முழு மரபணு சேர்க்கைத் தொகுப்பு (Whole-Genome Synthesis)

கோவிட்-19-ன் ஆரம்பக் காலக் கட்டங்களில் சீன விஞ்ஞானிகள், அந்தக் கிருமியின் மரபணுத் தொடர்ச்சிகளை, மரபணுத் தரவுகளில் சேர்த்தார்கள். சுவிஸ் நாட்டில் இத்துறையைச் சேர்ந்தவர்கள், அத் தரவுகளைக் கொண்டு அந்தக் கிருமியின் முழு மரபணுவையும் செயற்கையாக அமைத்து அதை உற்பத்தி செய்தார்கள். இதில் கவனிக்க வேண்டிய ஒன்று என்ன வென்றால், அந்த மரபணுக்களை கொரியர் செய்யாமல், அதன் இயல்பு அணுக்களின் மரபினை நேரடியாக ஆய்வுக் கூடத்திற்கு அனுப்ப முடிந்த அந்த ‘டெலிபோர்டிங்’ மற்றும் அதன் வரைபடம் தான். மருத்துவத் துறையிலும், பல்வேறு செயல்களிலும் இந்த முழு மரபணு அச்சு வரைபடம் என்பது துரித நடவடிக்கைகளுக்கு வழி செய்கிறது.

வளர்ந்து வரும் செயற்கை உயிரியலின் (Synthetic Biology) ஒரு நீட்சி என்று முழு மரபணு சேர்க்கைத் தொகுப்பினைச் சொல்லலாம். ஆய்வாளர்கள் செயலிகளின் மூலம் இத்தகைய மரபணுச் செய்திகளை வடிவமைத்து நுண்ணுயிரிகளில் செலுத்துகிறார்கள். ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? கிருமியை அறிந்தால் தான் அதைப் போக்கும் மருந்துகளை கண்டறியமுடியும். இதுவரை மரபணுத் தொகுப்பு சிறிய அளவில் நடை பெற்றது. இப்போது சேர்க்கைத் தொகுப்பு தொழில் நுட்பத்திலும், செயலிகளிலும் நாம் அடைந்துள்ள மிகப் பெரும் முன்னேற்றத்தால், பெரும் அளவிலான மரபணுக்களின் வரைபடங்களை எளிதாக எடுக்க முடிகிறது; மரபணு மாற்றங்களை நிகழ்த்தவும் முடிகிறது.

2002-ல் போலியோ வைரஸ்ஸின் கிட்டத்தட்ட 7500 குறியீட்டுச் செய்திகளைக் கொண்டு வைரல் மரபணுக்கள் முதல் முறையாக படைக்கப்பட்டன. ஆய்வாளர்கள், செயற்கை முறையில் தொகுக்கப்பட்ட  கொரானோ தீ நுண்மிகளை ஆராய்ந்து இது எப்படிப் பரவுகிறது, எப்படி நோயாக உருவெடுக்கிறது என்பதைக் கண்டறிகிறார்கள். தடுப்பூசிகளை உருவாக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்கவும் இவை பயன்படுகின்றன.

இப்போது மில்லியன் கணக்கில் உள்ள பாக்டீரியா, ஈஸ்ட் போன்றவற்றின் உட்கரு அமிலத்தின் பாதைகளை நம்மால் எழுத முடிந்துள்ளது. எஸ்செரிசியா கோலி (ஈ கோலி-Escherichia Koli) யின் மரபணு வரைபடத்தால் 2019-ல் விஞ்ஞானிகளுக்கு முதல் தெளிவு கிட்டியது. 11 மில்லியன் குறியீடுகளுள்ள மதுபான யீஸ்ட்டின் மரபணுகளை அறிவியாலளர்கள் அறிந்தனர். மரபணு வடிவமைப்பும் செயற்கைச் சேர்ப்பு வழிகளும் நுண்ணுயிரிகளாலான தொழிலகங்களில், மருந்து உற்பத்திற்கு மட்டுமல்லாது, மற்றப் பொருட்களின் உற்பத்திக்கும் உதவும் வகையில் முன்னேறி வருகின்றன. கரிவளியிலிருந்தும், உணவு சாரா உயிரிகளிலிருந்தும் (Non-food bio mass) தேவைப்படும் மரபணு அமைக்கப்பட்ட நுண்ணுயிரிகள், மிகப் பெரும் அளவில் கட்டிடக் கட்டுமானப் பொருட்கள், வேதிப் பொருட்கள் போன்ற பல் துறைகளில் பயன்படும்.

தாவரம், விலங்குகள் மற்றும் மனிதர்களின் மரபணுச் செய்திகளை மிகப் பெரும் வரைபடமாகத் தயாரிக்கும் ஆற்றலை அறிவியலாளர்கள் விரும்புகின்றனர். குறைந்த பட்சமாக மில்லியன் கணக்கில் நீளமுள்ள டி என் ஏ (DNA) வை செயற்கைச் சேர்ப்பு முறையில் ஒருங்கமைப்பதற்கு செயற்கை நுண்ணறிவு மேம்பட்ட செயலிகள் தேவை; அவை பெரும் முதலீடுகளைக் கோருபவை, ஆனால் தேவை சிக்கனமும், வேகமும் அல்லவா? முதலீடுகள் மிகுந்த அளவில் கிடைத்தால், இந்தப் பத்தாண்டுகளின் இறுதிக்குள் பில்லியன் அளவிலான உட்கரு அமிலத்தின் கூறுகளை வரைபடங்களாகச் செய்ய முடியும். நோய்க்கிருமிகளை எதிர்க்கும் தாவரங்கள், கதிர்வீச்சு, புற்று மற்றும் தொற்றுக்கள் அண்ட முடியாத மனிதத் திசு வளர்ச்சி இவை போன்ற பல்லாயிரம் கனவுகள் ஆய்வாளர்களுக்குள்ளன. இது திசுக்கள் சார்ந்த சிகிட்சை முறைகளுக்கும், உயிரோட்டமுடைய உறுப்பு உற்பத்திக்கும் உறுதுணையான ஒன்று. பரம்பரை அல்லது மரபணு சார்ந்த நம் எல்லாக் குறைபாடுகளையும் போக்குவதற்கு இயலாவிடினும், நம் தனிப்பட்ட மரபணு வரைபடம்  தயாரிக்கப்படும் சாத்தியங்களும், அதனால் பெரும்பாலும் குணமடையும் வாய்ப்புகளும் உள்ளன.

இந்த மரபணுச் சேர்க்கை பொறியியல் தவறாகப் பயன்படுத்தப்படும் சாத்தியங்களை மறுப்பதற்கில்லை- நோய்க்கிருமிக் கருவிகள் மற்றும் அதன் நச்சுத் தன்மை வாய்ந்த பொருட்கள். உயிர் ஆயுதங்களைக்(bioweapons) கையாளத் திறமையானதாக, உரிய நேரத்தில் உடன் செயலாற்றுவதாக, புதுவிதமானதும், ஏற்கெனவே நிலவி வருவதுமான பயமுறுதல்களை அக்கணமே எதிர் கொள்வதாக, அத்தகைய உயிர்க்கொல்லிகளைச் செயலிழக்கச் செய்வதாக உயிர்பாதுகாப்பான்களை (biosecurity)அறிவியளாளர்களும், பொறியியலாளர்களும் இணைந்து உருவாக்க வேண்டும். ஆய்வாளர்கள் சிறந்த போர் வியூகத்துடன் வேகமாக வடிவெடுக்கும் திறனுள்ள ‘பயோ செக்யூரிடி வெபன்’ உருவாக்க வேண்டும். உண்மையாகச் சொல்லப் போனால், உலகெங்கும் அரசுகள் முன்னெப்போதையும் விட கூடிச் செயல்பட வேண்டியது மிகவும் முக்கியம்.

இதற்காக 2016-ல் ‘ஜெனோம் பிரஜெக்ட் ரைட்’(Genome Project Write) என்ற கூட்டமைப்பு உருவாகியுள்ளது. இதில் 12-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து  நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள், பொறியியலாளர்கள், நீதி நெறியாளர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்கள், தொழில் நுட்ப மேம்படுத்துதல், நீதிநெறி வழுவா முறைகள், சிறப்பான செயல் முறைகள், முன் வடிவச் சோதனைகள், சமூக சட்ட விதிமுறைகளில் ஏற்படுத்தும் பாதிப்புகள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு இணைந்து செயலாற்றுகிறார்கள்.

Dr.He Juankui என்ற சீன உயிரியலாளர் 2018-ல் கிரிஸ்பர் தொழில் நுட்பத்தின் மூலம் மனிதக் கருவினை மரபணுத் தொகுப்பைக் கொண்டு மரபணு திருத்தி வடிவமைத்தது பெரும் எதிர்ப்பை உருவாக்கியது. சட்டங்கள் அனுமதிக்காத ஒன்று இது. இதை அனுமதித்தால், குறிப்பிட்ட, மேம்பட்ட மரபணு கொண்டிருப்பதாக கற்பித அறிவு கொண்ட இனத்தினர் மற்ற இனங்களை அடிமை கொள்ள, அழிக்க முயற்சிப்பார்கள் அல்லவா? 2017-ல் கிழக்குப் பதிப்பகத்தின் ‘சென்னை தின சிறுகதை போட்டியில்’ இடம் பெற்று வெளியான ‘அஸ்வத்தாமா’ திசுப் பொறியியல் அடிப்படையில் எழுதப்பட்டிருந்தது.

Eurofins Genomics India, பங்களூருவில் செயல் படுகிறது. 14000 சதுர அடி பரப்பில் அமைந்துள்ள இதில் 60க்கும் மேற்பட்ட அறிஞர்கள் இத்தகைய மரபணு செயற்கைத் தொகுப்பு செயல்களில் ஈடுபட்டுள்ளனர். உலகின் மிகச் சிறந்த தொழில் நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக  குறைந்த தொடர்களுள்ள ஆர் என் ஏ மற்றும் டி என் ஏ ஆகியவற்றின் 20 ஜோடி அடிப்படை அணுக்களின் உட்கரு அமிலத்தின் வரைபடம் தயாரிக்கப்பட்டு ஆய்வகங்களுக்கும், மருத்துவ மனைகளுக்கும், மருந்து தயார் செய்யும் நிறுவனங்களுக்கும் கொடுக்கப்படுகிறது. 

“உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்த பின்பு, உள்ளங் குலைவதுண்டோ?-மனமே!
சித்தினியல்பு மதன் பெருஞ் சக்தியின் செய்கையுந் தேர்ந்துவிட்டால்-மனமே
எத்தனை கோடி இடர்வந்து சூழினும் எண்ணஞ் சிறிது முண்டோ?”

பாரதியார்.
Series Navigation<< பசும் நீர்வாயு (Green Hydrogen)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.