ரவிசுப்பிரமணியன் கவிதைகள், இசை வடிவம்

காலையில் மாலையில் கூவும் பறவை

காலையில் மாலையில் கூவும் பறவை
இடையில் எங்கே போய் வருமோ

சுதியில் இசைக்கும் பறவையைப் பார்த்து
மேலும் பறவைகள் வந்தமரும்

ஒலிக்கும் குரலின் இனிமையாலே
மொக்குகள் எல்லாம் பூத்திருக்கும்

காலையில் மாலையில் கூவும் பறவை
இடையில் எங்கே போய் வருமோ

கறுத்த மூக்கைக் கிளையில் தீட்டி
சிறுத்த உடலையது உதறிச் சிலிர்த்தபடி

இரண்டு புறமும் தலையை நீட்டி
யாரைப் பார்க்குமோ சில சமயம்

கூவும் பறவை சிலவேளை
மண்ணில் வந்தும் விளையாடும்
தாவிப் பறந்து நடந்து வரும்
சுறுசுறு பர பர பறவையுனக்கு
கரு கரு இருட்டு என்றால் ஆகாதோ.

காலையில் மாலையில் கூவும் பறவை
இடையில் எங்கே போய் வருமோ
சுறுசுறு பர பர பறவையுனக்கு
கரு கரு இருட்டு என்றால் ஆகாதோ
உனக்கு இருட்டு என்றால் ஆகாதோ.

ஹம்சநாதம்


மலரின் இருப்பு மணத்தை சொல்லுகையில்

மலரின் இருப்பு மணத்தை சொல்லுகையில்
மரத்தின் அசைவு காற்றை சொல்லுகையில்

பறவையின் பாடல் இசையை சொல்லுகையில்
வாலின் அசைவு வாஞ்சையை சொல்லுகையில்

சொல்லால் ஆவதென்ன என்
சொல்லால் ஆவதென்ன நீ சொல் அமுதே

சொல்லால் ஆவதென்ன நீ
சொல் அமுதே சொல் அமுதே சொல் அமுதே.

காபி ராகம்.


நினைவின் கமஹங்களை இசைத்தபடி

நினைவின் கமஹங்களை இசைத்தபடி
எங்கோ தொலைவில்
இழைகிறதொரு வயலின்

எந்நேரமும் உந்தன் சந்தேகக் கற்பனைகள்
திரண்டு குவிந்து மெளனத்தில் நீளும்

இந்த அமைதியின் நடுவே
மெளனத்தில் நீளும்
இந்த அமைதியின் நடுவே
நம் நல் மணங்கமழ் நினைவின்
கமஹங்களை இசைத்தபடி
எங்கோ தொலைவில்
இழைகிறதொரு வயலின்

நினைவின் கமஹங்களை இசைத்தபடி

நாரச குறை ஒசைகள் நித்தம் பழகிய செவிக்கு
நறுந்தேன் இனிதன்றோ
தரும் இதம் இசையன்றோ
அல்லது ஏன், நல்லது கேள்
அது சுநாத சுகமன்றோ

நம் நல் மணம் கமழ் நினைவின்
கமஹங்களை இசைத்தபடி
எங்கோ தொலைவில்
இழைகிறதொரு வயலின்.


ரீதி கெளளை


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.