(1)
நீண்ட நாட்களுக்கு பிறகு
கண்களினுடே பார்க்க நேர்ந்தது
ஆழ்ந்த அன்பினால் விளைந்த
இனிய புன்னகையினுடே விலக்கம்
மன இறுக்கத்தினால் காமத்திலாடிய
பின்னே வெறுமையின் ஊற்று அதிகம்
சுரந்தது
இதழ்களின் சுழிப்பால் ஊறி வந்த
உணர்வுகள் ஒடுங்கின
மன இறுக்கம், உடலிறுக்கம், உறவிலக்கம்
காரியமே காரணமாக தொடர்வது
செயலிழப்பு
முன்னெடுப்பாரின்றி எழுந்தடங்கிய
சொற்களின் கொந்தளிப்பு முகத்திலறைய விழிகளின் ஓரத்தில் நீர்
அலைக்கழிக்கப்பட்டவனின் துயரம்
மருந்தடைக்கப்பட்ட வெடிகுண்டென
கையில்.
வீசி எறியுமுன்னே அதியற்புத புன்னகையோடு மனக் காட்சி
இன்னாரு வாய்ப்பு
வாய்ப்புகளை எடுத்துக் கொள்வதா?
பெற்றுக கொள்வதா?
(2)
நேற்று மாலை பெய்த மழை
விடும் போது தோன்றிய வானவில்
வெகு ஆபூர்வமாக பார்த்தேன்
சாலையின் இருபுறமும் வளர்ந்த மரங்களுக்கிடையே அரைகோள வடிவில்
காட்சியாக கண்ணில் விரிந்தது
பாலத்தை நெருங்கும் போது பாலத்தின்
மேல் ஒட்ட வைத்தது போல
திரும்பி கரையில் கோயிலின் விமானத்தை தழுவியது போல
தூரத்தில் பணை கூட்டத்தின் நடுவில்
ஒரு ஓவியத்தை போல
நகரின் எல்லையை நெருங்கும் போது
நுழைவாயிலை போல
குழந்தையின் பின்னனியில் தலையிலிருந்து வண்ண ஊற்றை போல
பொதுவாக தாயின் எளிமையான புன்னகையை போல
மழை நின்று வாகன பெருக்கத்தில்
சிக்கி தினறுவதை போல
மனம் ஆர்ப்பரிக்கும் தோறும் பிரகாசித்து
விரிவதை போல
நகரின் உயரமான இடத்திலிருந்து நகரின் முழுமைக்குமானதை போல
வெளிச்சம் கரைந்து இருமை கலக்கும்
அந்தியை போல கரைந்தது
தவளையின் கானம்

புதிதாக உருவாக்கப்பட்ட நகர்
நடுவிலே புதியதாக கட்டிக்கொண்டிருக்கும் வீடு
சுற்றிலும் எல்லைகற்கள் பதிக்கப்பட்ட
வீட்டு மனைகள்
தவளைகள் கூச்சல் அல்லது ஒலி
எழுப்பினால் மழை வரும்
குடையோடு நடந்தேன் பாதையில் வாகனங்கள் வந்து போகாத நடுவிலே
தாவியபடி ஒரு தவளை பாட ஆரம்பித்தது
கூட்டு பாடலாய் எதிரொலித்தது
கந்தர்வ கானம் இசையமைப்பாளர் இன்றி
நின்று பார்த்தேன் ரகசிய குரலில்
மழையில் நனைவதற்கு குடை எதற்கு
என்றது
எங்களின் குடியிருப்பை அழிக்க வந்தாலும் நீங்கள் என் விருந்தாளி
மழையில் நனைந்து உற்சாக நடனமாடலாம் வாருங்கள்
மீண்டும் கூட்டு பாடலாய் இசை
உச்சத்திற்கு சென்றது
மழை வந்தே விட்டது.
உறவுகள்
புறந்தள்ளி புறந்தள்ளி புறந்தள்ளி
பாதையை உருவாக்கி
அகத்தினிலே ஒவ்வாமையை வளர்த்து
வளர்த்து , இறுக்கத்தினிலே வாழ்ந்து
இறுக்கத்தினிலே மூழ்கி
முகந்திருப்பி நிற்பதிலே இன்பம்
உறவு வருவதற்கும் போவதற்குமானது
மலை போல குவித்த செல்வம்
நுண்ணுர்வுகளால் நுண்ணிய அனுக்கம்
ஒரே வீச்சில் வெட்டுப்பட்ட கிளைகள்
வேர்களால் நிற்கும் மரம்
ஆயிரமாயிரம் இலைகளால் வளர்ந்தது
நீரின்றி பட்டுப் போனால் சரி
அமிலத்தாலென்றால் ?
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
