கே.சட்சிதானந்தன் கவிதைகள்

தமிழாக்கம் : தி. இரா. மீனா

ஒரு மனிதன் ஒரு கதவுடன்

ஒரு மனிதன்
நகரத்து வீதியில் கதவோடு
நடந்து கொண்டிருக்கிறான்;
அதன் வீட்டைத் தேடி.

தன் மனைவி, குழந்தைகள், நண்பர்கள்
அந்தக் கதவின் வழியாக வருவதாக கனவு காண்கிறான்.
கட்டவேயில்லாத தன்னுடைய அந்த வீட்டின்
கதவு வழியாக உலகமே
கடப்பதைப் பார்க்கிறான்: மனிதர்கள், வண்டிகள், மரங்கள்
விலங்குகள், பறவைகள் என்று எல்லாமும்.

பூமிக்கு மேலாக எழுகின்ற
அந்தக் கதவு
மோட்சத்தின் பொன் கதவாக
இருக்க ஏங்குகிறது ;
மேகங்கள், வானவில்
அரக்கர்கள், தேவதைகள் மற்றும் முனிவர்கள்
அதன் வழியில் கடப்பதாக
கற்பனை செய்கிறது.

ஆனால் கதவருகே
காத்திருப்பது நரகத்து முதலாளி.
இப்போது அது
பசுமையான காற்றுடன்
ஊஞ்சலாடி
வண்டி இழுக்கிற வீடற்றவனுக்கு
நிழல் தரும் மரமாக
இருக்க ஏங்குகிறது.

ஒரு மனிதன் ஒரு கதவோடு
நகரத்து வீதியில் நடக்கிறான்;
ஒரு நட்சத்திரம் அவனோடு நடக்கிறது.


நாம் சிலதைப் பெறுகிறோம்

நாம் சிலதைப் பெறுகிறோம்
நாம் சிலதைக் கொடுக்கிறோம்.
‘சாவு நிதிநிலை அறிக்கை தயாரிக்கிறது’
சொர்க்கம் என்பது ஒரு பொய் , ஆனால்
நரகம் ,ஆமாம், உளதாயிருக்கிறது.


விடைகள்

அவன் விடைகளை
அடுக்கிக் கொண்டே போனான்
ஆனால் அந்தக் கேள்விகள்
கதறிக் கொண்டே இருந்தன,
கருணையுள்ளம் கொண்டவனே,
’தயைகூர்ந்து எங்களைப் பாருங்கள்,
ஒரு முறையாவது’


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “கே.சட்சிதானந்தன் கவிதைகள்”

  1. கட்டவேயில்லாத தன்னுடைய அந்த வீட்டின்
    கதவு வழியாக உலகமே
    கடப்பதைப் பார்க்கிறான்:——————-மனதின் வழியே புகுந்து அழியும் உலக கற்பனை அபாரம்…

Leave a Reply to தங்க.ஜெயபால் (ஜோதி)Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.