானத்தை வெளிப்படுத்துவதில், தம்மைச் சுதந்திரமாக உணர்கிறார்கள். கூடைப்பந்து வீரர் வில்ட் சேம்பர்லெய்ன்  (Wilt Chamberlain)நீண்டகாலத் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர். அவர், வெறித்தனமாக, பெருமையாக அல்ல. தனது குறைவான தூக்கத்தைப் பற்றிப் பேசுவார்,  “அநேகமாக அவரது வாழ்க்கையின் சிறந்த நேரம் என்று 1970களைச் சொல்லலாம்; ஏனென்றால் அவருடன் இரவு முழுவதும் விழித்திருக்கக்கூடிய மனிதர்கள் இருந்தனர்” என்று அவரது நண்பர் ஒருவர் கூறினார். “ஆனால் அவர் அவர்களை சோர்வடையச் செய்வார், ஏனென்றால் மீதமுள்ள அனைவரும் தூங்க வேண்டியிருந்தது.”  தூக்கமின்மைக்கான இழப்பீடுகள் அவருக்குக் கிட்டின. அவர் உண்மையில் தூங்கியிருந்தால் இவ்வளவு ஆயிரக்கணக்கான பெண்களுடன் இரவைக் கொண்டாடியிருக்க முடியுமா? (பல மொழிகளில் காணப்படும் “தூக்கம்” என்ற இந்த இரட்டைப் பயன்பாடு ஒரு குறிப்பிடத்தக்க மாற்றாகும், உடலுறவு முன்பு ஒரு மாற்றாகவும், பின்னர் ஒரு சோபோரிஃபிக் நிதானமாகவும் இருக்கலாம். ஒருவேளை அவர் தனியாகத் தூங்குவதற்காகப் பலருடன் தூங்கியிருக்கலாம்.

அரண்மனையின் பெரிய நட்சத்திரத்தை பாதிக்கும் விஷயம், குவாட்டின் (Quad )பெரிய நட்சத்திரத்தையும் சமமாக பாதிக்கலாம்.  புகழ்பெற்ற தத்துவஞானி டெரெக் பர்ஃபிட்  (Derek Parfit- பிரித்தானிய தத்துவவாதி) தான் தூங்குவதற்காக மாத்திரைகள் மற்றும் வோட்காவின்  கலவையை  உட்கொள்வார். அவரது வாழ்க்கை வரலாற்றாசிரியர் டேவிட் எட்மாண்ட்ஸ்  (David Edmonds) சொல்கிறார்: போதைப்பொருள் மற்றொரு சடங்கோடு சேர்ந்து கொண்டது. ஏர்-பாட்ஸ் சகாப்தத்திற்கு முந்தைய காலத்தில், பர்ஃபிட் , ஆக்ஸ்போர்டில் உள்ள ஆல் சோல்ஸ் கல்லூரியில் ஒரு சக ஊழியராக இருந்தார்: “ஒவ்வொரு இரவும், மற்ற உறுப்பினர்கள் படுக்கைக்குச் செல்லும்போது, அவர் வாக்னரை வாசிப்பார்- பொதுவாக தி ரிங் சைக்கிள், (The Ring Cycle) டிரிஸ்டன்  (Tristan) (Isolde)மற்றும் ஐசோல்ட் அல்லது பார்சிஃபால் (Parsifal)– இவற்றை  இசைக்கத் தொடங்குவார், மேலும் இசை வடக்குப் பகுதியில்  பல மணி நேரம் மிதக்கும்.” வாக்னர், தூக்கமில்லாத உயர்நிலைப் பருவத்தில்  விருப்பமானவராக இருந்தார்; நீண்ட, பசுமையான, இடைவிடாத இசை வரிகள் ஏர் கண்டிஷனரின் மௌன இரைச்சல் ஓசையுடன் அல்லது கடினமான சொற்பொழிவின் தரத்துடன்  தேவையற்ற நிகழ்வுகளை வழங்காமல் உள்வாங்கும் நிலையில் பரவின.. ஆரம்பகால கிறிஸ்தவ வரலாறு எனக்கு உதவியது போல இது பர்ஃபிட்டுக்கு உதவியதாகத் தெரியவில்லை.

கோபமடைந்த நிபுணர்கள், இங்கேயே, மின்னஞ்சல்கள் மற்றும் நேரடிச் செய்திகளை சொல்லத் தொடங்கினார்கள். புகழ்பெற்ற தத்துவஞானியின் தூக்க அவஸ்தையின் வெளிப்படையான தோல்விகளைப் பற்றிப் பேசினார்கள். நிச்சயமாக நீங்கள் வோட்கா குடித்தால்  நள்ளிரவில் விழித்திருப்பீர்கள்! உண்மையில், ஆல்கஹால் வளர்சிதை மாற்றத்தின் துணை தயாரிப்புகளில் ஒன்று ஆல்டிஹைடுகள் (Aldehydes)எனப்படும் ஒரு வகை இரசாயனங்கள் என்று வாக்கர் விளக்குகிறார், அவை குறிப்பாக REM தூக்கத்தைத் தடுக்கின்றன. ஆனால் எங்களை நம்புங்கள், மருத்துவரே, நாங்கள் அனைத்தையும் முயற்சித்தோம். மேயோ கிளினிக்  (Mayo Clinic)தூக்கத்திற்கான ஒரு புதிய வழிகாட்டியை வெளியிட்டுள்ளது, இது மீண்டும் பழக்கமான தீர்வுகள் மற்றும் எச்சரிக்கைகளை ஒத்திகை பார்க்கிறது: படுக்கைக்கு ஒன்பது மணி நேரத்திற்குள் காஃபின் இல்லை ( செய்தோம்); படுக்கைக்கு நான்கு மணி நேரத்திற்குள் மது அருந்தவில்லை (முடிந்தது); உடற்பயிற்சி செய்யுங்கள், ஆனால் குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு முன் (முடிந்தது); படுக்கைக்கு முன் திரையைப் பார்க்காதீர்கள் (முடிந்தது). தியானம் உதவலாம் (அது செய்கிறது, ஒருவிதத்தில்), மற்றும் கணக்கீடு ஆறுதல் அளிக்கும் – ஒரு பதிவை வைத்திருப்பதன் மூலம் நீங்கள் உண்மையில் எவ்வளவு தூங்குகிறீர்கள் என்பதைப் பாருங்கள், மேலும் அது உங்களுக்குத் தெரிந்ததை விட அதிகமாக இருப்பதாக நீங்கள் தெளிவற்ற முறையில் ஊக்குவிக்கப்படுவீர்கள். எச்சரிக்கையான மனிதனுக்கு வேலியம், மெலடோனின் வேலையைச் செய்யலாம் அல்லது வேலை செய்யாமல் போகலாம், மேலும் மருந்துகளின் லேபிள் உறுதியளிக்கும் அளவுக்கு மிகக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ செயலில் உள்ள மூலப்பொருள் இருக்கலாம். தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட அனுபவம் வாய்ந்தவர் சுகாதாரஉணவு- கூடுதலாக துணை மாத்திரைகள் அல்லது உடல் நலத்திற்கு உதவும் மருந்துகளை எடுத்துக் கொள்ள முயற்சிப்பார். அது ஒரு சிறு முயற்சி. – CBD வகையறாக்கள் (THC உடன் அல்லது இல்லாமல்), L-தியானைன், (L- Theeanine)காவா,  (Kava)வலேரியன் வேர்  (Valerian root)மற்றும் பல – மேலும், அது வேலை செய்தால், அது ஒரு மருந்துப்போலியாக வேலை செய்யும் என்பதையும் நன்கு அறிவார்கள். (மருந்துப்போலிகள் வேலை செய்ய, அப்படி அறியப்பட முடியாது என்று ஒருவர் நினைப்பார், ஆனால், நமக்கு ஏதாவது மோசமாகத் தேவைப்படும்போது, எதையும் வரவேற்போம். எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதுதான் உண்மை)

இந்தக் கஷ்டத்தை அனுபவித்த பல மேதைகளை நமக்குச் சொல்வார்கள்.-ப்ரான்டேஸ், ( Brontes) Baudelaire காஃப்கா, ப்ருஸ்ட்,  (Proust)நாபோகோ. (Nabokov)  போன்றோர். வில்ட் , தனது நூறு புள்ளிகளுக்கான விளையாட்டிற்கு முதல் நாள் இரவில் ஒரு நொடி கூடத்  தூங்கவில்லை. நேசிக்க இயலாத, ஐயத்திற்கு ஆட்படும் சில புகழ் பெற்ற மனிதர்கள், நெப்போலியன், கிஸ்ஸிஞ்சர், நாலே மணி நேரம் தான் தூங்குவார்களாம். சுயநலத்திற்காக, உணர்வு பூர்வமாகவோ, அப்படி இல்லாமலோ, அவர்கள் உறக்கத்தை தியாகம் செய்துவிட்டார்களோ, என்னவோ? புகழ் கொண்டு தரும் பரிசுகள், ஒருக்கால், தூக்கமின்மையால் ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்துவிடுமோ?

பொதுமைப் படுத்தி உறக்கமின்மையைப் பற்றி பேசும் போது. தவிர்க்க முடியாமல் அதன் விளைவாக  அல்லது தொடர்ச்சியாக நம் கலாச்சாரங்களைப் பற்றியும் பேச நேரிடுகிறது.. உறக்கம் ,அதற்குத்தான் எத்தனை வடிவங்கள்? ஆடையுடன், ஆடையில்லாமல் பலவித தூக்கங்கள். உணவு, உயிர் வாழ்வதற்காக அத்யாவசியமான ஒன்று. ஆனால், அதில் தான் எத்தனை சுவைகள், மாறுபாடுகள்! அந்தந்த நாட்டின், மாநிலத்தின், அந்தந்த மண் வாசனையை ஏந்திக் கொண்டு உணவு, காரச்சுவையோடு, காரமற்று, என்று உலகப் பொதுத்தன்மையைக் காண முடிகிறது. ஆனால், சுவையூட்டும் விதமாக, சம நிலையிலுள்ள மாவுச்சத்தில், புரதம் சேர்த்து, பிஸ்ஸாவிலிருந்து, மசாலா எறும்புகள் தூவிய காசாவா வரை.. தூக்கத்திற்கும் இதைப் போன்றதொரு பழங்குடி  பல வழக்கங்கள் இருக்குமோ? குறிப்பிடத் தக்க ஸ்ரீலங்காவின் சியஸ்டா  (Siesta) சிறுதுயில்  போல, ஸ்வீடனின் தூக்க கேளிக்கை கூடுகைகளைப் போல தூக்க வரலாறும், அந்தந்த இடங்களின் தனித்துவமாக இருக்கலாம். செபாஸ்டியன் பி க்ளிங்கர்  (Sebastian P Klinger) ஒரு புத்தகம் வெளியிட்டார்:ஸ்லீப் வொர்க்ஸ்: அறிவியலிலும், இலக்கியத்திலும், தூக்க பரிசோதனைகள்1899-1929  (Sleep works: Experiments in Science and Literature1899-1929 ) என்று பெயர். 19ம் நூற்றாண்டு 20ம் நூற்றாண்டை நோக்கித் திரும்பும் தருணம், தூக்க அறிவியலின் கூறுகளை, இலக்கியத்துடன் இணைக்கும் பார்வையைக் கொண்ட நூல் அது, “ படுக்கச் செல்வதில் ஒன்றும் இயற்கையில்லை என்ற பொது மொழியை ஏற்கிறேன். ஆனால், விலங்கு உலகில், அனைவருக்கும் பொதுவாக உள்ள உறக்கத்தை இயல்பு என்று ஏற்றுக் கொள்கிறேன். நவீன உலகில் படுக்கை என்பது, நான்கு கால்கள் உள்ள ஒரு சட்டகத்தின் மீது மிருதுவான ஒரு பரப்பு என புரிந்து கொள்ளப்படுகிறது. ஏனைய விலங்குகளும் கூட மிருதுவான படுக்கைகளை நாடுகின்றன. கரடுமுரடான பாறையைக் கரடிகளும் தேர்ந்தெடுப்பதில்லை.” என்று பண்பாட்டு இயலின் சிறந்த ஆராதனையாளரான அவர் சொல்கிறார். இதன் பொருள், நாம் அறியாமலேயே , நமது பாரம்பரிய விதத்தை    பின்பற்றுகிறோம் என்பதாகும். அவரது மற்றொரு கருதுகோள், அப்படி ஒன்று விந்தையானதில்லை.  “முதலாளித்துவத்தினால், நம்முடைய ஓய்வு என்பது இயந்திரமயமாக்கப்பட்டு விட்டது. அது தூக்கமின்மைக்கு இட்டுச் செல்கிறது. நாம் நூற்றாண்டின் இறுதியிலே உழைத்துக் கொண்டும், அதைக் கடைகளில் செலவு செய்து முதலாளிகளை வளப்பமாகவும் வைத்திருக்கிறோம். மனதளவில் அடிமையான மனிதர்களின்  இந்த நோயை அவர் தூக்கமின்மை என்று சொல்கிறார்.. இந்தக் கருத்து அழகியலியற்குள் தளும்பிச் சென்று கேலிக்கு உள்ளானாலும்,, பங்கேற்றவும் செய்கிறது.

தூக்கமின்மை என்பது உறுதியாக ஒரு வெளிப்புறத் தன்மையில் இலங்குவது. ஹென்றி க்ளே ஃப்ரிக்(Henry Clay Frick)  நன்றாக உறங்கியதாகத்தான் அறியக் கிடைக்கிறது. தன் பருவ வயதில் தூங்கத் திணறிய ஃப்ரெட்ரிக் வின்ஸ்லோ டெய்லர்,  (Frederick Winslow Taylor) இயந்திர இயக்க மேம்பாடுகள், தொழிலாளரின் படைப்பாற்றலை மேம்படுத்துதல், ஆகிய சித்தாந்தங்களைச் சொன்ன பின்னர், மோசமாகத் தூங்கியதாகத் தெரியவில்லை. புராதன ரோம் நகரில், நகர இரைச்சல்களால், இரவில் தூங்க முடியவில்லை என்று இளைஞர்கள் சொன்னார்கள். நவீனமும், தூக்கமின்மையும், விசேஷத் தொடர்பில்  இருப்பதாக, அது உண்மைதான் என்பதாக நாம் நம்ப    விழைகிறோம்.

உறங்காமை என்பது , அது முதலாளித்துவத்தின் கொடை என்ற நவீனத்தின் பொதுவான புகாராக மட்டும் இருக்கவில்லை. அது  குறிப்பாகக் காதல் புகாராகிறது.  ‘நடு  இரவினில் விழிக்கின்றாள்; உன் உறவினை நினைக்கின்றாள்; அவள் விடிந்த பின் துயில்கின்றாள்; எனும் வேதனை கூறாயோ?’ இந்தப் பாடல் நினைவிற்கு வருகிறதா? 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தக் கருத்து எழுந்து, பல அழகியல் காதல் புகார்களைப் போலவே நகர்ப்புறங்களிலிருந்து நகரை நோக்கி  தீவிரமாக நகர்ந்தது. ஆங்கில இலக்கியத்தின், முதல் உறங்கா மனிதனை லேடி மேக்பெத்தில் ஷேக்ஸ்பியர் வடித்திருந்தாலும்,, அது கடவுளின் தண்டனை என்றே சொல்லப்பட்டது. உறங்காமையின்  உண்மையை அழகுற எடுத்துச் சொன்னவர் வேர்ட்ஸ்வொர்த் தான். இதைச் சொல்பவர் தேடும் தூய ஒலியை, உறங்காமையால் அவதியுறும் நபர் தேடுகிறார். அமைதிப்படுத்தும் அந்த நகர்ப்புற ஒலியை இந்த ஏரி மாகாணத்தில் அவர் விழைகிறார். இன்று அவ்வொலிகளெல்லாம் ‘ஸ்பாடிஃபையில்’ ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. “ அவசரமின்றி  ஒன்றன்பின் ஒன்றாக நடை செல்லும் ஆட்டு மந்தை/ மழையும், தேனீக்களும் முணுமுணுக்கும் ஓசை லயம்/அருவிகள், காற்று, கடல்/மிருதுவான வெளிகள்,வெண்திரையுடன் நீர், தூய வான்/இவை அனைத்தையும் மாறி மாறி அசை போட்டும், நான் உறங்காமல் கிடக்கிறேன்.” அனுபவத்தின் அதி வீச்சுக்களைக் காட்டுவது முதன்மையான ஒன்று. கோரிட்ஜ்ஜின்  (Coleridge)தூக்க மயக்கமும், வேர்ட்ஸ்வொர்த்தின் உறங்காமையும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

தூங்க முடியாமல் போவதின் எதிர் திசை தூக்கத்தின் கருவூட்டல் என க்ளிங்கர் சொல்கிறார். பலவீனப்படுத்தினாலும், ப்ரௌஸ்ட்டின் உறங்காமை, அமபும்- காயமும் போன்று  அவரது கலை மரபைச் சார்ந்தது. காஃப்காவும், சியோரேனும் அதைப் போன்றவர்கள். நவீன வெளிச்ச ஒளி பாயும் இரவுகளின் மனச் சோர்வுப் பின்னணியில் தவித்தவர்கள். இந்த நூற்றாண்டில் தான் தூக்க மருந்துகள்  பிறந்தன என கிளிங்கர் சொல்கிறார். அனைத்துத் துயர்களையும் தரும் ஒற்றுமைச் செதில்களாக உருவான மாத்திரைகள்! தூக்கமின்மைக்கு பழைய வரலாறு இருகிறது; இடைக்காலத்தில் மயக்க மருந்துகளாய் இருந்தவை, 16ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஓப்பியச் சாறாய் வலுப் பெற்று, 20ம் நூற்றாண்டில், முன்மாதிரியில்லாத புதுக் கண்டுபிடிப்புகளைக் கொண்டு வந்து  கொட்டியது.

மயக்க மருந்துகள் பெருகின-பார்பிட்யூரேட்ஸ், (Barbiturates) பென்ஜோடியாஷிபைன்ஸ்,  (Benzodiazepines) ஜோல்பிடெம்  (Zolpidem) போன்ற வை, சமீபத்தில் வந்துள்ள பெல்சோம்ரா  (Belsomra)போன orexin தடுப்பான்கள்.

ஜேன் ஆஸ்டின் நாவலில் வருவதைப் போல கவர்ச்சி ததும்பும் ‘ரேக்குகள்’ போன்ற இவைகள் , தன் பெருமை இழந்து பின்னர் கடும் கண்டனத்திற்கும், பழிப்பிற்கும் உள்ளாயின. இவைகள் ஏற்படுத்திய, கெடுதல்களை அறிந்த பிறகும் கூட அவற்றிற்கு அடுத்ததாகப் படையெடுத்து வந்த மருந்துகளை புறக்கணிப்போம் என்றா நினைத்தீர்கள்? பென்ஜோ வகை மருந்தான ஆடிவேனை (Ativan)உட்கொண்ட வில்ஃப்ரிட் ஷீட், (Wilfrid Sheed) 1990களில் வேடிக்கையாக தன் வாதையைப் பற்றி எழுதினார். அந்த மருந்து தம்பட்டம் அடித்த உறக்கம் வரவில்லை; மாறாக, நல்ல முறையில் வாழ்ந்து கொண்டிருந்த அவரை மதுவின் பிடியில் சிக்க வைத்து, மறுவாழ்வு மையத்திற்கு  சென்று சென்று வருமாறு மாற்றி விட்டது.

‘உறங்காதவர்களின் தலை நகரம்’ என்று அவர் ந்யூயார்க்கை அழைக்கிறார். ஒவ்வொரு நாட்டிலும் இப்படிச் சொல்லத்தக்க பல நகரங்கள் உண்டு. ஆனால், மறு நாளின் வேலைச்சுமையுடன் கண் விழிக்கும் கதிரடிப்போரும், பரத்தையரும், 9 மணிக்கே ஆய்ந்து ஓய்ந்து உறங்கும் நகர்ப்புறத்தை, விடிகாலை 3 மணிக்கே பரபரவென்று இருக்கும் நகருக்கு ஈடாக்க முடியுமா? எங்கள் ந்யூயார்க் அடுக்ககத்திற்கு வரும் எங்கள் கனடா உறவினர்கள், அவர்களுக்கான படுக்கை அறையிலிருந்து காலையில் வெளிவரும்போது வெற்றுப் பார்வையால், ‘ கார்களின் ஒலிப்பான்கள், ஆம்புலன்ஸ் அலறல்கள், நகரப் பேருந்துகள் செல்லும் சத்தம் இவற்றின் இடையில் எப்படித்தான் உறங்குவதோ?’  என்று கேட்காமல் கேட்பார்கள். நல்ல தூக்கமுள்ளவரோ, அல்லாதவரோ, ந்யூயார்க்கைச் சேர்ந்தவர்கள் இந்த சத்தத் தையெல்லாம் பொருட்படுத்துவதில்லை.

கனவுகள்

கனவுகள் என்ன சொல்கின்றன? பல கலாச்சாரங்களிலும், கனவுகளுக்கு ஒரு மறைமுக உருவகம் அல்லது முன்னறிவிப்பு இருப்பதான நம்பிக்கைகள் உள்ளது

கம்ப இராமாயணம், சீதைக்குச் சொல்லும் திரிசடையின் நல் கனவாக இந்தப் பாடலைத் 

துவங்குகிறது.

“துயிலலை ஆதலில் கனவு தோன்றல;

அயில் விழி அன்னை! யான் அமைய நோக்கினேன் :

பயில்வன பழுது இல பரிவின் ஆண்டன

வெயிலினும் மெய்யன விளம்பக் கேட்டியால்!”

 திரிசடையின் கனவு, வீரம் பொருந்திய இரு மானிடர்கள்( இராம இலக்குவர்கள்) சேனையுடன் வந்து இலங்கை அரசனை வெற்றி கொள்வதாகவும், அவன் எண்ணெய் பூசிய தலையுடன் தென் திசை நோக்கிப் பயணிப்பதாகவும், பொன் வண்டொன்று சீதையின் செவி அருகே நல்லிசை வழங்கிச் செல்வதாகவும் கம்பர் பாடுகிறார்.

பண்டைய கிரேக்கர்கள், கனவுகள் தீர்க்க தரிசனமாக ஒன்றைக் கூறுவதாக நினைத்தார்கள்.  பகவான் க்ருஷ்ணனைக் கனவில் கண்டால் நல்லது நடக்கும் என்பதாக இந்தியர்கள் சொன்னார்கள். நம் கனவுகளுக்கு எப்படியாவது அர்த்தம் இருக்க வேண்டும் என்று ஏனோ நாம் விழைகிறோம்! இதுவும் தூக்கப் புதிர்களில் ஒன்றுதான்- தர்க்கபூர்வமாகவும், பொருள்படும்படியாகவும் கனவுகள் அமைவதில்லை அல்லவா?- அவை கோர்க்கப்பட்ட ஆரமாக இருப்பதில்லை.   அதனால் தான் கனவு கண்டவர் (பொதுவாக ஒரு உறவில் ஒரே ஒருவர் தான் அப்படி இருப்பார்) தொடங்கும் போதே , “ நேற்று இரவு ஒரு விநோதக் கனவு” என்று தொடங்குவார்.

கனவுகளைப் பற்றி புது அறிவியல் என்ன சொல்கிறது? நூலாளரைப் பற்றி அதிக சிறப்புக்களை மேலட்டையில் கொண்டுள்ள நூல்கள் பெரும்பாலும்,  உள்ளிருக்கும்  விஷயங்களில் ஏமாற்றம் அளித்து விடுகின்றன  ‘நீங்கள்  ஏன் கனவு காண்கிறீர்கள்?’  (This is why you dream)என்ற புத்தகம் ராகுல் ஜேன்டயல்  (Rahul Jandial)எழுதியது அவர் எம் டி, பி ஹெச் டி (M,D, Ph.D) என்று பார்த்த போது சற்று தயக்கமாகக்கூட இருந்தது. பிரமை மயக்கத்தில் இருப்பதான  உணர்வில்லாமல், ஆனால், கனவுத் தன்மையுடன் அவர் சான்றாதரங்களை வழங்குகிறார். இந்தப் புத்தகம் தென்றலைப் போல வருடிச் சென்றாலும்,  

 மற்ற ‘உறக்க அறிவியலாளர்கள்’  போல், அதிக எச்சரிக்கைகள் தரவில்லை. ‘ஹாலி பெர்ரி ந்யூரான்’  (Halle  Berry Neuron) என்ற ஒன்றைப் பற்றி அறிந்து கொள்கிறோம். அது நரம்பியலாளர் Rodrigo Quian Quiroga கண்டுபிடித்த ந்யூரான். ஒரு பரிசோதனையில்,  இந்த ந்யூரானின் பெயரை சொன்னாலே,அழைப்பிற்கான மணி ஒலிக்கிறது என்று அவர் சொன்னார். மேத்யூ வாக்கர் சொன்னதைப் போலவே, இரவின் உணர்வுச் செயலாக்க முறையை ,ஜேன்டயல் ,சிந்தனைச் சோதனைகள்’ என்று விஸ்தரிக்கின்றார்.

  • மிகக் கூர்ந்து ந்யுரானை ஒரு குறுக்கமாக ஹாலி பெர்ரி என்றோ ‘ப்ரேட் பிட் ‘(Brad Pitt)என்று கற்பனைப் பாத்திரமாகவோ இரவில் எண்ணுவது, நாம் விழிக்கும் நிலையில் இயங்குகையில் ஒரு கண்ணியாகத் தொடரலாம். இதை நிரூபிக்கும் வகையில், அவர், நம்பத்தகுந்தச் செய்திகளைச் சொல்கிறார்.
  • ‘ நம் கனவுகள்  மனக் கோட்பாட்டுடன் இணைந்து பணியாற்றுகின்றன.
  • நம்மைப் போலவே பிறரும் நினைக்கிறார்கள், உணர்கிறார்கள் என்று அறிய நம்மால் முடிகிறது.
  • இரவில் அன்றைய நாளின் செயல்பாடுகளை ஒத்திகை செய்து, மற்றவர்களுடனான நம்முடைய அன்றைய நிகழ்வுகளை அசை போட்டு, அந்த மற்றவர் செய்கைகளை நம்முடையவை என மயங்கி, ஒரு பக்கவாட்டுத் தோற்றத்தைப் பெறுகிறோம்.
  • கனவுகள், ‘தொடர் கருதுகோள்கள்’ என்பது ஏற்புடையதாக இல்லை; அதாவது, நம்  தினசரி வாழ்வின் நீடித்தக் குறியீடாக அவை இல்லை.
  • அவரது கருத்துப்படி, கனவு என்ற சொல் நாட்டுப்புறத்தார் வழங்கிய பொருளான “ நாம் பெற நினைப்பதுதான், பெற்றது அல்ல” என்பது கனவின் நோக்கத்தைக் குறிக்கிறது. நம் கற்பனையின் வெளி விளிம்பு, நம்முடைய தினசரியின் மறு நெசவு அல்ல.

சில நேரங்களில், நிச்சயமாக, கனவுகள் பதட்டத்தில் வேரூன்றியுள்ளன என்பதும் நிதர்சனம். நாம், ஒரு வகுப்பில் சேர விண்ணப்பித்துவிட்டு, அதை மறந்து போவதும் மீண்டும் மீண்டும் கனவாக, அதவும், அந்தப் பரிட்சை நெருங்குகையில், நமக்கு  ஏற்படுவதும்,  நம் மனம்/மூளை ‘இதை மீள மீளச் செய்யாதே’ என்று நினைவூட்டக்கூடிய ஒன்றாக இருக்கலாம். மற்றவை வெளிப்படையான ஈடு செய்யும் முயற்சியாக இருக்கலாம். ந்யூயார்க்கரோ, மும்பைக்காரரோ, தன் இருப்பிடத்தில் மேலும் ஒரு அறை இருப்பதாக கனவு காணலாம் மேலங்கிகளையும், துணிகளையும் விலக்கித் தள்ளிவிட்டு அலமாரியின் பின்புறம் ஒரு இரகசியக் கதவுஇருப்பதாக நானியாவை ஒத்த விரிவான கனவைக் காணலாம். ஆனால், நம் விழிக்கும் போது, அந்தோ  பரிதாபம், நம் இருப்பிடத்தில் ஒரு அங்குலம் கூட அதிகமாக இல்லை! இந்தக் கனவில் மேலும் ஒன்றை சேர்த்துக் கொள்ளலாம்- பெரிய அடுக்கக வீடு வாங்கிய போதிலும், நம்மை வலுக்கட்டாயமாக சிறிய வீட்டில் வசிக்கச் செய்வதைப் போல கனவு காணலாம்.

ஆயினும், பல கனவுகள் குறிப்பு உணர்த்தும் தெளிவான வடிவங்களில் வருவதில்லை. அவை கடுங்குரல் கலவையாக, திடீரென்று சுருக்கப்பட்ட செயல்களாக காலையில் விழித்ததும் நமக்குப் புதிராக இருக்கின்றன. இதை  ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு அனுமானத்தின் மூலமாக ஜேன்டயல் சொல்கிறார். அது சமீபத்தில் நாம் பயன்படுத்தும் மூளையின் மாதிரியைப் போன்றது. செயற்கை நுண்ணறிவில், இயந்திரக் கற்றலைப் பயன்படுத்துகிறோம்; அதிகமாக சேர்க்கப்பட்ட தகவல்களை அது அகழ்ந்து எடுத்துத் தருகையில், மிக  இறுக்கமாக, கோட்பாடுகளைப் போல  வருவதில் , புரிதல் சிக்கல்கள் எழும். எனவே வேண்டுமென்றே அதில் சில ‘சத்தங்களை’ செலுத்துகிறோம். அது சீரற்ற முறையில் வரும் தகவல்களை, அவை பயனற்றவை என்று ஒதுக்கி விட்டு ஒத்த தகவல்களைக் கூட்டிச் சேர்த்து சரியான விளக்கங்களைத் தரும். கனவுகள் இதைப் போலத்தான். அவை நம் மூளையை விடுவிக்கின்றன;புதுப் பாதையின் சாத்தியங்களைக் காட்டுகின்றன; கற்பனை விளைவுத் தோற்றத்தில், சிக்கலை மிகவும் புதுக் கோணத்தில் அணுகி, எதிர்பாராத சூழலை சமாளிக்கவோ, அனுசரித்துச் செல்லவோ உதவுகின்றன. தர்க்கமற்றவையாகத் தோன்றும் கனவுகள் விடுவிக்க வேண்டிய புதிர்கள் இல்லை; அது ஒரு ‘சப்தம்’ அதில் அர்த்தமுள்ள சமிக்ஞை இருக்கிறது. விளக்கமுடியாத இவைகள், எதிர்பாராதவற்றை, எதிர் கொள்ள நம்மைத் தயார் செய்கின்றன.

‘முரண்களால் முடையப்படுகின்றன கனவுகள்’ என்ற பழங்கூற்றிலும் உண்மை இல்லாமலில்லை. நம் தினசரி வாழ்வின்  தொடர்ச்சியாக இல்லாமல், அதன் சாதரணத்தன்மையை ஈடுகாட்டும் விதமாக கனவுகள் வரும். வெகு காலத்திற்கு முன்னர், ஒரு தூக்க அறிவியலாளர், எவரெஸ்ட் மலைச் சிகர பயணக்குழுவில் இருப்பவர்கள், வீரதீர சாகசக் கனவுகளைக் காண்பார்கள் என்று எதிர்பார்த்தார்.  சாந்தமான, தகுதியற்ற நபர்கள், அதைப் பற்றி சாகசக் கனவுகளைக் காண, மற்றவர்களின் கனவுகள் அதிகக் கவலைகளால் நிரம்பியிருந்தன. ( வால்டர் மிட்டி தன்மை-  பகற்கனவில் வாழ்வது). 

ஜேன்டயல் சொல்கிறார்: 

‘அது சமீபத்தில் நாம் பயன்படுத்தும் மூளையின் மாதிரியை ஒத்தது. செயற்கை நுண்ணறிவில், இயந்திரக் கற்றலைப் பயன்படுத்துகிறோம்; அதிகமாக சேர்க்கப்பட்ட தகவல்களை அது அகழ்ந்து எடுத்துத் தருகையில், மிக  இறுக்கமாக, கோட்பாடுகளைப் போல  வருவதில் , புரிதல் சிக்கல்கள் எழும். எனவே வேண்டுமென்றே அதில் சில ‘சத்தங்களை’ செலுத்துகிறோம். அது சீரற்ற முறையில் வரும் தகவல்களை, அவை பயனற்றவை என்று கணக்கில் கொள்ளாது, ஒத்த தகவல்களைக் கூட்டிச் சேர்த்து சரியான விளக்கங்களைத் தரும். கனவுகள் இதைப் போலத்தான். அவை நம் மூளையை விடுவிக்கின்றன;புதுப் பாதையின் சாத்தியங்களைக் காட்டுகின்றன; கற்பனை விளைவுத் தோற்றத்தில், சிக்கலை மிகவும் புதுக் கோணத்தில் அணுகி, எதிர்பாராத சூழலை சமாளிக்கவோ, அனுசரித்துச் செல்லவோ உதவுகின்றன. தர்க்கமற்றவையாகத் தோன்றும் கனவுகள் விடுவிக்க வேண்டிய புதிர்கள் இல்லை; அது ஒரு ‘சப்தம்’ அதில் அர்த்தமுள்ள சமிக்ஞை இருக்கிறது. விளக்கமுடியாத இவைகள், எதிர்பாராதவற்றை, எதிர் கொள்ள நம்மைத் தயார் செய்கின்றன.’ ஜேன்டயல் சொல்கிறார்: நம் நனவிலிகளை , கனவுகளின் விலகல்களைப் பதிவு செய்வதன் மூலம் அறிய முடியும். அதற்கு முந்தைய நாள் கண்ட கனவை எழுதுங்கள். நாம் விழித்திருக்கை யில், மூளை, தன் நிர்வாகத்தை மீண்டும் செய்ய ஆரம்பிக்கும்; இதனால், கனவுகள் ஞாபக மறதிப் பட்டியலில் சேர்ந்துவிடும்.   வாழ்க்கை அனுபவத்தில் விரிவடையாத நம் மனமும், இந்தக் கனவுகளை எழுதி அறிய முயல்கையில் , நம்ப முடியாத வகையில்,  மூளையை, மனதை வலுப்படுத்தும்.

ஆனால், தூக்கத்தின் மறுகரையிலிருந்தும் அவர் பேசுகிறார்- நம் மனதை ,உதவக்கூடிய , ஒழுங்கமைந்த கனவினைக் காண பழக்கப்படுத்த, தன் முனைப்போடு செயல்படுதல் நல்லது. ‘கடவுளைக் காண்பது’ என்று கூர்மையாக நினைத்துக் கொண்டிருந்தால், கடவுளின் சில கூறுகளைக் காணலாம்-அவரவர் கடவுளை! இப்படிப்பட்ட தெளிந்த கனவுகள் வருவதற்கு- அதன் மதிப்பு என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்- இன்று சந்தையில் கலான்டமெய்ன் என்ற மருந்தும் கிடைக்கிறது. சீரற்ற கனவைச் சொல்லும் அதே ஜேன்டயல், தெளிந்த கனவைக் காணச் சொல்வதும் விநோதம் தான். ஆனாலும், கனவுகள் எந்த வகையிலும், நம்முடைய வாழ்க்கை விதங்களைப் போல மாறுபட்டு இருக்கலாமே? தெளிந்த கனவைக் காணாத நான், இவரைப் படித்த பிறகு, ‘கடவுளைக் கனவு காண’ நினைத்தேன்; ஆனால், கண்டதென்னவோ, எழுதத் தவறிய  தேர்வுகளும், என் இருப்பிடத்தில் அதிகப்படியாக ஒரு அறை இருப்பதான கனவும் தான்! இது தெளிந்த கனவு இலக்கணத்தைக் கையாளவில்லை அல்லது ந்யூயார்க்கருக்கோ, மும்பைக்காரருக்கோ அதிகப்படியான இடமே தெய்வீகமாக இருக்கலாம்!

இவற்றை சந்தேகிக்கும் நபர், கனவுகள் உள்ளீடு அற்றவை எனச் சொல்லலாம். அவை  மனதின்

துண்டுகள், துகள்கள், மனதால் வெட்டி எறியப்பட்டவை. படத் துண்டுகள், திரையில் தெரிவதை நாம் ஒரு கதை/ காட்சி என்று  அவற்றை இணைத்து புரிந்து கொள்வதைப் போல ,மனம் ,கனவிற்கான நோக்கத்தை தேடுகிறதே தவிர, அது அங்கே உள்ளது என ஏற்பதில்லை. நம் சூழல்கள், அந்த நோக்கங்களை எப்படிப் புரிந்து கொள்கின்றன? மருத்துவ விளக்கங்கள், ஆஷ்விட்ஸ் கைதிகள் கண்ட கனவை இரு விதமாகச் சொல்கின்றன. வேதனையும், பயங்கரமும் தொடர்வதாகக் கனவு கண்டவர்கள், கனவின் ‘ தொடர் கருதுகோள்’ நிலையை மெய்ப்பிக்கிறார்கள். நேர்மறையாக, தப்பித்துச் செல்வதை கனவில் கண்டவர்கள், அதை மற்றவரிடமும் சொல்லி ஊக்கப்படுத்தினார்கள். போருக்குப் பின்னான ஒரு பேட்டியில்,  ஒரு முன்னாள் சிறைவாசி சொன்னார்: “அது ஒரு ஆழமான ஆறு;  ( பல தொன்மங்களில் ஆறு தூக்கத்திலிருந்து மீளா உறக்கத்தை குறிப்பது)அதில் கொலையுண்ட என் சகோதரனைப் பார்த்தேன்; அவர் ஒரு‘  தீ உமிழும் மீனை’ என் கைகளில் தந்தார்; என்னால் தூக்கிச் செல்ல முடியாது என்று கதறினேன்;  நீ எடுத்துச் செல்வாய், நிச்சயம் நீ எடுத்துச் செல்வாய் என்று அவர் வற்புறுத்திக்  thஅளித்தது. நான் உயிர் பிழைத்தேன்.”

தூக்கமின்மையில் தவிக்கும் மனிதர்கள், அறிவியலாளர்கள் ஒத்துக் கொள்ளும் ஒன்றை வந்தடைகிறார்கள். ‘ நாம் நம்மை தூங்கச் செய்ய முடியாது; தூக்க முயற்சியில்  ஒரு குறிப்பிட்ட புள்ளியைத் தாண்டி பெரிய பலனும் கிட்டுவதில்லை; வாழ்வில் நாம் பலவற்றுடன் சகித்து வாழ்வதைப் போல தூக்கமின்மையையும் ஏற்றுக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்;  நமக்கே புரியத் தொடங்கும்- தூக்கமின்மைக்காக நாம் செலவிடும் உளவியல் நேரங்கள், பணம் இவை, உடல்ரீதியான பாதிப்பின் விலையை விட அதிகம்! தூங்கவில்லை என்பதுடன் சமரசம் செய்து கொள்கிறோம். சோர்வு நமக்கு நடுத்தர அல்லது சற்றுக் குறைவான சக்தியைத் தரலாம். நாம் செயல்பட நேர்கையில் ‘அட்ரீனலின்’ சுரந்து நம்மை ஊக்குவிக்கும்.

சமாளிக்கிறோம் என்பது மனதை வருத்தும் ஒன்றாக இருந்தாலும், நம் புரிதல் அதை விட வேறு என்னவாகத்தான் இருக்க முடியும்? அது ஒர் நல்ல தேர்வு. அதில் நமக்கு நிம்மதி கிடைக்கும். கீழ்ப்படிய மறுக்கும் கற்பனையின் குறிதான் உறங்காமை. 13ம் நூற்றாண்டின் எலினோர் ஆப் ஆக்விடைன் கல்லறையில், அவள் விழித்துக் கொண்டும்,படித்துக் கொண்டுமிருக்க, அவளது கணவன் மற்றும் அரசன்,  மந்தமாக மீளா உறக்கத்தில் ஆழ்ந்திருப்பான். இடைக்காலத்தைச் சேர்ந்த சிலர் அது மரபான இறுதி ஊர்வலத்தில் இருக்கும் உருவகம் என்று சொன்னாலும், தூக்கமின்மையின் சிறப்பியல்பாக இதை எடுத்துக் கொள்ள முடியுமே. இன்றைய கால கட்டத்தில், அவள் புத்தகம் படிக்கலாம் அல்லது அலைபேசியில் மேயலாம். அவள் மனம் இரகசியமாக,  பணிவாக திறந்து இருக்கலாம்.

“பகுத்தறிதல், மனித நேயம், மேதமை  இவற்றின் இரவு நேர துரோகத்திற்கு என்னால் பழகிக்கொள்ள முடியாது.  நான் எத்தனை சோர்வுற்றிருந்தாலும், சுய உணர்வற்ற தூக்க நிலையை நான் வெறுக்கிறேன்.” என்றார் நாபோகோ. இந்தச் சொல்லாடலிலும்,, நாடு 

கடத்தலைப் போன்ற அதிக்கப்படியாக ஈடு செய்யும் குறிப்பும் உள்ளது; ஆனாலும், அவர் சொல்வதில்  கருத்தும் உள்ளது. வாழ்க்கையில் உணர்வோடு, விழிப்போடு இருக்கும் நேரங்கள், நம் ஆயுள் அனுமதிக்கும் வரையில் இருக்கும் எனில், வேறென்ன வேண்டும்?

தூங்காதவர்கள், இறந்தவர்களைப் பார்த்து பொறாமை கொள்வதில்லை. இந்த உலகமே உறங்கிக் கொண்டிருக்கிறது. மரங்களும், தாவரங்களும், அசைவின்றி தன்னை வெட்டுவோரையும்,  அசை போடும் விலங்குகளையும் , இரை தேடும் பறவைகளையும் எதிர் கொள்கின்றன. நிறை மிகுந்த உயிரற்ற பொருள் தூங்குவதாகச் சொல்கிறோம்; அதற்கு உயிரூட்டும் சாத்தியங்களே இல்லை! விழித்திருப்பதே, உயிரோடு இருப்பது. அதிகாலை 3 மணிக்கு பரபரக்கும் மனதோடு, தூக்கமின்றி, முழு நினைவோடு, தனிச் சிறப்பாக . சுய உணர்வு நமக்குத் தந்த கொடையைக் கொண்டாடுவோம். இது ஒரு ஆறுதலைத் தரும் அல்லவா? நாம் நீண்ட தூக்கத்தில் வீழும் மட்டும், தூக்கமின்மையை  இப்படியெல்லாம் பாராட்டிக் கொள்ளலாம் அல்லவா? கனவில் தூக்கம் வருகிறது; தூக்கத்தில் கனவும் வருகிறது ; ஆனால், தூக்கமே கனவென்றானால், நனவின் பயனை முடிந்த மட்டும் அறுவடை செய்ய வேண்டியது தான்.

சொல்வனம் கவிதைச் சிறப்பிதழ் -2ல் வந்துள்ள மதாரின் கவிதை

மரத்தின் கிளைகள்
அசைவது
கனவு
என்றே
தோன்றுவது எப்படி

கண் அறியாக் காற்று
கனவன்றி வேறென்ன

கிளையசையும் மரம்
தூக்கத்தில் அது
உளறுவதுதான் என்ன

Ref: CHASING A DREAM
ANNALS OF INQUIRY – Adam gopnik


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “உறங்காமை”

  1. உறக்கம் பற்றிய பானுமதியாரின் கட்டுரையை முழுதாகப் படிப்பதற்குள் உங்களுக்கு உறக்கம் வந்துவிடுமானால் நீங்கள் வரம் பெற்றவர்கள்! நீளமான கட்டுரை, அதே சமயம் ஆழமான கட்டுரை. ஆனால் இறுதியில் ‘கனவுகள்’ பற்றிய கட்டுரையைத் தனியாகவே வெளியிட்டிருக்கவேண்டும். நிறையப் பின்னூட்டங்கள் வரலாமே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.