லு ஷாடலியெ கோட்பாடு

அகத்தியர் படம் பார்த்திருக்கிறீர்களா? அதில் சீர்காழியாரின் குரலில் ‘உலகம் சமநிலை பெறவேண்டும். உயர்வு தாழ்வில்லா நிலைவேண்டும்’ என்னும் அழகான பாடல் வரும். அந்தப் பாடல் படத்தில் வரும் இடம் நமக்குத் தெரியும்தானே. கயிலையில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடக்கையில் எல்லாரும் வடபகுதிக்குப் போய்விட வடக்கு தாழ்ந்து, தெற்கு உயர்கிறது. அந்தச் சமநிலையை மீட்க அகத்தியரை, நானே பொதியை மலைக்கு ஹனிமூன் வருகையில் காட்சி தருகிறேன் எனத் தாஜா செய்து அனுப்பி வைக்கிறார். அவரும் பொதியைக்கு வந்து சமநிலையை மீட்கிறார். ஆக ஒரு சமநிலையில் ஒரு மாற்றம் உருவாகும்போது, அந்தச் சமநிலையானது, மாற்றத்தை எதிர்த்து நகர்கிறது, தன் சமநிலைத்தன்மையை மீட்டெடுக்க முயல்கிறது. இதைத்தான் வேதியியலில் லு ஷாடலியெ கொள்கை என்கிறார்கள்.